ராதையும் அதிரதனும் மனமொத்த இணையர். அவர்களின் வாழ்வில் அவர்களுக்கு இருந்த ஒரே குறை மக்கட்பேறில்லாமைதான்.
அதிரதன் ஒரு தேரோட்டி. அவன் தன் துர்ப்பாக்கியத்தை எண்ணி நொந்தபடி ஆற்றங்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தான். கரையோரமிருந்த நாணற் புதரில் சிக்குண்ட ஒரு கூடை அவன் கண்ணில் பட்டது. அதனால் எட்டிப் பார்த்த அவனுக்குத் தான் காண்பது கனவா நனவா என்றே விளங்கவில்லை. தாவிப் பாய்ந்த அவன் கவச குண்டலத்தோடு விளங்கிய அந்த மகவை எடுத்து உச்சி மோந்தான்.
பிறகு தன் வீடு நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்று ராதையிடம் குழந்தையைக் கொடுத்தான். அவள் அடைந்த உவகையை எடுத்துரைக்க இயலுமா? ஆனால் அவர்களுடைய மகிழ்ச்சி சற்று நேரத்தில் மறைந்தது. 'குழந்தையின் சொந்தக்காரர்கள் தேடி வந்தால் குழந்தையைக் கொடுத்துவிடத் தானே வேண்டும்?' என்று எண்ணியதும் அவர்கள் மனம் தளர்ந்தனர்.
சில நாட்கள் சென்றன. எவருமே தேடி வரவில்லை என்றதும் அவர்கள் மகிழ்ந்தனர். ஒரு குழந்தை வேண்டித் தவமிருந்த நாட்கள் வீணாகவில்லை என்று உணர்ந்த அவர்கள் இறைவனைப் போற்றிப் பாடினார்கள்.
திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை என்பது போல, கர்ணனுக்கு அவர்களின் ஆதரவு கிடைத்தது. கர்ணன் வளர்ந்து சிறுவனானான். எல்லோரும் அவனை அதிரதன் மகன் என்றே நம்பினார்கள். அதிரதன் துரோணரிடம் சென்று கர்ணனுக்குக் கல்வியும் போர்முறைகளும் புகட்டுமாறு வேண்டிக் கொண்டான். துரோணரும் இசைந்தார்.
பாண்டவர்களோடும் கௌரவர்களோடும் அவனும் பாடங்களை நன்கு பயின்றான். அரசகுலத்தில் பிறக்காத அவனுக்குப் பிரம்மாஸ்திரத்தைக் கற்றுத்தர, துரோணர் மறுத்துவிட்டார். கர்ணன் மனமொடிந்து போனான். எல்லா நிலைகளிலும் அர்ஜுனனோடு சமமாக இருந்த அவன், இந்த ஒரு குறையால் மட்டமாகிவிடுவதா என்று எண்ணி மனம் புழுங்கினான்.
அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. பிரம்மாஸ்திரத்தைக் கற்க அவன் செய்ய வேண்டியதெல்லாம் ஒரே ஒரு தவறுதான். அது ஒரு பொய், ஒரே ஒரு பொய்! கர்ணன் தன் வாழ்வில் முதலும் முடிவுமாக ஒரு பொய் சொல்லத் துணிந்தான்!