தகவல் பரிமாற்றத்திற்குக் கூத்து இசையின் பயன்பாடு
வீ. முத்துலட்சுமி
முன்னுரை
இயல், இசை, நாடகம் என முத்தமிழையும் கொண்டு பிரகாசிப்பது தமிழ்மொழி. இசைத்தமிழ் கேட்பவரைத் தம்பால் இசையச் செய்யும் பேராற்றல் பெற்றது. இசையைக் கேட்டு யானையானது நின்று கொண்டே தூங்கியமையும், ஆரலைக் கள்வர்கள் தம் கொலைத்தொழிலை மறந்து செயலற்று நின்றனர் என்ற செய்திகள் இலக்கியங்களில் பதிவாகியுள்ளன.
நாடகம் என்பது கூத்து. இது ஆடல், பாடல், அழகு என்ற மூன்றையும் தன்னகத்தே கொண்டு செயல்படுவது. இதனை நிகழ்த்த கூத்தர், பொருநர், பாணர், விறலி என்ற கலைஞர் குழுக்கள் இருந்துள்ளனர். இசையும் கூத்தும் எவ்வாறு தகவல்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு சென்றன என்பதை இங்கே காணலாம்.
இசை மூலம் தகவல்தொடர்பு
ஓரறிவு பெற்ற தாவரம் முதல் ஆறறிவு பெற்ற மனிதன் வரையுள்ள எல்லா உயிரினங்களையும் இன்பமடையச் செய்யும் பேராற்றல் பெற்றது இசை ஒன்று மட்டுமே. இசை மலராத மலர்களை மலரச் செய்யும் ஆற்றல் உடையது. இசையைக் கேட்டு பாம்புகள் மயங்குவதும், மதம் பிடித்த யானை அடங்குவதும் இயல்பே. வண்டி இழுக்கும் மாடுகளும், ஏர் காளைகளும் இசை கேட்டு தம் வேலைப்பளுவை மறக்கின்றன. மெல்லிய இசை நோயையும் குணப்படுத்தும் ஆற்றல் உடையது. ஓம்ம்ம்... என்ற இசை ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தும் சக்திவாய்ந்தது. பாரதியார் தமது குயில்பாட்டில்,
“காட்டில் விலங்கறியும் கைக்குழந்தை தானறியும்
பாட்டின் சுவையதனைப் பாம்பறியும்”
என இசையின் வல்லமையை எடுத்தியம்பியுள்ளார். நவீன அறிவியல் உலகில் இசையால் நோயைக் கட்டுப்படுத்த முடியும் என்பது நிரூபணமாகியுள்ளது.
இக்காலத்தில் தகவல் தொடர்பானது, அசுர வேகத்தில் வளர்ந்து விட்டது. இத்தகவல் தொடர்பு சாதனங்கள் கண்டுபிடிப்பதற்குப் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே, மனிதன் மிக விரைந்து ஓடும் குதிரையை விட ஒலி இன்னும் மிக விரைந்து செல்லும் என்பதை உணர்ந்திருந்தான். எனவே ஒலியின் மூலம் தகவல்களைத் தெரிவித்தான். “பறை” என்னும் இசைக்கருவியின் மூலம் “டம்டம் என ஒலியெழுப்பித் தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு அனுப்பினான்.
மலையுச்சியில் ஒருவன் நின்று பறையறைந்து தகவல்களை அறிவிப்பான். அடுத்த மலையில் உள்ளவன் அதைக் கேட்டு அவனுக்கு மறுமொழியாகக் குறியீட்டு முறையில் பறையறைவான். அடுத்த மலையிலுள்ளவனுக்கு அதே போல் குறியீட்டின் மூலம் தகவல்களை அனுப்புவான். இம்முறைதான் “தந்தி” என்னும் மின்னணு தகவல் தொடர்பு சாதனத்திற்கு முன்னோடியாக இருந்தது எனலாம்.
திருவிழாக் காலங்களில் இறைவன் ஊர்வலத்திற்கு முன் யானையின் மேல் “நகரா” என்ற இசைக்கருவியை வைத்து ஒருவன் முழங்கிச் செல்வான். அதனைத் தொடர்ந்து இறைவன் பவனி வருவார்.
போர் நிகழப் போவதையும், போரில் வென்றதையும், போர் நிறுத்தத்தையும் பல்வேறு இசைக்கருவிகளை இசைத்தே தெரிவித்தனர்.
மன்னனின் ஆணையை மக்களுக்குத் தெரிவிக்கவும், வெள்ளப்பெருக்கை அறிவிக்கவும், மரணம் உட்படத் துக்கச் செய்திகளை தெரிவிக்கவும் இசையே பயன்பட்டன.
முரசின் முக்கியம்
சங்க கால இசைகளில் “முரசு”க்கென தனி இடம் இருந்துள்ளது. அரசனுடைய வெற்றிச் சின்னங்களில் முரசும் ஒன்றாகும். நாட்டின் தேசியக் கொடிக்குத் தற்போது எவ்வளவு மதிப்பும் மரியாதையும் உள்ளதோ, அதைப் போன்ற செல்வாக்குடையது முரசாகும்.
திருச்செந்தூரில் இறைவனுக்கு உச்சிகாலப்பூசை முடிந்த செய்தியை அறிந்த பின்பு பாஞ்சாலக்குறிச்சியில் கட்டபொம்மன் உணவு உட்கொள்வதும், ஸ்ரீ வில்லிப்புத்தூர் ஆண்டாளுக்குப் பூசை முடிந்த செய்தியறிந்த பின்பு மதுரையில் மன்னர் திருமலைநாயக்கர் உணவு உட்கொள்வதும் வழக்கம். இதனால் ஆங்காங்கே முரசு மண்டபங்கள் அமைத்து மன்னனுக்கு ஒலியெழுப்பித் தகவல்களைத் தெரிவித்தனர் என்பதையும் அறியலாம்.
முரசின் இச்செயல்பாட்டை இக்காலத்தில் உள்ள அலைபேசியோடு ஒப்பிட்டால் முரசு மண்டபங்களை மின்னனு கோபுரங்கள் (Cell Phone Tower) உடன் ஒப்பிடலாம். இதற்கெல்லாம் முன்னோடியாக முரசையும் கொள்ளலாம். இறைவன் கூத்தாடும் போது, கரத்திலுள்ள மருதத்தை ஒலித்ததால் உயிரினங்கள் தோன்றின என புராணங்கள் குறிப்பிடுகின்றன.
பறையறைதல்
பறையெனும் கருவி ஒருமுகம், இருமுகம் என இரு வகைப்படும். ஒருமுகமுடையதை “இரும்பறை” எனவும், இரட்டை முகமுடைய பறையை “இணைமுகப்பறை” எனவும் வழங்கினர். பறையின் ஒலியைக் கொண்டே பேரோசைப்பறை, போர்ப்பறை, வெருப்பறை, வெறியாட்டுப்பறை எனவும், தவளையின் குரலையுடைய பறையைத் “தட்டப்பறை” என்றும் வழங்கினர். வளை, வயிர், வீணை, கோடு, துடி, சங்கு போன்ற பிற கருவிகளுடன் இணைத்துப் பறை முழக்கப்பட்டதை சீவகசிந்தாமணியின் (1776,1847,1859) பாடலடிகள் சுட்டுகின்றன.
தொல்காப்பியத்தில் முதற், கரு, உரி என்ற முப்பிரிவில் கருப்பொருள்களுள் ஒன்றாகப் பறை அமைந்துள்ளது. “அசுணம் பறையொலிக் கேட்டால் மயங்கி இறந்து விடும்” அதனைப் பிடிப்பவர்கள் பறையறைந்து இசையால் மயங்கியிருக்கும் போது உடனே பிடித்து விடுவர். உழவர்களை வருவித்து வையைப் புனலை அடைப்பர். பரிபாடலில் (10-7) பறையறைந்து “கரைகாப்பாருடைய காவலோடே அப்பறையொலி ஒலிப்பதால்” நம் இலக்கியங்கள் கூறுகின்றன.
வெற்றி மட்டுமல்லாது, தோல்வியையும் உரக்க ஓசைகளையுடைய பறைகளை முழக்கினர். வயல்களில் வேலை செய்பவர்களுக்கு ஊக்கம் கொடுப்பதற்காக மருதப்பறையினை ஒலித்தனர்.
புறநானூறு 395 -7 “அரிப்பறையறையுள் ஓப்பி” என்ற வரி, நெல்லினை அறுக்கும்போது அரிப்பறையை கொட்டிய செய்தியை, தெரிவிக்கின்றது.
மலைபடுகடாம் இஞ்சி, மஞ்சள் போன்றவற்றைக் காவல் காக்கும் போது ‘பன்றிப்பறையறைந்த’ செய்தியைக் கூறுகின்றது.
மதயானை வருகையை அறிவிக்க, எங்கும் பறை அறைந்தனர். யானையை நீர் அருந்தச் செய்யும் போதும் பறையறிந்தே செல்ல வேண்டும் என மன்னன் ஆணையிட்டுள்ளான். யானை மீது பறையை ஏற்றி மக்களுக்கு நற்செய்திகளை அறிவித்தனர்.
மணநாளில் மணப்பறைக் கொட்டி தகவல்களைத் தெரிவித்தனர். “தண்ணகம்” என்ற சாவுப்பறை “தழீஇம் தழீஇம்” என ஒலிப்பது சாவுப்பறை “டொண் டொண் டொடு” என்றெல்லாம் ஒலிக்கக்கூடியது என்று நான்மணிக்கடிகை குறிப்பிடுகின்றது.
இன்றும் திருவிழா, சுகாதாரம், மருத்துவம், நில வருவாய் கட்டுதல், நியாய விலைக்கடைகளில் பொருட்கள் வழங்குவது குறித்தும், மீன் ஏலம், தோப்பு குத்தகை முதலிய செய்திகளையும் பறையறைந்தே தெரிவிக்கின்றனர்.
தகவல் தொடர்பில் கூத்துக்களின் பங்கு
கூத்தர்கள் தமது கூத்தின் மூலம் பல்வேறு தகவல்களைப் பரப்புகின்றனர். தொல்காப்பியக் காலத்தில் மக்களின் அக, புற வாழ்க்கையில் கூத்துக்கள் நீக்கமற நிறைந்து காணப்பட்டது.
மன்னன் போரில் வெற்றி பெற்ற செய்தியை முன்தேர்க்குரவையும், மன்னன் போருக்குச் செல்வதை வென்றிக்குரவையும், வெற்றி பெற்ற மன்னனின் சிறப்பைப் பின்தேர்க்குரவையும் வெளிப்படுத்தின.
காதல் வாழ்வில் காதலர்களின் குறியிடம் கூறவும், காணாமல் போன காதலனைக் கண்டுபிடிக்கவும் கூத்துக்கள் பயன்பட்டன.
பொருநராற்றுப்படையில், கரிகால் பெருவளவனின் வளம் பொருநன் மூலமாகவே வெளிப்படுகின்றன.
இன்று நோய்கள் பற்றிய விழிப்புணர்வை (சான்றாக எய்ட்ஸ்) ஏற்படுத்தவும், அரசியலில் ஏற்படும் வெற்றி தோல்விகளை வெளிப்படுத்தவும் கூத்துக்கள் உதவுகின்றன.
இசையும் கூத்தும ஒருநாளின் இருபொழுதுகள் போல இணைந்தே செயல்பட்டுள்ளன. இசையில்லாத கூத்து சிறக்காது. கூத்து சிறக்க வேண்டுமானால் கண்டிப்பாகப் பின்னணி இசை வேண்டும்.
இப்படி ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து செயல்படும் கூத்தும் இசையும் கற்காலம் முதல் இக்காலம் வரை தகவல்களை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்லும் மிகச்சிறந்த ஊடகங்களாகச் செயல்பட்டன என்றால் அது மிகையாகாது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.