பெண்ணியம் குறித்த கருத்தியல்புகள்
முனைவர் பா. தமிழரசி
பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறி இருந்தாலும் அவர்களுக்கான ஒடுக்கல்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன என்பதை மையப்படுத்தி இக்கட்டுரை அமைகின்றது.
இன்றைய காலத்தில் பெண்கள் பல்வேறு அலுவலகப் பணிகளிலோ, பொறுப்புகளிலோ முன்னேறி வர வேண்டுமென்றால் சமூக ஒடுக்கல்களைத் தாண்டி வர வேண்டும். சமூகவியல் நிலைப்பாடுகளுள் ஒன்றான சமூக ஒடுக்கல்களை பெண்கள் அறியாமலே ஏற்றுக் கொண்டுள்ளனர்.
பெண்மொழி
பெண்மொழியை உளவியல் அடிப்படையில் இரு பிரிவாகப் பிரிக்கலாம்.
1) தனி மனித நனவிலி
2) கூட்டு நனவிலி
கூட்டு நனவிலியில் பாரம்பரியக் கூறுகள் நிறைந்து கிடக்கும் பெண்களுக்கான கட்டுப்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. கல்வி கற்றாலும் கட்டுப்பாடுகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
பெண்மொழி என்பது இருப்பதை உடைக்காமல் மரபை காக்க வேண்டும்.
“தன்னுறு வேட்கை கிழவனுக்குரித்தே கிழவிக்கில்லை”
பாலியல் வேட்கையை வெளிப்படுத்தும் உரிமை ஆண்களுக்கு மட்டுமே உரியது. தன்னுடைய பாலியல் வேட்கையை வெளிப்படுத்தக் கூடிய உரிமை பெண்களுக்குக் கிடையாது. ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழியில், தான் எப்படி திருமாலை அடைய வேண்டும், அடைந்தால் எப்படி வாழ வேண்டும் என்பதை வெளிப்படையாக கூறுகிறாள். இது இலக்கியங்களில் ஒரு மடைமாற்றமாக உள்ளது. ஆனால், இக்கருத்தை அனைவராலும் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
பெண்மொழி குறித்து பெண்ணியவாதிகள்
பெண்மொழி என்பது நனவிலி மனத்தில் தோன்றுவதை மறைக்காமல் வெளிப்படுத்த வேண்டும். இருப்பதை உடைக்காமல் புதிய சொல்லாடல்களை உருவாக்க வேண்டும்.
பெண்ணியவாதிகளான சல்மா, குட்டி ரேவதி, சக்தி ஜோதி, சுகிர்தராணி, வெண்ணிலா போன்றோர்கள் பெண்மொழி குறித்து பேசியுள்ளனர். பெண்ணின் மொழி வீரியமான ஒன்று.
“நானும் என் மொழியும் சற்று கடுமையாகவே வெளிப்படக்கூடும்.”
என்று சல்மா கூறுகிறார். பெண்ணின் உணர்வுகளைப் பெண்ணே உணர்ந்து எழுத முடியும். ஆண் கண்களால் கண்டு எழுவதை விட உணர்ந்து எழுதும் பெண்ணின் எழுத்துக்கு வலி அதிகம். எடுத்துக்காட்டாகப் பிரசவ வலி, மாதவிடாய் வலிகளைப் பெண்களால் தான் எழுத முடியும்.
திருமணம்
பெண்ணுக்குத் திருமணம் என்ற நிகழ்வு மூலமும் சமூக ஒடுக்கல்கள் நிகழ்கிறது. நம் சமூகத்தில் குடும்பம் என்ற கட்டமைப்பு மிகச்சிறந்த ஒன்றாகும். அது வெற்றி பெற மனப்பக்குவம் மிகத் தேவையான ஒன்றாகும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ‘நான்’ என்ற அகந்தை இல்லாமல் வாழ வேண்டும். இன்றைய ஊடகங்கள் அனைத்தும் விரைவில் முறிந்து போகும் திருமணங்கள் பற்றியும், விவாகரத்து பற்றியும் அதிகமாகச் சித்தரித்துக் காட்டுகின்றது.
ஒரு பெண் கல்வி கற்றால் அக்குடும்பம் முழுமையுமே பலன் அடையும் என்கிறார் பாரதிதாசன்.
“கல்வி கற்ற பெண் களர்நிலம் போன்றவள்; அங்கே
புல் விளையலாம்; நல்ல புதல்வர்கள் விளைவதில்லை.”
கல்வி கற்ற பெண்ணால் குடும்பம் சிறந்து விளங்கவதை குடும்ப விளக்கு மூலமும், கல்வியில்லாத பெண்ணால் குடும்பம் எவ்வாறு சீரழிந்து போகும் என்பதை இருண்ட வீட்டின் மூலமும் அழகாக எடுத்துக்காட்டியுள்ளார்.
வன்முறை
நாகரீகம் அடைந்த இன்றைய நிலையிலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து கொண்டு தான் உள்ளன. தந்தை வழிச் சமுதாயத்தில் பெண்ணை ஒடுக்க ஆண் கையாண்ட ஒரே கருவி அவளை வன்முறை செய்தல் என எண்ணினான். பெண் வன்முறையை இரண்டாகப் பகுக்கலாம்.
1. மனத்தால் வன்முறை செய்தல்
2. உடலால் வன்முறை செய்தல்
பெண்களுக்கு எதிரான வன்முறை குடும்பம், சமூகம், சமயம், மதம் என அனைத்திலும் நிகழ்கின்றது. ஆணாதிக்கச் சமுதாயம் வன்முறை நிகழ்த்தி அதை நியாயப்படுத்தவும் செய்கிறது. அலுவலகம் செல்லும் பெண்கள் மனதளவில் அதிகம் வன்முறைக்கு ஆட்படுத்தப்படுகின்றனர். உடலால் ஆன வன்முறை அடித்தல், உதைத்தல் போன்றவையாகும். இளம் பெண்ணின் மனதைச் சீரழிக்கும் வகையிலே பெரும்பாலான நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. எடுத்துக்காட்டாக; வரதட்சணை குறித்து பெண்களை மையமிட்டே பெரும்பாலான தொடர்கள் வெளிவருகின்றன.
வைரமுத்து ‘இந்த பூக்கள் விற்பனைக்கல்ல’ என்ற கவிதைத் தொகுப்பில் வரதட்சணை குறித்து பேசியுள்ளார். வரதட்சணை என்ற வில்லை ஒடிப்பதற்கு இன்றைய இராமர்களுக்கு இரத்தமில்லை என்று ஆண் வர்க்கத்தைச் சாடுகின்றார். மாறாக, பெண்களை ஒருங்கே நின்று எதிர்த்துப் போராடுமாறு கூறுகின்றார்.
“எங்கே சீதைகளே
கொஞ்சம் சேருங்களேன்!”
என்ற வரிகளின் மூலம் வெளிப்படுத்தினார். மேலும் வரதட்சணைக் கொடுமை குறித்து ஒரு பெண்ணின் குரலாக ‘அரளிப்பூ அழுகின்றது’ என்ற தலைப்பில் பாடியுள்ளார்.
“பூக்களிலே
நானும் ஒரு பூவாய் பிறப்பெடுத்தேன்!
பொன் விரல்கள் தீண்டவில்லை
பூ மாலை ஆகவில்லை”
வரதட்சணைக் கொடுமையால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். வரதட்சணை என்ற வேரை களைய வேண்டுமானால் ஆணும் பெண்ணும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
பெண் கல்வி
இருபத்தொன்றாம் நூற்றாண்டில் பெண்கல்வியின் விழுக்காடு உயர்ந்து இருக்கிறது. எனினும் மேற்படிப்பு படித்த பின்பு கூட முழு சதவிகிதம் பெறச் சமூகம் விடுவதில்லை. திருமணம், பாதுகாப்பு என்ற நிலைகளால் பெண்கல்வி பாதியிலே நின்றுவிடுகிறது. பாலியல் வன்முறை என்பது கட்டாய வன்புணர்ச்சிக்கு ஆட்படுத்துவது, ஆபாசப் படங்களைக் காட்டுவது, கண்ணியக் குறைவாக நடத்தல் போன்றவையாகும்.
உளவியலின் தந்தையாகிய பிராய்டு கூறும் இட் என்ற உணர்வு அனைவரிடமும் உள்ளது. ஆனால் அதை யாரிடம் வெளிக்காட்ட வேண்டுமோ அவர்களிடம் தான் வெளிக்காட்ட வேண்டும். ஆனால் பத்து வயது குழந்தையிடம் தனது இன்ப உணர்வை வெளிக்காட்டும் கீழ்த்தரமான எண்ணமுடைய ஆண்களும் இருக்கின்றனர்.
இல்லற வாழ்க்கையில் பெண்கள் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். பாரம்பரியத்தைப் பின்பற்ற வேண்டும். ‘பாரதி கண்ட புதுமைப் பெண்’ உடையில் இல்லை. புதுமையான எண்ணங்களில் இருக்கிறது. சூழ்நிலையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற நுண் அறிவு பெண்களுக்கு இருக்க வேண்டும். காலத்தைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். ஆங்கில மொழி அறிவோடு துணிச்சலாக வாழ்வில் முன்னேற வேண்டும்.
பெண்ணைப் பற்றி சுகன்யா ஜெகந்நாதன் எழுதிய கவிதை இது;
“பெண்ணே! நீ ஒரு மகாசக்தி
கருவில் உருவாகி கள்ளிப்பாலில் கரைவதற்கு
தலையெழுத்தென்னடி உனக்கு
அன்னையின் தாலாட்டைக் கேட்டு - பின்
தாலாட்டுப் பாடும் நிலவல்லவோ நீ
அன்பான மகளாய் பிரியமான சகோதரியாய்
காதல் மனைவியாய் பாசமுள்ள தாயாய்
மகளாகிய மருமகளாய் பேரக்குழந்தைகளை
கொஞ்சி மகிழும் பாட்டியாய்
எத்தனை ஜென்மமடி நீ எடுப்பாய்
வீட்டை மட்டுமல்ல நாட்டையும் ஆளுகின்றாய்
ஆண்களுக்கு நிகராகக் கலக்குகிறாய்
தலையெழுத்தென்னடி உனக்கு
கள்ளிப்பாலில் கரைவதற்கு”
மேலும், ‘நீ உன்னை அறிந்தால்’ வாழ்வில் வெற்றிப் பெறலாம்.
ஆகவே பெண்கள் தனக்கான இயல்பைத் தொலைக்காமல் இருப்பதிலும், அதனை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்வதிலும் அவள் கற்ற கல்வி எவ்வகையில் உதவுகிறது என்பதனை பெண்ணானவள் மாற்றி யோசிக்கப் பழக வேண்டும். அத்தகைய சிந்தனை வளர்த்துக் கொண்டால் மட்டுமே பெண் தன் தனித்துவத்தில் காலூன்றி வெற்றியைப் பெற முடியும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.