பழமொழிகளும் புதுமொழிகளும்
முனைவர் க.துரையரசன்
முன்னுரை
பழமொழிகளில் அனுபவமும் அறிவும் முதிர்ச்சியும் வெளிப்படும். அவை மட்டுமின்றி, தமிழர்களின் பண்பாட்டு வெளிப்பாடாகவும் வாழ்க்கையின் வெளிச்சமாகவும் அவை அமையும். எனவேதான் பழமொழிகளை அனுபவ மொழிகள் என்பர். ‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’ என்ற நன்னூலார் கருத்திற்கேற்ப இன்று பழமொழிகள் புது அவதாரம் எடுத்து வருகின்றன. ஆம். ‘பழைய கள்; புதிய மொந்தை’ என்பது போல கால மாற்றத்திற்கு ஏற்ப பல பழமொழிகள் புதுமொழிகளாக இணையத்தில் வலம் வரத் தொடங்கியுள்ளன. பழமொழிகள் குறித்து சில தேடல்களை நான் இணையத்தில் மேற்கொண்டபொழுது இது என் பார்வைக்குப் பட்டது. இதனைப் பிறருக்கும் தெரிவிப்பதன் மூலம் மேலும் பல பழமொழிகள் புதுமொழிகளாக உருவெடுக்கும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடுதான் இக்கட்டுரை.
திருக்குறள்
திருக்குறள் உலகப் பொதுமறை மட்டுமல்லாது எல்லா காலத்திற்கும் பொருந்தும் கருத்துடையது என்பது அனைவரும் அறிந்ததே. அவற்றில் சில குறட்பாக்களை மாற்றி அமைத்து நகைச்சுவைக்காகப் புதுக்குறளாகக் கூறக் கேட்டிருக்கிறேன். சான்றாக,
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்ற திருக்குறளை,
கற்க கல்கி குமுதம் கல்கண்டு கற்றபின்
விற்க பாதி விலைக்கு
என்றும்,
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்
என்ற திருக்குறளை,
சிக்ஸர்அடித்து வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
சிங்கிள்ரன் ஓடியே சாவார்
என்றும்,
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்கு
பொய்யா விளக்கே விளக்கு
என்ற திருக்குறளை,
எல்லா பேட்ஸ்மேனும் பேட்ஸ்மேனல்ல ரசிகர்களுக்கு
சச்சினே சிறந்த பேட்ஸ்மேன்
என்று மாற்றிக் கூறுவதை இதற்குச் சான்றுகளாகக் கூறலாம்.
திருக்குறள் அதிகார அமைப்பு முறைகளில் மாற்றம் செய்து வெளியிட்ட க.ப.அறவாணனின் திருக்குறள் பதிப்பை ஏற்றுக் கொள்ளாத இத்தமிழுலகம் குறட்பாக்களை மாற்றிக் (உல்டா) கூறுகின்ற போக்கையும் ஏற்றுக் கொள்ளாது என்பது திண்ணம். இந்நிலையில் பழமொழிகளைப் புதுமொழிகளாக மாற்றுவதை இத்தமிழுலகம் ஏற்றுக் கொள்ளுமா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பழமொழி - புதுமொழி
| பழமொழி |
புதுமொழி |
| கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடும் |
எடிசன் வீட்டு ஏணிப்படியும் ஷாக் அடிக்கும் |
| ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் |
ஊரார் செல்லுக்கு குறுந்தகவல் அனுப்பினால் தன் செல்லுக்கு தானே வரும் |
| ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் |
ஒரு பொய்க்கு ஒரு மூட்டை பொய் பாலம் |
| விளையும் பயிர் முளையிலே தெரியும் |
ஓடும் குதிரை ஓட்டத்தில் தெரியும் |
1. பழகப் பழகப் பாலும் புளிக்கும் 2. எறும்பு ஊரக் கல்லும் தேயும் |
கார் ஓட ஒட டயரும் தேயும் |
| கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை |
சைக்கிளுக்குத் தெரியுமா பெட்ரோல் வாசனை |
| தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் |
தான் ஓடாவிட்டாலும் தன் கடிகாரம் ஓடும் |
| தன்வினைத் தன்னைச் சுடும் |
தீக்குச்சி தன் தலைக்கனத்தால் கெடும் |
| கத்தி முனையை விட பேனா முனை கூர்மையானது |
துப்பாக்கி முனையைவிட பிரிண்டர் முனை பெரியது |
| குரங்கு கையில கொடுத்த பூமாலை போல |
பந்தைக் காத்து கோல்கீப்பரிடம் கொடுத்தாற்போல |
| அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் |
மிதிக்க மிதிக்க சைக்கிளும் நகரும் |
| காற்றுள்ள போதே தூற்றிக் கொள் |
முடியுள்ள போதே சீவிக்கொள் |
| குரைக்கிற நாய் கடிக்காது |
பழகின செருப்பு காலைக் கடிக்காது |
| மத்தளத்துக்கு ஒரு பக்கம் இடி மேளத்துக்கு இரண்டு பக்கமும் இடி |
மாத நாட்காட்டிக்கு ஒருமுறை கிழி, தினநாட்காட்டிக்கு தினம்தினம் கிழி |
| யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே |
ஹெல்மெட் இல்லாதவன் பின்னே எமன் வருவான் முன்னே |
என்று பழமொழிகளைப் புதுமொழிகளாக்கி இணையத்தில் பல புதுமொழிகள் உலா வருகின்றன.
முடிவுரை
இங்ஙனம் பழமொழிகள் புதுமொழிகளாகி வருகின்றன. புதுமொழிகளாக இருந்தாலும்கூட இவை இக்கால ஓட்டத்திற்குப் பொருந்துவனவாக உள்ளன என்றே நான் கருதுகிறேன். பழமொழிகளின் இந்த புதிய அவதாரம் தேவைதானா? இல்லையா? என்பதைத் தமிழாய்வு உலகம்தான் கூற வேண்டும்.
(இக்கட்டுரையில் இடம் பெற்ற புதுமொழிகள் அனைத்தும் இணையத்தில் என் பார்வையில் பட்டவை. புதுமொழிகளுக்கு இணையான பழமொழிகளை இக்கட்டுரையில் நான் இணைத்துள்ளேன். - கட்டுரையாளர்)
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.