வண்ணதாசன் சிறுகதைகளில் குழந்தைகளின் மனநிலை
மு. சசிகலா
முனைவர் பட்ட ஆய்வாளர் (முழு நேரம்), தமிழாய்வுத்துறை,
மாமன்னர் கல்லூரி (தன்.), புதுக்கோட்டை-622001
முன்னுரை
குழந்தைகள் எதிர்காலச் சமுதாயத்தின் தூண்கள். சமுதாயத்தின் முகவரிகளாகவும் இக்குழந்தைகள் திகழ்கின்றனர். அத்தகையக் குழந்தைகள் எந்த விதமான மனநெருக்கடிகளுக்கும் ஆளாகாமல் வளர வேண்டும். குழந்தைகள் மனதழுத்தத்துடன் வளர்கின்ற போது அவர்களின் வாழ்க்கை இருளடைந்து விடுகிறது. சமுதாயம் கலையிழந்துவிடுகிறது. குழந்தைகளை அவர்களின் குழந்தைமைப் பருவம் பாதிக்காத வகையில் வளர்க்கப்பட வேண்டும்.
வண்ணதாசன் சிறுகதைகளில் குழந்தைகள்
வண்ணதாசன் தமது சிறுகதைகளில் குடும்ப வறுமைச்சூழலில் சிக்குண்டு குழந்தைமைப் பருவ வாழ்க்கையை இழந்து வாடும் குழந்தைகளின் மனநிலையைப் பல்வேறு நிலைகளில் எடுத்துரைத்துள்ளார். வண்ணதாசனின் சிறுகதைகளில் இடம்பெற்றுள்ள குழந்தைகளின் மனநிலையை
1. குழந்தைத் தொழிலாளர் மனநிலை
2. எதையும் ஏற்றுக்கொள்ளும் சூழல்
3. குழந்தைப்பருவ மனப்பண்பு
என மூன்று வகைகளாகப் பகுக்கலாம்.
குழந்தைத் தொழிலாளர் மனநிலை
குழந்தைத் தொழிலாளர்களை நியமிப்பதற்கான சட்ட விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. மனிதப் பரிமாண வளர்ச்சியில் ஒவ்வொரு படிநிலைகளுக்கும் உண்டான செயல்பாடுகளை வகுத்துக் கொண்டு வாழ்வதே அதன் இயல்பாக அமைந்துள்ளது. அவ்வாறு இல்லாமல் ஏழ்மையினால் குழந்தைகள் தங்களின் கலை, கல்வி, விளையாட்டு, சுகாதாரங்களை இழந்து மகிழ்வின்றி மனச்சோர்வோடு வாழ்கின்றனர்.
பள்ளிக்குச் செல்ல வேண்டிய குழந்தைகள் குடும்ப வறுமையின் காரணமாக வேலைக்குச் சென்று அவதியுறுவதை ‘நிலை’ என்ற சிறுகதையில் வரும் கோமு வீட்டு வேலைக்குச் செல்வதையும், ‘சில நிமிர்வுகள் சில குனிவுகள்’ என்ற சிறுகதையில் கோயில் வாசலில் சிறுசிறு அலுமினியக் கிண்ணங்களில் வைத்துக் குங்குமமும் மஞ்சள் கிழங்கும் விற்றுக் கொண்டிருக்கக் கூடியக் குழந்தைகளை வண்ணதாசன் படைத்துக் காட்டுகிறார். கோயிலுக்கு வரும் வெளியூர்ப் பயணிகளிடம் பரட்டைத்தலையை நிமிர்த்திக் கையேந்திப் பிச்சை கேட்டு வறுமையில் வாடும் குழந்தைகளை ஆசிரியர் இக்கதையில் சித்திரிக்கிறார்.
குழந்தைகள் கல்வி கற்பதும் குழந்தைமைப் பருவ நுகர்வுகளை நுகர்ந்து வளர்வதும் அடிப்படை உரிமைகளைப் பெற்று வாழ்வதும் ஆகிய வாழ்வுரிமைகளை வறுமைச் சூழலில் வாழும் குழந்தைகள் இழந்து விடுகின்றனர் என்பதை இச்சிறுகதையின் வாயிலாக ஆசிரியர் உணர்த்துகின்றனர். வண்ணதாசனின் இச்சிறுகதை “தனுஷ்கோடி ராமசாமியின் கந்தககிடங்கினிலே” (1) என்ற சிறுகதையில் வரும் குழந்தைத் தொழிலாளர்களை நினைவுறுத்துவதாக அமைந்துள்ளது.
எதையும் ஏற்றுக்கொள்ளும் சூழல்
நம்பிக்கைக்குரிய ஒருவர் அந்த நம்பிக்கை பொய்த்து விடுவது போன்று நடந்து கொள்ளும் நிலையை ஏமாற்றும் மனநிலை எனலாம். பள்ளிக்கூடத்தில் வருடந்தோரும் சுதந்திர தினத்தை ஒட்டி உல்லாசப் பயணம் செல்ல ஏற்பாடு செய்வது வழக்கம். அடுத்த ஆண்டு கண்டிப்பாக அனுப்பி வைப்பதாகத் தந்தை கூறியிருந்தார். இந்த ஆண்டும் குடும்ப வறுமையால் அனுப்ப முடியாத சூழல் அமைந்துவிடுகிறது. தமக்குரிய ஒன்றை இழக்கும் போது அல்லது தாம் விரும்பிய ஒன்றை அடைய முடியாத போது ஏற்படும் மன உளைச்சலைக் கவலைப்படும் மனநிலை எனலாம். குழந்தைகள் தான் ஆசைப்பட்டதை அழுது அடம் பிடித்தாவது நிறைவேற்றிக் கொள்ள நினைப்பர். அவ்வாறு அடையமுடியாத போது தம் குடும்ப வறுமையை மனதில் கொண்டு தன் விருப்பத்தை வேறு வழியில் நிறைவேற்றிக் கொள்வதாக அமைகிறது.
“ஓர் உல்லாசப்பயணம்” என்ற சிறுகதையில்,
“எதிர்வீட்டு மச்சுத் தட்டோட்டி வடிகாலிலிருந்து தண்ணீர் இரண்டு உள்ளங்கை அகலத்திற்குப் பட்டையாய் பாதிதெருவில் விழுகிற அளவுக்கு வேகமாய் வளைந்து விழுந்து கொண்டிருந்தது. அதில் அந்த பையன் கண்களை மூடி இரண்டுகைகளையும் நெஞ்சோடு பின்னிக்கொண்டு குளித்துக் கொண்டிருந்தான். வாய் மாத்திரம் அவ்வப்போது சிரித்துக் கொண்டும் தண்ணீரை வாங்கி வாங்கிக் கொப்பளித்துக் கொண்டுமிருந்தது. அருவி விழுது அருவி விழுது என்ற வார்த்தைகளையே ஒரு ராகம் போல் பாடிக்கொண்டு கால்களை மாற்றி மாற்றி உற்சாகமாய் அவன் ஆடிக்கொண்டிருந்தான். உச்சித்தலையில் தண்ணீர் விழுந்து முடியெல்லாம் நெற்றியை மறைத்துக் கிடந்தது. சுவர்ப்பக்கமாய்த் திருப்பி முதுகைக் காட்டிக் குளித்தான்.’ஹோய்’ என்று கைகளை உயர்த்தி சத்தம் போட்டு மேலே பார்த்து தண்ணீருக்கு எதிரே முகத்தைக் காட்டினான். கீழே இருந்து அங்குலம் அங்குலமாகக் கையை உயர்த்தித் தண்ணீரை மேல் நோக்கித் தள்ளுகிற போது தரைச்சக்கரம் போல் உள்ளங்கைகளிலிருந்து பூப்பூவாய்ச் சிதறுகிற தண்ணீரை ரசித்தான்” (2) குற்றால அருவியாக நினைத்துத் தனது உல்லாசப் பயணத்தை அவன் அனுபவித்துக் கொண்டுள்ள அக்குழந்தையின் மனநிலையினை வண்ணதாசன் காட்சிப்படுத்துகிறார்.
குழந்தைப் பருவ மனப்பண்பு
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் தானும் வாடி நின்றதாகப் பாடினார் வள்ளலார். அவரைப் போல் வண்ணதாசனும் மனிதர்கள் மட்டுமல்லாது சகல உயிர்களிடத்தும் அன்பு செலுத்துபவராக இருக்கிறார். அதிலும் குழந்தையின் அன்பு என்பது எந்த ஒரு பயனும் இன்றி, எதிர்ப்பார்ப்பும் இன்றி அமையக்கூடிய குழந்தைக்கே உரித்தான பண்பு அது. குழந்தைகள் பிற உயிரினங்களிடத்தில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாது அன்பு காட்டுவதை ‘வரும் போகும்’ என்ற சிறுகதையின் மூலம் உணர்த்துகிறார். இச்சிறுகதையில்,
“பஸ்ஸில் ஒரு நரிகுறவர் குடும்பம் ஏறியது. அதில் ஒரு சிறியவன் பெரிய அணில் மாதிரி, கீரிப்பிள்ளை மாதிரி, மரநாய் என்று சொல்கிறார்களே அதுவோ என்னவோ அவன் ரொம்பச் செல்லமாக அதன் ரோமம் அடர்ந்த பழுப்பு உடம்பை இரண்டு கைகளுக்குள்ளும் மாறி மாறி வைத்துத் தடவி அதன் நாசிக் கருப்பில் உதட்டைக் குவித்து அடிக்கடி முத்திக் கொண்டான். இந்தப் பிரயாணத்தைப் பஸ்ஸை அவன் கூட வந்தவர்களை எல்லாம் மறந்துவிட்டது போன்று ஒரு சிறுவனுக்கே உரிய அன்னியோனியத்துடன் அதைக் கொஞ்சிக்கொஞ்சி உட்கார்ந்திருந்தான். இது அவனுக்கு பெரியதாக வளர்ந்தால் எந்தப் பிரயோஜனமும் அளிப்பதாக இருக்காது. காவல் செய்யஉதாவது குரங்கை போலச் சட்டைப்போட்டுச் சலங்கை கட்டி ராமா ராமா என்று வித்தை காட்ட உதவாது என்றாலும் அவன் கொஞ்சிக் கொண்டிருந்தான்” (3) என்று குழந்தைகளால் மட்டுமே எதிர்பார்ப்பு இல்லாமல் பிற உயிர்களிடத்தில் ஆழ்ந்த அன்பு செலுத்த முடியும் என்பதை உணர்த்துகிறார்.
முடிவுகள்
பெற்றோர்கள் சிறுவயதிலேயே குழந்தைகளுக்குக் குடும்பப் பொறுப்புகளை கொடுக்கின்றனர். வறுமையின் விளைவினால் குழந்தைகள் தங்களின் ஆசைகளைத் தொலைத்து விடுவதை, எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு வளரும் குழந்தைகளைப் பெரியவர்கள் குழந்தைகளின் மனநிலை பாதிக்காத வகையில் நல்வழிப்படுத்த வேண்டும் என்பதை ஆசிரியர் வண்ணதாசன் தமது சிறுகதைகளின் மூலம் எடுத்துரைக்கிறார். குழந்தைகளின் மனநிலை பற்றியப் பிரச்சனைகளைத் தனது சிறுகதைகளைக் கூறி அதற்கு தீர்வினையும் எடுத்துக்கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சான்றெண் விளக்கம்
1. பா. அகிலா., தனுஷ்கோடி ராமசாமியின் படைப்பாக்கத்திறன். ப.39
2. வண்ணதாசன்., கலைக்க முடியாத ஒப்பனைகள். ( சிறுகதை தொகுப்பு ).ப.110
3. வண்ணதாசன்., சமவெளி. ( சிறுகதைத் தொகுப்பு ). ப.52
(குறிப்பு: நூலாசிரியர், நூலின்பெயர், பதிப்பகம், ஊர், வெளியிட்ட ஆண்டு உள்ளிட்ட தகவல்களாக சான்றெண் விளக்கம் அமைந்தால் கட்டுரை படிப்பவர்களுக்கு உதவுவதாகவும், மேலும் சிறப்பாக அமையும் என்பதையும் கட்டுரையாளர் கவனத்தில் கொள்ள வேண்டுகிறேன். ஆசிரியர்)
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.