ஆடுதீண்டாப்பாளை (Aristolochia Bracteolata) என்ற பெயரில் அழைக்கப்படும் தாவரத்தை, ஆடுகளுக்குப் பிடிக்காத தாவரம் என்கின்றனர். இதனை ஆடுதின்னாப்பாலை, ஆடுதொடாப்பாளை என்ற பெயர்களிலும் அழைக்கின்றனர். தமிழில் மட்டுமின்றி, மலையாளத்திலும் இத்தாவரம் ஆடுதீண்டாப்பாளை என்றே அழைக்கப்படுகிறது. ஆம், மலையாள மொழியில் ஆடுகளை ‘மறி’ என்ற பெயரில் குறிப்பிடுவதால், மலையாள மொழியில் இத்தாவரம் ‘மறிதீண்டாமூலி’ என்று அழைக்கப்படுகிறது.
ஆமாம், இந்தத் தாவரத்திற்கு ஏன் இப்படிப் பெயர் வந்தது? வாங்க, அதற்கான காரணத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
தரையோடு தரையாகப் படரும் கொடி வகையைச் சாராத செடிகளை ’படர்தாளை’ என்றும் ’படர்பாளை’ என்றும் அழைப்பதுண்டு. பொதுவாக, படர் தாவரங்களை ஆடுகள் மிகவும் விரும்பிச் சாப்பிடும். ஆனால், இந்தப் படர்தாவரத்தை மட்டும் ஆடுகள் தீண்டுவதில்லை, சாப்பிடுவதில்லை. எனவே, இந்தப் படர் தாவரத்துக்கு ‘ஆடுதீண்டாப்பாளை’ என்று பெயர் ஏற்பட்டது. ஆடுகள் இந்தத் தாவரத்தைச் சாப்பிடாததற்கு, இந்தத் தாவரத்தின் கசப்பு சுவையேக் காரணமென்று சொல்கின்றனர். ஆனால், இது எவ்வளவு தூரத்திற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆமாம், ஆடுகள் கசப்புச் சுவையுடைய வேப்பிலைகளை விரும்பிச் சாப்பிடும் போது, இத்தாவரத்தை மட்டும் சாப்பிடாதது ஏனென்று தெரியவில்லை.
ஆடுதீண்டாப்பாளை மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு கொடியாகும். தரையில் ஒழுங்கற்ற கொடியாகப் படர்ந்து பல்லாண்டுகள் வாழும். தனித்த இலைகள் நீள் முட்டை வடிவிலிருக்கும். இலைக்காம்படி உள்வளைவோடு கூடியதாக மொழுமொழுவென மாற்றடுக்கில் அமைதிருக்கும். இதன் வேரும் இலையும் மூலிகைப் பயன்பாடுடையன. இதன் தண்டுப் பகுதி மென்மையானது. பருத்தி விளையும் கரிசல் நிலத்தில் பெரிதும் தொல்லை தரும் களையாக இருக்கிறது. கிளைகள் தரைக்குக் கீழேயிருக்கும். தண்டில் இருந்து வளரும் இந்தச் செடி தண்டில்லாத வேரிலிருந்து முளைக்கும். இலையின் மேல் நீல வெண்மை நிறமுள்ள பூசு படிந்திருக்கும். பூ ¾ அங்குல நீளம்; இலைக்கணுச் சந்தில் தனித்தனியாக உண்டாகும். இதழ் குழாய் வடிவமான கூட்டிதழ். குழாய்க்குள்ளே மயிர்கள் இருக்கும். அவையெல்லாம் கீழ்நோக்கி வளர்ந்திருக்கும். கேசரங்கள் 6. சூல் முடிக்குக் கீழே சூல் தண்டைச் சுற்றிலும் ஒட்டிக் கொண்டிருக்கும். சூலறை பூவின் மற்ற உறுப்புகளுக்கு கீழுள்ளது; 6 அறைகளுள்ளது. கனி வெடி கனி. வெடித்த கனி உறிபோலத் தோன்றும். விதைகள் எளிதில் காற்றில் அடித்துக் கொண்டு போகக் கூடியவை.
இதில் மகரந்தச் சேர்க்கை நடப்பது வினோதமாக இருக்கின்றது. ஒரே பூவில் கேசரமும் சூலகமும் இருந்தாலும் சூலகம் முன்னாடி முதிர்கின்றது. சூல் முடி முதலில் பக்குவப்பட்டு விடுகின்றது. சிறு இதழ்க்குழாய் வழியாக உள்ளே போகும் போது அதிலுள்ள மயிர்கள் கீழ் நோக்கியிருப்பதால் ஈக்கள் தடையின்றிப் போகும். உள்ளே போனதும் இதன் உடம்பு சூல்முடியில் படும். இது கொண்டு வந்த மகரந்தம் பக்குவமாக இருக்கின்ற அந்தச் சூல்முடியில் ஒட்டிக் கொள்ளும். ஈ வெளியே வர முயன்றால் மயிர்கள் அதற்கு வழியில் ஈட்டிகள் போல நீட்டிக் கொண்டிருப்பதால் வர முடிவதில்லை. ஆதலால் அது உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும். இந்தக் காலத்துக்குள் சூலடியைச் சுற்றியுள்ள மகரந்தப் பைகள் முதிர்ந்து வெடிக்கும். தூள் அங்குச் சுழலும் ஈயினுடலில் நன்றாக ஒட்டிக் கொள்ளும். இதற்குள் முதலில் ஈ நுழைந்ததும் ஏற்பட்ட மகரந்தச் சேர்க்கையால் சூலில் கருத்தரித்தவுடன் இதழ்க் குழாயிலுள்ள மயிர்களெல்லாம் வாடிவிடும். பூவும் நிமிர்ந்திருந்தது சற்று வளையும். இப்போது ஈ வெளிவருவது எளிது. வந்து வேறொரு பூவுக்குப் போகும். இவ்வாறு ஈயின் வழியாக அயல் மகரந்தச் சேர்க்கை இந்தப் பூவில் நடக்கிறது.