கோடைக்காலத்தில் ஒருநாள் அந்தச் சிறு ஊரின் தலைவர் ஒரு சிறுவன் மிகப்பெரிய, மிகவும் அழகான காற்றாடி ஒன்றை பறக்கவிடுவதைக் கண்டார். அவர் பார்த்ததிலேயே மிகவும் அழகான காற்றாடி அது, மிகவும் உயரத்தில், சீராக பறந்தது. அது பக்கத்து நகரத்தில் இருப்பவர்களுக்கு கூட தெரிந்திருக்கும் வகையில் மிக உயரமாகப் பறந்தது.
பெரும் சிறப்புகள் இல்லாத அச்சிறு ஊரில் பறந்த அந்த அழகான காற்றாடி இப்படி உயரமாகவும், சீராகவும் பறப்பதற்குக் காரணமானவர் யாரென்று அறிய விரும்பினார் அந்த ஊரின் தலைவர்.
எனவே அவர், “இந்தக் காற்றாடி இவ்வளவு உயரமாகப் பறந்ததற்கு யார் காரணம்?” என காற்றாடியைப் பறக்க விட்ட சிறுவனிடம் கேட்டார்.
“நான்தான், நான் என் கைகளாலேயே காற்றாடியை உருவாக்கினேன். நானே அதில் அழகான படங்களை வரைந்து அழகான காகிதத் துண்டுகளால் அதை உருவாக்கினேன். நானே அதைப் பறக்க வைத்தேன்” என்றான் அதைப் பறக்க விட்ட சிறுவன்.
“சிறுவன் பொய் சொல்கிறான். நான் தான் காற்றாடி பறந்ததற்கு முழுக் காரணம். என்னுடைய ஓட்டமே காற்றாடியைச் சீராகவும் சரியான திசையிலும் பறக்கச் செய்தது. நான் மட்டும் அதை நகர்த்தா விட்டால் அது பறந்திருக்கவே முடியாது. எனவே நானே அதை பறக்க வைத்தேன்” என்றது காற்று.
“இல்லை, நான் தான் காற்றாடி பறந்ததற்கு முதன்மைக் காரணம். நான்தான் காற்றாடியை நகர்த்தவும் காற்றில் அது நிலையாகப் பறக்கவும் காரணம். நானில்லாவிட்டால் காற்றாடி கட்டுப்பாடில்லாமல் சுற்றித் தரையில் விழுந்திருக்கும் அதை அந்தப் பையனால் கூட காப்பாற்றியிருக்க முடியாது. எனவே நானே அதை பறக்க வைத்தேன்” என்றது என்றது காற்றாடியின் வால்.
இப்போது, உண்மையில் காற்றாடியைப் பறக்க வைத்தது யார்?
பல சமயங்களில் மக்கள் தங்கள் இலக்குகளை அடைவதில் மற்றவர்களின் பங்கு இருப்பதை மறந்து விடுகின்றனர். எல்லாம் தங்களால் மட்டுமே நடந்ததாக நினைக்கின்றனர். மற்றவர்கள் இல்லாமல் அவ்வேலை முடிந்திருக்காது. ஒவ்வொருவருமே அவ்வேலைக்கு முக்கியம் என உணருவதில்லை. உண்மையில் தனியாகச் செய்யப்படும் வேலையை விடக் குழுவாகச் செய்யப்படும் வேலையே சிறப்பானது. ஏனெனில் கூட்டு முயற்சியின் பலன் அளவிட முடியாதது. குழுவிலிருப்பவர்களுடன் வேலை செய்யும் போது நமக்கு சகிப்புத் தன்மை, பல விதமான சூழ்நிலைகளைக் கையாள்வது போன்ற சிறப்பு பண்புகள் வந்து சேரும்.
இங்கு யாரும் தனியானவர்கள் இல்லை. எனவே நம்முடைய பல செயல்பாடுகள் நம்மை மட்டுமின்றி மற்றவர்களையும் சார்ந்திருக்கிறது என்பதை நினைவில் கொண்டு செயல்பட வேண்டும்.