சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறு குணங்களையும் நாம் கற்று கொள்ள வேண்டும் என்று அர்த்த சாஸ்திரம் சொல்கிறது. அவை என்ன? என்று பார்க்கலாம் வாங்க...!
* சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாகச் செயல்படும்.
* கொக்கு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்து நிற்கும், அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.
* களைப்புற்றாலும் கழுதை தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்குக் கட்டுப்பட்டிருக்கும். இம்மூன்றும் கழுதையிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை ஆகும்.
* விடியற்காலை எழுதல், தைரியமாகச் சண்டையிடுதல், அவரவர்க்குத் தேவையானவற்றைப் பிரித்துக் கொடுத்தல், தனக்குத் தேவையானவற்றைத் தானே உழைத்துத் தேடிச் சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியவை ஆகும்.
* இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களைச் சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டியவை ஆகும்.
* கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாகப் பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்திருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல்படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.