உதவியவருக்குக் கேடு செய்யலாமா?

ஒரு காட்டில் கெட்ட சுபாவமுள்ள தேள் ஒன்று வசித்து வந்தது.
அந்தக் காட்டின் நடுவில் நீரோடை ஒன்று இருந்தது.
அந்தத் தேள் ஒரு சமயம் நீரோடையின் அக்கரைக்குச் செல்ல வேண்டி இருந்தது.
அக்கரைக்குப் போவதற்காக அந்த நீரோடையில் இருக்கும் பெரிய மீன்கள், நண்டு, தவளை போன்றவைகளிடம் தேள் உதவி கேட்டது.
ஆனால் அந்த பொல்லாத தேள் தம்மைக் கொட்டிவிடும் என்று அவை மறுத்து விட்டன.
அந்தத் தேள் நீரோடையை எப்படிக் கடப்பது என்று யோசித்துக் கொண்டு இருந்த போது, அந்த நீரோடையில் ஆமை ஒன்று வந்து கொண்டிருந்தது.
அந்தத் தேள் ஆமையிடம், “நான் அக்கரைக்குச் செல்ல வேண்டும், என்னை அந்தக் கரையில் கொண்டு போய் விட்டு விடுகிறீர்களா?” என்று கேட்டது.
ஆமை, “நான் அக்கரைக்குத்தான் செல்கிறேன். என் முதுகில் ஏறிக்கொள் நான் உன்னை அக்கரையில் கொண்டு போய் விட்டுவிடுகிறேன்” என்றது.
தேள் ஆமையின் முதுகில் ஏறிக் கொண்டது. ஆமை நீரில் நீந்திச் செல்ல ஆரம்பித்தது.
சிறிது தூரம் தான் ஆமை சென்றிருக்கும்.
தேளுக்கு ஒரு யோசனை வந்தது. நான் பல பேரைக் கொடுக்கைக் கொண்டு கொட்டியிருக்கிறேன். அவர்கள் வலியால் துடித்ததைப் பார்த்திருக்கிறேன். ஆமையைக் கொட்டி, அது துடிப்பதைப் பார்த்ததில்லையே... இந்த ஆமையைக் கொட்டினால் எப்படித் துடிக்கும்? இதை விட்டால் வேறு வாய்ப்பு கிடைக்காது என்று நினைத்தது.
தேள் ஆமையின் முதுகில் கொட்டியது. அனால் ஆமை பேசாமல் போய்க் கொண்டிருந்தது.
உடனே தேள் ஆமையைப் பார்த்து, “ஆமையே, உமது முதுகு இவ்வளவு கடினமாக இருக்கிறதே. உமது உடம்பில் வலியே வருவதில்லையா?” என்று கேட்டது.
தேளின் கெட்ட எண்ணத்தைப் புரிந்து கொள்ளாத ஆமை, எனது முதுகு கடினமான ஓட்டினால் மூடப்பட்டுள்ளது. எனவே, எனக்கு அந்த இடத்தில் வலியே வருவதில்லை. ஆனால், எனது கழுத்துப் பக்கம் மென்மையாக இருக்கும். இதில் தான் எனக்கு வலிகள் காயங்கள் ஏற்படும் என்று சொன்னது.
தேள், மெதுவாக ஆமையின் கழுத்துப் பகுதியை நோக்கிச் சென்றது . கழுத்தில் இருந்து தலைப்பகுதிக்குச் சென்ற தேள் ஆமையைக் கொட்டலாமென நினைத்தது.
தலையில் தேளின் வருகையால் கூச்சமடைந்த ஆமை, தலையை உள்ளே இழுத்துக் கொண்டது.
தேள் நீரோடையில் விழுந்து விட்டது.
தனக்கு உதவி செய்த ஆமைக்குக் கேடு செய்ய நினைத்த தேள் தண்ணீரில் மூழ்கி இறந்தது.
ஆமை கரையை நோக்கி நீந்திச் சென்றது.
எவ்வித பலனையும் எதிர்பாராமல் நமக்கு உதவி செய்தவரின் உதவியை நாம் என்றுமே மறந்து விடக் கூடாது. அவருக்கு நாம் நன்றியுடையவர்களாக இருத்தல் வேண்டும். அதைத் தவிர்த்து, உதவியவருக்குக் கேடு செய்ய நினைத்தால், நமக்கு அழிவே வந்து சேரும்.
- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.