முன்னுரை
தொல்காப்பியர் கூறிய உள்ளுறை, இறைச்சி ஆகிய இரண்டும் கதை மாந்தர்களின் வாழ்க்கைப் புரிதலுக்கும் (இறைச்சி), கருத்தாடல் புரிதலுக்கும் (உள்ளுறை) பயன்படுகின்றன. இன்றைய நிலையில், அவை அகப்பாடல் கவிதைப் புரிதலுக்கு அவசியமான கருத்தமைவுகளாகவே உள்ளன. உள்ளுறை, இறைச்சி ஆகியவைகளுக்கு உரிய தொல்காப்பியரின் பொதுவிளக்கம், அவைகளுக்குள் உள்ள வேறுபாடு ஆகியவை மாறுபட்ட கருத்துக்கு உள்ளாகியுள்ளதை ஆராயலாம்.
இறைச்சிப் பொருள் - விளக்கம்
இறைச்சி என்னும் சொல் ‘இறு’ என்னும் சொல்லின் அடிப்படையில் தோன்றியது. தங்குதல் என்னும் பொருள் உடையது. கவிஞர்கள், தாம் கூறும் சொற்களுக்கு அடைமொழியாகக் கூறப்படும் பிற சொற்கள் தமது ஆற்றலால் பிறிதொரு பொருளைக் குறிப்பால் புலப்படுத்தி நிற்கும். அத்தகைய சொல் திறனை - புரிந்து - அறிந்து - உணர்ந்து கொள்ளும் நுட்பம் இறைச்சி எனப்படுகிறது.
உள்ளுறையைப் போலவே இறைச்சிக்கும் கருப்பொருளே அடிப்படையாக அமைகிறது. இதனைக் “கருப்பொருள் பிறக்கும் இறைச்சிப் பொருளே” (240) என்று நாற்கவிராச நம்பி குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சொல்லின் பொருள், அதனால் பெறப்படும் குறிப்புப் பொருள், இரண்டுக்கும் மேலாக மேலும் ஒரு குறிப்புப் பொருள் புலப்படுமாயின் அதுவே இறைச்சி என்றும் அறிஞர்கள் விளக்கம் கூறுவர். இதனை;
“அரும்பெறல் அமிழ்தம் ஆர்பத மாகப்
பெரும்பெயர் உலகம் பெறீஇயரோ
அன்னை தம்இல் தமதுண் டன்ன சினைதொறும்
தீம்பழம் தூங்கும் பலவின் ஓங்குமலை நாடனை வரும்என் றோளே” (குறுந்தொகை, 83)
இப்பாடலில் தோழி வெளிப்படையாகவே உரைக்கின்றாள். அப்போது இனிமை தரும் சுளைகளை உள்ளே கொண்டிருந்தும், வெளியே இன்னாத முட்களையுடையனவாய்க் காணப்படும் பலாக்கனிகளை உடைய நாட்டின் தலைவன் வருவான் என்று உரைக்கின்றாள்.
தோழி உணர்த்த விரும்பும் கருத்து
உள்ளத்தில், வரைந்து (மணந்து) கொண்டு இல்லறத்தொழுகி இன்பம் அடையும் எண்ணம் இருந்தும், புறத்தே இன்னல் தரும் களவிலே காதலுடையான்போல் காணப்பட்டான் தலைவன் என்பது, தோழி கூற்றின் புறத்தே பிறிதொரு பொருள் தோன்றினமையான் இப்பாடலில் இறைச்சி என்னும் பொருள் அமைப்பு உள்ளது.
உள்ளுறை - இறைச்சி : ஒற்றுமையும் வேற்றுமையும்
உள்ளுறை உவமம், இறைச்சி இரண்டும் சில ஒற்றுமைக் கூறுகளையும் வேறு சில நுட்பமான வேறுபாடுகளையும் உடையவை.
ஒற்றுமை
1) இரண்டும் குறிப்பால் அறியப்படுவன.
2) இரண்டும் கருப்பொருளின் அடிப்படையில் அமைவன.
3) இரண்டும் அகப்பாடலுக்கே உரியன.
வேற்றுமை
1) உள்ளுறையில் கருப்பொருள் தொடர்பான சொல்லும், பொருளும் அதனால் பெறப்படும் குறிப்புப் பொருளும் நேருக்கு நேர் பொருந்தி வரும். கருப்பொருள் உவமை போலவும், அதன் வழி நாம் குறிப்பாக உணர்ந்து கொள்ளும் உட்கருத்து உவமேயம் போலவும் அமையும்.
2) இறைச்சியில் கருப்பொருளும் உட்பொருளும் ஒத்து முடியாமல் எதிர் மறையாகவும் முடியலாம். சொற்பொருள் - அதற்கு இணையான குறிப்புப் பொருள் என்னும் இரண்டுக்கும் மேலாக வேறு ஒரு கருத்தும் வெளிப்படுவது இறைச்சியின் தனிப்பண்பாகும். புலவன் சொல்லுகின்ற உவமத்தோடு ஒத்துக் கூறக் கருதிய பொருள் வந்து முடியுமாறு அமைந்திருப்பது உள்ளுறை உவமம், புலவன் இயற்றிய செய்யுளின் பொருளுக்குப் புறத்தே தோன்றுவது இறைச்சி என்பது புலனாகின்றது.
சங்ககாலப் புலவர்கள், சங்கப் பாடல்களில் அக உணர்வை மறைமுகமாக, குறிப்பாக உணர்த்த, உள்ளுறை உவமை, இறைச்சி என்னும் இலக்கிய உத்திகளைப் (நயங்களை) பயன்படுத்தி, மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளனர். இவை இரண்டையும் ‘குறிப்புப் பொருள் உத்தி' எனவும் அழைப்பர். வெளிப்படையாகத் தெரியும் பொருளோடு வேறொரு பொருள் புலப்படுவதுபோல அமைப்பது உள்ளுறை உத்தியாகும். உள்ளுறை உத்தியில் உவமையைச் சொன்ன அளவில் உவமிக்கப்படும் பொருள் வெளிப்படையாக இருக்காது. உவமிக்கப்படும் பொருள், தெய்வம் ஒழிந்த கருப்பொருளாக இருத்தல் வேண்டும் என்பது இலக்கண விதியாக அமைந்திருக்கின்றன.
உள்ளே மறைவாகப் படிந்து இருக்கும் குறிப்புப் பொருளை உவமை ஆற்றலால் வெளிப்படுத்துவதால் இதனை உள்ளுறை உவமை என்றனர்.
உள்ளுறை உவமைக்கு நாற்கவிராச நம்பி தரும் இலக்கணம் பின்வருமாறு:
“ஆராய்ந்தறியும் பகுதியினையுடைத்தாய்ப் புள்ளொடும்
விலங்கொடும் பிறவொடும் தோன்றும் உள்ளுறை உவமை' (ஒழிபியல்-28)
அவற்றுள்,
”உள்ளுறையுவமம் உய்த்துணர் வகைத்தாய்ப் புள்ளொடும் விலங்கொடும் பிறவொடு புலப்படும்' (ஒழி-29)
இதற்கு எடுத்துக்காட்டுப் பாடலாக அமைவது,
“இழை விளையாடும் இளமுலை சாயற்கு இடைந்தமஞ்ஞை
கழை விளையாடும் கடிப்புனம் காத்தும் கலையகலாது
உழை விளையாடும் உயர் சிலம்பா! இன்னும் உன் பொருட்டால்
மழை விளையாடும் மதிற்றஞ்சை வாணன் மலையத்திலே
மானைப் பிரியாது கழை விளையாடும்”
என்பதனால், நீயும் தலைவியைப் பிரியாது விளையாட வேண்டும் என்ற பொருள் உள்ளுறை உவமம், விலங்கொடு தோன்றிப் புலப்படுமாறு அமைந்துள்ளது.
தொல்காப்பியர், எல்லையற்ற இன்பம் தருவதே உள்ளுறை அமைப்பதன் நோக்கம் என்பதை,
“அந்தமில் சிறப்பின் ஆகிய இன்பம்
தன்வயின் வருதலும் வகுத்த பண்பே” (பொரு-48)
என்று கூறியுள்ளார். குறிப்புப் பொருள் சார்ந்து இவ்வுள்ளுறை ஐந்து வகைப்பட்டு வரும் என்பதை தொல்காப்பியர், இதனை
“உடனுறை, உவமம், சுட்டுநகைச் சிறப்பென
கெடலரு மரபின் உள்ளுறை ஐந்தே” (பொரு-47)
என்று கூறியுள்ளார்.
உடனுறை உள்ளுறை, சுட்டு உள்ளுறை, சிறப்பு உள்ளுறை, உவம உள்ளுறை, நகை உள்ளுறை என்னும் ஐந்து உள்ளுறைகளைக் கூறிய அவர், உவம உள்ளுறையைப் பற்றியும்
(தொல்.அகத்.49,51) சிறப்பு உள்ளுறையைப் பற்றியும்
(தொல்.பொரு-50) சில கருத்துக்களைக் கூறி விளக்கியுள்ளார். இவ்வகை உள்ளுறைகளில் உவம உள்ளுறை நீங்கலாக, மற்றவை சங்க இலக்கியங்களுக்கு உரை வகுத்த உரையாசிரியர்களால் பாடல் உரையில் பொதுவாக விளக்கிக் காட்டப்படவில்லை.
நற்றிணைக்கு உரைவகுத்த பின்னத்தூர் நாராயணசாமியும், உவம உள்ளுறை என்பதையும் (இறைச்சி என்ற பெயரில்) வேறு உள்ளுறையையும் மட்டும் கூறிச் சென்றுள்ளார். இந்நிலையில், நற்றிணையில் ஐவகை உள்ளுறைகளும் பொருந்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இறைச்சி
இறைச்சி என்ற கோட்பாட்டினைத் தொல்காப்பியம் ஆறு இடங்களில் குறிப்பிடுகிறது. வடமொழியில் உள்ள ”தொனி'-கோட்பாடுடன் இதனை இணைத்துப் பார்க்கும் போக்கு தமிழறிஞர்களிடம் காணப்படுகிறது. கூறவந்த பொருள் வெளிப்படாது மறைவாக இருக்க, அதை உணர்த்த, வோறொரு பொருள் வெளிப்படையாக நிற்குமாறு அமைக்கும் இலக்கிய உத்தியே இறைச்சி.
“இறைச்சி தானே உரிப்புறத் ததுவே” (தொல்.1175)
மக்களின் காதல் ஒழுக்கங்கள் உரி, பிற உயிர்களின் காதல் செயல்கள் உரிப்புறத்தன. எனவே இறைச்சி என்பது உரிப்புறத்தது. இது எந்த ஒரு குறிப்புப் பொருளையும் சுட்டித் தன்னுள்ளே வேறொரு பொருள் தருவது. இலக்கியங்களில் பாடப்படும் இறைச்சியின் பொருளுக்கும், விலங்கினம்-பறவையினம் போன்ற கருப்பொருளுக்கும் உள்ள தொடர்பைக் கூறுவது. உயிரினங்களின் அன்புச் செயல்களை மிகுவிப்பன ”இறைச்சி' என்பர்.
தெய்வம் முதலாகிய கருப்பொருளின் கண்ணே பிறப்பதே இறைச்சிப் பொருள் என்பது அகப்பொருள் வரையறை.
“கருப்பொருட் பிறக்கும்
இறைச்சிப் பொருளே” (ஒழி-31)
கருப்பொருளின் வகைகளாக அகப்பொருள் பதினான்கு வகைகளைக் குறிப்பிடுகிறது.
“ஆரணங்கு (தெய்வம்), உயர்ந்தோர், தாழ்ந்தோர் (அல்லாதோர்), புள், விலங்கு, ஊர், நீர், பூ, உணவு, பறவை, யாழ், பண், தொழில் எனக் கருவீரெழுவதைத் தாகும்” (அகத்-19).
ஐந்து திணைகளுக்கு உரிய கருப்பொருள் இவையிவை என பொருள் தெளிவாகக் கூறுகின்றன.
வழியிடைக் காணப்படும் இயற்கையையும் அவற்றின் அன்புணர்வைத் தூண்டும் காட்சிகளையும், காதல் செய்திகளையும் குறிப்பது சிறப்பான ஒருவகை உணர்வை அடிப்படையாகக் கொண்ட குறிப்புணர்வு என்றும் இறைச்சியைக் கூறுவர். இதை ஆய்வு நோக்கில், கருப்பொருள் இறைச்சி, தெரிபொருள் இறைச்சி, குறிப்புப்பொருள் இறைச்சி என மூன்று வகையாகப் பிரிக்கலாம். அது அன்பு, காதல், அருள், மனிதநேயம் ஆகியவற்றுக்குத் தூண்டுதலாக அமையும். மனிதனின் உள்ளுணர்வாகிய காதலைத் தூண்டும் புறச்சூழல்களே இறைச்சி என்றும் கூறப்படுகிறது.
தெரிபொருள் இறைச்சி
தெரிபொருள் இறைச்சியில் கருப்பொருள்களின் செயல்களும் அவற்றிற்கான முடிவுகளும் உடன் கூறப்படும். இதனை
“விருந்தெவன் செய்கோ தோழி சாரல்
அரும்பர மலர்ந்த கருங்கால் வேங்கைச்
சுரும்பிமிர் அடுக்கம் புலம்பக் களிறட்டு
உரும்பின் உள்ளத்து அரிமா வழங்கும்
பெருங்கல் நாடன்” (நற்-112)
இப்பாடலில் வினைவயிற் பிரிந்த தலைவன் குறித்த பருவம் வந்ததும், அவன் வராதது கண்டு ஆற்றாமையில் வாடிய தலைவியை ஆற்றுவிக்கும் தோழி, அடுக்கம் புலம்பக் களிற்று யானையைக் கொன்று சிங்கம் இயங்கும் மலைநாடன் உன் தலைவன். எனவே, அவன் உனது பசப்பு வருந்திக் கெட, உனக்கு உண்டான காமநோயைப் போக்கி உன்னைவிட்டு அகலாமல் இருப்பான் என்பது குறிப்பு. இந்தக் கருப்பொருளாகிய களிற்று யானையின் செயல்களும் அவற்றிற்கான முடிவுகளும் உடன் கூறப்பட்டதால் இது இறைச்சிப் பொருளானது. நற்றிணையில் மட்டுமே 165 பாடல்கள் இறைச்சிப் பொருளில் அமைந்துள்ளன.
காதல் உணர்வைக் குறிப்பதற்கும், தூண்டுவதற்கும் தலைவனை நெறிப்படுத்துவதற்குமே இறைச்சிப் பொருள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சங்ககால மக்கள் தங்கள் மகிழ்ச்சியையும், மன வருத்தத்தையும் நேரடியாகக் கூறாமல் மறைமுகமாகக் கூற, “உள்ளுறை உவமை' மற்றும் ”இறைச்சி'யை இலக்கிய உத்திகளாகக் கையாண்டு கூறியுள்ளது நாகரிகத்தின் வெளிப்பாடு என்பதை விட உச்சநிலையைக் கடைபிடித்துள்ளனர் என்றே கூறத்தோன்றுகிறது.
நிறைவுரை
பழந்தமிழர்கள் ஒரு கருத்தை நேரடியாகக் கூறாமல் மறைமுகமாகக் கூற முற்படுவதையே உள்ளுறை, இறைச்சி என்று அறியப்படுகின்றன. இந்த உள்ளுறை இறைச்சியும் நுட்பமாக புரிந்து கொள்வதாக அமைகின்றன. இலக்கியப் பாடல்களில் கதை மாந்தர்களின் செயல்களை வெளிப்படையாக உணர்த்தாமல் மறைமுகமாக அன்பின் வலிமையை விளக்கியுள்ளனர். இந்த அன்பின் புலப்பாட்டினை அறிவதற்கு உள்ளுறையும் இறைச்சியும் இன்றியமையததாக அமைகின்றன.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.