ஒரு கிராமத்தில் ஐந்து முட்டாள் சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் எந்தச் செயலில் இறங்கினாலும் அதைத் திறமையாகச் செய்யாமல் கோமாளித்தனமாக எதையாவது செய்து விடுவார்கள்.
அவர்கள் ஒரு நாள் காலையில், "நம்ம ஊர் காட்டாற்றில் மீன் பிடிச்சுட்டு வருகிறோம்," என்று அவர்களின் அம்மாவிடம் சொன்னார்கள்.
"நல்ல மீனாகப் பிடித்து வாருங்கள், நான் அதை உங்களுக்குச் சுவையாகச் சமைத்துத் தருகிறேன்" என்றாள் அவள்.
"இரவுச் சாப்பாட்டுக்கு நாங்கள் பிடிச்சுட்டு வரும் மீன் தான்,"என்றான் மூத்தவன்.
"எனக்கும் மீன் ரெம்பப் பிடிக்கும். கவனமாக ஆற்றில் இறங்காமல் தூண்டில் போட்டு மீன் பிடியுங்கள். தண்ணீருக்குள் தவறி விழுந்து விடாமல் கவனமாக இருக்க வேண்டும் "என்று அம்மா புத்திமதி சொல்லி அனுப்பினார்.
"நான்தான் பெரியவனாக இருக்கிறேனே... அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்"என்றான் மூத்தவன்.
ஐந்து சகோதரர்களும் காட்டுக்குள் சென்றனர்.
அங்கு ஓடிக் கொண்டிருந்த ஆற்றின் கரையை ஒட்டி இருந்த இடத்திலிருந்து தேவையான தூண்டிலுக்குத் தேவையான மண்புழுக்களைச் சேகரித்தனர்.
நான்கு சகோதரர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த தூண்டிலில் மண்புழுவைக் கோர்த்து ஆற்றுக்குள் ஒவ்வொருவரும் தங்கள் தூண்டிலை வீசினர்.
மூத்தவன் தூண்டில் உள்ளே இழுக்கப்பட்டதால் அதை வெளியே எடுத்தான். அந்தத் தூண்டிலில் ஒரு மீன் வந்தது.
இப்படியே மற்ற சகோதரர்களும் தூண்டிலின் மூலம் மீனைப் பிடித்துக் கொண்டிருந்தனர்.
கடைசிச் சகோதரன் மட்டும் தூண்டிலில் விழும் மீனை எடுத்துப் பாத்திரத்தில் போடும் வேலையைச் செய்தான்.
ஒரு மணி நேரம் ஆனது.
"இதுவரை மொத்தம் எத்தனை மீன் கிடைத்துள்ளன?"என்றான் மூத்தவன்.
கடைசித் தம்பி மீனை எண்ணி, "இதுவரை 15 மீன்கள் கிடைத்திருக்கிறது அண்ணா"என்றான்.
"அம்மா, இந்த மீன்களைப் பார்த்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் "என்றான் இரண்டாவது சகோதரன்.
"நேரமாகி விட்டது. பிடித்த மீன்கள் போதும். வீட்டுக்குப் போகலாம்" என்றான் மூன்றாமவன்.
"நாம எல்லோரும் இங்கே சரியாக இருக்கிறோமா?"என்றான் நான்காமவன்.
"அஞ்சு பேர் இருக்கிறோமா என்று எண்ணிப் பார்த்து விடலாம்" என்றான் ஐந்தாவது சகோதரன்.
உடனே மூத்தவன் எண்ணத் தொடங்கினான். தனக்கு எதிரில் இருந்த சகோதரர்களை, “ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு..."என்று சொல்லி நிறுத்தினான். ஒருத்தன் குறைகிறானே என்றான்.
அடுத்தவன் எண்ணிப் பார்த்தான். அவனும் “ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு... அட... நான்கு பேர்தான் இருக்கிறோம்,"என்றான்.
அடுத்தவனும் அதே போல எண்ணினான். அவனுக்கும் நான்கு பேர்தான் எண்ணிக்கை வந்தது.
கடைசியாக ஐந்தாவது சகோதரனும் எண்ணிப் பார்த்து விட்டு அழ ஆரம்பித்து விட்டான்.
"அண்ணா, நாம் நான்கு பேர்தான் இருக்கிறோம். அம்மா சொன்ன மாதிரி நம்மில் ஒருவர் தண்ணீரில்தான் விழுந்திருக்கனும்,"என்று சொல்லி அழுதான்.
"ஆமாம்... நீ சொல்வது சரிதான்... நம்மில் ஒருவரைக் காணோம். வாருங்கள்... ஆத்தங்கரை ஓரமாக ஓடித் தேடுவோம். தண்ணீரில் தான் விழுந்திருக்க வேண்டும்," என்று மூன்றாமவன் அழுது கொண்டே சொன்னான்.
சகோதரர்கள் அனைவரும் இப்போது அழுது கொண்டே வெகுதூரம் ஓடிப் போய்ப் பார்த்தனர். தண்ணீர்தான் வேகமாக போய்க் கொண்டிருந்தது.
என்ன செய்வது என்று தெரியாமல் சோகமாக சகோதரர்கள் அழுது கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஒரு சிறுமி பூக்கூடையுடன் வந்தாள்.
"ஏன் எல்லோரும் அழுகிறீர்கள்? என்ன நடந்தது? "என்று கேட்டாள்.
"நாங்கள் ஐந்து பேர் மீன் பிடித்துக் கொண்டு இருந்தோம். எங்களில் ஒரு சகோதரனைக் காணவில்லை. அவன் தண்ணீரில் தவறி விழுந்து விட்டான் போல. தேடியும் பாத்துட்டோம். அவனைக் காணவில்லை"என்று சொல்லி அழுதான்.
"நான், இப்போது எண்ணிப் பார்க்கிறேன், ஒன்று,இரண்டு,மூன்று,நான்கு.."என்று மூத்தவன் எண்ணினான்.
அவன் எண்ணியதை அந்தச் சிறுமி பார்த்துக் கொண்டிருந்தாள்.
"நீங்கள் மொத்தம் எத்தனை சகோதரர்கள்?"என்று சிறுமி கேட்டாள்.
"நாங்கள் ஐந்து பேர்கள்,"என்றான் இரண்டாமவன்.
பூக்கூடையுடன் வந்த சிறுமி புன்னகைத்தபடி, "இப்ப நான், காணாமல் போன ஐந்தாவது சகோதரனைக் கண்டுபிடித்துத் தருகிறேன்" என்றாள்.
"எப்படி?" என்று அனைவரும் ஒரே நேரத்தில் கேட்டனர்.
"இந்தப் பூக்கள் உதவியுடன் கண்டுபிடிக்கலாம்" என்றாள் சிறுமி.
"பூக்கள் எப்படி உதவி செய்யும்?" அப்பாவியாய்க் கேட்டான் ஐந்தாமவன்.
"நான் உங்கள் ஒவ்வொரு " பூ" வாகக் கொடுப்பேன். நான் ஒரு பூ கொடுத்ததும் ஒன்று, இரண்டு என்று சொல்வேன். நீங்களும் அப்படியே சொல்ல வேண்டும் சரியா?"என்று சொல்லி முதலவதாக ஒருவனிடம் பூவைக் கொடுத்தாள்.
முதல் பூவை வாங்கியவன், "ஒன்று" என்றான்.
இரண்டாவது பூவை வாங்கியவன், "இரண்டு" என்றான்.
மூன்றாவது பூவை வாங்கியவன், "மூன்று" என்றான்.
நான்காவது பூவை வாங்கியவன், "நான்கு" என்றான்.
ஐந்தாவது பூவை வாங்கியவன், "ஐந்து" என்றான்.
"பார்த்தீர்களா?” உங்களில் காணாமல் போன ஐந்தாவது சகோதரனைக் கண்டுபிடித்துவிட்டேன்"என்றாள்.
"ஆமாம். நீ, கண்டுபிடித்துக் கொடுத்து விட்டாய்" என்று மூத்தவன் மகிழ்ச்சியுடன் கத்தினான்.
"உனக்கு மிகவும் நன்றி" என்றான் ஒருவன்.
"எங்க அம்மா இந்த மீனைக் கொண்டு போய்க் கொடுத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் " என்றான் இன்னொருவன்.
"எங்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. காணாமல் போன சகோதரனைக் கண்டு பிடித்துக் கொடுத்த உனக்கு எங்கள் பரிசாக இரண்டு மீன் தருகிறோம்"என்று மூத்தவன் அந்தச் சிறுமிக்கு இரண்டு மீன்களைக் கொடுத்தான்.
அந்தச் சிறுமியும் இரண்டு மீன்களைப் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக அவளுடைய வீட்டை நோக்கிப் போனாள்.
தாங்கள் பிடித்த மீன்களோடு சகோதரர்கள் ஐவரும் உற்சாகமாக வீடு திரும்பினார்கள்.
தாங்கள் பிடித்த மீனுடன் வீடு திரும்பிய மகன்களைக் கண்ட அம்மாவுக்கும் மகிழ்ச்சி.
"அம்மா, நாங்கள் யாரும் தண்ணீரில் விழவில்லை. உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் இந்தப் பூவை வைத்து எங்களை எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள்" என்றான் கடைசி மகன்.
காணாமல் போன சகோதரனைக் கண்டு பிடிக்க உதவியது அந்தப் பூக்கள்தான் என்று அந்த அம்மாவுக்குத் தெரியுமா?