அகநானூற்றில் காவல் மரங்கள்
மு. சாந்தி
முன்னுரை
இயற்கையைக் கண்டு அஞ்சிய மனிதன் ஐம்பூதங்களான நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகியவற்றையும், பின் இயற்கையோடு இணைந்த மரங்களையும் வழிபடத் தொடங்கினான். தொன்று தொட்டு வந்த இந்த வழக்கமானது மன்னர்கள் காலத்தில் குலமரமாகவும், காவல்மரமாகவும் தற்போது தல விருட்சமாகவும் உருக்கொண்டுள்ளன. சங்க இலக்கியமான அகநானூறு மக்களின் அகவாழ்வை இயற்கையோடு இணைத்து காட்சிப்படுத்தியுள்ளது. பாலை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய ஐவகைத் திணைகளின் அடிப்படையில் பாடப்பெற்றுள்ள இந்நூலில் பல்வேறு மரங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இம்மரங்களில் வாகை, புன்னை, கடம்பு மரங்கள் பண்டைய தமிழ் மன்னர்களின் காவல் மரமாக அகநானூற்றுப் பாடல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பண்டைய தமிழ் மன்னர்களின் காவல் மரமாகக் கருதப்பட்ட வாகை, புன்னை, கடம்பு முதலான மரங்களில் நன்னன் என்பவனின் காவல் மரமான வாகை மரமானது வாகைப் பெருந்துறை என்ற போர்க்களத்தில் காணப்படுகிறது. பொதுவாக காவல் மரங்கள் ஊர் புறத்தே அமைப்பது பண்டைய மக்களின் வழக்கம் ஆனால் நன்னனின் காவல் மரமான வாகை போர்க்களத்தில் இருந்ததாகப் பாடப்பட்டுள்ளது. இதற்கான காரணங்களை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.
காவல் மரம் - விளக்கம்
தொல்காப்பிய சொல்லதிகாரம் நூற்பா. எண் 383-ல் கடி என்னும் சொல்லுக்குக் காப்பு என்ற பொருளை வலியுறுத்துகிறது. தொல்காப்பியர் அகத்திணையியலில் ஒவ்வொரு திணைக்கும் உரிய கருப்பொருள்களைப் பற்றிக் குறிப்பிடும்போது மரம் பற்றிய செய்திகளையும் பதிவு செய்துள்ளார்.
“வாடா வள்ளி, வயவர் ஏத்திய
ஓடாக் கழல் - நிலை உளப்பட, ஓடா
உடல் வேந்து அடுக்கிய உன்ன நிலையும்
மாயோன் மேய மன்பெருஞ் சிறப்பின்
தாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும்” (1)
என்ற தொல்காப்பிய நூற்பாவில் உன்ன நிலை உன்னம் என்பதற்குச் சிறிய இலைகளை உடைய மரம் என்று பொருள். இதனிடம் போருக்குச் செல்லும் போது வீரர்கள் அனைவரும் குறி கேட்பர். போரில் வெற்றி கிட்டுமாயின் மரம் தளிர்க்கும். தோல்வி வருமாயின் தளிர்கள் வாடிநிற்கும் என்று தொல்காப்பியர் காவல் மரம் பற்றிக் குறிப்பிடுகிறார்.
தொல்காப்பியரின் கோட்பாட்டின்படி போரில் வெற்றி தோல்வியை அறியும் நிமித்தமாகக் கருதப்பட்ட மரமானது மன்னர்கள் காலத்தில் குலமரமாகவும், காவல் மரமாகவும் வடிவெடுத்தது. பண்டைய காலம் முதல் இன்று வரை மர வழிபாடானது தமிழ் மக்களிடம் காணப்படுகின்ற நம்பிக்கைகளில் ஒன்று. மரங்கள் தெய்வத்தன்மை உடையதாக கருதியமையால் மரங்களையே தெய்வமாக வணங்கினர். ஆல், அரசு, வேம்பு, பனை, வேங்கை போன்ற மரங்களை மக்கள் வழிபட்டனர். “மதத்தின் அடிப்படை உயிர்களை மதிப்பது - உயிரினங்கள், மரம், செடி வகைகளையும் தெய்வத்தன்மை உடையனவாகக் கருதப்படுகின்றன. மரங்களை வழிபட்ட நிகழ்ச்சிகளை இலக்கியங்கள் கூறுகின்றன. அரசமரம் தெய்வத்தன்மை உடையதாகக் கருதப்படுகிறது.” (2) என மர வழிபாட்டினை விளக்குகிறார் சோமலே.
முடியுடை மூவேந்தரான சேரர், சோழர், பாண்டியர்களுக்கு குலமரமாக முறையே பனை, அத்தி வேம்பு, விளங்கியதைப் போன்று ஒவ்வொரு மன்னனும் ஒரு குறிப்பிட்ட மரத்தினை காவல் மரமாகக் கொண்டனர். காவல் மரமானது மன்னனது அடையாளச் சின்னமாகக் கருதப்பட்டது. “பழங்காலத்தில் வேங்கை, புன்னை, வேம்பு இன்னும் சில மரங்களை வெற்றியைக் குறிக்கும் குறியீடாகவும், நாட்டையும் மக்களையும் காப்பாற்றும் காவல் மரமாகவும் நம்பினர். காவல் மரத்தினை வீரர்கள் இரவு பகலாக காத்து வந்தனர்” (3)
“காவல் மரபென்பது பண்டைக் காலத்துத் தமிழரசர் ஒவ்வொருவரும் தங்கள் வெற்றிக்குறியாக ஒவ்வோர் மரத்தைத் தமதூர்ப் புறத்துச் சோலைகளில் வைத்து வளர்த்து வந்தனர். படையெடுத்து வரும் பகை வேந்தர்கள் அக்கடிமரத்தையே முதற்கண் தடிய முற்படுவர். அங்ஙனம் அக்கடிமரத்தினை தடிந்து விடுவார்களானால், அம்மரத்துக்குரிய அரசனுக்குப் பெருந்தோல்வியும், பேரவமானமும் எய்தியதாகக் கருதப்படும். பகைவேந்தர் அம்மரத்தில் தம் யானைகளைக் கட்டுதலும், அதனை வெட்டிக் கொண்டுபோய்த் தங்கள் யானைகட்குக் கட்டுத்தறியாக நட்டுவைத்தலும், அம்மரத்தில் தங்களுக்கு வீரமுரசுஞ் செய்தலும் மரபு” (4) என்பார். பகைமன்னரின் காவல் மரத்தினை தடித்தல், யானையைக் கட்டுதல், வெட்டிய அம்மரத்தால் முரசு செய்தல் போன்ற செயல்களை செய்தனர். மேற்கொண்ட செயல்களால் அம்மரத்தினை அடையாளச் சின்னமாகக் கொண்ட மன்னர்களுக்கு இழிவு நேரிடும் எனக் கருதினர். காவல் மரத்தில் தெய்வம் உறையும் என்பதனை,
“துளங்கிடுங்குட்டந் தொலைய, வேலிட்டு;
அணங் குடைக் கடம்பின் முழுமுதல் தடிந்து” (5)
என்ற பதிற்றுப்பத்து பாடல் வரிகளில் அறியலாம். காவல் மரத்தில் யானையைக் கட்டி இழிவுபடுத்தும் நிகழ்வு பெரும்பாலும் சங்கப் பாடல்களில் இடம் பெற்றுள்ளன.
“வடி மணி அணைத்த பணைமருள் நோன் தாள்,
கடி மரத்தாள், களிறு அனைத்து” (6)
என்ற பதிற்றுப்பத்துப் பாடலே களிறு காவல் மரத்தில் கட்டுவதற்குச் சான்று.
மன்னர்கள் பகைமன்னர்களின் காவல் மரத்தினைத் தடித்து முரசஞ் செய்யும் மரபினைக் கொண்டிருந்தனர் என்ற செய்தியினை,
“மால்கடல் ஒட்டி, கடம்பு அறுத்து
இயற்றிய பண் அமை முரசு”
(அகம் : 347)
என்ற பாடல் வரிகளின் மூலமும்,
“கடம்பறுத்து இயற்றிய வலம்படு வியன்பணை” (7)
என்ற பதிற்றுப்பத்துப் பாடல் வரிகளின் மூலமும் அறியமுடிகிறது.
அகநானூற்றில் காவல் மரங்கள்
அகநானூற்றில் வாகை, புன்னை, கடம்பம் முதலான மரங்கள் காவல் மரங்களாக பதிவு செய்யப்பட்டுள்ளன. வாகை மரம் நன்னனது காவல் மரமாகவும், புன்னை மரம் திதியனின் காவல் மரமாகவும், கடம்ப மரம் கடம்பரின் காவல் மரமாகவும் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
“தமிழ் வேந்தர்கள் வெற்றியைக் குறிக்கும் மரமாகக் கடம்ப மரம், புன்னை மரம், கணைய மரம், கடிமரம், வேப்ப மரம், மாமரம், வாகைமரம் என ஏழு வகையான மரங்களைப் போற்றி வந்தனர் என விளக்குவார்” (8)
வாகைமரம்
அல்பீசி லெப்பக் என்ற அறிவியல் பெயரினைக் கொண்ட வாகைமரமானது நன்னனுடைய காவல் மரமாகும். நன்னனின் தலைநகர் கடம்பின் பெருவாயில் ஆகும். நன்னனது காவல் மரமாகிய வாகை மரத்தினை களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் என்னும் சேர மன்னன் வெட்டி வீழ்த்தினான் என்ற செய்தியினை,
இரும்பொன் வாகைப் பெருந்துறைச் செருவில்
பொலம்பூண் நன்னன் பொருதுகளத்து ஒழிய
வலம்படு கொற்றம் தந்த வாய்வாள்,
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் (அகம் : 199)
என்ற அகநானூற்றுப் பாடல் உணர்த்துகிறது. வெற்றியுண்டாகும் தப்பாத வாளினையுடைய களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் என்னும் சேர மன்னன் மேற்குத் திசையின்கண் உள்ள பொன்னால் அணி செய்யப்பட்ட வாகை மரத்தினையுடையப் பெருந்துறை என்னும் போர்க்களத்தில் தடித்தான் என்று கல்லாடனரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இக்கருத்தை பதிற்றுப்பத்து,
“பொன்னங் கண்ணிப் பொலந்தேர் நன்னன்
சுடர்வீ வாளகக் கடிமுதல் தடித்த” (9)
என்ற பாடல் வரிகள் நன்னனது காவல் மரமான வாகை மரத்தினை சேரமன்னன் களங்காய்க் கண்ணி நடர்முடிச் சேரல் வெட்டி வீழ்த்தினான் எனக் காட்டுகிறது.
புன்னை மரம்
கலோஃபைலம் இனோஃபைலிம் என்ற அறிவியல் பெயரினைக் கொண்ட புன்னை மரமானது சங்க இலக்கியங்களில் அதிகம் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொல்காப்பியரும் ஐந்திணைக்கு கருப்பொருள் விளக்கம் தருகையில் புன்னை மரமானது நெய்தல் நிலப்பகுதிக்கு உரிய கருப்பொருளாகக் குறிப்பிடுகிறார். ஐந்திணைக் கருப்பொருளைக் கூறவந்த இறையனாரின் அகப்பொருள் நூலும் நெய்தல் திணைக்கு மரம் ‘புன்னையும் ஞாலமும் கண்டலும்’ என்று குறிப்பிடுகிறது.
சங்க இலக்கியமான ஐங்குநுறூறு, அகநானூறு, குறுந்தொகை, கலித்தொகை, நற்றினை போன்றவற்றிலும் புன்னைமரம் பற்றிய குறிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பூம்பாவையை உயிர்ப்பித்த திருஞானசம்பந்தர் என்ற ஆய்வுக்கட்டுரையில் புன்னை மரம் பற்றிய செய்தியினை
“சங்க இலக்கியத்தில் தலைவனோடு உரையாடும் தலைவி அருகில் புன்னை மரம் இருப்பது கண்டு நாணப்பட்டாள். தலைவன் அவளை ஏன் நாணம் கொண்டாய் என்று கேட்க அம்மரமோ எனக்குச் சகோதரி முறை வேண்டும் என்றாள். குடும்பத்தில் ஒருவராக மரத்தை பாவிக்கும் வழக்கம் அன்றைக்கு இருந்துள்ளது” (10)
என்று சுதா புன்னை மரம் பற்றிய குறிப்பினைப் பதிவு செய்துள்ளார்.
இத்தகு சிறப்பு மிக்க புன்னை மரமானது திதியன் என்பவனின் காவல் மரமாகும். அதனை அன்னி என்பவன் வெட்டி வீழ்த்தினான் என்ற செய்தியை,
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்
தொல்நிலை முழுமுதல் துமியப் பண்ணி,
புன்னை குறைந்த ஞான்றை, வயிரியர் (அகம் :45)
என்ற வெள்ளி வீதியார் பாடல் வரிகளின் மூலம் அறியலாம். மேலும் கயமனார் அன்னி குறுக்கைப் பறந்தலை போர்க்களத்தில் திதியன் என்பவனோடு போரிட்டு அவனது காவல் மரமாகியப் புன்னை மரத்தினை வெட்டினான் என்ற செய்தியினை,
அன்னி குறுக்கைப் பறந்தலை, திதியன்
தொல்நிலை முழுமுதல் துமியப் பண்ணி,
நன்னர் மெல்இணர்ப் புன்னைபோல (அகம்:145)
என்ற பாடல் வரிகளில் குறிப்பிட்டுள்ளார். மேலும் நக்கீரர் இச்செய்தியினையே,
பொன் இணர் நறுமலர்ப் புன்னை வெஃகி,
திதியனொடு பொருத அன்னி போல (அகம்:126)
என்று குறிப்பிட்டுள்ளார்.
பாடல் வரியில் அன்னி குறுக்கைப் பறந்தலைப் போர்களததில் திதியனோடு போரிட்டு இறந்தான் என்ற செய்தியினைக் கொண்டு ஆய்வாளர் இணையத்தில் ஆய்வுக் கட்டுரை ஒன்றில் கீழ்வறுமாறு கூறுகிறார்.
“அன்னிக்கும் திதியனுக்கும் குறுக்கைப் பறந்தலை என்னுமிடத்தில் போர் நடந்தது. போரில் அன்னியின் காவல் மரமான புன்னையைத் திதியன் வெட்டிச் சாய்த்தார்” (11)
மேற்கண்ட ஆய்வாளரின் கருத்தானது உண்மைக்கு முரண்பட்டதாகக் காணப்படுகிறது.
கடம்ப மரம்
கடம்ப மரம் (Anthocephalus Cadamba) கடம்பகர்களுக்குச் சொந்தமானது.
“கடம்பர் மூலத்தாயகம் கொண்கானக்கரை என்பதை மட்டுமே அவர்களின் பிற்கால வரலாறு காட்டுகிறது. ஆனால் சேரர்களின் எதிரியாகிய கடம்பர்கள் கடற்கொள்ளைக்காரர்கள். அவர்களின் கொள்ளைத் தொழிலுக்கான மூலதனம் கடற்கரையில் இல்லை என்பதால் கடலகத்தே ஒரு தீவிலே இருந்தது. அவர்கள் மரபுச் சின்னமாகிய தாய் கடம்பமரம் இருந்த இடமும் இதுவே. இத்தீவைக் கிரேக்கர்கள் ‘லெயூகெ’ அதாவது வெள்ளைத்தீவு என்று அழைத்தனர். அதுவே மங்களுரை அடுத்துள்ள ‘தூவக்கல்’ தீவு என்று வரலாற்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர்” (12)
பண்டைய தமிழ் மன்னர்கள் காவல் மரத்தினை அழித்து அது கொண்டு முரசஞ் செய்வதை மரபாகக் கொண்டிருந்தனர்.
“சங்கத்தமிழ் மன்னர்கள் கொடை முரசு, படைமுரசு, மணமுரசு என மும்முரசுகளைக் கொண்டிருந்தனர். பகை மன்னரின் காவல் மரத்தினை வெட்டி அதன் மூலம் செய்த படைமுரசே போர் முரசாகும்” (13)
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்பவன் கடற்பகைவரை வென்று அவர்தம் காவல் மரமாகிய கடம்பினை வெட்டி அது கொண்டு செய்த முரசினைக் கொண்டவன் என்பதனை மாமூலனார்,
முந்நீர் ஒட்டிக் கடம்பு அறுத்து, இமயத்து
முன்னோர் மருள வணங்குவில் பொறித்து (அகம்:127)
என்ற பாடல் வரிகளிலும், மேலும்,
மால்கடல் ஓட்டி, கடம்பு அறுத்து, இயற்றிய
பண் அமை முரசு (அகம்:347)
என்ற பாடல் வரிகளிலும் குறிப்பிட்டுள்ளார். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் என்னும் அரசன், அவன் மேல்கடலில் பகைவரைப் புறங்காட்டி ஓடச் செய்து அவரது கடம்ப மரத்தை வெட்டி அதுகொண்டு முரசமைத்தான் என்ற செய்தியை,
“பலர்மொழிந்து ஓம்பிய திரள்பூங் கடம்பின்,
கடியுடை முழுமுதல் துமியவேஎய்,
வென்றெறி முழங்குபணை செய்த” (14)
என்ற பதிற்றுபத்துப் பாடல் வரிகள் எடுத்தியம்புகிறது.
சிக்கலுக்கான தீர்வு
மக்களிடையே காணப்படும் பல்வேறு நம்பிக்கைகளுள் மரம் பற்றிய நம்பிக்கையும் ஒன்றாகும். வேம்பு, அரசு, ஆலம், வேங்கை போன்ற மரங்கள் புனிதத் தன்மையுடையவையாகக் கருதப்பட்டன. எண்ணற்ற மருத்துப் பயனும், வணிகப் பயனும் கொண்ட வாகை மரமானது மக்களால் புனிதத் தன்மையற்றதாகக் கருதப்பட்டது. காரணம் வழிவழியாக மக்களிடையே காணப்படக்கூடிய வாகை மரம் பற்றிய தவறான நம்பிக்கையே ஆகும்.
‘வாழ்ற வீட்டிற்கு வாகை ஆகாது’
என்ற பழமொழி இன்றளவும் மக்களிடையே காணப்படுகிறது. மேற்கூறப்பட்ட பழமொழிக்கேற்ப இன்றளவும் வாகை மரத்தினை வீட்டிற்கு அருகிலோ, ஊரின் நடுவிலோ நடுதல் கிடையாது. மேலும் இன்று வரை வீட்டு உபயோகப் பொருட்களைத் தயாரிக்க வாகை மரத்தினை பயன்படுத்துவது கிடையாது. பண்டைய காலம் முதல் இன்று வரை மக்களது பார்வையில் வாகை மரமானது தெய்வத்தன்மை அற்றதாகக் காணப்படுவதால் எந்த ஒரு கோவிலும் தலவிருட்சமாக இருந்ததற்கான சான்றாதாரங்களும் இல்லை. மேற்கூறப்பட்ட காரணங்களாலே நன்னனது காவல் மரமானது அவனது புறஞ்சோலையிலோ, ஊரின் நடுவிலோ காணப்படாது, வாகை பறந்தலை என்னும் போர்களத்தில் காணப்பட்டதற்கான காரணங்கள் ஆகும்.
தொகுப்புரை
முடியுடை மூவேந்தரான சேரர், சோழ, பாண்டியருக்குக் குலமரமாக வேம்பு, ஆத்தி, பனை விளங்கியதைப் போன்று ஒவ்வொரு மன்னனும் ஒரு குறிப்பிட்ட மரத்தினைக் காவல் மரமாகக் கருதினர். பண்டைத் தமிழ் மன்னர்கள் பகை மன்னரின் காவல் மரத்தினைத் தடித்தல், யானையைக் கட்டுதல், வெட்டிய காவல் மரத்தினைக் கொண்டு முரசு செய்தல் போன்றவைகளைப் போர் மரபாகக் கருதினர். பண்டைத் தமிழரின் போர் மரபுப்படி நன்னனது காவல் மரமானது வாகை மரத்தினை களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் வெட்டி வீழ்த்தினான். திதியனின் காவல் மரமான புன்னை மரத்தினை அன்னி என்பவன் வெட்டினான். கடம்பருக்குச் சொந்தமான கடம்பமரத்தினை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் வெட்டி, அதுகொண்டு முரசமைத்தான். காவல் மரமானது வெற்றியின் அடையாளச் சின்னமாகக் கருதியதால் தமிழ் மன்னர்கள் தமதூர்ப் புறஞ்சோலையில் வைத்து வளர்த்து வந்தனர். ஆனால், நன்னன் என்ற மன்னனின் காவல்மரமான வாகை மரம் பெருந்துறை என்ற போர்களத்தில் காணப்படுகிறது. பண்டை காலம் முதல் இன்றுவரை வாகை மரமானது புனிதத்தன்மையற்றதாகக் கருதப்பட்டதால் நன்னனது காவல் மரமான வாகைமரம் புறஞ்சோலையிலோ, ஊரின் நடுவிலோ காணப்படாது, வாகைப்பறந்தலை என்னும் போர்களத்தில் காணப்படுகிறது.
சான்றெண் விளக்கம்
1. தொல்.பொருள். அகம். நூ: 1009
2. சோமலே, தமிழ்நாட்டு மக்களின் மரபும் பண்பாடும், ப.54
3. நாசா கீற்று, இணைய இதழ்
4. நீலகண்டபிள்ளை.தா, காவல்மரம்
5. ஆலிஸ்.அ, பதிற்றுப்பத்து மூலமும் உரையும், செய்(88, 5-6)
6. மேலது (பதிற் - 33, 2-4)
7. மேலது (பதிற் - 17:5)
8. அருணா.அ, சங்க இலக்கியத்தில் காவல் மரங்கள், ப.54
9. ஆலிஸ்.அ, பதிற்றுப்பத்து மூலமும் உரையும், செய் (40: 14-16)
10. சுதா, பூம்பாவையே உயிர்பித்த திருஞான சம்பந்தர், மே 26, 2011
11. தமிழ் விக்கிப்பீடியா, திதியன் - அன்னி திதியன், குறுக்கைப் பறந்தலைப் போர்
12. அப்பாத்துரை.கா, தென்னாட்டின் போர்களங்கள், ப. 356
13. அருணா.அ, சங்க இலக்கியத்தில் காவல் மரங்கள், ப.55
14. ஆலிஸ்.அ, பதிற்றுப்பத்து மூலமும் உரையும், செய்(4:12-14)
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.