பல ஆண்டுகளுக்கு முன்பு, தஸ்துர்ஜி என்ற பெயரில் ஒரு அதிகாரி இருந்தார்.
அவர் ஒரு சமயம் மும்பைக்கு ஏதோ வேலையாகச் சென்றிருந்தார்.
ஒரு நாள், அவர் நகரத்தின் ஒரு பகுதிக்குப் பேருந்தில் சென்றார்.
பேருந்து நடத்துநர் தவறுதலாக தஸ்துர்ஜியிடம் ஒரு ரூபாய் அதிகமாகக் கொடுத்து விட்டார்.
தன் இருக்கையில் அமர்ந்ததும் தஸ்துர்ஜி, “இந்தப் பணத்தை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது? திருப்பிக் கொடுத்து விடலாம். என்னிடம் வைத்துக் கொள்வது தவறு” என்று எண்ணினார்.
பிறகு வேறு ஒரு எண்ணம் தோன்றியது. “ஏன் திருப்பிக் கொடுக்க வேண்டும்? நானே வைத்துக் கொண்டால், பேருந்து நிறுவனத்துக்கு ஒன்றும் பெரிய நஷ்டம் ஆகி விடாது. இதைக் கடவுளின் பரிசாக வைத்துக் கொண்டு மௌனமாக இருப்போம்” எனத் தீர்மானித்தார்.
தஸ்துர்ஜி இறங்கும் இடம் வந்தவுடன் ஒரு வினாடி யோசித்து, அந்த ஒரு ரூபாயைப் பேருந்து நடத்துநரிடம் கொடுத்து விட்டு “நீங்கள் ஒரு ரூபாய் அதிகமாகச் சில்லறை கொடுத்து விட்டீர்கள்” என்று சொன்னார்.
பேருந்து நடத்துநர் அவரிடம், “நீங்கள் இவ்வூருக்கு வந்திருக்கும் தஸ்துர்ஜிதானே? நான் உங்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கேன். உங்களுக்குச் சில்லறை அதிகமாகத் தந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்? என்று சோதித்துப் பார்க்க எண்ணினேன்” என்று சிரித்துக் கொண்டேச் சொன்னார்.
தஸ்துர்ஜி பஸ்ஸிலிருந்து இறங்கியதும் ஒரு கம்பத்தை பிடித்துக் கொண்டு, “கடவுளே, கேவலம் ஒரு ரூபாயிற்காக என் மனசாட்சியை விற்க நினைத்தேனே...” என்று நினைத்து வருத்தப்பட்டார்.
ஆனால், சில்லறையைத் திருப்பிக் கொடுக்கும் மனப்பான்மையை நினைத்து அவர் கடவுளுக்கு நன்றி கூறினார்.