சங்க இலக்கியத்தில் குற்றமும் தண்டனையும்
பி. துரைமுருகன்

‘ஒரு சமுதாயத்தில் நீதி எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதையொட்டியே அச்சமூக நிறுவனங்களின் தன்மையும் பண்பும் அறியப்படுகின்றன. நீதியே எல்லா நலன்களுக்கும் முதன்மையானது (பிளேட்டோ). ஆகவே, அது சரியாக வழங்கப்பட்டால்தான் சமுதாய நலன்கள் பெருகி நிற்கும்’ (1) எனும் நிலையைச் சங்கப் பாடல்களின் வழி காணலாம். பண்பட்ட சமூகங்களிலேயே நெறிப்பட்ட வாழ்க்கை முறையும், சீரிய விழுமியங்களும் சமூக அறங்களும் காணப்படும் எனும் நிலையில் சங்கச் சமூகம் இத்தகைய இயல்புடையதாய் விளங்கி வந்துள்ளது. திட்டமிட்ட நிர்வாக அமைப்புகள் பலவற்றைக் கொண்டதாக பண்டை அரசுகள் நிலவி வந்துள்ளன என்பதற்கு வேந்தர் பற்றிய சங்கப் பாடல்கள் சான்றாகின்றன. நீதி வழங்குதலில் நிறுவன வயப்பட்ட அமைப்பு அக்காலத்தே நிலவி வந்துள்ளது. இதன் அடிப்படையில் சங்க காலத்தில் வழக்கிலிருந்த குற்றங்கள், அவற்றுக்கான தண்டனைகள் எங்ஙனம் இருந்தன என்பதை ஆராயும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது.
‘முடியாட்சி முறை நிலவி வந்த சங்க காலத்தில் இன்றைய நாளில் விளங்கி வரும் குடியாட்சி அமைப்பின் உறுப்புகளாகக் கருதப்படும் சட்டமியற்றல், நிருவகித்தல், நீதி வழங்குதல் என்னும் மூன்றிற்கும் மன்னனே தலைவனாக அமைந்திருந்தான். மன்னனின் விருப்பங்களே நாட்டின் ஆணைகளாக உருப்பெற்றன. மன்னனின் ஆணைகளே அன்றைய நாளில் வலிமை மிகு சட்டங்களாகக் கொள்ளப்பட்டன. நாட்டில் ஒழுங்கையும் அமைதியையும் நிலைநிறுத்துவதற்குத் தேவையெழும் நேரங்களில் எல்லாம் மன்னன் ஆணைகளைப் பிறப்பித்து வந்தான். நாட்டின் அனைத்து அதிகாரங்களும் மன்னனிடத்தில் குவிந்திருந்தன’ (2). நீதி வழங்குவதற்காக அறங்கூறு அவையம் இருந்தது. (3) இதுவன்றி ஊரவை, அரசவை ஆகிய அமைப்புகளும் நீதி வழங்குவதில் முதன்மை பெற்றிருந்தன. அறங்கூறவையத்தில் குற்றம் நீங்கிய சான்றோர் இருந்தனரென்பதை மதுரைக்காஞ்சி (4) குறிப்பிடும். இவ்வாறு அறங்கூறும் அவையமும், நீதியுரைக்கும் சான்றோரும் பண்டு இருந்தனர் என்பதைக் கொண்டு அக்காலத்தில் குற்றங்களும் இருந்து வந்ததென்பதை உணரலாம்.
குற்றம்
‘சமுதாயத்தில் உறுப்பினராக வாழும் மக்கள் தங்கள் வலிமையைப் பிறருக்கு எதிராகப் பயன்படுத்த முற்பட்ட போது அது குற்றம் என்று கருதப்பட்டது. ஒருவர் தன் நலனைப் பேணுவதற்காக அடுத்தவரின் உயிர், உடல், உடைமை முதலியவற்றிற்குத் தீங்கிழைக்கும் செயலை இன்று குற்றம் என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர்’ (5)
சமுதாயம், எல்லோரும் ஒழுக வேண்டியனவாகச் சில பொது நெறிகளை வகுத்துத் தந்துள்ளது. இத்தகைய நெறிக்கு மாறுபட நடப்பது குற்றம் எனப் பொருள் கொள்ளலாம்.
சங்க இலக்கியங்களில் குற்றங்கள்
சங்க இலக்கியங்கள் தமிழரின் பல்வேறுபட்ட வாழ்வியலைப் பேசுகின்றன. ஆயினும் குற்றங்கள் அவற்றிற்கான தண்டனைகள் குறித்து விரிவாகச் சுட்டவில்லை.
"ஆன்முலை அறுத்த அறினிலோர்க்கும்
மாணிழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும்
பார்ப்பார்த் தப்பியகொடுமையோர்க்கும்" (6)
என முறையே ஆன்முலையறுத்தல், மகளிரின் கருவைச் சிதைத்தல், பார்ப்பார்க்குக் கொடுமை செய்தல் என்பனவற்றைக் குற்றங்களாகக் கருதியமை புலப்படும். மேற்காட்டிய பாடலின் இறுதியடிகள்,
"வழுவாய் மருங்கின் கழுவாயும் உளவென
நிலம் புடை பெயர்வதாயினும் ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என
அறம் பாடிற்றே ஆயிழை கணவ” (7)
என்கின்றன.
அதாவது மேற்குறித்த குற்றங்களைப் போக்கிக் கொள்ளக் கழுவாய் உண்டென்றும், செய்ந்நன்றி கொன்ற குற்றத்திற்குக் கழுவாய் இல்லையென்றும் குறிப்பிடுகின்றன.
‘இப்பாட்டில் செய்த குற்றத்திற்கேற்ற தண்டம் வழங்கும் தமிழ் மரபிற்கு மாற்றாகக் குற்றம் செய்தோரின் வருணத்திற்கேற்பத் தண்டம் வழங்கும் அயல் வழக்கம் பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும் என்ற அடியாற் புலனாகும். தமிழறங்கூறும் ஒரு பாடலில் இவ்வடி பின்வந்தாரால் சேர்க்கப்பட்டது என்றும், குரவர் தப்பிய கொடுமையோர்க்கும் என்றே இவ்வடி இருக்க வேண்டுமென்றும் அறிஞர் கருதுதல் பொருத்தமேயாம்’ (8)
வேற்றரசன் பொருட்டு ஒற்று வருதல் குற்றமாகக் கருதப்பட்டுள்ளது. புறநானூற்றின் 47ஆம் பாடலுக்கான அடிக்குறிப்பு.
‘சோழன் நலங்கிள்ளியுழை நின்று உறையூர் புகுந்த இளந்தத்தன் என்னும் புலவனை, காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி ஒற்று வந்தான் என்று கொல்லப் புக்குழி கோவூர்க்கிழார் உய்யக்கொண்டது’ என அமைந்துள்ளமை கொண்டு ஒற்றுவருதல் குற்றமாக எண்ணப்பட்ட தென்றறியலாம்.
"மண்ணிய சென்ற ஒள்நுதல் அரிவை
புனல் தரு பசுங்காய் தின்றதன் தப்பற்கு" (9)
எனும் குறுந்தொகையடிகள் நன்னன் என்பானின் மாமரத்திலிருந்து விழுந்து நீரில் மிதந்து வந்த மாங்காயைத் தின்ற கோசர்குலப் பெண் குற்ற மிழைத்தவளாகக் கருதப்பட்டதை உரைக்கின்றன.
பெண்ணோடு உறவு கொண்டு பின்னர் அவளை அறியேன் என ஒதுக்குவது பண்டைத் தமிழகத்தில் குற்றமாக எண்ணப்பட்டுள்ளமையையும் அவ்வாறு செய்தவன் அறனிலாளன் எனத் தூற்றப்பட்டதையும்,
"தொல்புகழ் நிறைந்த பல்பூங்கழனி
கரும்பு அமல் படப்பை, பெரும் பெயர்க் கள்ளூர்
திருநுதல் குறுமகள் அணிநலம் வவ்விய
அறனிலாளன் அறியேன் என்ற" (10)
அகநானூறு குறிப்பிடுகிறது. இவையன்றி வேறு குற்றங்கள் எனும் நிலையில் சங்கப் பாடல்களில் சான்றுகள் இல்லை.
தண்டனைகள்
சங்கப் பாடல்களில் குற்றங்கள் குறித்து மிகுதியான பதிவுகள் இல்லையெனினும் குற்றங்களை விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் நடைமுறை இருந்துள்ளது. சாட்சிகள் குற்றம் தொடர்பாக விசாரிக்கப்பட்டுள்ளனர் என்பதற்கும், பொய் சாட்சிகள் சொல்லப்பட்டன என்பதற்கும் சான்றுகள் காணப்படுகின்றன.
"அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை" (11)
"அறிகரி பொய்த்தலின் ஆகுமோ அதுவே" (12)
"திறனில் வெஞ்சூள் அறிகரி கடாஅய்" (13)
எனும் பாடலடிகள் உண்மையை மறைத்துப் பொய்யுரைக்கும் நிலையைத் தெளிவுறக் காட்டுகின்றன.
பொய் சாட்சி கூறியவன் கீழே தங்கியதால் மரம் பட்டுப்போய் கவினிழந்ததைக் கலித்தொகை,
"கரிபொய்த்தான் கீழ் இருந்த மரம் போலக் கவின்வாடி
எரிபொத்தி என் நெஞ்சம் சுடும் ஆயின் எவன் கொல்லோ" (14)
என உவமையாகச் சுட்டுகிறது.
உயிரைப் பறித்தலே குற்றங்களுக்கான அதிகபட்சத் தண்டனையெனச் சங்கப் பாடல்கள் காட்டுகின்றன. ‘தண்டனை முறையின் அடிப்படை நோக் கம் குற்றங்கள் நிகழாமல் தடுக்கப்பட வேண்டும் என்பதாகும். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படும்போது முதல்நிலையில் அக்குற்றவாளி மீண்டும் அக்குற்றத்தைச் செய்தல் கூடாது. அடுத்த நிலையில், ஒரு குற்றவாளி தண்டிக்கப்படுவதைக் கண்டு சமுதாயத்தில் மற்றவர்களும் அக்குற்றத்தைச் செய்தல் கூடாது’ (15) எனும் நோக்கங்களின் அடிப்படையிலேயே சங்ககால தண்டனை முறைகளும் இருந்துள்ளன.
மாங்காயை உண்ட பெண், அக்குற்றத்திற்காக தன்னிறையளவு செய்யப்பட்ட படிமையை எண்பத்தொரு களிறுகளொடு கொடுத்தும் ஏற்காத நன்னன் அப்பெண்ணைக் கொன்றமையை,
“ஒன்பதிற்று - ஒன்பது களிற்றொடு அவள்நிறை
பொன் செய் பாவை கொடுப்பதும் கொள்ளான்
பெண் கொலை புரிந்த நன்னன்” (16)
எனக் குறுந்தொகை விளக்கும்.
பெண்ணின் நலம் நுகர்ந்து அவளை அறியேன் எனக் கூறிய ஆடவனின் அப்பெண்ணுடனான உறவை அறிந்தார்வாய்க் கேட்டறிந்த அவையத்தார், அவரது அடாச் செயலை உண்மையெனத் தெளிந்து அவனை, தளிர்கள் கொண்ட பெரிய மரத்தின் கவர்த்த கிளையில் இறுகக் கட்டி வைத்துத் தலையில் சாம்பலைப் பெய்து தண்டித்தமையை,
“முறிஆர் பெருங்கிளை செறியப் பற்றி
நீறுதலைப் பெய்த ஞான்றை” (17)
எனும் பாடலடிகள் விளக்கக் காணலாம்.
முடிவுரை
* சங்கச் சமூகம் பல்வேறு விழுமிய தகவுகளைக் கொண்டதாக இருப்பினும், அச்சமூகத்திலும் சமூக ஒழுங்கிற்கு மாறுபட்டோரும் சமூக நெறிமுறைகளை மீறுவோரும் வாழ்ந்துள்ளனர் என்பதற்கு அக்காலத்தில் காணப்பெற்ற குற்றங்களும் தண்டனைகளும் சான்று கூறுகின்றன.
* நீதி வழங்குவதற்கென்று ஊரவைகள், மன்றங்கள், அரசவை எனும் அவையங்கள் இருந்துள்ளமையால் சமூக ஒழுங்கிற்காக வரையறுத்துக் கொள்ளப்பட்ட நெறிமுறைகள் இருந்துள்ளன என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
* சங்கப் பாடல்கள் காட்டும் குற்றங்கள் என்பவை சமூகத்தின் அடித்தளத்திலும் அரசு எனும் நிறுவனம் சார்ந்த நிலையிலும் இருந்துள்ளன என்பதை அறிய முடிகிறது.
* அரச நலனோடு தொடர்புடைய குற்றங்களுக்கு மரண தண்டனையும், பிற குற்றங்களுக்கு எளிய முறையிலான தண்டனைகளும் வழங்கப் பெற்றுள்ளன என்பதையும் அறிய முடிகிறது.
சான்றெண் விளக்கம்
1. இராஜ முத்திருளாண்டி, இலக்கியத்தில் இராஜமுத்திருளாண்டி, ப. 39
2. முத்துவேலு, மு., தமிழ் இலக்கியத்தில் சட்டநெறிகள், ப. 2
3. மதுரைக்காஞ்சி, பா. 492
4. மதுரைக்காஞ்சி, ப. 489 - 492
5. முத்துவேலு, மு., தமிழ் இலக்கியத்தில் சட்டநெறிகள், ப. 68
6. புறநானூறு, பா. 34 : 1 - 3
7. புறநானூறு, பா. 4 - 7
8. பாலசுப்பிரமணியன், கு.வெ., சங்க இலக்கியத்தில் புறப்பொருள், பக். 145 - 146
9. குறுந்தொகை, பா. 292 : 1 - 2
10. அகநானூறு, பா. 256 : 14 - 17
11. குறுந்தொகை, பா. 184 : 1
12. நற்றிணை, பா. 196 : 9
13. அகநானூறு, பா. 256 : 18
14. 34 : 10 - 11
15. முத்துவேலு, மு., தமிழ் இலக்கியத்தில் சட்டநெறிகள், ப. 81
16. குறுந்தொகை, பா. 292 : 3 - 5
17. அகநானூறு, பா. 256 : 19 - 20
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.