தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?
கணேஷ் அரவிந்த்
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் 1972 முதல் தமிழில் வெளியாகும் நூல்களில் இருந்து சிறந்த நூல்களை தேர்வு செய்து பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் திட்டத்தினைச் செயல்படுத்தி வருகின்றது.
இதன்படி கீழ்காணும் வகைப்பாடுகளில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த நூலை எழுதிய நூலாசிரியர் மற்றும் நூலைப் பதிப்பித்த பதிப்பகத்திற்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையும் வழங்கப்படுகின்றன.
வகைப்பாடுகள்
கீழ்காணும் வகைப்பாடுகளில் பரிசுகள் அளிக்கப்படுகின்றன.
1. மரபுக்கவிதை
2. புதுக்கவிதை
3. புதினம்
4. சிறுகதை
5. நாடகம் (உரைநடை, கவிதை)
6. சிறுவர் இலக்கியம்
7. திறனாய்வு
8. மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம்
9. பிறமொழிகளிலிருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள்
10. நுண்கலைகள் (இசை, ஓவியம், நடனம், சிற்பம்)
11. அகராதி, கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித்தமிழ்
12. பயண இலக்கியம்
13. வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு
14. நாட்டு வரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக அகழாய்வுகளும்
15. கணிதவியல், வானியல், இயற்பியல், வேதியியல்
16. பொறியியல், தொழில்நுட்பவியல்
17. மானிடவியல், சமூகவியல், புவியியல், நிலவியல்
18. சட்டவியல், அரசியல்
19. பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல்
20. மருந்தியல், உடலியல், நலவியல்
21. தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்)
22. சமயம், ஆன்மிகம், அளவையியல்
23. கல்வியியல், உளவியல்
24. வேளாண்மையியல், கால்நடையியல்
25. சுற்றுப்புறவியல்
26. கணினியியல்
27. நாட்டுப்புறவியல்
28. வெளிநாட்டுத் தமிழ் இலக்கியம்
29. இதழியல், தகவல் தொடர்பு
30. விளையாட்டு
31. பிற சிறப்பு வெளியீடுகள்
32. தமிழர் வாழ்வியல்
33. மகளிர் இலக்கியம்
விதிமுறைகள்
1. பரிசுப் போட்டியில் பங்கு பெறுவோர் விண்ணப்பப் படிவத்தினை விடுபாடின்றி முழுமையாக நிறைவு செய்து அனுப்ப வேண்டும். முழுமையாக நிறைவு செய்யப்படாத விண்ணப்பம் போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
2. ஒவ்வொரு நூலுக்கும் தனித்தனியாக விண்ணப்பம் அனுப்புதல் வேண்டும்.
3. போட்டிக்கு அனுப்பப் பெறும் நூல் ஒவ்வொன்றிலும் 10 படிகள் அனுப்புதல் வேண்டும்.
4. மேற்காணும் வகைப்பாடுகளில் நூல் போட்டிக்கு ஏற்படும்.
5. பரிசுப் போட்டிக்குக் கருதப்படும் நூல்களின் முதல் பதிப்பானது, போட்டிக்குரிய ஆண்டில் ஜனவரி முதல் நாளிலிருந்து டிசம்பர் 31க்குள் அச்சிடப் பெற்று வெளியிடப் பெற்றிருக்க வேண்டும்.
6. நூலாசிரியர்/பதிப்பகத்தார் ஒப்பம் அல்லது இசைவுக் கடிதத்துடன் அனுப்பப்பெறும் விண்ணப்பங்கள் போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
7. நூலாசிரியர் ஒப்பமோ அல்லது இசைவோ இன்றி வரும் நூல்கள் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் பதிப்பகத்தாருக்கு மட்டுமே பரிசளிக்கப்படும்.நூலாசிரியருக்கு பரிசு அளிக்கப்படாது. இதுபோல் பதிப்பகத்தார் ஒப்பமோ அல்லது இசைவோ இன்றி வரும் நூல்கள் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால் பதிப்பகத்திற்கான பரிசுகள் வழங்கப்படாது.
8. இப்போட்டிக்காகப் பெறப்படும் நூல்களை அரசாங்கத்தால் அமர்த்தப் பெறும் நிலைக்குழு ஆய்ந்து பரிசுக்குரிய நூல்களைத் தேர்ந்தெடுக்கும்.
9. குறிப்பிட்டதொரு நூல் எந்த வகைப்பாட்டைச் சார்ந்தது என்று படிவத்தில் குறிப்பிடப்படாத நேர்வில் விண்ணப்பம் ஏற்கப்பட மாட்டாது.
10. வாழும் நூல்களின் ஆசிரியர்களுக்கும், நூல் வெளியிடப் பெற்ற போது வாழ்ந்து கொண்டிருந்த நூல்களின் ஆசிரியர்களின் நூல்கள் மட்டுமே இத்திட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்படும். நேர்வுக்கேற்ப நூலாசிரியருக்கோ, அவர்களுடைய மரபுரிமையாளருக்கோ பரிசுகள் வழங்கப் பெறும்.
11. அரசால் ஏற்கப்பட்டுள்ள சீரமைப்பு செய்யப்பெற்ற எழுத்துக்களில் அச்சிடப்பட்ட நூல்கள் மட்டுமே போட்டிக்கு ஏற்கப்படும்.
12. நூல்கள் முன்னுரை போன்றவை உட்பட இரட்டை கிரவுண் அளவில் 150 பக்கங்களுக்குக் குறையாமலும், டெம்மி அளவில் 130 பக்கங்களுக்குக் குறையாமலும் இருக்க வேண்டும். மரபுக்கவிதை, புதுக்கவிதை, சிறுவர் இலக்கியம் போன்ற வகைப்பாடுகளுக்கு பக்க வரையறை இல்லை. இந்நூல்கள் எதுவும் கிரவுண் அளவுக்குக் குறைவின்றி இருக்க வேண்டும்.
13. ஒரு வகைப்பாட்டில் ஒரு நூல் மட்டும் வரப் பெற்றால் அந்த வகைப்பாட்டில் பரிசு அளிக்கப்படாது.
14. ஒரு வகைப்பாட்டில் இருமுறை பரிசு பெற்ற நூலாசிரியர் அதே வகைப்பாட்டில் மூன்றாவது முறையாகப் பரிசு பெற முடியாது.
15. மத்திய/மாநில அரசின் நிதியுதவி அல்லது பரிசு பெற்ற எந்த நூலும் இந்தப் பரிசுப் போட்டிக்கு ஏற்கப்படாது.
16. பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்ட நூல், ஒன்றுக்கு மேற்பட்டவர்களாக இருப்பின் பரிசுத் தொகை பகிர்ந்தளிக்கப்படும்.
17. வெளிநாட்டு நூலாசிரியரால் எழுதப் பெற்ற நூல் பரிசுக்குரியதாகத் தேர்வு செய்யப்படும் நிலையில் நூலாசிரியருக்கு பாராட்டுச் சான்றிதழ் மட்டும் அளிக்கப் பெறும்.
18. பாடநூலில் இடம் பெற்றுள்ள நூல்கள் போட்டிக்கு ஏற்கப்படாது.
19. போட்டிக்காக வரப்பெற்ற நூல்கள் எக்காரணம் கொண்டும் திருப்பி அனுப்ப இயலாது.
20. பரிசுக்குரிய நூல்கள் அரசின் ஏற்புக்குப் பின்னர் அறிவிக்கப்படும். தமிழ்ப்புத்தாண்டு நிகழ்வில் பரிசுகள் அளிக்கப்படும்.
21. அறக்கட்டளை சொற்பொழிவுகள், பிற சொற்பொழிவுகள், பல்கலைக்கழகப் பட்டங்களுக்கு அளிக்கப் பெற்ற ஆய்வேடுகள், நாளிதழ்களில் தொடராக வெளியிடப்பட்டவை, வானொலி, தொலைக்காட்சியில் தொடராக இடம் பெற்றவை (கவிதை, உரை நீங்கலாக) நூலாக ஆக்கப்பட்டிருந்தால் அவை போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படாது.
22. பரிசுக்குரியதாகத் தேர்வு செய்யப் பெற்ற இந்தியாவிலுள்ள நூலாசிரியர்களுக்கும், பதிப்பகத்தினருக்கும் அவர்கள் பரிசுத் தொகையினையும், பாராட்டுச் சான்றிதழையும் பெறுவதற்காக சென்னை வந்து செல்வதற்கான இரண்டாம் வகுப்பு சாதாரண தொடருந்துக் கட்டணம் அளிக்கப்படும். வெளிநாட்டினருக்கு பயணப்படி எதுவும் வழங்கப்படாது.
23. இத்திட்டம் தொடர்பான விதிகளைத் தேவைக்கேற்ப திருத்தம் செய்து கொள்ளவோ அல்லது மாற்றம் செய்யவோ அல்லது நீக்கவோ அரசுக்கு அதிகாரம் உண்டு.
24. இத்திட்டம் செயல்படுத்துவதில் எழக்கூடிய இடர்ப்பாடுகள் குறித்து அரசால் மேற்கொள்ளப்படும் முடிவே இறுதியானதாகும்.
25. இப்போட்டியில் கலந்து கொள்ள ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 30 ஆம் தேதிக்குள் நூல் ஒன்றுக்கு ரூபாய் நூறு பதிவுக் கட்டணமாகச் செலுத்தி குறிப்பிட்ட விண்ணப்பப்படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
பரிசுத் தொகை
பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த நூல்களின் நூலாசிரியர்களுக்கு 1972-ல் இந்திய ரூபாய் ரூ 2000/- பரிசுத் தொகை அளிக்கப்பட்டது. பின்னர் 1991-ல் நூலாசிரியர்களுக்கான தொகை ரூ 5,000/- ஆகவும், 1998-ல் ரூ 10, 000/- ஆகவும், 2008 ஆம் ஆண்டில் நூலாசிரியருக்கு ரூ 20,000 மற்றும் சான்றிதழ், நூலை வெளியிட்ட பதிப்பகத்திற்கு ரூ5,000 பரிசுத் தொகையாக வழங்கப்பட்டு வந்தது. பின்பு, 2011 ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் நடைபெற்ற 2009 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்கள் பரிசளிப்பு விழாவிலிருந்து இத்தொகை நூலாசிரியருக்கு ரூ 30,000/- என்றும், பதிப்பகத்தினருக்கு ரூ 10, 000/- என்றும் உயர்த்தப்பட்டு வழங்கப்படுகிறது.
பரிசளிப்பு விழா
மேற்காணும் ஒவ்வொரு வகைப்பாட்டிலும் பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த நூல்களின் நூலாசிரியர்கள் மற்றும் பதிப்பகத்தினருக்கு பரிசுகள் வழங்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம், திருவள்ளுவர் தினத்தன்று சென்னையில் நடத்தப் பெற்றது. இவ்விழா சில ஆண்டுகள் நடைபெறாமல் இருந்த நிலையில் அடுத்த ஆண்டுகளில் சேர்த்து நடத்தப் பெற்றிருக்கின்றன. 2012 ஆம் ஆண்டு முதல் இந்தப் பரிசளிப்பு விழா தமிழ்ப் புத்தாண்டு விழாவில் (சித்திரை மாதம் ஒன்றாம் தேதியில்) நடத்தப் பெற்றது.
நிரப்பப்பட்ட விண்ணப்பம் நூலின் பத்து பிரதிகளுடன் அனுப்ப வேண்டிய முகவரி:
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சி இயக்ககம்,
தமிழ் வளர்ச்சித் துறை,
தமிழ் வளர்ச்சி வளாகம்,
முதல் தளம்,
ஆல்சு சாலை,
சென்னை - 600 008.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.