சங்க இலக்கியத்தில் இயற்கை உரம்
முனைவர் மா. பத்மபிரியா
சங்க இலக்கியம், பழந்தமிழரின் இயற்கை சார்ந்த வாழ்வியலைப் பதிவு செய்துள்ளது. நம் முன்னோர் இயற்கையின் இயல்பை அழிக்காமல் அப்படியே அதன் முழுப் பயனையும் அடைந்துள்ளனர். ஆனால் இருபத்தொன்றாம் நூற்றாண்டு மனிதர்களோ? முழுப்பயனும் வேண்டும், ஆனால் இயற்கையின் இயல்பு எப்படிப் போனால் நமக்கென்ன? என்று எதிர் விளைவுகள் பற்றி கவலை கொள்ளாது நிலம், நீர், காற்று மற்றும் வளி மண்டல மாசுவை ஏற்படுத்தி வருகின்றனர். அவற்றில் குறிப்பிடத் தகுந்த ‘மண்மாசு’ முற்றிலும் இயற்கைவேளாண்மைக்கு எதிரான செயல்பாடாகும். பழந்தமிழகம் மண்வளப்பாதுகாப்பை பேணிய திறத்தினை விவரிப்பது கட்டுரையின் நோக்கமாகும்.
மாசுறுதல் - விளக்கம் (Pollution - Definition)
மனித வாழ்க்கை மற்றும் உயிரின வாழ்க்கை இரண்டிற்கும் கிடைக்க வேண்டிய இயற்கைப் பொருட்கள் தத்தம் இயல்பில் திரிந்து மாசுபடுதலே சுற்றுச்சூழல் மாசுபாடு எனப்படும். “காற்று, நீர் மற்றும் நிலம் இவற்றின் இயற்பியல் (Physical) பண்பு, வேதியியல் (Chemical) பண்பு அல்லது உயிரியல் (Biological) பண்புகளில் ஏற்படும் விரும்பத்தகாத மாற்றங்களே (Undesirable Changes) “மாசுறுதல்” எனப்படும். (1) எந்தப் பொருள் மாசினை ஏற்படுத்துகிறதோ அப்பொருளை மாசுபடுத்தி (Pollutant) அல்லது மாசுண்டாக்கி என்றழைப்பர்.
இம்மாசுபடுத்திகள் உயிரினங்களுக்குத் தீங்காக அமைகின்றன. இந்தியா வளரும் நாடுகளில் ஒன்று. இந்தியாவில் சூழல் விழிப்புணர்வு குறைந்து வருகின்றது. இந்தியாவின் நடைமுறைப் பிரச்சினைகளில் முக்கியமானது சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகும்.
மாசுறுதலின் வகைகள் (Types of Pollution)
சுற்றுச்சூழலின் வகை (Type of Environment) மாசுபடுத்தியின் மட்கும் தன்மை (Degradable nature of pollutions), மாசுபடுத்தியின் ஈடுபாடு (Pollution involvement), மாசுறுதலின் மூலகாரணம் (Origin of Pollution) ஆகியவற்றின் அடிப்படையில் மாசுறுதலை, பல பெரும் பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவை;
1. காற்று மாசுறுதல் (Air Pollution)
2. நீர் மாசுறுதல் (Water Pollution)
3. மண் மாசுறுதல் (Soil Pollution)
4. கடல்நீர் மாசுறுதல் (Marine Pollution)
5. இரைச்சல் மாசுறுதல் (Noise Pollution)
6. அனல் (அல்லது) வெப்ப மாசுறுதல்(Thermal Pollution)
7. அணுக்கதிர் வீச்சு மாறுதல் (Nuclear Radiation Pollution)
இதுபோன்ற பல்வேறு மாசுபாடுகளுக்கிடமின்றி பண்டைய காலத்தில் இயற்கை வளத்தினைக் காத்து வந்திருக்கின்றனர்.
இயற்கை உரங்கள்
இன்று விளைச்சல் அதிகரிக்க வேண்டும் என்பதற்காகப் பல்வேறு வேதியியல் உரங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த வேதியியல் பயன்பாட்டின் அதிகரிப்பால் நிலமும், அதில் விளைவிக்கப்படும் பயிர்களும் நச்சுத்தன்மையுடையதாக மாறிப் போய்க் கொண்டிருக்கின்றன. ஆனால், பண்டைய தமிழர்கள் தங்கள் நிலங்களின் இயற்கையான அமைப்பிற்கு எந்தப் பாதிப்புமில்லாமல், இயற்கையான உரங்களையே பயன்படுத்தி வந்திருக்கின்றனர். சங்கஇலக்கியத்தில் மண்வளத்தினை இயற்கை உரம் பயன்படுத்தி பாதுகாத்த பல்வேறு செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.
இயற்கை உரம் - தாது எரு
ஒவ்வொரு தாவர வளர்ச்சிக்கும் ஊட்டச்சத்து மிக்க உரம் அவசியம். அத்தகைய உரம் மண்ணின் வளத்தை உயர்த்த வேண்டுமே தவிர, வளத்தைச் சிதைத்தல் கூடாது. எல்லாத் தாவரங்களும் மண்ணிலிருந்து தமது வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச் சத்தினைப் பெறுகின்றன. இது தொடர்ந்து மேற்கொள்ளும் போது, மண்ணிலுள்ள கனிமங்கள் குறைகின்றன. எனவே தான் விவசாயிகள் மண்ணின் வளத்தினைப் பெருக்குவதற்கு இயற்கையான தழையுரங்களை இடுகின்றனர். இத்தகைய தழையுரங்கள் இன்று மண்ணில் பற்றாக்குறையாகவே இருக்கின்றது. காரணம் காடுகள் அழிப்பு, நகரமயமாக்கல். பழந்தமிழகத்தில் இயற்கை வளம் கொட்டிக்கிடந்ததால் தழையுரங்கள் எளிதாக கிடைத்துள்ளது.
கால்நடையின் எச்சமும், காய்ந்த சருகின் தழையும் வேளாண்மைக்கு உரமாக அமைந்தால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாது, மண்ணும் வளம்பெறும். “வேளாண்மையில் பசுந்தழை உரங்கள், தொழுவங்கள் போன்றவற்றைப் பயன்படுத்த விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. கால்நடைச் சாணத்தின் மூலம் உயிரினவாயு தயாரிப்பது பற்றியும் அதனுடைய முக்கியத்துவம் பற்றியும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்து நிலம் மாசுபாடு தவிர்க்கப்படுகிறது...” (2) இவ்வாறு இயற்கை உரங்கள் பற்றிய விழிப்புணர்வு இன்றைய உழவர்களுக்கு அறிவுறுத்தப்படுகின்றது.
பழங்காலத்தில், இயற்கை உரம் உழவுத்தொழிலுக்கு அறிவுறுத்தல் இல்லாமலேயே பயன்பாட்டில் இருந்துள்ளது. இயற்கையில் கிடைத்த தாதுவின் எரு மண்ணிற்கு வளம் சேர்த்தமை சங்கஇலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றது. கால்நடைகளின் எரு மற்றும் செடிகொடிகளின் உதிர்ந்த சருகுகள் நிலப்பரப்பில் தாதுக்களாக இயல்பாகக் கிடைக்கும் செய்திகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
“முல்லை தாய கல்லதர்ச் சிறுநெறி
அடையாது இருந்த அங்குடிச் சீறூர்த்
தாதெரு மறுகின் ஆபுறந் தீண்டும்”
(நற். 343)
“... ... ... தாது எரு மன்றத்துத்
தூங்கும் குரவையுள்... ... ...”
(கலி.108)
“கவைக்கதிர் வரகி னவைப்புறு வாக்கல்
தாதெரு மறுகிற் போதொடு பொதுளிய”
(புறம். 215)
“தாதெரு மறுகின் மாசுண விருந்து”
(புறம். 311)
“தாது எரு மறுத்த கலி அழி மன்றத்து”
(பதிற். 13)
“இடுமுள் வேலி எருப்படு வரைப்பின்”
(பெரும். 154)
கால்நடைகள் செல்லும் வழிகள் தோறும் எருக்கள் கிடப்பதாக இலக்கியம் பதிவுசெய்துள்ளது. அதனை உபயோகிக்கும் வேளாண்மை நுட்பமும் வெளிப்படுகின்றது. இயற்கை உரத்தின் நன்மைகளை அறிஞர்கள் பின்வருமாறு பாரட்டியுள்ளனர். “மண்ணிலுள்ள கரிமப்பொருள் மண்ணின் அவசியமான கூறாக விளங்குகின்றது. மண்ணின் உயிரினங்களுடன் சேர்ந்து மண் வளத்தைப் பெருக்க இது உதவுகிறது. மண் உயிரினங்களின் தொகை மண்ணில் காணப்படும் கார்பன் நைட்ரஜன் அளவுகளைப் பொறுத்து அமையும். மண்ணின் மீதுள்ள தழைக்கூளம் பல்வேறுப்பட்ட மண் உயிரினங்களின் தொகையையும் அடர்த்தியையும் ஊக்குவிக்கிறது. தாவரங்களின் செல்லுலோஸ் வடிவிலான கார்பனைத் தருகின்றன. காடுகளில் இலையுதிர் காலத்தின் போது உருவாகும் இயற்கையான தழைக்கூளம், மற்ற காலங்களிலும் மண்ணையும் அதில் வாழும் உயிரினங்களையும் பாதுகாக்கிறது. மண்ணைக் குளிர்ச்சியாக வைத்து, தண்ணீர் ஆவியாதல், மண்அரிப்பு போன்றவையும், இதுபோன்ற தழைப்போர்வை தவிர்க்கிறது..... ” (2)
பழந்தமிழகம் மண்வளமுடன் காணப்பட்டுள்ளது மூதூர், முற்றம், பாசறை என்று வளமான மண் காணப்பட்ட இடங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
“தாதுஎரு மறுகின் மூதூர்... ... ...”
(அகம். 165)
“தாது எருத் ததைந்த முற்றம்... ... ...”
(மலை. 531)
“தாதொரு மறுகிற் பாசறை பொலிய”
(புறம்.33)
இயற்கையில் கிடைத்த இலை, தழைகளால் ஆன குப்பைக் கூளங்களே உரமாகப் பயன்படுத்தப்பட்டமையை அறிய முடிகிறது. “ பயிர்கள் செழிப்பாக வளர, நல்ல மண் அடிப்படை. விளைநிலங்கள் பரந்த அளவில் இருக்கும் நம் மாநிலத்தில், மண்ணைப் பாதுகாத்து, அதன் தன்மை மாறாமல் உரங்களை இட்டு வேளாண்மையில் ஈடுபட்டால் பலநூறு ஆண்டுகளுக்கு செழிப்பான வேளாண்மை அமையும். ஆங்கிலத்தில் Soil Health Care என்று இதைக் கூறுகிறோம். இது, விஞ்ஞான ரீதியாகப் பரிந்துரைக்கப்படும் அளவை விடக் குறைவு. மேலும், தழை உரம் போல் மணிச்சத்து, சாம்பல் சத்து அளிக்கும் உரங்களின் உபயோகத்திற்கும் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். அதுவே உற்பத்தியைப் பெருக்க உதவும். ” (3)
சங்ககாலத்தில் மண்ணின் வளம் பேணியேப் பயிர் விளைச்சலை பெருக்கியுள்ளனர்.
தொழுவுரம் - ஆடுகிடை கட்டுதல்
விலங்கின் கழிவுகளில் உற்பத்தி செய்யப்படும் உரம் தொழுவுரம் ஆகும். தொழுவுரம் தயாரிக்கும் முறை பற்றி கூறுகையில், “விவசாயிகளின் வீட்டில் வளர்க்கப்படும் ஆடு, மாடுகளுக்கு உணவாகக் கொடுக்கப்படும் இலை. தழை, வைக்கோல், பொட்டு. தவிடு, பிண்ணாக்கு போன்ற தீனிகள் தின்றது போக மீதிக் கழிவுகளை அவற்றின் கழிவுப் பொருட்களுடன் சேகரித்துத் தினசரி குப்பைக் குழியில் கொட்டி, வண்டல் மண்ணால் மூடி. மக்க வைக்கப்படுகின்றன. விதைப்புக்கு முன் இத்தொழி உரமானது நெல், கரும்பு, சோளம் பயிர்களுக்கு உரமாக இடப்பட்டுப் பயிரிடப்படுகிறது. இதனால் விளைச்சல் போதுமான அளவு அதிகரிக்க ஏதுவாகிறது. இதற்குத் தான் தொழுவுரம் என்று பெயர்” (4) என்பர். பழங்காலத்தில் இரவில் ஆடுகளை மேய்ச்சல் நிலத்துக்கே கொண்டு சென்று உர உற்பத்தி செய்தனர். இதற்கு ‘கிடைகட்டுதல்’ என்று பெயர். விலங்குகளின் கழிவுப் பொருட்கள் மண்ணோடு கலந்து ஊட்டச்சத்து மிக்க உரமாகுகின்றது. மழை பொழிந்த வேளையில் இடையர்கள் ஆடுகளை ஓட்டிக் கொண்டு செல்லும் காட்சியினை நிறைய சங்கப் பாடல்கள் பதிவு செய்துள்ளன. நற்றிணைப்பாடலில் இக்காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
“வான் இகுபு சொரிந்த வயங்கு பெயற் கடை நாள்
... ... ... ... ... ... ... ... ...
பறிப் புறத்து இட்ட பால் நொடை இடையன்
... ... ... ... ... ... ... ... ...
சிறு தலைத் தொழுதி ஏமார்த்த அல்கும்
புறவினதுவே... ... ...”
(நற்.142)
தொழுவுரத்தின் பயன்பாடு சங்கமாந்தரிடம் இருந்தமையை உறுதி செய்வது போன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
“காடுஉறை இடையன் யாடுதலைப் பெயர்க்கும்
மடிவிடு வீளை வெரிஇ குறுமுயல்
மன்ற ... ... ...”
(அகம். 394)
இடையர்கள் கிடை கட்டும் இயற்கை வேளாண்மை நுட்பத்தைக் கையாண்டமை அறிய முடிகிறது. அகம் 274 ஆவது பாடல் கிடை போடும் இடையன் வாழ்வினையும், அவன் ஆட்டு கிடையைப் பாதுகாக்கும் திறத்தையும் பதிவுசெய்துள்ளது. இதன் மூலம் ஆடுகளின் கழிவுகளால் ஆன தொழுவுரம் முல்லை நிலத்தை வளப்படுத்தியமையும் புலனாகின்றது.
இயற்கை உரம் - சாம்பல்
இன்றைய நாகரீக வளர்ச்சியில் இயற்கை உணவு மறக்கப்பட்டது போன்று இயற்கை உரமும் மறக்கப்பட்டு வருகின்றது. வேதியல் உரங்கள் எதிர்கால சந்ததிகளின் வளர்ச்சியைப் பாதிக்கும் என்று முன்னோர்கள் அறிந்து இருந்ததால் வேளாண்மைக்குப் பயன்படுத்தும் நிலத்தை மரங்களின் சாம்பலைக் கொண்டும் பண்படுத்தியுள்ளனர்.
“யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில்
சுரும்பு மருள் முதல பைந்தாட் செந்தினை
மடப்பிடித் தடக்கை அன்ன பால்வார்பு
... ... ...பைங்குரல்
படுகிளி கடிகம் ... ... ...” (குறுந். 198)
“சுடுபுன மருங்கில் கலித்த ஏனற்
படுகிளி கடியும் கொடிச்சிகைக் குளிரே” (குறுந்.291)
பயன்படாத, பண்படுத்த முடியாத காட்டு மரங்களை எரித்து அச்சாம்பலை உரமாக்கியுள்ளனர். சாம்பல் உரம் இடப்பட்ட தினைப்புனம் செழித்து வளர்ந்ததால் கிளிகள் தினைப்புனத்தை நோக்கி வருகின்றன. இக்காட்சியமைப்பு இயற்கை உரம் வழங்கிய அபரித உற்பத்திக்குச் சாட்சியாகும்.
களை நீக்கம்
பயிர்களின் வளர்ச்சிக்குச் சேதம் விளைவிக்கும்; தாவரங்களே களைகள் எனப்படும். பெரும்பாலும் களைகள் பூப்புப் பருவத்தை அடையும் முன்னரே நீக்கி விடல் அவசியம். பயிருக்கு சேதம் வரும் முன்னர் களை நீக்குவது உழவரின் பணியாகும். களையின் நச்சுத் தன்மை பற்றி அறிஞர் கூறுகையில், “சாகுபடி செய்யப்படும் பயிரினூடே இயற்கையாகவே வளரும் தேவையற்ற செடிகள் களைச் செடிகளாகும். இந்த தேவையற்ற தாவரங்களை விளைநிலத்திலிருந்து நீக்கும் செயலுக்குக் களை நீக்குதல் என்று பெயர். ஏனெனில் ,அவை தமக்கு தேவையான நீர், ஊட்டச்சத்துக்கள், வாழிடம், சூரியஒளி போன்றவைகளுக்காக சாகுபடி செய்யப்படும் பயிர்களுடன் போட்டியிடுகின்றன. சில களைச்செடிகள் நஞ்சுகளாகின்றன” என்பர்.
‘களைப்பிடுங்காப் பயிர் கால் பயிர்’ என்ற வழக்கு உள்ளது. தற்காலத்தில் பயிர்ப் பாதுகாப்பு கருதி வீரியம் நிறைந்த களைக்கொல்லியைப் பயன்படுத்தி மண்ணின் உற்பத்தித் திறனை தடைசெய்கின்றனர். மண்ணின் வளம் கெடாமல் களைநீக்கினால் உற்பத்தித் திறன் கூடும். சங்ககாலத்தில் இயற்கையான வழிமுறையில் களை நீக்கப்பட்டுள்ளது.
“அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்
பருஇலைக் குளவியொடு பசுமரல் கட்கும்” (குறுந்.100)
“... ... ... துடவைஅம் சிறுதினைத்
துளர்எறி நுண்துகள் களைஞர் ... ... ...” (குறுந்.392)
“கோடுடைக் கையர் துளர் எறி வினைஞர்” (அகம்.184)
உழவர்கள் கைகளால் களை நீக்கியுள்ளனர். களைப்பறித்து எறிவோர் ‘துளர்எறி வினைஞா’ என்று சங்க இலக்கியத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
வயல் - மரம்
நிலத்தடி நீரைச் சேமிக்கும் மரங்கள் பயிர் வளர உறுதுணைபுரிகின்றது. எனவே தான் உழவர்கள் மரங்கள் அருகே பயிரிடுகின்றனர். வயல்கள் பெரும்பாலும் மரங்களோடு இணைந்தே காணப்படும் நிலையினைச் சங்கப் பாடல்கள் பின்வருமாறு பதிவு செய்துள்ளன.
“கழனி மாஅத்து... ... ...” (குறுந். 8)
“கழனி மருதின்... ... ...“ (ஐங். 70)
“... ... ...சாய்ப் புறம் பரிப்ப கழனிக்
கருங்கோட்டு மாஅத்து... ... ...” (அகம். 236)
“... ... ...கழனி
வாங்கு சினை மருதத் தூங்கு…” (நற். 350)
“கருங்கால் வேங்கைச் செஞ்சுவல் வரகின்
மிகுபதம் நிறைந்த தொகுகூட்டு ஒருசிறை” (அகம். 367)
வயல்களும் மரங்களும் செழித்தோங்கிய இயற்கை வேளாண்மை நெறிமுறையை உணர முடிகிறது.
முடிவுரை
* பழந்தமிழ் இலக்கியம் இயற்கை வேளாண்மை, இயற்கைஉரம் பயன்பாட்டினை மிகுதியாகப் பதிவுசெய்துள்ளது.
* இன்றைய காலத்தில் செயற்கை வேதியியல் உரங்கள் உணவினை நஞ்சாக்குகின்றன. ஆனால் பழந்தமிழர் இயற்கையோடு இணைந்து ஊட்டச்சத்து மிக்க உணவினை உண்டுள்ளனர்.நோயின்றி வாழ்ந்துள்ளனர்.
* இயற்கை உரங்களுக்கு கால்நடைகளின் கழிவு மற்றும் மரஞ்செடிகொடிகளின் கழிவு பயன்பட்டமையால் உற்பத்தித் திறன் அதிகரித்ததுடன் அஃறிணை உயிர்களின் உணவு மூலதனமும் சிதைக்கப்படாமல் இருந்துள்ளன.
குறிப்புகள்
1. ரா. குமரசாமி, சுற்றுச்சூழல் ஒரு கண்ணோட்டம், ப.52.
2. பி. ஜானகி, சுற்றுச்சூழல் கல்வி, ப. 9.
3. சுல்தான் அகமது இஸ்மாயில், மண்புழு என்னும் உழவன் வளர்ப்பும் தொழில்நுட்பமும், பயன்களும், ப. 80.
4. சு. செல்லையா, தமிழக வேளாண்மை நிகழ்வும் வாய்ப்பும், ப. 40.
5. இராம சுந்தரம். வேளாண் அறிவியல் வளர்ச்சி, ப. 103.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.