கடலில் அரியவகை உயிரினங்கள் வாழ உதவுவது பவளப்பாறைகள். அதேநேரம், கடல்பகுதியின் தட்ப வெட்பத்தைப் பேணுவதிலும் பவளப்பாறைகளுக்கு மிக முக்கியப் பங்குண்டு.
* சுண்ணாம்புக் கற்களால் ஆனவை என்றாலும் பவளப்பாறைகளும் உயிரினமாகவேக் கருதப்படுகின்றன. கடலில் வாழும் ஏனைய நுண்ணுயிரிகளையே உணவாக உட்கொண்டு வளர்வதாலேயே இவற்றை விலங்கு அல்லது தாவரம் என்ற விகுதிக்குள் அடக்கியிருக்கிறது விஞ்ஞானம்.
* உலகின் 70 சதவீதம் பகுதி கடலால் சூழப்பட்டிருந்தாலும், ஒரு சில கடல் பகுதிகளிலேயேப் பவளப்பாறைகள் உருவாகின்றன. இதற்கு, கடல் அலை குறைவாக இருக்க வேண்டும். கடலின் வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் முதல் 24 டிகிரி செல்ஷியஸ்க்கு இடைப்பட்டதாக இருக்க வேண்டும். ஈரப்பதம் 30 முதல் 35 சதவீதத்துக்குள் இருக்கவேண்டும். கடலின் அடிப்பகுதி வரை சூரிய ஒளி ஊடுருவ வேண்டும் என்பன போன்ற பண்புகள் அவசியம்.
* பவளப் பாறைகளில் பாலிப்ஸ் என்ற உயிரினம் காணப்படுகின்றன. இந்த உயிரினம்தான் கடலில் உள்ள சுண்ணாம்பை எடுத்துக் கொண்டு பவளப் பாறைகளுக்கு கடினத்தன்மையையும், பல வகையிலான தோற்றத்தையும் தருகின்றன. பாலிப் உயிரினம் வாய்வழியாக உணவை உட்கொண்டு வாய் வழியாகவே அதன் கழிவையும் வெளியேற்றுகின்றன. இவை உண்பதற்காக மட்டும் தலையை வெளியில் நீட்டி தாவர மற்றும் சிறிய விலங்கின மிதவை நுண்ணுயிரிகளைத் தின்று வாழ்கின்றன. இவற்றின் இருபாலின உறுப்புக்களும் ஒரே உயிரியில் இருப்பதால் இனப்பெருக்கத்திற்கும் உதவியாக இருக்கிறது. பாலிப்ஸ் என்ற உயிரி இறந்து விட்டால் பவளப் பாறைகளும் உயிரிழந்து அதன் கூடு கடினமான பொருளால் ஆன பவளப் பாறைத் திட்டுக்களாக மாறி விடுகின்றன. இவை சாதாரணமாக ஒரு மி.மீ முதல் 100 செ.மீ வரை வளரக் கூடியது. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மட்டும் 200 வகைகள் இருக்கும். இவற்றை கடினமானவை, மிருதுவானவை என இரு பிரிவுகளாகவும் பிரிக்கலாம்.
* பவளப் பாறைகளைச் சார்ந்து தான் பலவிதமான கடற்பறவைகள், பாலூட்டிகள், ஒட்டுப்பிராணிகள் மற்றும் முள்தோல் பிராணிகளும் அதிக அளவில் உயிர் வாழ்கின்றன. மிகப்பெரிய கடல்வளங்களை உள்ளடக்கியதாக இருக்கும் பவளப் பாறைகள் கடல் வாழ் உயிரினங்களின் உறைவிடமாகவும், உணவிடமாகவும் திகழ்வதுடன் ஆராய்ச்சிக்கும் உதவியாக இருக்கிறது.
* பவளப் பாறைகள் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கடலோரப் பகுதிகளை மண் அரிப்பிலிருந்து பாதுகாக்கவும் உதவியாக இருக்கிறது. வளிமண்டலத்தில் கரியமில வாயுவின் அளவைக் குறைத்து சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்துகிறது.
* தொழிற்சாலைக் கழிவுகள் கடலில் கலப்பது, பவளப் பாறைகளை பலரும் வெட்டி எடுப்பது, கடலில் வெடிவைத்து மீன் பிடிப்பது போன்ற காரணங்களால் இவை பெரிதும் பாதிப்புக்குள்ளாகின்றன.
பவளப்பாறைகள் மேலும் பாதிக்கப்படாமல் இருக்கவும், கடல் வளத்தைப் பாதுகாக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சில கடற்பகுதிகளில் விஞ்ஞானிகள் செயற்கை பவளப்பாறைகளை உருவாக்கிக் கடலுக்கடியில் வைத்து வருகின்றார்கள்.