கலித்தொகையில் குறியீட்டு உத்தி
முனைவர் பொ. இராதாஜெயலட்சுமி
முன்னுரை
பகுத்தறிவு பெற்ற மனிதர்கள் தங்கள் உள்ளுணர்வுகளையும், கருத்துக்களையும் எல்லா இடங்களிலும் எல்லாச் சூழ்நிலைகளிலும், எல்லோர் முன்னிலையிலும் வெளிப்படையாகக் கூற முடியாது. ஆகையால், பண்பாடு மிக்க மனிதர்கள் சூழ்நிலைக்கு ஏற்றாற் போல் உடலசைவுகள், சைகைகள், ஒலிகள், முகக்குறிப்புகள், இசைக்குறிப்புகள், அடையாளங்கள், எழுத்துக்கள், ஓவியங்கள் மற்றும் குறியீட்டுச் சொற்கள் போன்ற குறியீடுகளைப் பயன்படுத்தித் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தினர். இவ்வகையில் ஐம்புலன்களின் வழியாகவும், குறியீட்டுச் சொற்களின் வழியாகவும் தொடர்பு நிகழ்கின்ற விதம் பற்றி ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
குறியீடு
மனிதர்கள் பிறப்பு முதல் இறப்பு வரையிலும், ஏதாவது ஒன்றின் வாயிலாகத் தங்களது கருத்துக்களைப் பிறருடன் பரிமாறிக் கொள்கின்றனர். அப்போதே குறியீடும் தோற்றம் பெற்றது. குழந்தை பிறந்தவுடன் அழுது, தனக்குப் பசிக்கின்றது என்ற குறியீட்டுப் பொருளைப் பிறருக்கு உணர்த்துகிறது. வளர்ந்து வயது முதிர்ந்து இறக்கும் தருணத்திலும் சைகைகள் மூலம் தனது எண்ணங்களை வெளிப்படுத்துகின்றனர். இவ்வாறு மனித இனம் தோற்றம் பெற்றவுடனேயே குறியீடும் தோன்றிவிட்டது. உள்ளுணர்வுகளை நேரடியாகவும், உவமைகள், உருவகங்கள் வாயிலாகவும் வெளிப்படுத்த முடியாத நிலையில் குறியீடு தேவைப்பட்டது. சில காட்சிகளைக் கண்முன் கொண்டு நிறுத்தி உணர்த்த முடியாதப் பொருட்களைக் கூட அவற்றோடு இணைத்து நுண்பொருட்களுக்கு ஒரு வடிவம் கொடுத்து வெளிப்படுத்திக் காட்டுவதற்குக் கையாளும் இலக்கிய உத்தியே குறியீடாகும். தொடர்ந்து கருத்துப் புலப்பாட்டு ஊடகமாக இன்று வரையிலும் இக்குறியீடுகள் திகழ்கின்றன.
குறியீட்டின் தேவை
ஒரு படைப்பாளன் தனது உள்ளத்து உணர்வுகளை உள்ளபடியே வெளிப்படுத்த இயலாதவாறு புறக்கூறுகள் தடையாகும் நிலையில், அவனுக்கு குறியீடுகள் பெரிதும் தேவைப்படுகின்றன. இக்குறியீடுகளின் அடிப்படை நோக்கங்களாக,
“மறைத்துக் கூறல், குறித்துக் காட்டல் என்னும் இவ்விரு கூறுகளும் மிகப் பழங்காலந்தொட்டே தமிழ் இலக்கண இலக்கிய மரபுகளில் இருந்து வந்துள்ளன” (தமிழ் நூல்களில் குறிப்புப் பொருள்)
என்று ம.ரா.போ. குருசாமி குறிப்பிடுகின்றார்.
குறியீடு ஒருவருடைய மனக்குறிப்பை ஓர் அறிகுறியாகவும், அடையாளக் குறியாகவும் வெளிப்பட்டுச் சமுதாயத்தில் கருத்துப் புலப்படுத்தம் செய்ய மக்களுக்குப் பெரிதும் தேவைப்படுகிறது. சுருங்கக் கூறி விளங்க வைத்தலுக்காக மொழியில் பயன்படுத்தப்படும் ஒரு சிக்கன அலகு (Economic Unit) குறியீடாகும். அதாவது மொழியியல் குறி அந்தந்த மொழியினருக்கும், குழுஉக்குறி அந்தந்தக் குழுவினருக்கும் மட்டுமே விளங்க வைப்பதற்கும், மனிதனுக்குப் பெயரிட்டு அடையாளங் காணுதற்கும் கூடக் குறியீடு தேவைப்படுகிறது. சான்றாக,
“விளக்க முடியாத பொது உணர்வுகளையோ, கருத்துக்களையோ விளக்க அனைவருக்கும் எளிதில் புரியும் பொதுவான காட்சிப் படிமம் ஒன்றைக் குறியீடாகக் கவிஞன் கையாள்வானெனில் அதுவே பொதுக்குறியீடு என்றழைக்கப்படும்” (ஜஜி.ஜான்சாமுவேல், திறனாய்வு சிந்தனைகள் (ப.எ.145, 146))
என்றும்,
“படைப்பவனின் உள்ளத்தில் தோன்றுகின்ற தனிப்பட்ட உணர்வுகளையும் தனித்த சிந்தனைகளையும் வெளியிட பிறருக்கு எளிதில் விளங்காதக் காட்சிப் படிமங்களைக்
குறியீடாக அமைப்பதைத் தனித்த குறியீடுகள் என்றழைக்கலாம்” (ஜஜி.ஜான்சாமுவேல், திறனாய்வு சிந்தனைகள் (ப.எ.146))
என்றும் ஜி.ஜான்சாமுவேல் குறிப்பிடுகின்ற கருத்து இங்கு சுட்டத்தக்கது. இவற்றையே மேல்நிலைப் பொருளுணர்தல், ஆழ்நிலைப் பொருளுணர்தல் என்று குறிப்பிடுகின்றோம்.
குறியீட்டு உத்தி
இலக்கியம், சிற்பம், ஓவியம் போன்ற நுண்கலைகளிலும், நாடகம், திரைப்படம், விளம்பரம் போன்ற ஊடகக் கலைகளிலும், வழிபாடு, சடங்கு போன்ற மனிதச் சமுதாயத்தின் அன்றாட வாழ்வியற் கூறுகளின் பலநிலைகளிலும், பல இலக்கியப் பனுவல்கள் என்ற பல மொழித்தளங்களிலும் குறியீடு ஓர் பயன்பாட்டு உத்தியாகவே பயன்பட்டு வருகிறது. ஒரே பனுவலிலும் கூடப் பல நிலைகளிலும் குறியீட்டு உத்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றையெல்லாம் நோக்கும் போது, குறியீடு என்பது காலம், இடம், மொழி, இனம், ஊடகம், வடிவம், வகை போன்ற எல்லா வரம்புகளையும் மீறிய வரம்பில்லா பயன்பாட்டு உத்தியாகவே திகழ்கின்றது என்று கூறலாம்.
இலக்கியங்களில் குறியீடு
சங்க இலக்கியங்கள் தொடங்கி, நவீன இலக்கியங்கள் வரையிலும் தமிழ் இலக்கிய மரபில் இடையீடுபடாத பயன்பாட்டுக்கு உரியதாகத் திகழும் வெளிப்பாட்டு உத்திகளுள் குறிப்பாலுணர்தலும் ஒன்றாகும். இலக்கிய மொழித்தளத்தில் குறிப்பாக அக இலக்கியங்களில் குறிப்புப் பொருளுணர்த்தும் வெளியீடாகவும், ஒரு பொருள் அல்லது ஒரு செயல் அல்லது ஒரு நிகழ்ச்சி போன்றவற்றை வெளிப்படுத்தும் குறியீடாகவும், மேல்நிலைப் பொருளுணர்தல், ஆழ்நிலைப் பொருளுணர்தல் என்ற இரு நிலைகளிலும் குறியீட்டு உத்தி பயன்படுத்தப்படுகின்றது. அக இலக்கியங்களில் ஆழ்நிலையில் தலைவன் தலைவியர் கூடுதல் மற்றும் பொருளுணரச் செய்தலே குறியீட்டின் உயரிய நோக்கமாகும். அக இலக்கியங்களைப் பொருத்த வரையில் தனித்துவக் குறியீடுகளே மிகுதியாக இடம் பெறுகின்றன.
அகம் என்ற குறியீட்டின் முதற்பொருள் ‘உள்’ என்பதாகும். இரண்டாவது பொருள் ‘தலைவன் தலைவி இருவரின் அன்பு அடிப்படையிலான இன்பக் காதல்’ என்பதாகும். தமிழ் இலக்கியங்களில் பயிற்சி பெற்ற எவரும் ‘அகம்’ என்று கூறியவுடன் ‘உள்ளத்தில் நிகழ்வது’ என்று அது உணர்த்தும் குறிப்புப் பொருளை உணர்ந்து கொள்வதால் அது தனித்துவக் குறியீடாகும். அக வாழ்வு ‘களவு’, ‘கற்பு’ என்ற இரு பிரிவுகளை உடையது. இவை ‘களவொழுக்கம்’, ‘கற்பொழுக்கம்’ ஆகிய ஒழுக்கங்களுக்குப் பதிலியாக அமைவதால் அவையும் குறியீடுகளாயின. கற்பிற்கு களவே அடிப்படை என்பது வெளிப்படையான கருத்தாகும்.
கலித்தொகையில் குறியீடு
கலித்தொகை 150 பாடல்களைக் கொண்டமைந்துள்ளது. இது பா வகையால் பெயர் பெற்ற நூலாகும். இவற்றில் பல பாடல்கள் ஓரங்க நாடகம் போல் அமைந்து குறியீட்டுப் பொருட்களை வெளிப்படுத்துகின்றது. ‘கற்றறிந்தார் ஏத்தும் கலி’ என்றும், ‘கல்வி வலார் கண்ட கலி’ என்றும் பழம் புலவர்களால் பாராட்டப்பட்ட இந்நூல் பல நிலைகளில் நின்று பல வகையான குறியீட்டுப் பொருட்களை வெளிப்படுத்துகின்றது. சான்றாக, ‘முல்லை’ என்ற சொல்லிற்கு ‘மலர்’ என்ற மேல்நிலைப் பொருளையும், ‘கற்பு’ என்ற ஆழ்நிலைப் பொருளையும் புலப்படுத்துகின்றது. மேலும், சொற் குறியீடு, சொல்லல்லாக் குறியீடு ஆகிய நிலைகளிலும் கருத்துப் புலப்பாடு நடைபெறுகின்றது.
இரவுக்குறி வந்து மீண்ட தலைவனுக்குத் திருமணத்தை விரைவுபடுத்த எண்ணிய தோழி, அருள் பெற்றவன் ஆக்கம் போல செல்வப் பொலிவு பெற்ற தலைவியின் அழகைப் புறங்கூறும் மக்களிடமிருந்து காப்பதற்குரியப் பொருள் உண்டெனில் கூறுவாயாக என்று குறியீட்டுப் பொருள் உணரும்படி வினவினாள் என்பதை,
“அறம் சாரான் மூப்பெ போல் அழிதக்காள் வைகறை
திறம் சேர்ந்தான் ஆக்கம்; போல் திருத்தகும்; அத்திருப்
புறங்கூற்றுத் தீர்ப்பது ஓர் பொருள் உண்டேல் உரைத்ததைக்
காண்” (கலித்தொகை பா.எ.38)
என்ற கலித்தொகை பாடல் கூறுகின்றது.
தலைவி, தலைவன் தன்னை மணம் செய்யக் காலம் தாழ்த்துகின்றான் என்ற வருத்தத்தில், அவன் சிறைப்புறமாக நிற்க, தேனை உண்ட வண்டு மீண்டும் அம்மலரைத் தேடிச் செல்லாது. வேறொரு மலரை நாடிச் செல்லும் அவ்வண்டு போல என் நலம் நுகர்ந்து நான் வாடுமாறு செய்து விட்டுப் பிரிந்து சென்றுவிட்டான் என்று குறியீட்டுச் சொல்லால் உணர்த்துவதை,
“பெண்டிர் நலம் வௌவி, தண்சாரல் தாது உண்ணும்
வண்டின் துறப்பான் மலை” (கலித்தொகை பா.எ.40)
என்ற பாடல் வெளிப்படுத்துகின்றது.
தலைவன் தலைவியர் தங்கள் உள்ளுணர்வுகளைக் கண், காது, மூக்கு, மெய், வாய் ஆகியவற்றின் வழி வெளிப்படுத்துகின்றனர். அதாவது கண்ணால் கண்டும், காதால் கேட்டும், நாவால் சுவைத்தும், மூக்கால் நுகர்ந்தும், உடம்பால் தொட்டும் என்று ஐம்புலன்களாலும் தொடர்புகள் நிகழ்கின்றன.
தலைவி தன் மன மகிழ்ச்சியால் தோன்றிய முறுவலை நாணம் தோன்ற, அடக்கிக் கொண்டு கண்களிலும், முகத்திலும் வெளிப்படுத்தினாள் என்பதை,
“ஔநுதல் ஆயத்தார் ஓராங்குத் திளைப்பினும்
முள்நுனை தோன்றாமை முறுவல் கொண்டு அடக்கி, தன்
கண்ணினும் முகத்தினும் நகுபவள்” (கலித்தொகை பா.எ.66)
என்ற பாடலடிகள் புலப்படுத்துகின்றன.
தொடு உணர்வால் மெய் தீண்டப்படுவதால் உணர்வுகள் தூண்டப்படுகின்றன. இவற்றினால் சில செய்திகள் பெறப்படுகின்றன. இம்மெய்யுணர்வு எல்லா உயிரினங்களுக்கும் உரியது. உள்ளத்து உணர்ச்சிகளை மற்றவர்களுக்குப் புலப்படும்படி உடலுறுப்புகளை அசைத்தல், சைகை காட்டுதல் முதலிவற்றால் உணர்வுக் குறிப்புகள் வெளிப்படும் என்பதற்குச் சான்றாகக் கலித்தொகையில்,
“ஓய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான்;
மேல் மெய் அறியாதேன் போல் கிடந்தேன் மன் ஆயிடை
மெய் அறிந்து ஏற்று எழுவேனாயின், மற்று ஒய்யென
ஒண்குழாய்! செல்க’ எனக்கூறி, விடும்பண் பின்
அங்கண் உடையன் அவன்” (கலித்தொகை பா.எ.37)
என்ற பாடலடிகள் இடம்பெற்றுள்ளன.
இன்பம் பெற எண்ணிய தலைவி கை நெகிழ்வது போல காட்டி, தலைவன் மார்பின் மேலே வீழ்ந்து கிடந்தாள். அவனும் உண்மை என்று நினைத்து எடுத்து அணைத்துக் கொண்டான். உண்மையறிந்து தன்னை விடுவித்துக் கொள்ள நினைத்து செல்க! என்று தலைவன் கூறும் பண்பு, தலைவியிடம் அவனுக்கு விருப்பமுள்ளதைத் தெரிவிக்கின்றது.
முடிவுரை
பண்பாடுமிக்க பழந்தமிழர்கள் எண்ணங்களையும், கருத்துகளையும் உடலசைவுகள், சைகைகள், குறியீட்டுச் சொற்கள் ஆகியவற்றின் மூலம் வெளிப்படுத்தித் தொடர்பு கொண்டனர். அவற்றை வருங்கால சந்ததியினருக்குப் புலப்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கோடு பதிவு செய்து வைத்துள்ளனர். அவையே சங்க இலக்கியங்களாக மிளிர்கின்றன. இந்தச் சங்க இலக்கியங்களிலிருந்து சுட்டப்பட்டுள்ள மேற்கண்ட சான்றுகளிலிருந்து கண்ணையும் முகத்தையும் பார்த்துப் பெறப்படும் தொடர்புகள் உண்மையானதாகவும், நேர்மையானதாகவும் இருக்கும் என்பதையும், அவ்வகைக் குறியீட்டுத் தொடர்பு பெறுநரின் மனத்தில் ஆழப்பதிந்து செயல்படத் தூண்டும் என்பதையும் அறிய முடிகிறது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.