தமிழில் பொருளணுப் பகுப்பாய்வு அறிமுகம்
இரா. செந்தில்குமார்
முன்னுரை
மொழி கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள பயன்படுவதாகும். கருத்துப் பரிமாற்றத்துக்குப் பொருண்மைப் புலப்பாடு அவசியமானது. சொல், தொடர், வாக்கியம் ஆகிய மொழிக்கூறுகளில் பொருண்மைப் புலப்பாடு அமைகின்றது. சொற்பொருண்மை ஏனைய தொடர் மற்றும் வாக்கியப் பொருண்மைகளுக்கு அடிப்படையாகத் திகழ்கின்றது.
ஒலிகள் தங்களின் ஒலிக்கூறுப் பண்புகளால் பிற ஒலிகளிலிருந்து வேறுபடுவது போன்று சொற்களின் பொருண்மையும் நுண்கூறுகளைக் கொண்டிருக்கும் எனக்கருதி மொழியியல் அறிஞர்களும் மானுடவியல் அறிஞர்களும் சொற்களின் பொருண்மையையும் பல்வேறு பொருளணுக்களின் கட்டுமானங்களாகக் கண்டு பொருளணுப் பகுப்பாய்வில் ஈடுபட்டனர். அதன்வழி ஒவ்வொரு சொல்லும் பொருளணுக்களின் தொகையால் ஆனது என்றும் அவை இணைந்து பொருண்மையாக நிற்கின்றன என்றும் முடிவு செய்தனர்.
1. முன்னோடிகள்
பொருளணுக்கள் குறித்துப் பலரும் ஆராய்ந்துள்ளபோதும் கர்னாப், லையான்ஸ், நைடா, கட்ஸ் போன்றோர் குறிப்பிடத்தக்கோர் ஆவர். நைடாவின் பொருளணுப் பகுப்பாய்வு (Componential Analysis of Meaning. 1975) என்ற நூல் பொருளணுக்கள் குறித்து நன்கு ஆராய்கின்றது. கர்னாப் என்ற தத்துவவியலார் பொருளணுக்களைக் குறிப்பால் உணரமுடியும் என்கிறார். மேலும் குறிப்பால் உணரப்படும் பொருட்கூறுகளை நேர் – எதிர் போன்ற பொருளணுக்களால் விளக்கலாம் எனவும் குறிப்பிடுகின்றார்.
2. பொருளணுக்கள்
ஒவ்வொரு சொல்லும் பொருளணுக்களால் ஆனது என்றும், இப்பொருளணுக்கள் இணைந்து ஒரு சொல்லின் பொருண்மையாக வெளிப்படுகின்றன என்றும் முடிவு செய்து அதன் அடிப்படையில் ஆய்வினை மேற்கொள்வது பொருளணுப் பகுப்பாய்வு அணுகுமுறை ஆகும். இது ஆங்கிலத்தில் பின்வரும் பெயர்களால் குறிக்கப்படுகின்றது. (Componential Analysis of Meaning, Lexical Decomposition, Semantic Feature Analysis). இந்தப் பொருளணுக்களானவை பொருண்மைக்கூறுகள் (Semantic Components, Semantic Features, Components of Meaning) என்றும் வழங்கப்படுகின்றன.
இவ்வாறு சொற்கள் தங்களின் பொருண்மையைப் பொருளணுக்களால் அமைத்துக்கொள்கின்றன.
3. பொருளணுக்களும் தமிழ் மரபிலக்கண அணுகுமுறையும்
இனம், பருவம், பால் என்ற பொருட்கூறுகள் பொதுவாக சொற்களின் பொருண்மையில் அங்கமாகின்றன. வினைச்சொற்களில் இவை மட்டுமின்றி செயப்படுபொருட்கள், வினைக்குரிய கருவி போன்ற பொருட்கள், சூழல், வினை சார்ந்த பிற செயல்பாடுகளைக் குறிக்கும் வினைகள் போன்றவை பொருளணுக்களாக நிற்க வல்லன எனலாம்.
தமிழ் மரபிலக்கணங்கள் ஒவ்வொரு சொல்லும் திணை, பால், எண், இடம் போன்றவற்றை வெளிக்காட்டுவதாகக் கூறுகின்றன. இது ஒருவகையில் பொருளணுப் பகுப்பாய்வோடு ஒப்பிட்டு நோக்குதற்குரியது. ஏனெனில் ஒவ்வொரு சொல்லும் உயர்திணை, அஃறிணை, விரவுத்திணை போன்றவற்றில் எவற்றையேனும் குறிப்பனவாக அமையும் என்ற அணுகுமுறை முழுவதும் பொருளணுப் பகுப்பாய்வு அணுகுமுறையே ஆகும். இவ்வணுகுமுறை இன்றைய மொழியியலில் பெரிதும் போற்றப்படுவதாக இருப்பினும் பழந்தமிழ் இலக்கணமான தொல்காப்பியத்தில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே இவ்வணுகுமுறை மேற்கத்திய மொழியியல் வளர்ச்சியில் மிகப் பிற்காலத்தில் தோன்றியது எனினும் பழந்தமிழில் முன்பே இருந்துள்ளதை இதன்வழி நிறுவமுடிகின்றது.
4. பொருளணுக்களின் வகைகள்
ஒரு சொல்லில் இருவகையான பொருளணுக்கள் இடம்பெறலாம். அவை மையக்கூறுகள், சார்புக்கூறுகள் என்று பாகுபடுத்தப்படுத்தப்படுகின்றன. சொற்கள் குறிப்பிட்ட பொருண்மையை வெளிப்படுத்துவதற்கு இந்தத் தலைமையான பொருளணுக்கள் அவசியமாகின்றன. இதன் அடிப்படையில் தலைமையான பொருளணுக்கள் மையக்கூறுகள் என்றும் ஏனையவைகளை சார்புக்கூறுகள் எனவும் வழங்குவர். ஆக்டன், ரிச்சர்ட்ஸ் போன்றோர் இம்மையக்கூறுகள் சொல்லின் பொருண்மையாக அமைவதாகவும் ஏனையவை அவ்வாறு அமைவதில்லை என்றும் குறி்ப்பிடுகின்றனர். ஆனால், சொல்லின் பொருளணுக்களில் இவ்விருவகை பொருளணுக்களும் பொருண்மை வெளிப்பாட்டில் முக்கியத்துவம் பெறுகின்றன. எனவே மேற்குறிப்பிட்ட கருத்து சிந்திக்கத்தக்கது. மையப் பொருளணுக்களை குறுகிய பொருளணுக்கள், பிரிப்புப் பொருளணுக்கள் என்றும், சார்புப் பொருளணுக்களை விரிந்த பொருளணுக்கள், தொகுப்புப் பொருளணுக்கள் என்றும் குறிப்பிடுவர்.
5. பொருளணுக்களின் உலகப் பொதுத்தன்மை
பொருளணுக்கள் உலகப் பொதுத்தன்மை வாய்ந்தவை என்று லையான்ஸ் குறிப்பிடுகின்றார். ஆனால் இக்கருத்து ஒரு மொழியில் உள்ள அனைத்துச் சொற்களுக்கும் பொருந்துவதன்று. ஏனெனில் சொல் என்ற மொழிக்கூறு பண்பாட்டுக்கூறுகளையும், சமூகச் சூழல்களையும் தனக்குள் கொண்டது. எனவே பண்பாடு சார்ந்த கூறுகள் சொல்லின் பொருளணுக்களாக நிற்கவல்லன என்பதால் மேற்கண்ட கருத்தும் சிந்தனைக்குரியதாகின்றது.
6. சொற்றொடர்புகளும் சொல்வகைப்பாடும்
ஒரு குறிப்பிட்ட பொருண்மைக்களத்தின் கீழ்வரும் சொற்களின் பொருளணுக்களைக் கண்டறிவதன் வாயிலாக அச்சொல் பிற சொற்களுடன் கொண்டிருக்கும் தொடர்புகளைக் கண்டறியமுடியும். பொதுவாக ஒரு சொல் பிற சொல்லுடன் ஒத்தல் (Idendity), உள்ளடங்கல் (Inclusion) வேறுபடல் (Disjunction), மேலூறல் (Overlapping) என்ற நால்வகைத் தொடர்புகளைக் கொண்டிருக்கும். இந்நால்வகைத் தொடர்புகளைக் கண்டறிவதன் மூலம் சொற்களை ஒருபொருள் குறித்த பலசொல் (Synonym), ஒரு மாதிரியான பொருண்மையைக் கொண்ட பல சொல் (Identical Synonym), உள்ளடக்கு சொல் (Hypernym), உள்ளடங்கு சொல் (Hyponym), பல பொருள் குறித்த ஒரு சொல் (Polysemy), எதிர்ச்சொல் (Opposition) என்று பாகுபடுத்தியறியலாம்.
உறங்கு, துஞ்சு, தூங்கு என்பனவும், வளர், கண்வளர் என்பனவும், துயில், கண்துயில் என்பனவும் முறையே ஒரே மாதிரியான பொருளணுக்களைக் கொண்டிருப்பதால் அவற்றை ஒரு பொருள் குறித்த பலசொற்கள் எனலாம்.
உறங்கு, சயனி, கண் அயர், கண்வளர் ஆகியன ஒன்றுக்கொன்று ஒத்த பொருளணுக்களோடு வேறுபட்ட பொருளணுக்களையும் கொண்டிருப்பதால் அவற்றை ஒரே மாதிரியான பொருண்மையைக் கொண்ட சொற்கள் (Identical Synonym) என்று குறிப்பிடுவர். உறங்குதல் தொடர்பான வினைகள் விழி என்ற வினையோடு முரண்பாடான பொருளணுக்களைக் கொண்டிருப்பதால் அவற்றை எதிர்ச்சொல் (Opposites or Antonyms) என்று குறிப்பிடலாம். சயனி என்பது உறங்குதலை மட்டுமின்றி படுத்திருத்தலை மட்டும் குறிக்கலாம் என்பதால் அது பல பொருள் குறித்த ஒரு சொல் (Polysemy) ஆகின்றது. உறங்குதல் என்ற சொல் இவ்வகுப்பில் வரும் சொற்களைப் பொருளணுக்கள் அடிப்படையில் தனக்குள் உள்ளடக்குவதால் அது உள்ளடக்கு சொல் (Hypernym) ஆகின்றது. ஏனையவை உள்ளடங்கு சொற்களாகின்றன (Hyponym). இவ்வாறு சொற்பாகுபாட்டுக்குப் பொருளணுப் பகுப்பாய்வு பயன்படுகின்றது.
7. பகுப்பாய்வின் பயன்
தமிழில் விரிவான விவரங்களைக் கொண்ட சொற்களஞ்சியங்கள் (Thesaurus), சொல் வலை (Wordnet) போன்றவற்றை உருவாக்கவும், மொழியிலுள்ள சொற்களின் பொருண்மை குறித்தும் பயன்பாடு குறித்தும் ஆழமான ஆய்வுகளை மேற்கொள்ளவும், சொல் வேறுபாடுகளையும் சொல் தொடர்புகளையும் கண்டறியவும் இப்பகுப்பாய்வு பயனளிக்கும் எனலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.