திணைக்கோட்பாட்டு அடிப்படையில் உமறுப்புலவரின் சீறாப்புராணம் (நாட்டுப்படலம்)
முனைவர்.ஆ. சாஜிதா பேகம்
இசுலாமியப் புலவர்கள் பைந்தமிழுக்கு அணி சேர்க்கும் பல இலக்கியப் படைப்புகளை யாத்துள்ளனர். அவர்களுள், உமறுப்புலவரால் கி.பி.17-ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட சீறாப்புராணம் பிற்கால இசுலாமியக் காப்பியங்களின் வரிசையில் முதன்மையைப் பெறுகின்றது. எட்டயபுரம் அரசவைக் கவிஞரான கடிகைமுத்துப் புலவரிடம் தமிழ் பயின்ற உமறுப்புலவர் வள்ளல் சீதக்காதியின் வேண்டுகோளுக்கிணங்க முகம்மது நபி அவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சீறாப்புராணமாகப் படைத்துள்ளார். இந்நூல் 5027 பாடல்களையும், 92 படலங்களையும் கொண்டது. மேலும், விலாதத்துக்காண்டம், நுபுவ்வத்துக் காண்டம், ஹிஜிரத்துக் காண்டம் எனும் 3-காண்டங்களைக் கொண்டுள்ளது.
இதனுள் விலாதத்துக் காண்டத்தில் நாட்டுப்படலப் பகுதியில் உமறுப்புலவர் நானில வருணனைகளை அழகுபடக் கூறியுள்ளார். தொல்காப்பியரின் திணைக்கோட்பாட்டின் அடிப்படையில் உமறுப்புலவர் இப்பகுதியிலுள்ள 56 பாடல்களையும் எங்ஙனம் இயற்றியுள்ளார் என்பதனை ஆய்வுக்குரிய மூலமாகக் கொண்டு இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தொல்காப்பியர் கூறும் நிலப்பகுப்பு
தொல்காப்பியர் பாலை ஒழித்து நான்கு நிலங்களாக பாகுபடுத்தியிருப்பதை,
“மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்எனச்
சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே”
(தொல்:பொருள்:5)
என்ற சூத்திரத்தில் உறையும் நிலப்பகுதிக்கு மட்டும் இவ்வரையறையை தொல்காப்பியர் கூறவில்லை என்பதும், உலகம் காடு, மலை, வயல், கடல் என்ற இயற்கையால் சூழப்பட்டுள்ளது என்பதும், உலகின் நிலப்பகுதிகள் அனைத்துமே முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்ற முறைமையில் பொதுமைச் சிந்தனையோடு இலக்கணம் யாத்துள்ளார் என்பதனை அவர் ‘உலகம்’ என்று குறிப்பதிலிருந்து புலனாகின்றது. இதனை, இளம்பூரணனார் உரைக்குறிப்பில்,
“இச்சூத்திரத்துள் காடுறை நிலம் என்னாது
உலகம் என்றதனான் ஐவகைப் பூதத்தானும்
ஐந்து இடம் என்பது உய்த்தரை வைத்தவாறு
கண்டு கொள்க”
(தொல்: இளம்: ப.9)
என்று கூறியுள்ளார்.
ஐந்து இடம் என்பதனால் பாலை நிலத்தைத் தொல்காப்பியர்,
“நடுவண்ஐந்திணை நடுவணது ஒழியப்
படுதிரை வையம் பாத்திய பண்பே”
(தொல்:பொருள்:2)
என்ற சூத்திரத்துள் நிலம் பெறுவன நான்கு திணைகள் என்பதையும் உணரவியலுகின்றது. தொல்காப்பியரின் உரிப்பொருள் முறைமையாகிய,
“புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை
தேருங்காலைத் திணைக்குரிய பொருளே”
என்று கூறியுள்ள சூத்திரத்தின் அடிப்படையில், உமறுப்புலவர் நாட்டுப்படலத்தில் நெய்தல் தவிர்த்து, குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம் என்ற வைப்ப முறையில் பாடல்களை இயற்றியுள்ளார். பாலையோடு சேர்ந்து ஐவகை நிலங்களுக்குரிய கருப்பொருள்களை,
“தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைக்கு
அவ்வகை பிறவும் கருவென மொழி”
(தொல்:பொருள:20)
என்று தொல்காப்பியரின் வழி நின்று உமறுப்புலவர் படைத்துள்ளார் என்பதனைப் பாடல்கள் உணர்த்துகின்றன. முகம்மது நபியின் பிறப்பும் வரலாறு படைக்கப்பட்ட இடமும் அரபு நாடாக இருந்தாலும் தமிழ் இலக்கண மரபுப்படி உலகம் முழுமையும் தொல்காப்பியர் கூறும் நிலப்பாகுபாட்டில் அடங்கும் என்பதனை உமறுப்புலவர் நாட்டுப்படலத்தில் அவரது பொதுமைச் சிந்தனையை மெய்ப்பித்துள்ளார்.
குறிஞ்சி நிலம்
குறிஞ்சி நிலத்தை அடையாளப்படுத்தும் பாடல்களான 4 முதல் 12 வரையிலான பாடல்களில் குறிஞ்சி எனும் நிலப்பெயர் சுட்டாமல் கருப்பொருள்களின் வாயிலாக குறிஞ்சி நிலத்தை அடையாளப்படுத்துகின்றார். மேலும், 9-வது பாடலிலும் பொழுதைக் கூறாது, கருப்பொருள்களைக் கூறியுள்ளார். குறிஞ்சித்திணைக்கான விளைபொருட்களை,
“மனையையுந் திணையையும் வாரி (8)
என்றும்,
“காதுமா களிறென (10)
என்று யானையையும்,
“கிடந்த சந்தனங்காரகில்” (12)
என்று மலையிலுள்ள மரங்களையும்,
மலையில் மலரும் மலர்கள் குறித்து,
“வேங்கை சந்தனஞ் சண்பகம் நெல்லிவெய் தான்றி
கோங்க சோகுதேக் காசினி பாடலங் குறிஞ்சி” (6:1-2)
என்ற பாடலடிகளில் குறிப்பிட்டுள்ளார்.
குறிஞ்சி நிலத்திற்குரிய பறை குறித்து,
“புரிநரம் பிசையாழ் தொண்டகப் பறையும்” (8:3) என்ற அடிகளில் விவரித்துள்ளார்.
குறிஞ்சி நில மக்களாகிய,
“வரிவிழிச் செவ்வாயக் குறத்தியர்” (8:1)
“விரிதலைக் குறவர்” (8:5)
என்ற அடிகளில் பெண்டியரையும், ஆடவரையும் குறிப்பிடுகின்றார்.
இத்தகைய கருப்பொருள்களின் வாயிலாக குறிஞ்சி நிலத்தைக் கூறியிருப்பினும், பாடல் -13-இல்
“இத்தகைக் குறிஞ்சி நிலத்தினைக் கடந்தே”
என்று பாலை நிலப்பாடலின் தொடக்கத்தில் பாடியுள்ளார்.
இதன் மூலம் குறிஞ்சிநிலத்திற்கான இலக்கணங்களோடு உமறுப்புலவர் பாடல் இயற்றியுள்ளமை புலனாகின்றது.
பாலை
பாலை நிலத்தை விவரிக்கும் போது,
“யெரிதழற் பாலை” (13:2) என்று குறிப்பிட்டுள்ளார். இதனை,
“நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே” (தொல்:பொருள்:11)
என்ற தொல்காப்பியரின் பொழுது குறித்த செய்தியை அடிப்படையாகக் கொண்டிருப்பதனைக் காணமுடிகின்றது.
“மைத்தடங் கூந்தற் கருவிழிச் செவ்வா
யெயிற்றியர்” (13:3-4)
என்ற அடிகளில் பாலைப் பெண்டிரை எடுத்துரைத்துள்ளார்.
பாலையைக் குறித்த பிற செய்திகளை நாட்டுப்படலத்தில் உமறுப்புலவர் விரிவுபடக் கூறவில்லை.
முல்லைத்திணை
முல்லைத்திணை குறித்த செய்திகளை இரண்டு பாடல்களில் மட்டும் விளக்கியுள்ளார்.
“முல்லையிற் புகுந்தது சலிலம்” (13:8)
என்ற அடிகளில் முல்லை நிலப்பெயரைச் சுட்டியுள்ளார். அதுபோல்,
“பாறயிர் நறுநெய்க் கலத்தொடுங் கலக்கிப்
பட்டியுங் குட்டியுஞ் சிதறி” (4:1-2)
என்ற அடிகளில் முல்லைத் திணைக்குரிய உணவுப் பொருட்களான பால், தயிர், நறுமணமிக்க நெய் போன்றவற்றையும், ஆநிரைகளையும் எடுத்துரைத்துள்ளார்.
முல்லைநிலப் பெண்களின் பெயரை,
“நெற்முடை கமழுஞ்
சுரிகுழற் றொறுவிய ருடுத்த
கூளையுங் குழலும்” (14:3-5)
என்ற இவ்வடிகளில் நெய் மணக்கும் கூந்தலையுடைய ஆய்ச்சியர், இடைச்சியர் என்று குறிப்பிடவில்லை. இந்நூலின் உரையாசிரியரான செய்குத்தம்பி பாவலர் அவர்கள் ‘இடைச்சியர்கள்’ (ப.25) என்று ஆயர்குலப் பெண்களைக் குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பியர் நிறுத்த முறையான் முல்லைக்குரிய மக்கட்பெயரை உணர்த்துகையில்,
“ஆயர் வேட்டுவர் ஆடுஉத் திணைப்பெயர்
ஆவயின் வரூஉம் கிழவரும் உளரே” (தொல்:பொருள:23)
என்று முல்லைநில ஆண் மக்களைப் பற்றிவரும் திணைப்பெயர் ஆயர் என்று கூறியுள்ளார். பெண்மக்களுக்கானப் பெயரை இளம்பூரணனார் உரை கூறுகையில்,
“வந்தது கொண்டு வராதது முடித்தல்” (தொல்:மரபு:112)
என்றுரைப்பதன் வழி இளம்பூரணனார் ஆய்ச்சியர் என்று முல்லைநிலப் பெண்டிரைக் குறிப்பிட்டுள்ளார்.
உமறுப்புலவர் தொல்காப்பியர் கூறிய விதிமுறைகளின் அடியொற்றியே பாடல்களைப் புனைந்திருக்கின்றார் என்பதற்கு முல்லை, மருதம் போன்ற திணைகளுக்கான பெண் மக்கட் பெயரை வேறு சொற்களால் கூறியிருப்பதனால் தெளிவாகின்றது. இளம்பூரணனார் கூறியவழி மக்கட்பெயரை உமறுப்புலவர் எடுத்தாளவில்லை என்பதும் புலனாகின்றது.
மருதத்திணை
மருத நிலத்தை உமறுப்புலவர்,
“வேறரை யரைப்போற் பெருவளங் கவர்ந்து
மருதத்திற் பரந்தன வெள்ளம்” (4:8)
என்ற அடிகளில் குறிப்பிட்டுள்ளார்.
நிலத்தைக் கூறும் பாடல்களில்,
“கழனியும் பரந்து பாய்ந்துடைக்கும்” (27:8)
என்றும்,
“மருமலர்ப் பழனக் காடெலா நெருங்கி
வளர்ந்தது நெட்டிலை நாற்றே” (28:7-8)
என்றும் கூறியுள்ளார்.
மருதத்திணையின் வளம் 42 பாடல்களில் (14 முதல் 56 வரை) எடுத்தியம்பியுள்ளார். மற்ற திணைகளைக் காட்டிலும் மருதத்திணைப் பாடல்களே இப்பகுதியில் மிகுதியாக இருப்பது புலவரின் பாடுபொருள் திறத்திற்குச் சான்று பகர்கின்றது.
உணவுப் பொருள்களின் பயன்பாடு குறித்து,
“செழுங் கருப்பாலை” (18:1)
“கன்னலங்கழனி” (41:3)
“கரும்புடைத் தாறெடுத் தோடு” (54:3)
“நென்முளை சிதறிய தோற்றம்” (26:6)
“நெற்போர்” (39:5)
“பொன்னிறச் செந்நெல்” (40:4)
“செந்நெலிற் பெருக்கி” (4:1)
என்று மருதத்திற்குரிய உணவான நெல், கரும்பு போன்றவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.
மாக்களைக் கூறும் பொழுது, எருமையை
“படர் மருப்பு எருமை” (27:1)
“கருமேதி வேறு கொண்டு பொன்மேதியின் குலமென விளங்கும்” (52:4)
என்ற இடங்களில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், நீர்நாயைக் குறிப்பிடவில்லை. மரம் குறித்து,
“மருமணம் பெறுக்சந்தகில் சண்பக வானத்திற்
றருவெ னும்பெயர் பெறச்சிறந் தீந்திருந் தனவே” (55:3:4)
என்றும்,
நீர்நிலைகளை,
“ஏரியை” (18:1)
“குளங்கரை” (18:1)
“வாவி” (43:3)
என்றும் கூறியுள்ளார்.
பறவைகளைக் கூறும் பொழுது,
“கொக்கினம் வெருவிட” (25:2)
“இருக்கும் வாவியும் பெடையன மிடர்கொலென் றிரங்கித்
தருக்கு ழந்துதன் சேவல்வாழ் தொனியெனத் தயங்கும்” (43:3)
என்று அன்னத்தையும், கொக்கையும் அழகுறப்பாடியுள்ளார். மருதப்பறையைக் குறித்து,
“முறைமு றைக்கிணைப் பறையொலி கடலென முழங்க” (20:4)
என்ற அடிகளில் கிணை எனும் சொல் ‘மருதப்பறை’ என்று பொருள் பெறுவதை ச.பவானந்தம் பிள்ளையவர்களின் (ப.135) தற்கால தமிழ்ச்சொல்லகராதியில் காண முடிகின்றது.
பூக்கள் குறித்து,
“கமல முகையுடை” (23:1-2)
“கடிமலர்க் குமுதமும்” (23:4)
“குவளை” (35:5)
என்று பலவகையான மலர்களை மருதநிலத்திற்கு உரியதாக அமைத்துப் பாடியுள்ளார்.
முக்கனிகளை,
“விரிதலை யரம்பையைத் தள்ளி” (18:1)
“சொரியு மமுதமும் வாழை
நறுங்கனி யுகுத்த” (27:3)
“கதலி” (38:7)
“தாறு கொண்டபைங் கதலிதே மாப்பலாத் தருத்தே
னூறு கொண்ட செங் கனி” (52:1-2)
என்று மா, பலா, வாழையாகிய முக்கனிகளும் விளைந்த நிலமாக மருதநிலத்தினைக் கூறியுள்ளார்.
சேரியுள் வாழும் மருதநில மக்களான உழவர், உழத்தியர்களை,
“உழவர்கள்” (20:2)
“மள்ளர்” (21:1)
“உழுநர்கள்” (26:4)
“களமர்கள்” (41:4)
என்றும்,
பெண்களை உழத்தியர்கள் என்று கூறாது,
“கடைசியர்” (29,34,38,39)
என்றும்,
“சேற்றிடை நடுவோர்” (31:4)
என்றும் பாடியுள்ளார்.
இளம்பூரணனார் தமது உரையில்,
“மருதத்திற்கு மக்கட்பெயர் உழவர் உழத்தியர் என்பன” (தொல்:பொருள:ப.20)
என்று கூறியுள்ளார்.
எனவே, திணைக்கள மக்கட்பெயரை பயின்று வரும் முறை குறித்து நோக்கும் போது உமறுப்புலவர் தொல்காப்பிய மூலப்பாடத்தை அடிப்படையாகக் கொண்டு பாடல்கள் புனைந்திருக்கின்றார் என்பதனை அறிய முடிகின்றது.
பாடல்களில் காணப்படும் திணைமயக்கம்
திணைக் கூறுகளாக தொல்காப்பியர் கூறும் முதல், கரு, உரி என்று மூன்று தம்முள் கலந்து வருவது குறித்து,
“திணைமயக் குறுதலும் கடிநிலை இலவே
நிலனொருங்கு மயங்குதல் இல்லென மொழிப
புலன்நன் குணர்ந்த புலமை யோரே” (14)
என்று திணைமயக்கம் குறித்து விவரித்துள்ளார்.
இப்பகுதியிலுள்ள மருதநிலப்பாடல்களில் பிறதிணைகளுக்கான கருப்பொருட்களுள் சிலவிரவி வருவதைக் காண முடிகின்றது.
குறிஞ்சித்திணைக்குரிய முதன்மை உணவுப் பொருளான தேன் மருத நிலங்களில் உள்ள மலர்களில் நிரம்பியிருப்பதை,
“கமல முகையுடைந் தொழுகுதேன் றெறிப்ப” (23:1)
“தேனுண்டு தெவுட்டி” (25:1)
என்று பாடியுள்ளார்.
குறிஞ்சி நில விலங்கான யானை குறித்து,
“கொலைம தக்கரிக் குழு” (16:2)
“செறிக டக்களி றினமென” (20:3)
“கார்த்தடங் களிறு” (40:1)
என்ற மருதப்பாடல்களில் காணமுடிகின்றது.
அதுபோல் ஊர்ப்பெயரில்,
“நிறையுஞ் சேரிவிட் டெழுந்தன ருழவர்க மெனருங்கிச்” (20:1)
என்ற அடிகளில் உழவர்களின் குடியிருப்பை முல்லைத் திணைக்கான ஊர் பெயரான சேரியைக் குறிப்பிட்டுள்ளார்.
குறிஞ்சி நிலத்திற்குரிய மரங்களான அகில், தேக்கு, சந்தனம் போன்றவை மருதநிலப்பாடல்களில் பயின்று வந்துள்ளன. இதனை,
“சண்பகம் பாடலத் தடக்கரை நிரம்ப” (45:1)
என்ற பாடலடிகள் புலப்படுத்துகின்றன.
வயல்வரப்பினது பாதையின் கண் வாழை மரக்குலையை உழத்தியர் சாய்க்கச் செய்வர் என்ற மருதச் செய்தியில் குறிஞ்சி நிலத்திற்குரியதாகிய வாழை பயின்று வருவதை,
“பொருந்திய வரப்பி னெறிக்கடைக் கதலிப்” (38:7)
என்ற அடிகளில் கூறியுள்ளார்.
நற்றிணையில் கபிலர் பாடிய குறிஞ்சித்திணைப்பாடலில்,
“வாழி! தோழி! –வாழைக்
கொழு மடல் அகல் இலைத் தளிதலைக் கலாவும்” (309: 4-5)
என்று வாழை இடம் பெற்றுள்ளது. இதுபோல் குறிஞ்சித்திணைக்கான வாழை மருதநிலப்பாடல்களில் காணப்படுவதை பாடல்கள் புலப்படுத்துகின்றன.
வயல்களில் நண்டுகயோடு சேர்த்து உழவர்கள் உழுததை,
“தெரிபொறி முகட்டுக் கவட்டடி யலவன் சிதைந்திட” (22:1-2)
என்ற வரிகளில் சுட்டியுள்ளார்.
அலவன் என்பது நெய்தலுக்குரியது என்பதனை, நற்றிணையில் தாயங்கண்ணனார் பாடிய,
“சிறுகால் அலவனொடு பெயரும் புலவுத் திரை” (219:5)
என்ற நெய்தல் நிலப்பாடல் மூலம் அறியமுடிகின்றது.
இவ்வாறு ஒரு திணைக்குரிய செய்திகள் மற்ற திணைகளில் கலந்து வருவது குறித்து தொல்காப்பியர்,
“எந்நில மருங்கிற் பூவும் புள்ளும்
அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும்
வந்த நிலத்தின் பயத்த வாகும்”
(தொல்: பொருள:21)
என்று குறிப்பிட்டிருப்பது ஈண்டு நோக்கத்தக்கதாகும்.
“திணைமயக்கம் சமுதாய வளர்ச்சியோடும் திணைநிலங்களின் இணைவோடும் இணைந்தது. எனவே பழக்கவழக்கங்கள் நடைமுறைவாழ்வு எனும் இவற்றில் திணைகளில் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பான ஒன்றாகின்றது. இந்தத் திணைக்கலப்பு அடிப்படையில் பார்க்கின்றபோது கருப்பொருள்கள் குறிப்பிட்ட நிலத்துக்கு உரியவையாக இருந்தாலும் அவை பிறநிலங்களிலும் மயங்கி வரலாம் என்பதே இந்நூற்பா தரும் விளக்கம்.”
(பெ.மாதையன், அகத்திணைக் கோட்பாடும், சங்க அகக்கவிதை மரபும், ப.43) என்று பெ.மாதையன் எடுத்துரைக்கின்றார்.
வயல்வெளிகள் இல்லாத, முக்கனிகள் விளையாத அரேபிய பாலைவன பூமியை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றை தமிழ்நிலத்தின் திணைகளோடு பொருத்தி, தமிழ் மக்களின் வாழ்வியலோடு கலந்து, சிறந்த கற்பனைநயத்துடன் ஒரு வரலாற்றுக் காவியத்தை உமறுப்புலவர் புதுமை நோக்கில் படைத்துள்ளார்.
முடிவுரை
தமிழில் தோன்றியுள்ள இலக்கியப் படைப்புகள் அனைத்தும் தொல்காப்பியரின் திணைக்கோட்பாட்டின் அடிப்படையில் இயற்றப்பட்டவையே. அரபு நாட்டில் அரபு மொழியில் சொல்லப்பட்ட நபிகள் நாயகத்தின் வரலாற்றை தமிழ் மொழியில் உமறுப்புலவர் படைத்துள்ளமைக்கு அவரது தாய்மொழிப்பற்றே காரணமாகியுள்ளது. தொல்காப்பியத்தை அவர் நுண்ணிதின் கற்றதிறம் பாடல்களின் வைப்பு முறையில் புலப்படுகின்றது. காலங்கடந்தும் ஒரு படைப்பு பேசப்படுவதற்கு, அடிப்படை, அப்படைப்பு இலக்கண, இலக்கியக் கொள்கைகளோடு பொருந்தி நிற்க வேண்டும் என்பதனை தமிழ் இலக்கியங்கள் உலகுக்கு உணர்த்துகின்றன. அவற்றுள் பிற்கால இசுலாமிய காப்பியமான சீறாப்புராணத்தின் நாட்டுப்படலம் தொல்காப்பியரின் அகத்திணைக் கோட்பாடுகளுள் முப்பொருள் பகுப்பை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டுள்ளது என்பது தெளிவு.
சான்றாதாரங்கள்
1. உமறுப்புலவரின் சீறாப்புராணம், தொகுதி.1, கே.பி.செய்குத்தம்பிபாவலர் (உ.ஆ), முல்லை நிலையம், சென்னை, 2009.
2. தொல்காப்பியம், இளம்பூரணனார் உரை, சாரதா பதிப்பகம், சென்னை. ஆறாம் பதிப்பு, ஜுன் 2008.
3. தற்கால தமிழ்ச்சொல்லகராதி, ச.பவானந்தம் பிள்ளை, மாக்மில்லன் அண்டு கம்பெனி, சென்னை. 1925.
4. நற்றிணை, கு.வெ.பாலசுப்பிரமணியன் (உ.ஆ), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. மூன்றாம் பதிப்பு, 2007.
5. பெ.மாதையன், அகத்திணைக் கோட்பாடும், சங்க அகக்கவிதை மரபும், பாவை பப்ளிகே~ன்ஸ் வெளியீடு, 2009.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.