இரம்புட்டான் (Rambutan) என்பது இனிப்பு மிகுந்த ஒரு குளுமையான பழம். கிழக்காசியா (சீனா) மற்றும் தென்கிழக்காசியாவை தாயகமாகக் கொண்ட இப்பழம் ஆஸ்திரேலியா, நியூகினியா, ஆப்பிரிக்கா, இலங்கை, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் விளைகின்றது. ரம்புட்டான் என்கின்ற சொல் ரம்புட் என்கின்ற மலாய் மொழியில் இருந்து தோன்றியதாகும். ரம்புட் என்றால் மலாய் மொழியில் முடி என்றுப் பொருள் தரும். இப்பழத்தின் மேற்பரப்பு முடியைப் போன்று அமைப்பைக் கொண்டிருப்பதால் அதற்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கின்றது. இதன் தாவரவியல் பெயர்: Nephelium lappaceum என்பதாகும். சப்பின்டேசிக என்கின்ற குடும்பத்தைச் சேர்ந்த நடுத்தர உயரமுள்ள ஒரு பூக்கும் பழ மரத்தாவரம்.
ரம்புட்டான் 12 முதல் 20 மீட்டர் வரை வளரக்கூடிய தாவரம். இத்தாவரத்தை விதை மற்றும் ஒட்டுக்கன்று போன்ற முறைகளைப் பின்பற்றி வளர்க்கலாம். ரம்புட்டான் விதைகள் என்பது கடிதோல் விதைகள் வகையை சேர்ந்தது இவ்வகை விதைகளை அதிக காலத்திற்குச் சேமித்து வைக்க முடியாது. இவ்வகை விதைகளைச் சிறிது காலத்திற்கு சேமித்து வைப்பதற்கு வெப்பநிலை கட்டுப்படுத்தப்பட்ட ஈரநிலை சேமிப்பு முறை கையாளப்படுகின்றது. கடிதொல் வகை விதைகள் எளிதில் உயிப்புத் திறனை இழந்துவிடும் என்பதால் பெரும்பாலான ரம்புட்டான் பழ விதைகள் சேகரிப்பட்டவுடனே போலிபெக் என்கின்ற விதைப்பையில் நடப்படுகின்றன. ரம்புத்தான் நடவாளர்கள் பெரும்பாலோர் ஒட்டுக் கட்டுதல் முறையைப் பின்பற்றியே இதனை வளர்க்கின்றனர்.
ரம்புட்டான் மரம் நடப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குள் பழம் காய்க்க தொடங்கி விடும். ஒரு ரம்புட்டான் பழம் முழுமையாகப் பழுப்பதற்கு 90 முதல் 120 நாட்கள் வரை எடுத்துக் கொள்கின்றது. ரம்புத்தான் பழம் பிஞ்சாக இருக்கும் பொழுது பச்சை நிறத்தில் இருக்கும். அதுவே, பழுத்த நிலையில் மஞ்சள் அல்லது சிவப்பு நிறத்தில் இருக்கும். இரகங்களுக்கு ஏற்ப ஒரு ரம்புத்தான் மரம், ஒரு பருவத்திற்கு 80 கிலோ முதல் 200 வரையிலான காய்களைத் தரும். புதிதாகப் பறித்தப் பழங்களை கூடைகளில் போட்டு வைப்பது நல்லது. அதே நேரத்தில் அதிகமான பழங்களை ஒரு கூடையில் மிகவும் நெருக்கியபடி போட்டுவைப்பது நல்லதல்ல. அவ்வாறு செய்வதனால் பழங்கள் விரைவிலேயேக் காய்ந்து விடும்.
இப்பழம் மிகவும் இனிப்பாக இருக்கும். இப்பழத்தை மூன்று பாகமாக பிரிக்கலாம். அதாவது பழத்தின் மேல்தோல் பகுதி, பழத்தின் சதைப் பகுதி மற்றும் விதை பகுதி. பழத்தின் தோல் பகுதி மிகவும் கசப்பாக இருக்கும். அதே போன்று பழத்தின் விதையும் மிகவும் கசப்பாக இருக்கும். இவை இரண்டிற்கும் நடுவில் இருக்கும் சதை பகுதியை மட்டுமே உண்ணுவதற்கு ஏதுவாக இருக்கும்.