ஒரு கிராமத்திலே மௌஜி என்ற பையன் வாழ்ந்து வந்தான்.
மௌஜிக்குத் தாய் தந்தையர் கிடையாது. அவனுக்குப் புத்தி தெரியும் வயது வருவதற்கு முன்பே அவர்கள் காலமாகிவிட்டார்கள். மௌஜி என்ற பெயரை யார் வைத்தார்கள் என்பதும் அவனுக்குத் தெரியாது. எப்படியோ அந்தப் பெயர் வந்தது. ஊர் மக்களும் அவனை அப்படியே அழைத்தார்கள். அவன் ஓர் அனாதை.
மௌஜிக்குப் படிப்பு வாசனை அறவே இல்லை. 'நீ பள்ளிக்கூடம் சென்று படி' என்று ஒருவரும் அவனிடம் சொன்னது கிடையாது. அவனும் பள்ளிக்கூடம் போகவேண்டும் என்று நினைத்தது கிடையாது. அப்படிப்பட்ட ஓர் அவசியம் தனக்கு உண்டா இல்லையா என்பதே அவனுக்குத் தெரியாது. ஆகவே, தன்னைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைக்கும்படி அவன் யாரையும் கேட்டதும் இல்லை.
ஊரில் இருப்பவர்கள் கொடுத்த உணவை உட்கொண்டே அவன் வளர்ந்தான். அவனுக் கென்று நிலையான இருப்பிடமும் கிடையாது. எந்த வீடாவது பூட்டப்பட்டிருந்தால், அதன் திண்ணையிலே அவன் படுத்துக் கொள்வான். அல்லது, இடிந்து பாழடைந்து கேட்பாரற்றுப் போன எந்தக் கட்டடத்திலாவது படுத்துக் கொள்வான்.
மௌஜிக்கு உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசத் தெரியாது. கள்ளம் கபடமற்ற நெஞ்சம் அவனுடையது.
அந்தக் கிராமத்திலே ஒரு பண்ணையார் இருந்தார். அவருடைய மாடுகளை மௌஜி மேய்ப்பது வழக்கம். அதற்கு மாதந்தோறும் ஊதியமாக இரண்டு ரூபாய்களை மௌஜிக்குக் கொடுத்து வந்தார். அதோடு மௌஜிக்குத் தேவையான எளிய உணவுக்கும் உடைக்கும் பண்ணையாரே வசதி செய்து கொடுத்திருந்தார். இப்படியாகத்தான் அந்த ஊரிலே மௌஜியின் வாழ்க்கைச் சக்கரம் சுழன்று கொண்டிருந்தது.
மௌஜி ஒரு தனிக்காட்டு ராஜா. கல்வி அறிவு அவனுக்கு இல்லாமல் போனதுடன், சான்றோர்களுடைய தொடர்பும் அவனுக்கு இல்லாமல் போய்விட்டது. சிறுவனாக இருந்ததால் உலக அனுபவமும் அவனுக்குப் போதவில்லை. ஆதலால், பல சந்தர்ப்பங்களில் அவன், பொய்யை உண்மை என்றும் உண்மையைப் பொய் என்றும் நம்பி ஏமாற்றம் அடைந்திருக்கிறான். அவனுடைய உள்ளத்தில் ஏதாவது ஒன்று சரி என்று பட்டுவிட்டால், அதை அவன் விடாமுயற்சியுடன் பின்பற்றுவான். மொத்தத்தில் அவனுடைய சிந்தனைகள், சுதந்திரச் சிந்தனைகளாக இருந்தன.
இப்படி எல்லாம் இருந்தாலும்கூட, உயர்ந்த ஒரு குணமும் அவனிடம் இருந்தது. அதாவது, எப்போதும் எந்த நிலையிலும் உண்மையையே பேசும் குணம் அவனுடையது.
ஒரு நாள் மௌஜி வழக்கம் போல மாடுகளை ஓட்டிக்கொண்டு ஆற்றங்கரைக்குப் போனான். மாடுகளை மேய விட்டுவிட்டு ஆற்றங்கரையிலிருந்த ஒரு மரத்தடியில் சாவகாசமாக உட்கார்ந்தான். தூரத்தில் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. அவைகளைப் பார்த்துக் கொண்டே அவன் ஏதேதோ பாடல்களை முணு முணுத்துக் கொண்டிருந்தான். நேரம் நழுவிக் கொண்டிருந்தது.
அப்போது அந்த வழியாக யாரோ ஒருவர் வந்தார். அவரைப் பார்த்தவுடனேயே தனக்கு அறிமுகமில்லாத யாரோ வெளியூர் பிராம்மணர் என்பது மௌஜிக்குப் புரிந்தது. அவர், தம்முடைய நெற்றியில் பளிச்சென்று பெரிய நாமம் போட்டிருந்தார். அவருடைய தோளிலே சிறிய ஒரு துணிப்பை தொங்கியது.
வெயிலில் நடந்துவந்த களைப்பின் காரணமாக, அவரும் மௌஜி உட்கார்ந்திருந்த மரத்தடியில் சற்றுத் தூரத்தில் அமர்ந்தார். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு ஆற்றில் இறங்கி நீராடினார். பிறகு தம்முடைய பையிலிருந்து வேறு ஆடையை எடுத்து உடுத்திக் கொண்டார். கரையில் உட்கார்ந்து கண்களை மூடினார். வலது கையால் மூக்கைப் பிடித்துக்கொண்டு ஆடாமல் அசையாமல் கொஞ்ச நேரம் உட்கார்ந்தபடியே இருந்தார். பிறகு பையிலிருந்து எதையோ எடுத்துச் சாப்பிட்டுப் பசியைத் தீர்த்துக் கொண்டார். அவ்வளவுதான். எல்லாம் முடிந்தது. மீண்டும் புறப்படுவதற்குத் தயாரானார்.
அதுவரையிலும், மௌஜி மரத்தடியில் உட்கார்ந்து, அவருடைய செய்கைகளை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அவர் அங்கிருந்து கிளம்பிப் போகப் போகிறார் என்பது தெரிந்தது. உடனே மௌஜி வேகமாக அவரை நெருங்கிச் சென்று 'சுவாமி, அடியேனின் வணக்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும்' என்று சொன்னான். அதற்குப் பதிலாக, வெளியூர்காரராகிய பிராம்மணர் 'உனக்குக் கடவுளின் திருவருள் கிடைக்கட்டும்' என்று வாழ்த்துக் கூறினார்.
மௌஜி: சுவாமி, தாங்கள் யார்? தாங்கள் எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள்? இப்போது எங்கே போய்க்கொண்டிருக்கிறீர்கள்?
பிராம்மணர்: நான் ஒரு பண்டிதன். கேசம் புரத்திலிருந்து வந்து கொண்டிருக்கிறேன். தௌலதாபாத்திற்குப் போகிறேன். அங்கே என்னுடைய சீடர்கள் இருக்கிறார்கள்.
மௌஜி: ரொம்பவும் சரி. பண்டிதரே, எனக்கு ஒரு சிறிய சந்தேகம். தாங்கள் அனுமதியளித்தால், தங்களுக்கு அதைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
பிராம்மணர்: என்னப்பா சந்தேகம்? தாராளமாக நீ உன்னுடைய சந்தேகத்தைத் தெரிவிக்கலாம்.
மௌஜி: தாங்கள் இவ்வளவு நேரமாகக் கண்களை மூடி மூக்கைப் பிடித்துக்கொண்டு என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
பிராம்மணர்: ப்பூ! இதுதானா உன்னுடைய சந்தேகம்? நான் அப்போது பகவானை தரிசித்துக் கொண்டிருந்தேன்.
மௌஜி: ஓ, அப்படியா! மிகவும் நல்லது. அதைத் தெரிந்து கொள்வதற்காகத்தான் கேட்டேன். தங்கள் பிரயாணத்தைச் சற்று நேரம் தடைப்படுத்தியற்காக மன்னிக்கவும். நீங்கள் போய் வரலாம்.
மௌஜி அந்த வெளியூர்காரருக்கு வணக்கம் தெரிவித்து அவரை வழி அனுப்பினான்.
சில வினாடிகள் மௌஜி, கற்சிலையைப் போல மௌனமாக மரத்தடியிலேயே உட்கார்ந்திருந்தான். 'இவ்வளவு நேரமாகக் கண்களை மூடிய நிலையில் மூக்கைப் பிடித்துக்கொண்டு இந்தப் பிராம்மணீர் பகவானைத் தரிசித்திருக்கிறார்' என்ற எண்ணமே அவனது உள்ளத்தில் சுழன்றது. சுயமாகச் சிந்திக்கும் அறிவு மௌஜிக்குக் கிடையாது. ஆகவே அந்தப் பிராம்மணர் சொன்னதை அப்படியே முழுக்க முழுக்க உண்மையென்றே அவன் நம்பிவிட்டான்.
மௌஜி தனக்குச் சொந்தமாக இருந்த ஒரே ஆடையை அவிழ்த்துக் கரையிலே வைத்தான். பிறகு வெளியூர்காரர் செய்ததைப் போலவே ஆற்றில் மூழ்கிமூழ்கி எழுந்தான். கரையேறி வந்து பழையபடியே தன்னுடைய ஆடையை எடுத்துப் போட்டுக் கொண்டான். உட்கார்ந்து கண்களை மூடினான். மூக்கை அழுத்திப் பிடித்தான். கண்களை மூடிய வுடனே பகவானின் தரிசனம் தனக்குக் கிடைக்கும் என்று மௌஜி நம்பினான். ஆனால் கண்களை மூடியவுடன் இருட்டாகத்தான் இருந்ததே தவிர, பகவானின் தரிசனமும் அவனுக்குக் கிடைக்கவில்லை; பகவதியின் தரிசனமும் அவனுக்குக் கிடைக்கவில்லை.
அந்த பிராம்மணருக்குக் கிடைத்த பகவானின் தரிசனம் தனக்கு ஏன் கிடைக்கவில்லை என்று அவனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ஒரு வேளை கண்களைச் சரியாக அழுத்தி மூடவில்லையோ என்று அவன் சந்தேகப்பட்டான். ஆதலால் கண்களை மேலும் அவன் இறுக்கி மூடிக் கொண்டான். ஆனாலும் பகவான் அவனுக்குப் புலப்படவே இல்லை. அவனுக்கோ ஆத்திரம் அதிகமாகிக்கொண்டே வந்தது.
சில வினாடிகள் கடந்தன. 'மூக்கைச் சரியாக மூடாததால் தான் பகவானை நம்மால் பார்க்க முடியவில்லையோ' என்று மௌஜி நினைத்தான். ஆகவே அந்த நினைப்பு வந்தவுடனே மூக்கைத் தன்னால் இயன்ற மட்டும் மேலும் அழுத்தி மூடினான்! மூச்சுக் காற்றுத்தான் தடைப்பட்டதே தவிர, பகவான் என்னவோ வரவில்லை.
ஆனால் மௌஜியோ தனது முயற்சியைக் கைவிடுபவனாக இல்லை. 'உயிரே போனாலும் சரி. பகவானை நான் எப்படியும் பார்த்தே ஆகவேண்டும். அப்படி அவரைப் பார்க்காத வரையில் மூக்கை நான் இறுக்கிப் பிடிப்பதை நிறுத்த மாட்டேன்' என்று தனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டான்.
ஏதாவது ஒரு முடிவை எடுத்தால், கடைசி வரையிலும் அதை நிறைவேற்றிப் பார்ப்பது மௌஜியின் இயல்பு. அவனுடைய பிடிவாதம் அவனுடைய உயிருக்கே உலை வைக்கும் கட்டத்தை நெருங்கியது. மௌஜியின் நிலைமை மிக மிக மோசமாகிவிட்டது.
அங்கிங்கெனாதபடி எங்கும் பரம்பொருள் நீக்கமற நிறைந்திருக்கிறார். எப்போது, எந்த இடத்தில், எது நடந்தாலும் உடனுக்குடன் பகவானுக்குத் தெரிந்துவிடும். எல்லா உயிர்களுக்கும் ஏற்படும் துன்பத்தை அப்போதைக் கப்போதே பகவான் உணர்ந்துகொள்கிறார் இந்த உண்மையை உயிராகிய கயிறு, பகவான் ஆசனமாகக் கொண்டு எழுந்தருளியுள்ள ஆதிசேஷனோடு இணைக்கப்பட்டிருப்பதாகச் சொல்வார்கள்.
மாடு மேய்க்கும் பையனின் உயிருக்கு நேர்ந்த ஆபத்து, பகவானின் ஆசனமாகிய ஆதிசேஷனையே அசைத்தது. அதன் விளைவாக, உயிர் போகும் நிலையிலிருந்த மௌஜியின் முன்னால் பகவான் தோன்றி, ''குழந் தாய், மௌஜி! கண்களைத் திறந்து பார். இதோ, நீ தரிசிக்க விரும்பிய பகவான் வந்து விட்டேன் பார்'' என்று அன்பு ததும்பக் கூறினார்.
அவருடைய குரலைக் கேட்டதும் மௌஜி கண்களைத் திறந்து பார்த்தான். மூக்கை இறுக்கியிருந்த பிடியையும் தளர்த்தினான். கொஞ்சம் காற்றை உட்கொண்டு தன்னை ஆக் வாசப்படுத்திக் கொண்டான். பிறகு மௌஜி யும் பகவானும் பேசிக் கொண்டார்கள்.
மௌஜி: யார் நீ? ஏன் இங்கே வந்தாய்?
பகவான்: நான்தான் நீ தரிசிக்க விரும்பிய பகவான். உனக்குக் காட்சியைத் தருவதற்காகவே இங்கே வந்திருக்கிறேன்.
மௌஜி: அடி சக்கை! பேஷ், பேஷ்! நீங்கள் தான் பகவான் என்பதற்கு அத்தாட்சி ஏதாவது வைத்திருக்கிறீர்களா?
பகவான்: உனக்கு எந்த விதத்தில் அத்தாட்சி வேண்டுமோ கேள். அப்படியே அதே விதத்தில், நீ விரும்பியபடி அத்தாட்சி தருகிறேன்.
மௌஜி: வீணாகக் கதையளந்து நீங்கள் என்னை ஏமாற்ற முடியாது. உங்களைச் சற்று முன்பு பார்த்ததாக அந்த பிராம்மணர் இப்போது தான் எனக்குச் சொல்லிவிட்டுப் போனார். அவர் கொஞ்ச தூரம்தான் போயிருப்பார். ஓட்டமாய் ஓடிப்போய் அவரை நான் கையோடு அழைத்து வருகிறேன். அவர் வந்து, 'நான் கண்ட பகவான் நீங்கள் தான்' என்று சொல்ல வேண்டும். அப்போதுதான் நான் நம்புவேன், தெரிகிறதா?
பகவான், மௌஜியின் கருத்துக்கு ஒப்புக் கொண்டார்.
மௌஜி: உங்களை முன்பின் எனக்குத் தெரியாது. நான் பிராம்மணரை இங்கே அழைத்து வருவதற்குள்ளாக நீங்கள் இங்கிருந்து தப்பி ஓடிவிட்டால் என்ன செய்வது? நீங்களோ புதிய ஆள். உங்களை நம்பி நான் தனியாக விட்டுவிட்டுப் போகமாட்டேன். (சிறிதுநேரம் ஏதோ யோசித்துவிட்டு) நான் அந்த பிராம்மணரை இங்கே அழைத்து வரும் வரையிலும், உங்களை ஆற்றங்கரை மரத்தில் கட்டிப்போட்டு விட்டுப் போகலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
அதற்கும் பகவான் சம்மதித்தார். அதோடு மட்டுமல்லாமல் அவராகவே போய் மரத்தின் அருகில் நின்று கொண்டார்!
மௌஜி, அங்கே மேய்ந்து கொண்டிருந்த சில மாடுகளின் கழுத்திலிருந்து கயிறுகளை அவிழ்த்தான். அவைகளை ஒவ்வொன்றாக முடி போட்டு, பலமான ஒரு பெரிய கயிறாகக் கட்டினான். அந்தக் கயிற்றைக்கொண்டு, பகவானை அப்படியும் இப்படியும் நகரவொட்டாமல், மரத்தோடு வைத்து நன்றாக இறுக்கிக் கட்டினான். அவர், கயிற்றை அவிழ்த்துக் கொண்டு, தான் வருவதற்குள் ஓடிவிட மாட்டார் என்பதைப் பலமாகக் கட்டியிருக்கிறோமா என்பதைக் கொண்டு ஒரு முறைக்குப் பல முறை சோதித்துப் பார்த்து நிச்சயம் செய்து கொண்டான்.
பிறகு அவன், பிராம்மணரை அழைத்து வருவதற்காக மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஓட்டமாக ஓடினான். சுமார் அரை மைல் தூரம் ஓடிய பிறகு, பிராம்மணர் சென்று கொண்டிருந்ததைக் கண்டான்.
உடனே மௌஜி அவரைக் கூவிக்கூவி அழைத்தான்: ''சுவாமி, கொஞ்சம் நில்லுங்கள்! சுவாமி, கொஞ்சம் நில்லுங்கள்! 'நீங்கள் போனபிறகு பகவான் அங்கே வந்தார். அவரை நான் மரத்தோடு சேர்த்துக் கட்டிப் போட்டுவிட்டு வந்திருக்கிறேன். தாங்கள் தயவுசெய்து மரத்தடிக்கு வந்து, நீங்கள் பார்த்த பகவான் அவர்தானா என்பதைச் சொல்லிவிட்டுப் போய்விடுங்கள்'' என்று சொல்லிக் கத்தினான்.
மௌஜியைக் கண்டதும், மாட்டுக்காரப் பையன் தன்னை ஏன் இப்படித் துரத்திக் கொண்டு வருகிறான் என்பது பிராம்மணருக்குப் புரியவில்லை. ஒரு வேளை தன்னிடம் உள்ள துணிப் பையைப் பிடுங்கிக் கொள்வதற்காக இப்படித் தந்திரமாகக் கூவி அழைக்கிறானோ என்று அவர் சந்தேகப்பட்டார்.
இந்தச் சந்தேகம் அவருக்கு வந்ததோ இல்லையோ, அடித்தோம் பிடித்தோம் என்று மேலும் வேக வேகமாக அவர் ஓட ஆரம்பித்தார்.
மௌஜி விடுபவனாக இல்லை. சளைக்காமல் தன்னுடைய வேகத்தை அதிகப்படுத்தி, அவருடைய கைகளை வளைத்துப் பிடித்துவிட்டான். பிராம்மணர் தப்பி ஓடுவதற்குத் தன்னாலான எவ்வளவோ முயற்சி செய்தார். மௌஜியின் பிடி உடும்புப் பிடியாக இருந்தது. 'கொஞ்சம் ஆற்றங்கரை வரையிலும் வந்துவிட்டுப் போய் விடுங்கள், சுவாமி!'' என்று சொல்லிக் கொண்டே, பகவான் கட்டப்பட்டிருந்த இடத்துக்கு பிராம்மணனைத் தள்ளிக்கொண்டு வந்துவிட்டான்.
மௌஜி: சுவாமி! மரத்தில் பகவானைக் கட்டியிருப்பதை நன்றாகப் பாருங்கள். நீங்கள் கண்களை மூடியபோது தரிசித்த பகவான் இவர்தானா என்பதைச் சரியாகப் பார்த்துச் சொல்லுங்கள்.
பிராம்மணரின் கண்களுக்குப் பகவான் கட்டப்பட்டிருப்பது தெரியவில்லை! மரத்தில் கயிறு கட்டப்பட்டிருப்பதை மட்டுமே அவர் பார்த்தார். மௌஜியோ, ''சரியாகப் பார்த்துச் சொல்லுங்கள், இவர்தானா பகவான் என்று'' என்று திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தான்.
பிராம்மணர், சுற்றும் முற்றும் பார்த்தார். கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தார். மரத்தடியில் கயிறு கட்டப்பட்டிருந்ததைத் தவிர அவருக்கு' பகவான் இருந்தது தெரியவில்லை. ஆகவே அவர், 'எங்கே இருக்கிறார் பகவான்?' என்று மௌஜியிடமே கேட்டார்.
மௌஜி: என்ன சுவாமி நீங்கள்? பகலிலேயே உங்களுக்குப் பசுமாடு தெரியாவிட்டால் அமாவாசை அர்த்தராத்திரியில் எருமைமாடு எப்படித் தெரியப்போகிறது? இதோ, இங்கே மரத்தடியில் பகவானைப் பலமாகக் கட்டி வைத்திருப்பதைப் பாருங்கள். இவர்தான் பகவான் என்று சொல்லிவிட்டு உங்கள் வழியைப் பார்த்துக்கொண்டு போங்கள்.
பிராம்மணரின் உள்ளத்தில், தம்முடைய துணிப்பை எங்கே பறிபோய்விடுமோ என்ற எண்ணமே சுழன்று கொண்டிருந்தது. ஆகவே, அவர் மௌஜியிடமிருந்து எப்படியாவது தப்பித்தால் போதும் என்று நினைத்து, ''ஆமாம், ஆமாம். நான் முதலில் ஏதோ ஞாபகமாக சரியாகப் பார்க்காமல் போனேன். சாட்சாத் நான் சொன்ன பகவான் இவரேதான்! இவரைத்தான் நீ கயிற்றைக் கொண்டு மரத்தடியில் கட்டி வைத்திருக்கிறாய்'' என்று பகவான் இருப்பதைப் பார்க்காமலேயே சொன்னார்.
மௌஜிக்குப் பிராம்மணர் பொய் சொல்கிறார் என்பது தெரியாது. ஆகவே அவர் சொன்னதைக் கேட்டதும், அவன் மனம் திருப்தி அடைந்தது. அவன் அவருக்கு நன்றி தெரிவித்தான். அவரை அன்போடு வழி அனுப்பி வைத்தான்.
பிராம்மணர், 'பெரிய கண்டத்திலிருந்து தப்பித்தோம்' என்று தமது பயணத்தைத் தொடர்ந்தார்.
பிராம்மணர் சென்ற பிறகு, மௌஜி பகவானைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்தான். பக்தியோடு பகவானின் திருவடிகளில் சாஷ்டாங்கமாக வீழ்ந்து பணிந்தான்.
பகவான்: குழந்தாய் மௌஜி! நீ கொண்ட பரிபூரண நம்பிக்கைக்காகத்தான் நான் உனக்குத் தரிசனம் கொடுத்தேன். அந்தப் பிராம்மணனுக்கு உன்னைப் போல என் மீது பரிபூரண நம்பிக்கை கிடையாது. அவன் என்னுடைய பக்தன் அல்ல.
மௌஜி: அவரை உங்களுடைய பக்தன் இல்லையென்றா சொல்கிறீர்கள்? அப்படியானால் நீங்கள் ஏன் அவருக்குத் தரிசனம் கொடுத்தீர்கள்? உங்களை அவர் தியானத்தில் பார்த்ததாகச் சொன்னாரே!
பகவான்: நான் அந்தப் பிராம்மணனுக்கு எந்தக் காலத்திலும் தரிசனம் கொடுத்தது இல்லையப்பா! அவன் என்னைத் தியானத்தில் பார்க்கவும் இல்லை.
மௌஜி: நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? உங்களைத் தினந்தோறும் தியானத்தில் பார்ப்ப தாக அவர் சொன்னது பொய்யா? இப்போது என் கண் முன்னாலேயேகூட மரத்தில் கட்டப்பட்டிருந்த உங்களைப் பார்த்துவிட்டு 'நீங்கள்தான் பகவான்' என்று சொன்னாரே, அதைக் கூடவா பொய் என்று சொல்வீர்கள்?
பகவான்: ஆம். அவன் என்னைப் பார்த்ததாகச் சொன்னது அவ்வளவும் பொய். என்னை ஒருபோதும் பார்க்காமலேயே தியானத்தில் பார்த்ததாக உன்னிடம் சொன்னான். நீ அவனை இப்போது அழைத்து வந்தபோதும்கூட, உன்னுடைய கண்களுக்கு மட்டுமே நான் தென்பட்டுக் கொண்டிருந்தேனே தவிர, அவனுடைய கண்களுக்கு நான் தென்படவே இல்லை. உண்மை இப்படியிருக்க, நான் மரத்தில் கட்டப்பட்டிருந்ததைப் பார்த்ததாகப் பொய் சொன்னான். அவன் சரியான ஓர் ஏமாற்றுப் பேர்வழி.
மௌஜி: போனது போகட்டும். அவரை நான் சந்தித்ததால் தான் உங்களுடைய தரிசனம் எனக்குக் கிடைத்தது. அவர் சொன்னவைகளை நான் அப்படியே உண்மை என்றே நம்பினேன். அவரை ஓர் ஏமாற்றுப் பேர்வழி என்று நீங்கள் சொல்கிறீர்கள். என்றாலும் நான் அவரை என்னுடைய குருவாகவே கருதுகிறேன்.
பகவான்: என் கண்மணி, மௌஜி! உனக்கு என்ன வேண்டுமோ கேள். என்னுடைய தரிசனத்தைப் பெற்றவர்களை வெறுங்கையோடு நான் திருப்பி அனுப்பமாட்டேன். உனக்கு என்ன வேண்டுமோ கேள் குழந்தாய்.
மௌஜி: பிரபோ, என் தெய்வமே! நான் நீராடி உட்கார்ந்து மூக்கைப் பிடித்துக் கண்களை மூடும்போதெல்லாம், தங்களுடைய தரிசனத்தைத் தந்தருள வேண்டும்.
பகவான்: அப்படியே குழந்தாய், நீ விரும்பியபடியே என்னுடைய தரிசனம் உனக்கு எப்போதும் கிடைக்கும்.
மௌஜி: பெருமானே, தாங்கள் அனுமதி அளித்தால் மேலும் ஒரு வரத்தை உங்களிடம் கேட்கலாம் என்று இருக்கிறேன்.
பகவான்: கேள். உனக்கு என்ன வேண்டுமோ தருகிறேன்.
மௌஜி: பரம்பொருளே! ஏமாற்றுக்காரர் என்று நீங்கள் சொன்னாலும், அந்த பிராம்மணர் இப்போது என்னுடைய குருவாகி விட்டார். அந்தப் பெரியவர் எப்போதெல்லாம் நீராடி உட்கார்ந்து மூக்கைப் பிடித்துக்கொள்கிறாரோ, அப்போதெல்லாம் அவருக்கும் நீங்கள் தங்களின் தரிசனத்தைத் தந்தருள வேண்டும். இதுவே என்னுடைய பிரார்த்தனை.
பகவான்: குழந்தாய், நீ உயர்ந்த உள்ளம் கொண்டவன். உலகில் சாதாரணமாக குருதான் சம்சாரக் கடலிலிருந்து சீடனைக் கரையேற்றுவது வழக்கம். நீயோ, உன்னுடைய பிரார்த்தனையால் உனது குருவையே நற்கதி பெறச் செய்தாய். அவன் ஓர் அற்பன்; என்றாலும் நீ கேட்டுக் கொண்டதால், அவனுக்கும் நான் தரிசனம் தருகிறேன். எனது தரிசனத்தைப் பெறுவதால் அவனும் மேலான ஞான நிலையைப் பெற்று வாழ்வான்.
ஒரு வருட காலம் உருண்டோடியது. ஒரு நாள் மௌஜி, வழக்கப்படி மாடுகளை மேய்த்துக்கொண்டு ஆற்றங்கரையிலே உட்கார்ந்திருந்தான். அப்போது தன்னுடைய குருவாகிய பிராம்மணர் தூரத்தில் வந்து கொண்டிருப்பதைக் கண்டான். உடனே ஆவலோடு அவரை நோக்கி ஓடி, ''குருதேவரே, என்னுடைய நமஸ்காரங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்று சொன்னான்.
பிராம்மணர்: குருதேவரே, என்னுடைய நமஸ்காரங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்! குருதேவரே, என்னுடைய நமஸ்காரங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்!
மௌஜி: உங்களால்தான் எனக்குப் பகவானின் தரிசனம் கிடைத்தது.
பிராம்மணர்: இல்லை, இல்லை. உங்களால்தான் எனக்குப் பகவானின் தரிசனம் கிடைத்தது.
மௌஜி: நான் மாடு மேய்க்கும் பையன். தாங்களோ புத்திமானாகிய பிராம்மண பண்டிதர்.
பிராம்மணர்: இல்லை, இல்லை. நான்தான் மாடு மேய்க்கும் பையன். தாங்கள்தான் புத்திமானாகிய பிராம்மண பண்டிதர்.
மௌஜி: நான் ஒரு முட்டாள். உங்களுடைய அருளால்தான் உலகில் எப்படி வாழவேண்டும் என்பதையே தெரிந்து கொண்டேன்
பிராம்மணர்: நான் ஓர் ஏமாற்றுப் பேர்வழி. உண்மையாகவே கடவுளை நம்பாதவன். உங்களுடைய அருளால்தான் எனக்கு உண்மையான கடவுள் நம்பிக்கையும் பக்தியும் ஏற்பட்டன.
மௌஜி: கடந்த காலம் எப்படியோ போனது போகட்டும். நீங்கள் இப்போது எனக்குக் குருவாகவும் சீடராகவும் ஆகிவிட்டீர்கள். நானும் உங்களுக்குச் சீடராகவும் குருவாகவும் ஆகிவிட்டேன்.
பிராம்மணர்: நீங்கள் ஒன்று செய்யுங்கள். இப்போது முதல் உங்களுடைய இந்த மாடு மேய்க்கும் தொழிலை விட்டு விடுங்கள். நானும் இந்தப் போலி பிராம்மண பண்டிதர் உத்தியோகத்திற்கு ஒரு முழுக்குப் போட்டுவிடுகிறேன். பிறகு ஊர் ஊராகச் சென்று பகவானின் புகழைப் பாடுவோம். அதன் மூலம் நாமும் உண்மைப் பக்தியில் திளைப்போம். உலக மக்களையும் உண்மைப் பக்தியில் திளைக்கச் செய்வோம்.
பிராம்மணரும் மௌஜியும் அப்போதுமுதல் சன்னியாச வாழ்க்கையை ஏற்றுக்கொண்டார்கள். பிராம்மணர் தனக்கு 'இடையர் தாசர்' என்ற புதிய பெயரை வைத்துக் கொண்டார். மௌஜிக்கு அவர் 'பண்டிதர் தாசர்' என்ற பெயரை வைத்தார்.
இருவரும் ஊர் ஊராகச் சென்றார்கள். இடையர்தாசர் கைகளால் தாளம் போட்டுக் கொண்டே பக்திப் பாடல்களைப் பாடினார். அவரோடு சேர்ந்து பண்டிதர்தாசரும் தம்புராவை மீட்டிக்கொண்டே பாடினார்.
கல்லையும் கரைய வைக்கும் இசை அவர்களுடையது. அவர்கள் பாடிய பாட்டு, கேட்டவர்களின் உள்ளங்களை எல்லாம் நெகிழ வைத்தது. அந்தப் பக்தமணிகளுடைய பாடல்களைக் கேட்டுக்கேட்டுப் பக்தர்கள் பரவசம் அடைந்தார்கள்.