ஒரு பெரியவருக்கு வெகு நாளாகப் பூசணிக்காய் பொரியல் சாப்பிட ஆசை.
மனைவியிடம் சொல்லிப் பார்த்தார். காலம் போன காலத்தில் இது மட்டும் தான் குறைச்சல் என்று சொல்லிவிட்டார் மனைவி. ஆனாலும், பெரியவருக்குப் பூசணிக்காய் மீது
இருந்த மோகம் மட்டும் தணிந்தபாடில்லை.
அப்போதுதான் பக்கத்து வீட்டுக் கொல்லைப்புறத்தில் ஒரு பூசணிக்கொடி படர்ந்து கிடப்பதைப் பார்த்தார்.
அதில் நாலைந்து பிஞ்சுப் பூசணிக்காய் கிடந்தது. இந்தப் பூசணிக்காயில் ஒன்றை நன்கு விளைந்ததும் பறித்து வந்துவிட வேண்டியதுதான் என்று மனதிற்குள் கணக்கு போட்டு
வைத்துக் கொண்டார்.
அவர் எதிர்பார்த்த அந்த நாளும் வந்தது. ஒருவருக்கும் தெரியாமல் ஒரு பூசணிக்காயைப் பறித்து வந்து மனைவியிடம் கொடுத்தார்.
மனைவியும் வெளியில் தெரியாமல் கமுக்கமாக பூசணிக்காய் பொரியல் வைத்துக் கொடுத்தார்.
மறுநாள் விடியற்காலை.
பக்கத்து வீட்டுக்காரர் கொல்லைப்புறத்தில் கிடந்த பூசணிக்காய்களை எண்ணிப் பார்க்கிறார். ஒரு காய் குறைகிறது. யார் பறித்திருப்பார்கள்? பூசணிக்காய் திருடன் நம் ஊரில்
இருக்கிறானா?
யார் பறித்திருப்பார்...? தடயம் ஏதும் தெரிகிறதா? என்று பார்க்கிறார். ஒன்றும் தெரியவில்லை.
நேற்று இரவு சற்று மழைத்தூறல் விழுந்திருந்தது. இன்னும் ஈரம் கூட காயவில்லை. யாராவது வந்திருந்தால் கால் தடம் பதிந்திருக்கும் என்று பார்க்கிறார். அவர் நினைத்தது போல கால் தடம் இருந்தது.
கால் தடம் எதுவரை சென்றிருக்கிறது? என்று பார்த்தால் பக்கத்து வீட்டுக்காரர் வாசல்வரை சென்றிருக்கிறது. அதன் பின்னர் காணவில்லை.
அப்படியானால், நம்ம கண்ணுச்சாமி அண்ணனா? திருடி இருப்பாரா? சே... சே... ஒரு போதும் அப்படிச் செய்திருக்க மாட்டார். பெரிய மனிதர் ஆயிற்றே...
ஆனாலும், கால் தடம் இதுவரைதான் இருக்கிறது. எதற்கும் அண்ணனிடம் கேட்டுப் பார்ப்போம் என்று நேரே பெரிய வீட்டுக்காரரிடம் போய் விசாரிக்கிறார்.
பெரியவருக்குப் பக்கத்து வீட்டுக்காரர் வந்து விசாரித்ததும் முகமெல்லாம் வியர்த்துக்கொண்டு வந்தது. வாய் பேச முடியவில்லை.
கடைசியில் நான்தான் பறித்தேன் என்று உண்மையை ஒத்துக்கொண்டு விட்டார்.
“என்ன அண்ணாச்சி இப்படிச் செய்துவிட்டீர்கள்? நீங்கள் கேட்டிருந்தால், நானேப் பறித்துக் கொடுத்திருப்பேனே, இப்படித் திருடி விட்டீர்களே?” என்று சொல்லி விட்டுச் சென்றுவிட்டார் பக்கத்துவீட்டுக்காரர்.
அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. ஊர்முழுவதும் அந்த கண்ணுச்சாமி அண்ணன் என் தோட்டத்தில் கிடந்த பூசணிக்காயைத் திருடி விட்டார் என்றும் சொல்லி விட்டார்.
இப்போது சாதாரண கண்ணுச்சாமி, பூசணிக்காய் திருடன் கண்ணுச்சாமி ஆகிப் போனார்.
ஒருநாள் கண்ணுச்சாமி அண்ணன் தெருவில் நடந்து வருகிறார்.
ஒரு பெண் தண்ணீர் எடுக்கக் குடத்தோடு சென்றாள்.
"எங்கே போகிறாய்? ஊர் குழாயில் தண்ணீர் வருகிறதா? என்று கேட்டாள் எதிரே வந்த இன்னொரு பெண்.
அதற்கு அவள், "அங்கே வருதோ என்னவோ தெரியல... அந்தப் பூசணிக்காய் திருடிய கண்ணுச்சாமி அண்ணன் வீட்டுத் தெருவுல தண்ணீர் வருது" என்றாள்.
கேட்டதும் கண்ணுச்சாமிக்குக் கவலையாகிப் போனது.
அப்போது ஒரு சிறுவன் ஒரு ஐஸ் வாங்கி சப்பிக் கொண்டே வந்தான்.
அவனிடம் இன்னொரு சிறுவன், "ஐஸ்கார மாமா, வண்டி எங்கே நிற்கிறது" என்று கேட்டான்.
பூசணிக்காய் திருடிய கண்ணுச்சாமி தாத்தா வீட்டுப் பக்கம் நிற்கிறது என்று பதில் சொல்லிவிட்டு ஓடினான் அந்தச் சிறுவன்.
அதுவரை சாதாரண கண்ணுச்சாமியாக இருந்தவர் பூசணிக்காய் திருடன் கண்ணுச்சாமி என்று பட்டம் வாங்கிவிட்டார்.
எழுதி வாங்கியப் பட்டத்தைப் போல், திருடி வாங்கியப் பட்டமும் நிரந்தரமாக அவர் பெயரோடு ஒட்டிக்கொண்டது.
ஆண்டுகள் பல கடந்தன.
கண்ணுச்சாமியின் மகனையும் பூசணிக்காய் திருடன் கண்ணுச்சாமி மகன் என்று அழைக்க ஆரம்பித்தனர்.
அத்தோடு நின்றுவிடவில்லை.
மூன்றாவது தலைமுறையாக, பேரன் பிறந்தான்.
இப்போது பேரனுக்கும் பூசணிக்காய் திருடன் கண்ணுச்சாமி பேரன் என்ற பெயர் வந்து ஒட்டிக் கொண்டது.
கண்ணுச்சாமிக்கு ஒரே மன உளைச்சல்.
இந்தப் பெயர் மாறாதா? நான் காலம் முழுவதும் பூசணிக்காய்த் திருடன் என்ற பட்டத்தோடுதான் வாழ வேண்டுமா? நான் அவமானப்பட்டது போதாதா? என் பரம்பரையே இந்த அவமானத்தோடுதான் வாழ வேண்டுமா? என்று எண்ணி எண்ணி வெதும்பினார்.
இதற்கு என்னதான் வழி? யாரிடம் போய் கேட்பது என்ற கலக்கத்தோடு ஒரு காட்டில் இருந்த ஒரு முனிவரைச் சந்தித்து, "எனக்கு ஏற்பட்ட இந்த அவப்பெயரைப் போக்க நீங்கள் தான் ஒரு வழி சொல்ல வேண்டும்" என்று அவர் காலில் விழுந்தார்.
"எழுந்திருங்க... எழுந்திருங்க... என்னப் பிரச்சினை என்று முதலில் சொல்லுங்க" என்றார் முனிவர்.
கண்ணுச்சாமி நடந்த அனைத்தையும் அவரிடம் சொன்னார்.
"இதற்கு நீங்கள் தான் தீர்வு சொல்லித் தரணும்" என்று கண்ணீர் விட்டார்.
"இதுதான் உன் பிரச்சினையா? ஒன்றுக்கும் கவலைப்படாதே. நாள்தோறும் பத்து ஏழைகளுக்குச் சோறு போடு. அதுவும் வாய்க்கு ருசியாக வயிறார சோறு போடு. பத்தாம் நாள் என்னை வந்து பார்" என்று சொல்லியனுப்பினார் அந்த முனிவர்.
பெரியவரும் முனிவர் சொன்னது போல, பத்து ஏழைகளுக்கு நாள்தோறும் வயிறார சோறு போட்டார். எல்லோரும் வந்து திருப்தியாக சாப்பிட்டுவிட்டுச் சென்றனர்.
அவர்கள் போகும் வழியில், பார்ப்பவர்களிடம் எல்லாம் “வயிறு நிறைய ருசியான சாப்பாடு போடும் கண்ணுச்சாமி அண்ணன் வீட்டுக்குப் போய் சாப்பிட்டுவிட்டு வருகிறேன். தங்கமான மனுஷன். நல்லா வாழணும்" என்று சொல்லி விட்டுச் சென்றனர்.
இப்போது சோறு போடும் கண்ணுச்சாமி அண்ணன், சோறு போடும் கண்ணுச்சாமி அண்ணன் என்ற பெயர் ஊர் முழுவதும் உலவ ஆரம்பித்தது.
அதென்ன மாயம்? பூசணிக்காய் எங்கே போனது? பூசணிக்காய் இடத்தில் சோறு வந்து உட்கார்ந்தது கொண்டது.
பத்தாம் நாள் முனிவரைத் தேடிக் காட்டிற்குச் சென்றார் கண்ணுச்சாமி அண்ணன்.
சிரித்துக்கொண்டே வரவேற்ற முனிவர், "என்ன... ரொம்ப மகிழ்ச்சியாக இருப்பதுபோலத் தெரிகிறது" என்றார்.
"ஆமாம் ஐயா... நான் இப்போதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இப்போது நான் பூசணிக்காய் திருடன் கண்ணுச்சாமி இல்லை. வயிறு நிறைய ருசியான சோறு போடும் கண்ணுச்சாமி" என்றார் பெருமையாக.
"அப்போ சோற்றில் பூசணிக்காய் மறைந்து போயிற்று என்று சொல்றீங்க... இல்லையா?"என்றார் முனிவர்.
"உண்மைதாங்க... சோற்றில் முழு பூசணிக்காயும் காணாமல் போயிடுச்சு" என்று பெருமையாகக் கூறினார் கண்ணுச்சாமி.
"நாலு தலைமுறைக்கு இனி இந்தப் பெயர்தான் நிலைத்திருக்கும். நல்லது செய்யுங்கள். நற்பெயர் நிலைத்திருக்கும்" என்று வாழ்த்தி அனுப்பினார் முனிவர்.