ஒரு வீட்டில் நாய்க்குட்டியொன்றை எடுத்து வளர்த்து வந்தார்கள்.
அந்த நாய்க்குட்டி அங்கு வரும் காகத்துடன் நட்பாக இருந்தது.
ஒரு நாள் காகம் மிகவும் கவலையுடன் அமர்ந்திருந்தது.
அதைக் கண்ட நாய்க் குட்டி காகத்திடம் சென்று, “என்ன காக்கையாரே! ஏன் ஒன்றும் பேசாமல் வருத்தமாக இருக்கிறீர்?” என்று கேட்டது.
அதற்குக் காகம், “மனிதர்கள் மற்றப் பறவைகளை அன்புடன் வளர்க்கின்றார்கள். அவைகளின் செயல்களைப் பாராட்டுகின்றார்கள். ஆனால், என்னை வெறுத்துக் கல்லால் எறிந்து துரத்துகிறார்களே ஏன்?” என்று கேட்டது.
“அதற்குக் காரணம் உங்கள் தீய குணங்கள்தான். அதை நீங்கள் இல்லாது செய்தால் உங்களையும் அன்பாக நடத்துவார்கள்” என்றது நாய்க்குட்டி.
“எங்களிடம் அப்படியென்ன தீய குணங்கள் உள்ளன? கடமை, சுத்தம், இப்படிப் பல நல்ல குணங்களில் நாங்கள்தான் சிறந்தவர்கள் என்று இந்த மனிதர்களேச் சொல்கிறார்கள்” என்றது காகம்.
“உண்மைதான்!” என்றது நாய்க்குட்டி.
“பகிர்ந்துண்ணும் பண்பைக் கற்றுத் தந்ததும் நாங்கள்தான்!” என்று பெருமையோடு சொன்னது காகம்.
“ஆமாம் அதுவும் உண்மைதான்!” என்று மறுபடியும் சொன்னது நாய்க்குட்டி.
“இப்படி நல்ல குணங்கள் எம்மிடம் இருந்தும், மற்றப் பறவைகளுக்கு உள்ள மதிப்பு எங்களுக்கு இல்லையே ஏன்? குயில் கூவும் போது அதன் இனிமையை ரசிக்கிறார்கள். மயிலாடும் போது அதை ரசித்துப் பாராட்டுகிறார்கள். கிளியை வீட்டில் வளர்த்து பேசக் கற்றுக் கொடுக்கிறார்கள். ஆனால், எவ்வளவோ நல்ல குணங்கள் இருந்தும் எம்மினத்தைக் கண்டாலேத் துரத்துகிறார்களே ஏன்?” என்று மீண்டும் கேட்டது காகம்.
“ஏன் என்று நான் சொல்லுகிறேன். உங்களிடம் எவ்வளவு நல்ல குணங்கள் இருந்தாலும். உங்களிடம் இருக்கும் சில தீய குணங்களால் தான் மனிதர்கள் உங்களை வெறுக்கிறார்கள்” என்று கூறியது நாய்க்குட்டி.
“அப்படி என்ன தீய குணங்கள்?” என்று கேட்டது காகம்.
“திருடுதல், ஏமாற்றுதல்” என்று சொன்னது நாய்க்குட்டி.
அதைக் கேட்ட காகம் தலை குனிந்தது.
ஒருவரிடம் எவ்வளவு நல்ல பண்புகள் இருந்தாலும், அவரின் ஒரு சில தீயசெயல்கள், அவரின் அத்தனை நல்ல பண்புகளில் இருந்தும் மறைத்து அந்தத் தீயச்செயலே முன்னிறுத்தும் என்பதை இக்கதை உணர்த்துகிறது.