கேரள மாநிலத் தமிழ்மொழிப் பாடத்திட்டத்தில் இலக்கணக் கூறுகள்
ஜி. ரமேஷ்
தமிழ்மொழிப் பாடத்திட்டத்தில் இலக்கணப் பகுதி தனியாக இடம்பெறவில்லை. எனினும் பாடப்பகுதியுடனும் செயல்பாட்டுடனும் இணைந்து இலக்கண அறிவினை மாணவர்கள் பெறுகின்றனர்.
எழுத்துக்கள், அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவி, புணர்ச்சி இலக்கணம், உவமை, உருவகம் எதுகை, மோனை, இயைபு, முரண், பெயர்ச்சொல், வினைச்சொல், முற்றுவினை, பெயரெச்சம், வினையெச்சம், தொகை நிலைத் தொடர்மொழிகள், ஆகுபெயர் என்பன தமிழ்மொழிப் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளமை விளக்கப்படுகிறது.
சேர்ந்தும் - பிரிந்தும்
சில சூழ்நிலைகளில் ஒரே சொல்லை இரண்டு மூன்று தடவை அடுக்கிச் சொல்வதுண்டு.
எடுத்துக்காட்டு,
வருக வருக என வரவேற்றார்.
சின்னச்சின்ன விஷயங்களுக்கு வருத்தப்படக் கூடாது.
இவ்வாறு சில சொற்கள் அடுக்கி வரும்போது மட்டுமின்றித் தனித்து வந்தாலும் பொருள் தருமானால் அது அடுக்குத்தொடர் எனப்படும்.
.
சில சொற்கள் சேர்ந்து வந்தால் மட்டுமே பொருள் தரும். தனித்து வந்தால் பொருள் தராது. அவ்வாறு வரும் சொற்கள் ‘இரட்டைக்கிளவி’ எனப்படும்.
அவர் விருவிருவென்று நடந்தார் - இங்கு இணைந்து வரும் ‘விருவிரு’ என்னும் சொல்லிலுள்ள ‘விரு’ தனியாக வந்தால் பொருள் தருவதில்லை.
அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவி இடம் பெறும் வாக்கியங்களால் நிகழ்ச்சி ஒன்று தயார் செய்க.
பக்கப்பெட்டியில் உள்ள இலக்கண விதிகளில் நூற்பாக்களை மாணவர்கள் இலக்கண நூற்களிலிருந்து தெரிந்து கொள்ளவும் முயற்சி செய்கின்றனர்.
“அசைநிலை பொருள்நிலை இசைநிறைக்கு ஒருசொல் இரண்டு மூன்று நான்கு எல்லைமுறை அடுக்கும்.”
‘இரட்டைக்கிளவி இரட்டின் பிரிந்திசையா’ சொல்.”
அடுக்குத்தொடருக்கும் இரட்டைக்கிளவிக்கும் உள்ள வேறுபாட்டையும் மாணவர்கள் புரிந்து கொள்கின்றனர்.
இரட்டைக்கிளவி இருமுறைக்கு மேல் அடுக்கி வராது. அடுக்குத்தொடர் நான்குமுறைவரை அடுக்கி வரும்.
புணர்ச்சி இலக்கணம்
நிலைமொழியும் வருமொழியும் புணரும்போது ஏற்படும் புணர்ச்சிமாற்றங்கள் செயல்பாடுகள் வழியாகக் கற்குமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
மாற்றமில்லாத் தொடர்கள்
இரண்டு பெயர்ச்சொற்கள் சேரும் போது எந்தவித மாற்றமும் இல்லாமல் தொடராகின்றன.
சான்று,
நாவல் + மரம் = நாவல்மரம்.
இவ்வாறு அமையும் தொடர்களைப் பாடப்பகுதியில் இருந்து திரட்டி எழுதுங்கள்.
மாறும் தொடர்கள்
இரண்டு பெயர்ச்சொற்கள் இணைந்து தொடராகும் போது அச்சொற்களில் மாற்றம் ஏற்படுவதுண்டு.
சான்று,
தொழில் + சாலை = தொழிற்சாலை என்பது இயல்வு புணர்ச்சி என்றும்,
‘மாறும் தொடர்கள்’ என்ற செயல்பாட்டில்,
தொழில் + சாலை = தொழிற்சாலை
என்பதும்,
வனம் + விலங்கு = வனவிலங்கு என்பதும்,
விகாரப் புணர்ச்சி ஆகும் என மாணவர்கள் அறிந்து கொள்கின்றனர்.
“தோன்றல் திரிதல் கெடுதல் விகாரம்
மூன்றும் மொழிமூ விடத்தும் ஆகும்”
உவமைத் தொடர் கண்டுபிடிப்போம்
வாக்கியம் அமைத்தல் என்ற செயல்பாடு அளிக்கப்பட்டுள்ளது. உவமைத் தொடர்களைக் கண்டு பிடித்து வாக்கியம் அமைக்குமாறு கூறப்பட்டுள்ளது.
வாக்கியம் அமைத்தல்
“தாகவானுக்குத் தண்ணியைக் கண்டது போல” போன்ற உவமைத் தொடர்களைக் கதையிலிருந்து தேர்ந்தெடுத்து, அத்தொடர்களைப் பொருள் விளங்க வாக்கியத்தில் அமைக்க.
அல்லித் தண்டுபோல
பொருள் புலப்பாட்டு நெறிகளுள் ஒன்றாக உவமையைக் கையாளுதல். ஓர் உவமையுடன் ஒரு வாக்கியம் சொல்லப்படும் போது, கேட்போருக்குச் சுவையும் பொருள் விளக்கமும் கிடைக்கிறது. அணியிலக்கணம் ‘போல’ என்பதை உவமை உருபு எனக் குறிப்பிடுகிறது.
எட்டாவது வகுப்பில் உவமைத்தொடர் காணும்படி பாடப் பகுதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒன்பதாவது வகுப்பில் உவமை, உருவகம் பற்றிய விளக்கம் பக்கப்பெட்டியில் கொடுக்கப்பட்டு செயல்பாடும் அளிக்கப்பட்டுள்ளது.
உவமை, உருவகம்
ஒன்றைப் பெருமைப்படுத்தி அல்லது சிறுமைப்படுத்திக் கூறுவதற்கும் உவமையைக் கையாளுவதுண்டு.
எடுத்துக்காட்டு
அவள் மயிலைப்போல் அழகாக ஆடினாள்.
அவனது பேச்சு நாய் குரைப்பதுபோல் இருந்தது.
‘மதி போன்ற முகம்’ என்பது உவமை. இங்கு முகத்தின் அழகைப் பெருமைப்படுத்தி மதி (சந்திரன்) உவமையாகக் கூறப்பட்டது. சிலநேரங்களில் முகத்தின் அழகை மேலும் பெருமைப்படுத்த ‘முகமதி’ என்றும் கூறுவதுண்டு. இவ்வாறு அமைவது உருவகம் எனப்படும். உவமையாக வரும் பொருளும் (மதி), உவமிக்கப்படும் பொருளும் (முகம்) வேறு வேறு அல்ல என்பதை உணர்த்துவதுதான் உருவகம்.
எதுகை, மோனை, இயைபு, முரண்
தொடக்க நிலை முதல் உயர்நிலை வரையிலாக தமிழ்மொழிப் பாடத்திட்டத்தில் எதுகையும் மோனையும் உள்ளன.
தொடக்க நிலை வகுப்புகளில் முதலெழுத்துக்கள் ஒன்று போல் வருதலும், இரண்டாவது எழுத்துக்கள் ஒன்று போல் வருதலும் ஓசை நயம் தருவதாகக் குறிப்பு உள்ளது.
‘ஒன்றி வருதல்’ என்ற செயல்பாடு எட்டாம் வகுப்பில் தரப்பட்டுள்ளது. ‘நடந்தாய் வாழிகாவேரி’ என்ற சிலப்பதிகாரப் பகுதி பாடமாக உள்ளது.
எதுகை
ஒரு பாடலின் ஒவ்வொரு அடியிலும் இரண்டாவது எழுத்து ஒரே எழுத்தாக அமைந்து வருமானால் அது எதுகை எனப்படும்.
எடுத்துக்காட்டு,
“வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்துஎன்
ஊன்கலந்து உயிர் கலந்துஉவட்டாமல் இனிப்பதுவே”
இப்பாடலின் ஒவ்வொரு அடியிலும் இரண்டாவது எழுத்தாக ‘ன்’ என்னும் எழுத்து ஒரே போல் வந்துள்ளது.
மோனை
ஒரு பாடலின் ஒவ்வொரு அடியிலும் முதல் எழுத்து ஒரேபோல் அமையுமானால் அது மோனை எனப்படும்.
எடுத்துக்காட்டு,
“வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே
வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!”
இங்குப் பாடலின் ஒவ்வொரு அடியிலும் ‘வ’ என்னும் எழுத்து ஒரே போல் வருவதைக் கவனியுங்கள்.
இயைபு
பத்தாவது பாடத்தில் இடம் பெற்றுள்ளது கவிதையின் இறுதிச் சொற்களின் ஒலிப்புத் தன்மை பொருந்தி வருவதே என்பது பாடப்பகுதியுடன் செயல்பாட்டுடனும் இணைந்து வந்துள்ளது. “இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம். இது எனதென்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்.
இப்பாடல் வரிகளின் இறுதியில் இடம் பெற்றிருக்கும் சொல்லின் இறுதி எழுத்து ‘ம்’ என்பதாகும். இவ்வாறு செய்யுளில் ஒவ்வொரு அடியிலும் இறுதிச் சொல்லின் ஓரெழுத்தாவது, சொல்லாவது பொருந்தி வருவது இயைபு ஆகும்.
’
பெயர்ச்சொல், வினைச்சொல்லை வகைப்படுத்துவோம்
பக்கப்பெட்டியில் பெயரும், வினையும் பற்றிய விளக்கம் அளித்துவிட்டு, பாடப்பகுதியிலிருந்து பெயர்ச்சொற்களையும் வினைச் சொற்களையும் கண்டுபிடித்து பட்டியலிடுமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
பெயரும் வினையும்
“சொற்களைப் பெயர்ச்சொல், வினைச்சொல் என இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
பெயர்ச்சொல்
ஏதேனும் ஒன்றின் பெயரைக் குறிப்பிடும் சொல் பெயர்ச்சொல் எனப்படும்.
எடுத்துக்காட்டு:
மனிதன், குமரி, செல்வன், தாமரை, அரசு, கல், காற்று, மதுரை, நாற்காலி, அழகு.
வினைச்சொல்
ஏதேனும் ஒரு செயலைக் குறிப்பிடும் சொல் வினைச்சொல் எனப்படும்.
எடுத்துக்காட்டு:
இரு, தேடு, நில், சிரி, விழு, மகிழ்.
பாடப்பகுதியிலிருந்து பெயர்ச்சொல், வினைச்சொற்களைத் தொகுத்து வகைப்படுத்திப் பட்டியலிடுக”
சொல்
வினைச்சொல்
“தமிழில் ஒரு செயலைக் குறிக்கும் சொல் வினைச்சொல் எனப்படும். இவ்வினைச் சொல் இருவகைப்படும். அவை;
1. முற்றுவினை
2. எச்சவினை
என்பன.
முற்றுவினை
சரவணன் படித்தான்
இவ்வாக்கியத்தில் படித்தான் என்னும் சொல் படித்தல் என்னும் செயல் முடிந்த நிலையை உணர்த்துகிறதல்லவா? இவ்வாறு ஒரு செயல் (வினை) முற்றுப் பெறுவதை முற்றுவினை அல்லது வினைமுற்று எனலாம்.
பெயரெச்சம்
வந்த மனிதன், வரைந்த ஓவியம், பார்த்த திரைப்படம்
இவ்வெடுத்துக்காட்டுகளில் வந்த, வரைந்த, பார்த்த என்னும் சொற்கள் அவற்றின் செயல் முற்றுப் பெறாமையை உணர்த்துகின்றன. அவை முறையே மனிதன், ஓவியம், திரைப்படம் என்னும் பெயர்ச்சொற்களை ஏற்று வந்துள்ளன. இவ்வாறு ஒரு செயல் (வினை) முற்றுப் பெறாமல் எஞ்சி நின்று பெயர்ச்சொல்லைத் தழுவி அமையும் தொடரைப் பெயரெச்சம் எனலாம்.
முரண்
காலையும், மாலையும் கைகூப்பி கால் தொழுதலால் - மேலை வினைகளெல்லாம் கீழவாம்.
இப்பாடல் வரிகளில் காலை, மாலை, மேல் கீழ் என்ற சொற்கள் பொருள் முரண்பட்டு வரும் சொற்களாகும். இவ்வாறு செய்யுளில் இடம் பெறும் சொற்கள் முரண் (எதிர்) பொருளில் அமைக்கப் பெற்றதால் அது முரண் எனப்படும்.
முரண் சுவையை அறிந்து கொள்ளும் மாணவர்கள் கவிதைச் சுவையுடன் முரண்தொடை பற்றியும் விரோத அணி பற்றியும் அறிந்து கொள்கின்றனர்.
தமிழ்மொழிப் பாடத்திட்டம் யாப்பு நெறி என்பதில் எதுகை, மோனை, இயைபு, முரண் என்பன பற்றிய இலக்கண அறிவை அளித்துள்ளது.
வினைத் தொகை
சுடுசோறு, ஊறுகாய்
இவ்வெடுத்துக்காட்டுகளில் சுடு, ஊறு என்பனவற்றில் பெயரெச்ச விகுதியும் காலங்காட்டும் இடைநிலையும் மறைந்து நின்று பெயரொடு தொடர்ந்து வருகின்றன. இவற்றைச் சுடுகிற சோறு, சுட்ட சோறு, சுடும் சோறு எனவும், ஊறுகிற காய், ஊறிய காய், ஊறும் காய் எனவும் விரித்துப் பொருள் உணரலாம். இவ்வாறு முக்காலங்களுக்கும் பொருத்தமாக வரும் தொகைச் சொற்களை வினைத்தொகை எனலாம்.
பாடப்பகுதியில் இடம்பெறும் வினைத்தொகைச் சொற்களை இனங்காண்க”
‘காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை’ இலக்கண நூற்பா வினையெச்சமாக மாணவர்கள் கற்றுக்கொள்கின்றனர். விளக்கங்களைப் படித்துவிட்டு படிப்பதால் மாணவர்களுக்கும் இது எளிதாகும்.
பண்புத்தொகை
இதுவும் பாடப்பகுதியைச் சார்ந்தே கண்டுபிடிக்குமாறு சொல்லப்பட்டுள்ளது.
செந்தாமரை, வட்டக்கல், நெடுந்தூண், இன்சொல்
இவ்வெடுத்துக்காட்டுகள், பண்பின் அடிப்படையில் பிறந்த பெயர்களாகும். வண்ணம், வடிவம், அளவு, சுவை போன்ற பண்புகளை இவை முறையே கொண்டுள்ளன.
தொகுப்புரை
* ஒரே உச்சரிப்பை உடைய வேறுபட்ட எழுத்துக்கள் பொருள் வேறுபாட்டினைத் தருகிறது எனும் அறிவு மாணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது (மரம் - மறம்).
* செயல்பாடுகள் வாயிலாகவே இலக்கணம் கற்பிக்கப்பட்டுள்ளது.
* அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவி, புணர்ச்சி இலக்கணம், உவமை அணி, உருவக அணி, எதுகை, மோனை, இயைபு, முரண், பெயர்ச்சொல், வினைச்சொல், முற்றுவினை, பெயரெச்சம், வினையெச்சம், பண்புத்தொகை, உம்மைத்தொகை, ஆகுபெயர் என்பன பற்றிய விளக்கங்கள் உள்ளன.
* மாணவர்கள் உற்று நோக்குதல், தேடுதல், திரட்டுதல், ஊகித்தல், அட்டவணைப் படுத்துதல், பட்டியலிடுதல், சொற்தேர்வு அறிதல், ஒப்பிடுதல், விமரிசனம் செய்தல், புதியன படைத்தல் எனப் பன்முகத் திறன்களைத் தமிழ்மொழிப் பாடத்திட்டம் அளித்துள்ளது. செயல்பாடுகள் வாயிலாக இலக்கண அறிவு அளிக்கப்பட்டுள்ளது.
* அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவி, பெயர்ச்சொல், வினைச்சொல், முற்றுவினை, வினைத்தொகை, உம்மைத்தொகை, பண்புத்தொகை, பெயரெச்சம், வினையெச்சம், ஆகுபெயர், எதுகை, மோனை, இயையு, முரண், உவமை அணி, உருவக அணி என்பன பற்றிய அறிவினைப் பாடத்திட்டம் அளித்துள்ளது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.