இளைஞன் ஒருவன் தன் ஊரை நோக்கி வந்து கொண்டிருந்தான். இரவாகி விட்டதால் அருகில் தெரிந்த ஒரு பழைய மண்டபத்தில் தங்கிச் செல்வோம் என்று அதை நோக்கிச் சென்றான்.
அங்கு சந்நியாசி ஒருவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். தூக்கம் வரும் வரை அவரிடம் கொஞ்சம் பேசலாமே என்று பேச்சுக் கொடுத்தான்.
அவன் பேசுவதிலிருந்து அவன் விரக்தியை புரிந்து கொண்ட சந்நியாசி, "ஏனப்பா இவ்வளவு சிறு வயதில் இவ்வளவு வெறுப்புடன் பேசுகிறாய்?" என்று கேட்டார்.
"என்ன சுவாமி செய்வது? எதைத் தொட்டாலும் தோல்வியில் முடிகிறது. ஊராரின் இழி பேச்சுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. என்ன வாழ்க்கை? தங்களைப் பார்த்தால் ஞானி போல் தெரிகிறது, எனக்கு இதிலிருந்து விடுபட ஏதாவது வழி சொலுங்களேன்?" என்றான்.
சந்நியாசி, "உனக்குக் கழுதையாக இருக்க விருப்பமா? அல்லது எருமையாக இருக்க விருப்பமா? அல்லது குதிரையாக இருக்க விருப்பமா?" என்று கேட்டார்.
"சுவாமி! தாங்கள் கேட்பது எனக்கு ஒன்றும் புரியவில்லை." என்றான் அவன்.
"ஒரு கழுதையை அடித்தால் அது என்ன செய்யும்?"
"பின்னங்காலால் எட்டி உதைக்கும்"
"ஒரு எருமையை அடித்தால்?"
"பேசாமல் எதுவும் செய்யாமல் நிற்கும்"
"ஒரு குதிரையை அடித்தால்?"
"சீறிக் கொண்டு முன்னாள் பாய்ந்து செல்லும்"
"உனக்கு வரும் அவமானங்களும் ஏளனப்பேச்சும் அந்த அடிபோல தான். நீ கழுதையாகவோ, எருமையாகவோ, குதிரையாகவோ இருப்பது உன் விருப்பம்" என்றார் அவர்.
சந்நியாசியின் கருத்து அவனுக்கு புது நம்பிக்கையைத் தந்தது.