உலகம் முழுவதும் ஏப்ரல் 1 ஆம் நாள், முட்டாள்கள் நாளாகக் (April Fool's Day) கொண்டாடப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த நாளை முட்டாள்கள் நாள் என்று எந்த நாடும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. 16 ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல் 1ஆம் நாளே புத்தாண்டு நாளாகக் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் 1562 ஆம் ஆண்டளவில் அப்போதைய திருத்தந்தையான பதின்மூன்றாம் கிரிகோரி அவர்கள் பழைய சூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கிப் புதிய கிரிகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி 1 அன்று புத்தாண்டு தொடங்கியது. எனினும், இந்தப் "புதிய" புத்தாண்டு நாளை ஐரோப்பிய நாடுகளும், அவற்றின் மக்களும் உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குச் சில காலம் தாமதமானது. பிரான்சு 1852 ஆம் ஆண்டிலும், ஸ்காட்லாந்து 1660 ஆம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள் 1700 ஆம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752 ஆம் ஆண்டிலும் இந்தப் புதிய புத்தாண்டு நாளை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டன. புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் நாளைப் புத்தாண்டு நாளாகக் கொண்டாடத் தொடங்கினர். ஆனால், மக்களில் சிலர் பழைய புத்தாண்டு நாளான ஏப்ரல் 1 ஆம் நாளையே புத்தாண்டு நாளாகக் கொண்டாடி வந்தனர். புதிய புத்தாண்டு வழக்கத்துக்கு மாறியவர்கள், பழைய புத்தாண்டு நாளைக் கொண்டாடியவர்களை ஏப்ரல் முட்டாள்கள் என்று அழைக்கத் தொடங்கினர். இதிலிருந்து ஏப்ரல் முட்டாள்கள் நாள் தொடங்கியது என்று கூறுகின்றனர்.
இது தவறு, 1582 ஆம் ஆண்டுக்கு முன்பே 1508 ஆம் ஆண்டில் பிரான்சு தேசத்தில் முட்டாள்கள் நாள் கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது என்பதற்கான சான்றுகள் உள்ளன என்கின்றனர் சிலர். டச்சு மொழியிலும் 1539 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முட்டாள்கள் நாள் பற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது என்கின்றனர் வேறு சிலர். 1466 ஆம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்ரல் முதலாம் நாள். அன்றிலிருந்து முட்டாள்கள் நாள் தொடங்கியது என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.