மகாபாரதப் போர் நடந்து கொண்டிருந்தது. தேரோட்டியான கிருஷ்ணன், அன்றைய போர் முடிந்ததும், தமது பாசறைக்குத் திரும்பி, முதல் வேலையாகத் தேரிலிருந்து குதிரைகளை விடுவித்தான். அவற்றை நன்கு தேய்த்துக் குளிப்பாட்டி, அவைகளுக்குத் தேவையான உணவுகளை அளித்தான்.
அவற்றை மெல்லத் தடவிக் கொடுத்தான். பிறகு கொட்டிலுக்கு அழைத்துச் சென்று உள்ளே வைத்துப் பூட்டினான்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அர்ஜூனன், “என்ன கிருஷ்ணா, இந்த வேலைகளையெல்லாம் நீதான் செய்ய வேண்டுமா? எத்தனையோ வேலைக்காரர்கள் இருக்கிறார்களே?” என்று கேட்டான்.
“இருக்கலாம். ஆனால், ஒரு தேர்ப்பாகன் என்ற முறையில் தேரிழுக்கும் இந்தக் குதிரைகளை மட்டுமின்றி, தேரைப் பராமரிப்பதும் என் வேலைதான்” என்று பதிலளித்தான் கிருஷ்ணன்.
எந்தப் பணியைச் செய்தாலும் அந்தப் பணியில் தனக்குள்ள பொறுப்பை தானே செய்ய வேண்டும் என்பதை அன்றே மகாபாரதம் வலியுறுத்தியிருக்கிறது.