ஒரு நாள் உடல் உறுப்புகளிடையே சண்டை வந்தது... எல்லா உறுப்புகளும் 'வயிறை' விரோதியாக்கின.
அப்போது கைகள் சொன்னது, “நாங்கள் இரவும் பகலும் கடுமையாக உழைக்கிறோம்... ஆனால் உணவைச் சுவையாக வயிறு தான் விழுங்குகிறது”
உடனே கால்கள், ”நாங்கள் மட்டும் என்ன... இந்த உடம்பைச் சுமந்து கொண்டு தினமும் எவ்வளவு தூரம் நடக்கிறோம்... ஆனால் வயிறோ ஒரு வேலையும் செய்யாமல் உணவை மட்டும் உண்டு பெருத்துக் கிடக்கிறது” என்றன.
அப்போது தலை குறுக்கிட்டு, “நான்தான் பார்க்கிறேன், கேட்கிறேன், முகர்கிறேன், சிந்திக்கிறேன்... ஆனால் எந்த வேலையும் செய்யாத வயிறு மட்டும் உணவை உண்டு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றது.
வாயோ... நான் உணவை மென்று, வயிறு அனுபவிக்கவே அனுப்புகிறேன் என்றது.
இப்படி எல்லா உறுப்புகளும் வயிறைக் குறை சொல்லின. பின் அனைத்து உறுப்புகளும்... வயிற்றுக்கு இனி எந்த உதவியும் செய்யக்கூடாது என்று தீர்மானித்தன.
அதனால்... வயிறுக்கு உணவு கிடைக்கவில்லை... உடல் மெலிந்தது... கை... கால்... தலை என அனைத்து உறுப்புகளும் வலுவிழந்தன.
அப்போதுதான் அவற்றிற்குத் தனிப்பட்ட முறையில் தங்களால் எதையும் செய்யமுடியாது. தங்களுக்கு ஆற்றல் அனுப்புவது வயிறே... என்று புரிந்தது.
வயிற்றிடம் அவை மன்னிப்பு கேட்க... வயிறும் வழக்கம்போல செயல்படத் தொடங்கியது.
நம் உடலில் எல்லா உறுப்புகளும் ஒன்றுபட்டுச் செயல்பட்டாலே, உடல் சுறுசுறுப்பாய் இயங்கும்.
ஆகவே எந்தச் செயலைச் செய்வதாயினும் நமக்குள் ஒற்றுமை அவசியம்.