தன்னம்பிக்கை வேண்டும்!

ஜென் துறவி ஒருவர் அவருடைய சீடர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் சீடர்களிடம், “நமக்குத் துன்பம் வந்தால் தன்னம்பிக்கையுடன் மனம் தளராமல் இருக்க வேண்டும்” என்றார்.
சீடர்கள் புரியாமல் விழித்தனர்.
உடனே அவர் தன் சீடர்களுக்கு ஒரு எறும்புக் கதையைச் சொன்னார்.
"ஒரு எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப் பொருளைத் தூக்கிச் சென்று கொண்டிருந்தது. அது செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. அதனால், அந்த எறும்பு அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது. சிறிது நேரம் யோசித்தது. பின்னர் அந்த எறும்பு, தான் கொண்டு வந்த உணவை அந்த விரிசல் மீது வைத்தது. அந்த உணவு விரிசலைத் தாண்டி இருந்தது. எறும்பு, அந்த உணவின் மீது ஊர்ந்து சென்று அந்த விரிசலைக் கடந்தது. பின்பு தான் கொண்டு வந்த உணவை எடுத்துச் சென்றது" என்றார்.
பின் அந்தத் துறவி அவர்களிடம், "எறும்பைப் போல் நாமும் நமக்கு ஏற்படும் துன்பத்தையும் பாலமாக வைத்துக் கடந்து, வாழ்க்கையில் முன்னோக்கிச் செல்ல வேண்டும். அந்தச் சிறு எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே நாம் வாழ்வில் எந்த தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும். நம் துன்பமும் காணாமல் போய்விடும்” என்றார்.
ஜென் கதை.
- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.