உலகெங்கிலும் உள்ள சாரணர் மற்றும் வழிகாட்டி அமைப்புகளின் உறுப்பினர்களால், மற்ற சாரணர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் போதும், சாரணக் கொடி அல்லது தேசியக் கொடியேற்றும் போதும் மூன்று விரல் வணக்கம் பயன்படுத்தப்படுகிறது. இந்த வணக்கம் நிமிர்ந்த நிலையில் வலது கையின் கட்டை விரலைச் சுண்டுவிரலின் மீது வைத்து வலது புருவத்தின் மீது தொட்டுக் கொண்டிருக்கும் வகையில் இருக்க வேண்டும். வணக்கம் முடிந்ததும் கையினை விரைவாகவும் நேர்கீழாகவும் எடுக்க வேண்டும்.
சிறுவர்களுக்கான சாரணர் என்ற தனது நூலில், ராபர்ட் பேடன்-பவல் சாரணர் வாக்குறுதியில்,
1. கடவுளையும் நாட்டையும் மதியுங்கள்
2. மற்றவர்களுக்கு உதவுங்கள்
3. சாரணர் சட்டத்திற்குக் கீழ்ப்படியுங்கள்
எனும் மூன்று நிலைகளை முதன்மைப்படுத்த சாரணர்களுக்கு மூன்று விரல் வணக்கத்தைத் தேர்வு செய்தார்.
பெண் வழிகாட்டிகள் மற்றும் பெண் சாரணர்களின் அனைத்து உலக சங்க உறுப்பினர்களும் மூன்று விரல் அடையாளங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். சாரணர்களின் வணக்கத்தினைப் போலவே இவர்களும் வணக்கம் செய்கின்றனர். வாக்குறுதி வழங்குதல் அல்லது ஓதுதல், விருதுகளைப் பெறுதல், கொடியைச் சிறப்பிப்பது, இறந்தவர்களை சிறப்பிப்பது மற்றும் பிற பெண் வழிகாட்டிகள் மற்றும் பெண் சாரணர்களை சந்திப்பது உள்ளிட்ட பல மரியாதைக்குரிய சூழ்நிலைகளில் இவ்வணக்கம் பயன்படுத்தப்படுகிறது. இது இடது கைகுலுக்கலுடன் இணைந்து பயன்படுத்தப்படலாம்.