முருகனின் பிறப்பும் வேலின் சிறப்பும்
இரா. ஆ. பத்மாவதி
முனைவர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
முன்னுரை
இப்புவியில் “ஷண்மதம்” எனப் பெயர் பெற்ற சைவம், சாக்தம், வைணவம், காணாபத்யம், கெளமாரம், ஸெளரம் ஆகிய ஆறு வழிகளில், கெளமாரம் எனும் முருக வழிபாடு தமிழ்நாட்டிற்கே உரித்தானது. முருகப்பெருமானுடைய பிறப்பும், முருகப்பெருமானுக்கே உரித்தான வேலின் சிறப்பும் பற்றிய கருத்தை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைந்திருக்கிறது.
முருகன் பிறப்பு
பரிபாடல்
எட்டுத்தொகை நூல்களுல் ஒன்றான பரிபாடலில் 22 முதல் 54 வரிகள் வரை முருகனின் பிறப்பு பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முருகனின் பிறப்பைக் கூறும்போது நெற்றிக்கண்ணுடைய சிவபெருமான் மலையரசன் மகளாகிய உமையம்மையை மணந்த நாளில், இந்திரன் வேண்டுகோளினை ஏற்று ஒரு நாள் புணர்ச்சி தவிர்த்து, கருவினைச் சிதைத்து, துண்டுகளாக்கி இந்திரன் கையில் கொடுத்தான். இந்திரன் அதனை சப்தரிஷிகளிடம் அளிக்க, அவர்கள் இக்கரு அறுமுகனாகி, தேவேந்திரனின் படைத்தலைவனாகும் என்பதை ஞானத்தால் அறிந்தனர். கருத்துண்டுகளைத் தம் மனைவியர் உண்டு சூல் கொண்டால் அவர்கள் கற்புடைமைக்கு பொருந்தாது என எண்ணி அவைகளை ஒன்றாக்கி வேள்வித் தீயிலிட்டனர். வேள்வியில் கிடைத்த அவிப்பாகத்துடன் சேர்ந்த எச்சிலாகிய அவற்றை வாயில் வடதிசையில் உறையும் எழு பெண்களாகியவரில் அருந்ததி தவிர ஏனைய அறுவரும் உண்டனர். அதனைக் கணவர் விரும்பியதாலே செய்ததால் குற்றமில்லாத கார்த்திகைப் பெண்டிர் அறுவரும் வயிற்றில் கருவினைத் தாங்கி இமயமலையின் சரவணப் பொய்கையில் தாமரைப் பாயலில் ஒரு சேர பெற்றெடுத்தனர் என முருகன் பிறப்பை பற்றி பரிபாடலில் கூறப்பட்டுள்ளது.
திருமுருகாற்றுப்படை
“நடும் பெருஞ் சிமையத்து நீலப்பைஞ்சுனை
ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப
அறுவர் பயந்த ஆறமர் செல்வ”
(திருமுருகு, 353-355)
மிகப்பெரிய இமயமலையின் உச்சியிலுள்ள நீலநிறத் தருப்பை நிறைந்த பசிய சரவணப் பொய்கையில், பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய அக்னி தன் உள்ளங்கையில் சிவபெருமானிடத்துத் தோன்றிய ஆறு தீப்பொறிகளைத் தாங்கிச் சென்று வாயுவிடம் கொடுத்துச் செலுத்த அந்த ஆறு தீப்பொறிகளும், ஆறு குழந்தைகளாகத் தோற்றம் பெற்றன. கார்த்திகைப் பெண்கள் அறுவரும் அக்குழந்தைகளை எடுத்துப் பாலூட்டித் தாமரைத் தொட்டிலில் இட்டு வளர்க்கும் போது ஆறு குழந்தைகளும் உமா தேவியர் வந்து எடுத்து அணைக்கும் போது ஒன்றாகப் பொருந்திய செல்வனே என்னும் செய்தியைக் கொண்டு, கந்தனின் பிறப்பு பற்றி அறிய முடிகிறது.
திருசெங்கோட்டுப் புராணம்
திருச்செங்கோட்டுப் புராணத்தில் முருகனின் பிறப்பை பற்றிக் கூறும் போது, தேவர்கள் அக்னி தேவன்பால், சிவபெருமான் மூலம் துன்பம் தீர ஒரு பிள்ளையைத் தோன்றும்படி அருள வேண்டும் என்று வேண்டுகின்றனர். அக்னி தேவன் இதைச் சிவனாரிடம் கூற, சிவபெருமான் தன் சக்தியை அக்னி தேவனிடம் தந்தான் என்பதை,
“வென்றி கொள வென்று சிவன் நின்றுதவி செய்தான்”
இதனைப் பெற்ற அக்னி தேவன் அதனைத் தாங்க இயலாமல் சிவனார் தலையில் தோன்றிய கங்கையின் சரவணப் பொய்கையில் வைத்தனன். அச்சரவணப் பொய்கையில் தவமுனிவர்கள் எல்லாம் வசித்து வந்தார்கள். சக்தியைப் பெற்று வந்த அக்னி தேவன் மோகம் கொள்ளுகின்றான். மோகத்தின் காரணமாக அத்தவ முனிவர்களின் பத்தினிகளுடன் இணைய ஆசை கொள்கின்றான். இதனை அறிந்த அக்னியின் மனைவி சுவாகா, கணவனுடைய இச்செயலால் முனிவர்களின் சாபத்திற்கு தன் கணவன் ஆளாவான் என்று எண்ணி ஆறு முனி பத்தினிகளின் வடிவைத் தானே எடுத்து தன் கணவனாகிய அக்னியுடன் இணைகிறாள். பிறகு தவ முனிவர்கள் அக்னிதேவன் தன் மனைவியை விரும்பினான் என்பதை அறிந்து தங்கள் மனைவிகளை நீக்கி விடுகின்றனர். அவர்கள் மனம் வாடி நீராடிச் சரவணப் பொய்கையில் வீற்றிருந்த பொழுது குழந்தை வடிவில் இருந்த முருகனை கண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கந்த புராணம்
கந்த புராணத்தில் முருகன் பிறப்பில் சிவனார் தான் ஆறுதிருமுகங்களிலும் கொண்டுள்ள நெற்றிக்கண் ஒவ்வொன்றிலும் அக்கினிப் பொறியைத் தோற்றுவித்தான். வாயு, அக்னி தேவர்களிடம் இப்பொறியைச் சுமந்து கங்கை ஆற்றில் விடுங்கள் எனக்கூறி அதற்கான ஆற்றலும் அளித்தார். இத்தீப்பொறிகள் சரவணப் பொய்கையை அடைந்து ஒரு புதல்வனாய் வளர்ந்து சூரபத்மனை அழிக்கும் என்று சொன்னார். இதனை;
“ஆங்கனம் அவர்தமை ஆதிநோக்கி இத்
தீங்கனவ சரவணம் செறிந்தோர் செம்மலாய்
ஓங்குபு சூர் கிளைக்கு ஒழிவு செய்யுமாய்
ஈங்கினி யாவரும் ஏகுவீர் என்றான்”
(கந்.பு.உற்.கா.925)
என்று தெரிவிக்கிறது.
சரவணப் பொய்கையில் தோன்றியதை உருவம் அற்றதாகவும், உருவம் பெற்றதாகவும் விளங்கி முத்ய அற்றதாகவும், பல பொருள்களாகவும், ஒரு பொருளாயும் விளங்கி, பிரம்மன் என்னும் பெயர் பெற்றதாயும் விளங்கி நிற்கும் பேரொளியாகிய ஜோதிப் பிழம்பே ஒரு திருமேனி பெற்று, கருணை மிகுந்த ஆறு முகங்களும், 12 திருக்கைகளும் கொண்டு உலகோர் உய்யுமாறு முருகன் வந்து தோன்றினான்.
“அருவமும் உருவுமாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப்
பிரமமாய் நின்ற ஜோதி பிழம்புதோர் மேனியாகக்
கருணைகூர் முகங்கள் அறுங் கரங்கள் பன்னிரண்டுங் கொண்ட
ஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய”
(கந்.பு.உற்.கா.1942)
எனக் கந்த புராணம் முருகன் தோற்றம் பற்றி தெரிவிக்கிறது.
வேலின் சிறப்பு
முருகப் பெருமானின் திருக்கரங்கள் பன்னிரண்டில் உள்ள ஆயுதங்களில் முதன்மையும் சிறப்புமுடையது வேல் என்னும் வேலாயுதம் ஆகும். வேலினைக் கையில் ஏந்திய முருகன் வேலாயுதன் என்றும் போற்றப்படுகிறான். முருகன் வேல் கொண்டு நின்ற வரலாற்றைப் புராணங்களில் காணலாம். வேலின் பெருமையைக் கச்சியப்பர், விடுத்த மாத்திரத்திலேயே அண்டங்களின் ஐம்பெரும் பூதங்களையும் அழிக்க வல்லது. எல்லா உயிர்களையும் ஒரு சேர அழிக்கக்கூடியது. யார் மேல் இதனை விடுத்தாலும் அவர்கள் பெற்ற வரன் மக்களையும், உயிரையும் ஒருங்கே அழிப்பது, தோமரம், கொடி, வாள், குவிசம், அம்பு, அங்குசம், மணி, தாமரை, தண்டம், வில், மழு எனும் எல்லா ஆயுதங்களிலும் மேன்மையுடையதும், ஒளியுடையதுமான வேலாயுதம் தன்னை தன் மகன் பால் கொடுத்தான்
“ஆயுதற் பின்னர் ஏவல் மூதண்டத்
தைம் பெரும் பூசமும் அடுவ
தேய பல் லுயிரும் ஒருதலை முடிப்ப
தேவர் மேல் விடுகினும் அவர்தம்
மாயிருந் திறலும் வரங்களும் சிந்தி
மன்னுயிர் உண்பதெப் படைக்கும்
நாயக மாவ தொரு தனிச்சுடர்வேல்
நல்கியே மதலைகைக் கொடுத்தான்”
(கந்.பு. 1303)
என்று சிவபெருமானே முருகப்பெருமானுக்கு வேல் வழங்கிய செய்தி கூறப்பட்டுள்ளது.
போர்க்களத்திலே தாரகன் முருகனைக் காணும் போது, “பூரண சந்திரனையொத்த ஆறுமுகங்களையும் அருள் ஒழுகும் 12 கண்களும், ஞான சக்தியாகிய வேலினையும் மற்றும் பலவிதமான படைகளையும் கையில் ஏந்தியவனாயும், நவரத்தின தண்டை அணிந்தும், அவை ஒலிக்கும் திருவடிகளையும் உடைய முருகனைக் கண்டான்.
“முழுமதி அன்ன ஆறு முகங்களும் முன் நான் காகும்.
விழிகளின் அருளும் வேலும் வேலுள படையின் சீரூம்... “
(கந்.பு. 1454)
எனவும்
“தாரகன் என்பதோர் பேரோனைச் சஞ்ச முறுகிரவுஞ்சத்தை
ஓரிறை செல்லு முன் உடல்கீறி உள்ளுயிருண்டு புறந்தேக்கு
பாரிடர் தம்மை இலக்கத் தொன் பதின்மர்களாக உறைக்கின்ற
வீரரை மீட்டுவன் வருகேன்றே வேற்படை தன்னை விடுத்திட்டான்”
(கந்.பு.1508)
எனவும் கந்தபுராணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாரகனோ “இதனைப்பற்றி ஒடித்திரு நிற்பேன்” எனக் கூறுகின்றான். ஆனால், வேலோ தாரகன் மார்பினைத் தாக்கியது, கிரவுஞ்ச மலையைப் பிளந்து, இரவுஞ்ச மலையில் மயங்கிக் கிடந்த வீரரை மயக்கம் நீங்கி எழச் செய்தது மீண்டும் முருகன் கையில் வந்து சேர்ந்தது.
முருகப் பெருமான் எறிந்த வேல் கிரவுஞ்ச மலையைப் பிளந்த போது புழுதிக் கூட்டம் செறிந்தது. தீப்பொறிகள் எங்கும் பரவின, புகை சூழ்ந்தது, கடல்கள் வற்றின. ஆகாய கங்கையும் வற்றியது, கிரவுஞ்ச மலையை பிளந்த போது, அதனின்று தோன்றிய தீயானது கிரவுஞ்ச மலையை முருகன் கைவேல் பிளந்தது, அவன் தோன்றிய ஆகாயக் கங்கையை வற்றச் செய்தது எனப் பலவாக முருகன் கைவேல் பெருமைகளை உற்பத்திக் காண்டத்தில் காண முடிகிறது.
சூரனை வதைக்க வேலினை முருகனுக்கு தேவியே தந்தாள் என்பதை கல்லாடம் வேலன் வணக்கம் பகுதியில் சூரபத்மன் ஓர் உடம்பு இரு கூறு படும்படி தன் தாயாகிய கருணை மிக்க உமையம்மை கொடுத்த நீண்ட வெற்றியையுடைய வேலினை உடையவனே எனக் குறிப்பிடும் கீழ்க்காணும் பாடலில்,
“ஓர் உடல் இரண்டு கூறுபட விடுத்த
அழியர்ப பேர் அளிஉமை கண்ணின்று
தன்பெயர் புணர்த்திக் கற்பினொடு கொடுத்த
அமையா வென்றி அரத்த நெடு வேலோய்”
(கல்லாடம்- 2:12-14)
என்பதிலிருந்து உமையம்மையே அந்த வேலினை வழங்கினாள் எனக் காணலாம்.
இங்ஙனம் முருகன் வேல் பெற்ற வரலாறு பற்றிய இருவேறு கருத்துக்கள் இருக்கின்றன. ஆன்றோர் கூறியது போல வேலினை முருகனுக்குச் சிவனார் அளிக்க உமாதேவியே அதற்கு அளவில்லா சக்தியினை அளித்தார் என உணரலாம்.
இதற்கு முன்னுதாரணமாக, பெரிய புராணத்தில் திருஞானசம்பந்தர் பெருமானுக்கு இறைவன் பொற்றாளங்கள் அளிக்கிறான். அன்னையே அத்தாளத்து ஓசை கொடுத்து, ஓசை கொடுத்த நாயகி என்றானதை எடுத்துக் கொள்ளலாம்.
முடிவுரை
* முருகன் பிறப்பில் பரிபாடல், திருமுருகாற்றுப் படை என ஒன்றுக்கொன்று மாறுபட்ட கருத்துக்களை கூறுகின்றது. கந்தபுராணமோ “அவதாரம்” என்று கூறுகின்றது. திருச்செங்கோட்டு புராணமோ இவை மூன்றிலும் இருந்து மாறுபட்ட கருத்தைக் கூறுகின்றது.
* வேல் பற்றி விவரிக்கும் ஆன்றோர்கள் பராசக்தியின் வடிவே, வேல் எனக் கூறுவர். அறிவு, ஞானம், பொருள், இன்பம், திருவருள், திருவருட் சக்தி எனும் சொல் வேலின் வடிவமாகிய அன்னையையே குறிக்கும். பஞ்சாட்சர மூல மந்திரமே வேலாயுதத்தை குறிப்பதாகும் என்பதன் மூலம் வேலின் பெருமையை அறிந்து கொள்ள முடிகிறது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.