ஒரு ஆற்றங்கரையின் ஓரத்தில் ஒரு தென்னை மரமும், நாணலும் இருந்தன.
தென்னை மரத்துக்குத் தான் உயர்ந்தவன் என்ற எண்ணம் இருந்தது. ஆகவே, அவ்வப்போது நாணலை அது கேலி செய்து வந்தது.
“நீ மிகவும் சிறியவன். மழை, காற்று, வெயில் இவற்றை உன்னால் தாங்க முடியாது. நானோ உயர்ந்தவன். நான் எல்லாவற்றையும் தாங்குவேன். எனக்கு எந்தக் கவலையும் இல்லை” என்று நாணலைப் பார்த்து தென்னை சொன்னது.
நாணல் பதிலொன்றும் சொல்லவில்லை.
சில நாட்கள் கழிந்தன.
மழைக்காலம் வர... இருந்த நிலையில், ஒரு நாள் புயல் ஏற்பட்டது.
புயல் காற்றில் நாணல் தலை வணங்கியது. ஆனால், தென்னையோ புயலை எதிர்த்தது.
புயல் காற்றின் வேகத்தினைத் தாங்க முடியாத தென்னை மரம் வேரோடு சாய்ந்தது.
நாணல் புயல் காற்றிற்கு ஏற்ப வளைந்து கொடுத்தது. எனவே, நாணலுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.
தென்னையைப் போலக் கர்வமாய் இருந்து அழிவதை விட, நாணலைப் போல வளைந்து நெளிந்து, பணிவாக வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.