பதினொரு வகை ஆடல்கள்
வீ. முத்துலட்சுமி
முன்னுரை
புராணக் கூத்து வகைகள் எல்லாம் ஆரியம் இந்தியாவில் நுழைந்த போது தமக்குப் பகைவர்களாக இருந்து எதிர்த்த திராவிடர்களை இராட்சதர், அரக்கர், அசுரர் என்று பழித்து, அவ்வினத்தை ஒழித்துத் தழுவியவைகளே தெய்வமணத்தில் போற்றப்படுபவை. இவை தொடுக்கப்பட்டு, நியாயப்படுத்தப்பட்டு ஆடிக் காட்டியவையே கூத்துக்கள் ஆகும். திருமாலுக்குப் பெருந்தேவபாணியும், சிவனுக்குச் சிறுதேவபாணியும் என மாற்றியும் திரித்தும் அதற்கு இசை, இராகம், பாக்கள் பிரித்தமை போலச் சிறுதேவராடல், பெருந்தேவராடல் என்று வகைப்படுத்தினர்.
வகைக் கூத்தும் பதினொன்றாகக் கொடுகொட்டி, பாண்டரங்கம், குடை, துடி, அல்லியம், மல்லியம், குடம், பாவை, மரக்கால், பேடி, கடையம் எனச்சிவ வைணவக் கலப்படக் கூத்துகளும் சொல்லப்பட்டன. இவற்றுக்கு உறுப்புகளும் சொல்லப்பட்டன. ஐந்திணைப் பழைய வாழ்வியல் நிகழ்வுக் கூத்துக்களை, விலக்கிய உறுப்புகளாகச் சாந்திக்கூத்து, வினோதக் கூத்து ஆகியவற்றின் வழியாக,
“இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து
பலவகைக் கூத்தும் விலகினில் புணர்ந்து
பதினோ ராடலும் பாட்டும் கொட்டும்” (1)
என்றார் இளங்கோவடிகள்.
“பதினோ ராடற் பகுதி எல்லாம்
ஆதிரா வகைக் கூத்தாகு மென்ப” (2)
இவற்றுள்,
மேற்கூறிய பதினொரு வகைக் கூத்துகளும் தொடங்குவதற்குத் துணையாகத் ‘தொழுகை’ இளங்கோவடிகளால் கூறப்படுகிறது.
“வானோர் வணங்க மறைமேல் மறையாகி
ஞானக் கொழுந்தாய் நடுக்கின்றி யே நிற்பாய்” (3)
என்றும்,
“அரி அரன் பூ மேலோன் அகமலர்மேல் மன்னும்
விரிகதிர் அம் சோதி விளக்காகியே நிற்பாய்” (4)
என்றும்,
“கங்கை முடிக்கணிந்த கண்ணுத லோன் பாகத்து
மங்கை உருவாய் மனமார ஏத்தவே நிற்பாய்” (5)
என்றும்
இவ்வாறாகத் தேவர்களைச் சிறப்பித்தலும் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் (உமைபாகன்) ஆகியோரைச் சிறப்பித்தலுமாகச் சிலப்பதிகாரப் புகார்க் காண்டம் தொடங்கி, உறையூரை விட்டு உலாவாகி கோவலன் கண்ணகிக்குத் துணையாகத் திருவரங்கம், திருவேங்கடமலை, அருந்ததிகதை, பேய்பூதக் கதைகள், இம்மை மறுமை என முழுமையும் சொல்கிறார்.
மாதவி இந்திர விழாவில் ஆடியதாக இப்பதினோராடல்களும் அமைகின்றன.
நின்றாடல்
அல்லியம், கொடுகொட்டி, குடை, குடம், பாண்டரங்கம், மல்லியம் ஆகிய ஐந்தாடல்களும் நின்றாடல்களாகும்.
அல்லியம்
அல்லியம் இது கண்ணனால் ஆடப்பட்ட ஆடலாகும். கம்சன் என்னும் அரக்கன் குவலயாபீடம் என்னும் யானையின் உருக்கொண்டு தேவர்களுக்குத் துன்பம் செய்தபொழுது கண்ணன் அந்த யானையின் ஆற்றலை அழித்த பொழுது ஆடிய ஆடலாகும். இது வீரச்சுவை நிறைந்த ஆடலாகத் திகழ்கிறது. மாதவி கண்ணன் உருக்கொண்டு யானை உருவில் இருக்கும் கம்சனோடு போர் புரிவது போல் நடனமாடினாள். ஒரு விலங்கைக் கொல்லும் பொழுது அதனை எம்முறையில் ஆடிக் கொல்ல வேண்டுமோ அதற்கேற்ற தாள அமைதியும் அபிநயத்தையும் கொண்ட தனி ஆடலாக அமைந்துள்ளது.
“கஞ்சன் வஞ்சம் கடத்தற்காக
அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள், அல்லி” (6)
ஆனாலும் வலிமை மிக்கவனாகக் கண்ணனை நிறுத்தி அவன் அருள் வலிமையால் பகை வெல்லும் போது,
“ஆடல் இன்றி நிற்பவை எல்லாம்
மாயோன் ஆடும் வைணவ நிலையே” (7)
என்பார்.
அதாவது ஆடல் அவிநய உறுப்புகள் முகம், மார்பு, கை, கால் தொழில் செய்யாது முடங்கி நிற்பதாக அவை பொருளுணர்த்தும்.
“அல்லியம் மாயவன் ஆடிற் றதற்கு றுப்புச்
சொல்லிய ஆறாம் எனல்” (8)
ஒரு திராவிடப் பகைவனை உருவகப்படுத்தி அவன் ஏவலை எதிர்த்து வென்றதாகச் சொல்லப்பட்ட வைணவம் மிகைப்படுத்திய வெண்டுறைக் கூத்தின் திணிப்பு இதாகும்.
கொடிகொட்டி
கொடுகொட்டி ஆடல் சிவபெருமான் ஆடிய ஆடலாகும். தாரகாட்சகன், கமலாட்சன், வித்துவன் மாலி என்னும் அசுரர்களின் மூன்று கோட்டைகளையும் முப்புறங்களையும் எரித்தார். இதன் வெற்றிகளிப்பால் கைகொட்டி ஆடிய ஆடல் கொடுகொட்டியாயிற்று. ஆடுதலில் கொடுமையுடையதால் இவ்வாட்டத்திற்கு கொடுகொட்டி என்று அடியார்க்கு நல்லார் பெயரிடுகிறார். கொடுங்கொட்டி - கொடுகொட்டி என விகாரமாயிற்று என்று நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார்.
கலித்தொகை கடவுள் வாழ்த்துப் பாடலில் சிவன் கொடுகொட்டி ஆடிய குறிப்புக் காணப்படுகிறது. இதில் சிவபெருமான் ஆடியதாகவும் உமையவள் தாளம் இசைத்ததாகவும் குறிப்பிடுகிறது. சிலம்பில் மாதவி தன் உடம்பில் ஒரு பகுதி சிவனாகவும், மறு பகுதி உமையவள் ஆகவும் வேடம் பூண்டு ஆடிய செய்தி உணரப்படுகிறது.
“உமையவள் ஒருதிறனாக ஓங்கிய
இமையவள் ஆடிய கொடுகொட்டி ஆடலும்” (9)
திராவிடர்கள் என்னும் அசுரர்கள், ஆரியர்கள் என்னும் தேவர்கள் ஆக்கிரமித்த இடங்களுக்கு நெருப்பு வைக்கின்றனர். தேவர்கள், சூத்திரர் (திராவிடர்) கடவுளான சிவனை வேண்டுகிறார்கள்.
தேவர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, பாரதி அரங்கமான பைரவப் பார்வதியின் சுடுகாட்டில் ஒரு கூறாக நின்று பாணி, தூக்கு, சீர் என்னும் தாளத்துடன் சிவன் நெருப்பாக ஆடுகிறான். அசுரர் என்னும் திராவிடர்கள் வெந்து விழுகின்றனர். இக்காட்சியை ஒரு பொருட்டாக மதியாது சிரித்துக் கைகொட்டிச் சிவனும் ஆடியதாக இக்கூத்து.
இதற்குக் கல்லாடனாரும் இசைக் கூத்தின் நளிநய முத்திரை கூறுகிறார்.
“கொடு கொட்டிக்குக் குறியடுத்தெடுக்கும்
புங்கம் வாரம் புடைநிலை பொறுத்து
கச்ச புடத்தில் தனி எழு மாத்திரை
ஒன்றை விட்டொரு சீரிரண்டுறவுறுத்தி
எடுத்துத் துள்ளிய இனமுத்திரை” (10)
குடைக் கூத்து
குடைக் கூத்தாடல் முருகன் ஆடியதாகும். சூரனோடு போர் செய்ய முனைந்த வானவர் படையஞ்சி சோர்வுற்றபோது முருகன் ஒருமுக எழினியாக தோன்றி தம் குடையைச் சாய்த்துச் சாய்த்து ஆட்டிச் சூரனின் வலிமையை இழக்கச் செய்து வானவர் படையைக் காத்த பொழுது ஆடிய ஆடலாகும். கையில் குடை ஒன்றைப் பிடித்துக் கொண்டு கட்டப்பட்ட கயிற்றில் ஏறி நின்று ஆடுவதையும் குடைக் கூத்தாகக் கருதுகின்றனர். மாதவி முருகன் போல் ஒப்பனை செய்து கொண்டு அரக்கர்களோடு போரிடுவது போலவும் வெற்றிக் களிப்பில் ஆடுவது போல் ஆடினாள்.
“படை வீழ்த்து அவுணர் பையுள் எய்தக்
குடை வீழ்த்து அவர் முன் ஆடிய குடையும்” (11)
ஆரியர் வணங்காத சூத்திரக் கடவுளான முருகனைக் கொண்டே அந்த சூத்திர அசுரத்திராவிடர்களை வென்ற கூத்து.
அசுரர்கள் முருகன் மீது போர் தொடுத்தனர். அனைத்திலும் தோல்வி. ஒருமுக எழினியாகக் குடையைத் தாழ்த்தி முருகன் ஆடிய குடைக் கூத்து. இதன் உறுப்பு,
“அறுமுகத் தோனாடல் குடைமற்றதற்குப்
பெருமுறுப்பு நான்காம் எனல்” (12)
குடக்கூத்து
குடக்கூத்து திருமாலால் ஆடப்பட்டதாகும். வாணன் எனும் அரக்கன் மகள் உழை என்பாளைக் காமன் மகன் அநிருத்தன் கவர்ந்து செல்ல அதனால் சினந்த வாணன் அநிருத்தனைச் சோ என்னும் நகரில் சிறை வைத்தான். திருமால் வாணனின் சோ நகருக்கு வந்து உலோகத்தையும் மண்ணையும் கலந்து செய்யப்பட்ட குடத்தின் மேல்நின்று ஆடிய ஆடல் குடக்கூத்தாடல். இது வினோதக்கூத்து ஆறினுள் ஒன்றாகும். மாதவி மாயோன் வடிவம் கொண்டு தலையிலும் தோளிலும் கையிலும் குடம் கொண்டு ஆடியிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. இக்கூத்தை சித்தரிக்கும் சிற்பங்கள் திருவெள்ளறை திருமால் கோயிலிலும் சுசீந்தரம் கோயிலிலும் காணப்படுகின்றன.
“வாணன் பேரூள் மறுகிடை நடந்து
நீணிலம் அளந்தோன் ஆடிய குடமும்” (13)
ஆரியக் காமக் குமரனாகிய அநிருத்தன் என்பவன் திராவிட வாணாசுரனின் மகள் உழையைக் கவர்ந்ததற்காக அவள் தந்தையால் சிறை வைக்கப்பட்டான். அவனை மீட்க, கண்ணன் திராவிட நகரின் சோ என்ற அரணுக்குச் சென்று பஞ்சலோகங்களாலும் மண்ணாலும் செய்யப்பட்ட குடம் கொண்டு ஆடிய வைணவக் கூத்து குடம்.
நகைச்சுவைக்குரிய வைணவ வினோதக் கூத்துகளில் இது ஆறாவதாகும்.
“பரவிய சாந்தி அன்றியும் பரதம்
விரவிய வினோதம் விரிக்குங்காலை
குரவை கலி நடம் குடக்கூத் தொன்றிய
கரண நோக்கு தோற்பாவைக் கூத்
தென்றிவை யாறும் நகைத்திறச் சுவையும்
வென்றியும் வினோதக் கூத்தென இசைப்ப” (14)
என அடியார்க்கு நல்லார் கூறுவார். இவ்வைணவக் கூத்தினைக் கல்லாடனாரும்,
“மூன்று புரத் தொன்றில் அரசுடை வாணன்
மேருக் கிணைத்ததோள் ஆயிரத் தோடும்
எழு கடல் கிளர்ந்த திரள்கலி யடங்க
முகம்வே றிசைக்கும் குடமுழவு” (15)
என்று பெருமை மிக்க அசுரனை மாற்றுருவில் வென்றதாகக் கூறுவார். இதன் உறுப்பு,
“குடத்தினால் குன்றெடுத் தோனாடல் அதனுக்
கடைக்குப் வைந்துறுப் பாய்ந்து” (16)
பாண்டரங்கம்
பாண்டரங்கம் ஆடலும் சிவனால் ஆடப்பட்டுள்ளது. சிவன் போர்கள் பலவென்ற வலிமையோடும் வெற்றிக் களிப்போடும், பாரதி வடிவாய் இறைவன் வெண்ணீறு அணிந்து ஆடியதாகும். பாண்டரங்கம் என்பதனை பண்டரங்கம் என்றும் குறிப்பிடுவர். மாதவி அச்சம் தரக்கூடிய காளி உருத்தாங்கி அகோரத்தாண்டவமாடித் தன் ஆடற்புலமையை வெளிப்படுத்தினாள்.
“தேர்முன் நின்ற திசை முகன் காணப்
பாரதி ஆடிய வியன் பாண் டரங்கமும்” (17)
ரிக், யசூர், சாம, அதர்வணம் என்னும் மறை பூட்டிய (குதிரைகள்) தேரில், பூமிக்கும் வானத்திற்குமாக நின்ற நான்முகனான பிரம்மாவின் முன், சுடலைப் பொடி பூசிய உக்கிரசிவன் ஆடிய (வெறியாட்டு) தாளக் கூத்தாட்டம் பாண்டரங்கம். சிவனியத்தை ஆடவைப்பதே வைணவக் கூத்து. இதன் உறுப்பு
“பாண்டரங்கம் முக்கணான் ஆடிற் றதற்குறுப்பு
ஆய்ந்தன ஆறாம் எனல்” (18)
பாண்டரங்க ஆடல் இலக்கணமாகக் கல்லாடனாரும்,
“பாண்டரங் கத்தொரு பாடுபெற் றமைந்த
மோகப் புயங்க முறைத் துறை தூக்கி
அதற்குச் சாரணி அருட்கரம் ஒன்றில்
பாணி இரண்டும் தாளம் ஆக்கி
ஒருதாள் மிதித்து” (19)
என்று கூறுவர்.
மற்கூத்தாடல்
மற்கூத்தாடல் திருமாலால் ஆடப்பட்ட வைணவக் கூத்து, வாணன் என்னும் அரக்கன் தேவர்களுக்குத் துன்பம் செய்தபொழுது, திருமால் மல்லர்களின் துணையோடு வாணனை வதம் செய்த பொழுது ஆடிய ஆடலாகும். மற்போர் புரிதல் என்ற செயலின் அடிப்படையில் பெயர் பெற்றது. மாதவி மாயவன் வடிவு கொண்டு வாணனை வதம் செய்யும் நிலையில் ஆடல் அபிநயங்களோடு ஆடியுள்ளாள்.
“அவுணர்க் கடந்த மல்லின் ஆடல்” (20)
திருமால் ஆடிய வைணவக் கூத்தான இவற்றிற்கு உறுப்புகள்
“நெடியவன் ஆடிற்று மல்லாடல் மல்லிற்கு
ஒடியா உறுப் போரைந்து” (21)
வீழ்ந்தாடல்
துடி, கடையம், பேடு, மரக்கால், பாவை ஆகிய ஐந்தும் வீழ்ந்தாடல் ஆகும்.
துடிக்கூத்து
துடிக்கூத்தாடல் முருகன் ஆடிய ஆடலாகும். சூரன் கடல் நடுவில் வேற்றுருக் கொண்டு நின்றபோது முருகன் தொண்டகம் என்னும் பறை முழக்கிச் சூரனை அழித்தபொழுது முருகன் ஆடிய ஆடல். துடியைக்கொட்டி ஆடியதால் துடியாடலாயிற்று. மாதவி முருகன் உருக்கொண்டு சூரனை வென்ற பிறகு கடல் அலையே மேடையாகப் பாவித்து ஆடினாள்.
“... ... ... ... ... மாக்கடல் நடுவண்
நிர்த்திரை அரங்கத்து நிகர்த்து முன் நின்ற
சூர்த்திறம் கடந்தோன் ஆடிய துடியும்” (22)
வைகுந்தவாசன் நாராயணன் ஆதிசேசனில் சயனித்திருந்தால் அது திருப்பாற்கடல். சூத்திரத் திராவிடன் சூரபத்மன் அங்கிருந்தால் அது கருங்கடல்.
கடல் நடுவில் மாற்றுருக் கொண்டு மறைந்திருந்த சூரபத்மனைக் கடலையே ஆடலரங்கமாகக் கொண்டு குறிஞ்சி நிலத்திற்குரிய தொண்டகத்துடி முழவு கொண்டடித்து வெற்றி பெற்றாடிய கூத்து துடிக்கூத்து. முருகன் ஆடியது. கூத்தாண்டியாகச் சிவனைக் கொள்ளவில்லை. இதன் உறுப்பு,
“துடியாடல் வேல்முருகனாடல் அதனுக்கு
ஓடியா உறுப் போரைந்து” (23)
கடையக்கூத்து
இந்திரன் மனைவி அயிராணி ஆடிய ஆடல் கடையக் கூத்தாடல் ஆகும். இந்திரன் மனைவி அயிராணி மண்ணுலக வளம் காண விரும்பிச் சேர நகருக்கு வந்து, அங்கு வாணன் மனையின் வடக்கு வாயிற் புறத்தே உள்ள வயலில் உழவர் பெண் வேடம் புனைந்து அயிராணி ஆடிய ஆடலாகும். மாதவி நாட்டுப்புற உழத்தி போல் வேடம் புனைந்து ஆடினாள்.
“வயல் உழை நின்று வடக்கு வாயில் உன்
அயிராணி மடந்தை ஆடிய கடயமும்” (24)
இப்பெண்மைக் கோலத்து அவிநயத்திற்கு உறுப்புகள் ஆறு.
பேடியாடல்
ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்தோடு காமன் ஆடிய ஆடல் பேடியாடலாகும். அநிருத்தனைச் சிறைமீட்ட காமன் ஆண் தன்மை திரிந்து பெண்தன்மை மிகுந்து பேடி வடிவத்தோடு காமன் ஆடிய கூத்து. எதிரிகளை மயக்கக் காமன் பெண் உருக்கொண்டது போல், மாதவி தன்னை ஒப்பனை செய்து கொண்டு அபிநயங்களைச் செய்து மயங்கும்படி ஆடினாள். மணிமேகலையில், மணிமேகலையும் சுதமதியும் உவவனத்திற்கு மலர் பறிக்கச் சென்றபொழுது இக்கூத்து நிகழ்த்தப்பட்டது என்ற செய்தி கூறப்படுகிறது.
“ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக்
காமன் ஆடிய பேடி யாடல்” (25)
இதனையே மணிமேகலையும்,
“வாணன் பேரூர் மறுகிடை நடந்து
நீணில மளந்தோன் மகன் முன்னாடிய
பேடிக் கோலத்துப் பேடு” (26)
என்று கூறும்.
இதன் உறுப்புகள்,
“காமன தாடல்பே டாகு மதற்குறுப்பு
வாய்மையின் ஆராயின் நான்கு” (27)
மரக்கால்
மரக்காலாடல் துர்க்கை தேவியால் ஆடப்பட்டதாகும். கோபமுடைய அவுணர்கள் வஞ்சம் கொண்டு கொடுந்தொழில்கள் பல செய்து வந்தனர். இவர்களை மாயோன் ஆகிய துர்க்கை அழித்து ஆடிய ஆட்டமாகும். அரக்கர்கள் பாம்பும் தேளுமாக வடிவம் கொண்டு மக்களைக் கடித்துத் துன்புறுத்தினர். நஞ்சுடன் திரியும் இவர்களை அழிக்கத் துர்க்கைதேவி மரத்தாலான கால்களைக் கட்டிக்கொண்டு அக்கால்களால் பாம்பு, தேள்வடிவ அரக்கர்களை மிதித்து அழித்து ஆடிய ஆடலாகும். மாதவி தன்னைக் கொற்றவைப் போல புனைந்து கொண்டு மரக்காலால் இவ்வாட்டத்தை ஆடியுள்ளாள். தற்காலத்தில் சிற்றூர்த் திருவிழாக்களில் பொய்க்கால் குதி;ரை ஆட்டமாகத் திகழ்ந்து வருகிறது.
“காய்சின அவுணர் கடுந்தொழில் பொறா அள்
மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும்” (28)
இளங்கோவடிகள் வேனிற் காதையிலும்,
“அசுரர் வாட அமரர்க்காடிய
குமரிக் கோலத்துக் கூத்து” (29)
என்பார். இதற்கு உறுப்புகள் நான்கு,
“மாயவள் ஆடல் மரக்கால் அதற்குறுப்பு
நாமவகை யிற் சொல்லுங்கால் நான்கு” (30)
இப்பெண்மைக் கோலக் கூத்தினைக் கல்லாடனாரும்,
“மரக்காலாடி அரக்கர்க் கொன்ற
கவைத்தலை மணிவேல் பிறைத்தலைக் கன்னி
வடபால் பரிந்த பலிமணக் கோட்டம்” (31)
என்றார்.
பாவையாடல்
பாவையாடல் திருமகளால் ஆடப்பட்டதாகும். தேவர் குலத்தை அழிக்க அரக்கர்கள் படையுடன் வந்த பொழுது அவர்களுக்கு முன் திருமகள் மக்களை மயக்கும் கொல்லிப்பாவை வடிவுடன் தோன்றினாள். இவள் அரக்கர் படையை மயக்கி அவர்களை வலிமையிழக்கச் செய்த பொழுது ஆடிய ஆடலாகும். மாதவி கொல்லிப் பாவை போல் அலங்கரித்துக் கொண்டு இக்கூத்தை ஆடியிருக்கிறாள்.
“செருவெங் கோலம் அவுணர் நீங்கத்
திருவின் செய்யோள் ஆடிய பாவையும்” (32)
கடாத்தலையன் என்னும் மகிடாசுரன் என்றும் பத்மாசுரன் என்றும் இழிவுபடுத்தி உருவமும் பெயரும் சூட்டுவிக்கப்பட்ட ஒரு திராவிட மல்லனையும் அவன் கூட்டத்தையும் அழிக்கத் திருமாலே மதன மோகினி வேடக் கூத்தாடியது கொல்லிப் பாவை.
“பாவை திருமகள் ஆடிற்றதற் குறுப்பு
ஓவாமல் ஒன்றுடனே ஒன்று” (33)
என்பர்.
இக்கூத்தினுடன் தொடர்புபடுத்தி, ஐயப்பன் பிறப்பைச் சொல்வாரும் உளர்.
1. சிவன் - பாண்டரங்கம், கொடுகொட்டி (எண்ணிக்கை - 2)
2. திருமால் - அல்லியம், மல், குடம், பேடி, பாவை (எண்ணிக்கை - 5)
3. முருகன் - குடை, துடி (எண்ணிக்கை - 2)
4. துர்க்கை - மரக்கால் (எண்ணிக்கை -1)
5. இந்திராணி - கடையம் (எண்ணிக்கை -1)
இப்பதினொரு ஆடலையும் மாதவி பதினோரு வகைக்கோலம் பூண்டு ஆடினாள். இதற்குப் பதினொரு வகைப் பாடல்கள் பாடப்பட்டன. பலவகையான கொட்டுக்கள் முழங்கின. விதிமாண் கொள்கையை விளங்க வைப்பதற்காகவே, சமணத்துறவி இளங்கோவடிகள் இப்பதினோராடலையும் விளக்கினார் என்பர்.
அடிக்குறிப்புகள்
1. ந.மு. வேங்கடசாமிநாட்டார், சிலம்பு, அரங்கேற்றுக்காதை. ப.70.
2. புரட்சிதாசன், சிலப்பதிகாரக்கூத்து, ப.94.
3. மேலது.
4. மேலது.
5. மேலது.
6. செ. கற்பகம், நாட்டிய நாடகங்களில் பாடலும் ஆடலும், ப.25.
7. புரட்சிதாசன், சிலப்பதிகாரக்கூத்து. ப.25.
8. மேலது.
9. செ. கற்பகம், நாட்டிய நாடகங்களில் பாடலும் ஆடலும், ப.25.
10. எம். நாராயண வேலுப்பிள்ளை, கல்லாடம், நூற்.63.
11. செ. கற்பகம், நாட்டிய நாடகங்களில் பாடலும், ஆடலும், ப.26.
12. புரட்சிதாசன், சிலப்பதிகாரக்கூத்து, ப.96.
13. செ. கற்பகம், நாட்டிய நாடகங்களில் பாடலும் ஆடலும், ப.26.
14. புரட்சிதாசன், சிலப்பதிகாரக்கூத்து, ப.97.
15. எம். நாராயண வேலுப்பிள்ளை, கல்லாடம், நூற்.22.
16. புரட்சிதாசன், சிலப்பதிகாரக்கூத்து, ப.97.
17. செ. கற்பகம், நாட்டிய நாடகங்களில் பாடலும் ஆடலும், ப.25.
18. புரட்சிதாசன், சிலப்பதிகாரக்கூத்து, ப.98.
19. எம். நாராயண வேலுப்பிள்ளை, கல்லாடம், நூற்.30.
20. புரட்சிதாசன், சிலப்பதிகாரக்கூத்து, ப.98.
21. மேலது.
22. செ. கற்பகம், நாட்டிய நாடகங்களில் பாடலும் ஆடலும், ப.26.
23. புரட்சிதாசன், சிலப்பதிகாரக்கூத்து, ப.99.
24. செ. கற்பகம், நாட்டிய நாடகங்களில் பாடலும் ஆடலும், ப.27.
25. மேலது.
26. மணிமேகலை.
27. புரட்சிதாசன், சிலப்பதிகாரக்கூத்து, ப.100.
28. மேலது.
29. மேலது.
30. மேலது.
31. எம். நாராயண வேலுப்பிள்ளை, கல்லாடம், நூற்.42.
32. செ. கற்பகம், நாட்டிய நாடகங்களில் பாடலும் ஆடலும், ப.27.
33. புரட்சிதாசன், சிலப்பதிகாரக்கூத்து, ப.101.
*****
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|