சங்கஇலக்கியத்தில் விருந்தோம்பல்
முனைவர் வே. தனுஜா
(உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, எஸ். ஆர்..எம்..கல்லூரி, சாத்தூர்)
சங்க இலக்கியங்கள் பழந்தமிழரின் பண்பாட்டினையும் சிறப்பினையும் வெளிப்படுத்துவனவாக அமைகின்றன. அவை மக்களின் பழக்க வழக்கங்களையும் வாழ்க்கை முறைமையினையும் விளக்குகின்றன. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் சிறப்பினை அவர்களது விருந்தோம்பல் மூலம் அறிய இயலுகின்றது. சங்க இலக்கிங்கள் வழி அறியலாகும் சங்ககால மக்களின் விருந்தோம்பும் பண்பினை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
தொல்காப்பியர் சுட்டும் விருந்து
தொல்காப்பியர் புதிதாகத் தோன்றும் எல்லா இலக்கியங்களையும் விருந்து என்ற சொல்லில் குறிப்பிடுகிறார்.
“விருந்தே தானும்
புதுவது புனைந்த யாப்பின் மேற்றே” (பொருள் 1495)
என்ற நூற்பா இதனை விளக்கும். இதன் அடிப்படையிலேயே புதியதாக வருபவர்களை விருந்து என்று குறிப்பிட்டுள்ளனர்.
விருந்து
மனிதன் தான் தோன்றிய நாளிலிருந்தே உணவு தேடுவதைத் தன் தொழிலாகக் கொண்டிருக்கின்றான். உணவு, மனித வாழ்வில் மிக உயர்ந்த ஒன்றாக இருந்துள்ளமைக்குத் தமிழரின் விருந்தோம்பல் பண்பே சான்றாகிறது. சங்க காலத்தில் உணவுகள் நிலத்தின் அடிப்படையிலும், தொழிலின் அடிப்படையிலும், வளத்தின் அடிப்படையிலும் அமைந்திருந்தன. அத்தகைய உணவு எல்லோருக்கும் கிடைக்க வேண்டுமெனில் உணவு இருக்கின்றவர்கள் உணவு இல்லாதவர்களுக்குப் பகுத்துக் கொடுக்க வேண்டும். இவ்வாறு பகுத்துண்ணும் முறை இனக்குழுச் சமுதாயத்தில் தோன்றியது எனலாம்.
பகிர்ந்துண்ணல்
ஆதிச்சமுதாய அமைப்பாக (social institution) உலகெங்கும் இனக்குழுக்கள் நிலவின. தமிழகத்தின் இனக் குழுக்கள் திணைகளின் அடிப்படையில் பாகுபடுத்தப்பட்டிருந்தன. குறிஞ்சித் திணைப் பாடல்களில் வேட்டைச் சமூகத்தின் கூறுகளைக் காணமுடிகிறது. இச்சமூகத்தில் தனியுடைமைக்கு இடமும் வாய்ப்பும் இல்லை. வேட்டையாடிய பொருள் அந்த இனக்குழு முழுவதற்கும் பகிர்ந்தளிக்கப்பட்டன. அந்த அடிப்படையில் சங்க இலக்கியங்களில் பகிர்ந்துண்ணும் முறையைக் காணமுடிகிறது.
“கானவன் எய்த முளவுமான் கொழுங்குறை
தேங்கமழ் கதுப்பின் கொடிச்சி கிழங்கொடு
காந்தளம் சிறுகுடி பகுக்கும்” (நற் - 85:8-10)
என்ற பாடல் அடிகளும்
“கானவன் வில்லின் தந்த வெண் கோட்டு
ஏற்றை புனை இருங்கதுப்பின் மனையோள் கெண்டி
குடி முறை பகுக்கும் நெடுமலை நாட” (நற் -336:3-6)
என்ற பாடல் அடிகளும் குறிஞ்சி நிலத் தலைவி உணவினைத் தன் குடிமுறைக்குப் பகுத்ததாகக் குறிப்பிடுகின்றன. சங்க இலக்கியங்களில் பதிவான இவ்வேட்டைச் சமூக அமைப்பினை இன்றும் சில பழங்குடிகளிடம் காணமுடிகிறது. மலேசியாவில் வாழும் சிமாயப் பழங்குடியின் வேட்டைக் குழுவானது பல நாட்கள் திரிந்து இறுதியாகப் பெரிய காட்டுப் பன்றியை வேட்டையாடும். அதனைக் குடியிருப்புப் பகுதிக்குக் கொண்டு வந்தவுடன் குழுவினர் அனைவரும் ஒன்று கூடுவர். கிடைத்த இறைச்சியை அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்து கொடுப்பர். சத்தியமங்கலம் வனப்பகுதியில் வாழும் சோளகர் சமூகம் இதே போன்ற பகிர்வு முறையினை கடைபிடித்து வருகிறது என்பர்.
பகிர்ந்துண்ணும் வழக்கம் மாறிய சூழல்
இனக்குழுச்சமூகத்தில் பகிர்ந்துண்ணும் பழக்கம் மாறி, ஈதல், விருந்து என்னும் பழக்கம் உருவானதன் பின்புலம் ஆய்விற்கு உரியதாக அமைகிறது. இனக்குழுச் சமூக நாகரீகத்தில் மலைப்பகுதியில் வாழ்ந்த மக்களும் வேளாண் அறியப்படாத நிலையில் இருந்த பரதவர்களும் சிறு சிறு குடிகளில் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தமக்குள் பண்டமாற்று முறையினையேப் பெரும்பாலும் கடைபிடித்து வந்தனர். இவர்களுக்குள் பகிர்ந்துண்ணும் பண்பே மேலோங்கி இருந்தது. இக்குழுச் சமூகத்தில் சேகரித்த உணவைக் கூறு போட்டு பகிர்ந்து கொள்ளும் வழக்கம் நிலவியது.
முடிவேந்தரின் உடைமைச் சமூகத்தில் வேளாண்மை, வாணிபம், போர் ஆகியவை உடைமைகளை உருவாக்கின. பகிர்ந்து கொள்ளுதல் என்ற நிலை மாறி உடைமை, உரிமையற்றோர் என்ற வேறுபாடுகள் உருவாகத் தொடங்கின. உடைமையாளனிடம் உரிமையற்றோர் இரந்து கேட்க, ஈகை என்ற பெயரில் புதிய சமூக உறவுகள் தோன்றலாயின. இரவலர்கள் வந்து பொருள் பெற்றுச் செல்வது ஒரு வீட்டின் செல்வ நிலைக்கு அடையாளமாகப் போற்றப்பட்டது.
இல் என இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு (கலி 2: 15 )
என்று ஈயாமையின் இழிவும் வலியுறுத்தப்பட்டது. தலைவன் இதன் பொருட்டே தலைவியை நீங்கி பொருள் வயிற் பிரிந்தான். விருந்தோம்பலும் கடமையாக்கப்பட்டது.
விருந்தோம்பல்
விருந்தோம்பல் என்ற சொல்லில் உள்ள ‘விருந்து’ என்ற சொல் ‘புதுமை’ என்றும், ‘ஓம்பல்’ என்ற சொல் ‘பாதுகாத்தல்’, ‘சிறப்புச் செய்தல்’ என்றும் பொருளினைத் தருகின்றன. எனவே, விருந்தோம்பல் என்ற சொல் தம் இல்லம் தேடி வரும் புதியவர்களுக்கு உணவளித்து சிறப்புச் செய்யும் விருந்தறத்தையே குறிக்கின்றது எனலாம். தொல்காப்பியர்,
“விருந்து புறந்தருதலுஞ் சுற்றம் ஓம்பலும்
பிறவு மனை கிழவோன் மாண்புகள்” (தொல். 3:150)
என்று குறிப்பிடுகிறார். இதன்வழி ‘விருந்து புறந்தருதல்’ இல்லறப் பெண்களுக்குரிய மாண்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது எனலாம்.
“அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும்” (நற் - 142:9 )
என்ற பாடல் அடி விருந்தினர் எந்த நேரத்தில் வந்தாலும் விருந்தோம்பும் தலைவியின் சிறப்பைப் புலப்படுத்துகின்றது.
“விளைக வயலே வருக இரவலர்
என வேட்டோளே யாயே” (ஐங்-2 1-2 )
என்ற பாடல் அடிகள் இரவலரை உபசரிக்க எண்ணும் தலைவியின் உயர்ந்த எண்ணத்தை வெளிக்காட்டுகின்றன.
“வான் வழங்கு இயற்கை வளி பூட்டினையோ
மான் உரு ஆக நின் மனம் பூட்டினையோ?
உரைமதி வாழியோ வலவ என தன்
வரை மருள் மார்பின் அளிப்பனன் முயங்கி
மனைக் கொண்டு புக்கனன் நெடுந் தகை
விருந்து ஏர் பெற்றனள் திருந்திழையோளே” (அகம்384 :8-13 )
என்ற பாடல் அடிகள் தலைவன் உடன் அழைத்து வந்த தேர்ப்பாகனையும் விருந்தாக எண்ணி தலைவி விருந்தோம்பிய நிலையினைக் குறிப்பிடுகின்றன.
விருந்து பேணும் முறைமை
வீட்டிற்கு வரும் புது உறவினரை வரவேற்று உணவிடுவதே விருந்தாகும். அவ்வாறு வரும் விருந்தினர்களை முகமலர்ச்சியோடு வரவேற்க வேண்டும். இல்லையெனில், விருந்தினர் மனம் புண்படும் என்பதை,
“மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து” (குறள். 90)
என்ற குறளின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.
அமிழ்தமே கிடைத்தாலும், அதனைத் தனித்து உண்ணாது வரும் விருந்தினர்க்குக் கொடுத்து உண்பவரை இவ்வுலகம் வாழ்த்தும் என்பதனை,
“உண்டாலம்ம இவ்வுலகம் இந்திரர் அமிழ்தம்
இயைவதாயினும் இனிதென தமியர் உண்டலுமிலரே” (புறம்.182)
என்ற அடிகளின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.
மேலும் தந்தை வழிச் சமுதாயத்தில் இனக்குழு வாழ்க்கை மாறத் தொடங்கிய நிலையில் பெண் இல்லப் பொறுப்பை ஏற்கும் முறை உருவாகியது. இந்நிலையில் விருந்தோம்பலில் பெண்ணின் பங்களிப்பு அதிகமாகும் நிலை உருவாகியது. இதனைப் பெண் ஆதிக்கத்திற்கு வர ஆணாதிக்கத்தால் சில கடமைகள் பெண்ணிற்குச் சுமத்தப்பட்டன.
1.கணவன் கூறுவதற்கு முன்பே முகக்குறிப்பறிந்து பணி செய்தல்
2. விருந்தோம்பலில் வந்தவர்க்கு முக மலர்ச்சியோடு வேண்டுவன செய்தல் ஆகியவையாகும்
அபிதான சிந்தாமணி, விருந்தினர்களை உபசரிக்கும் தன்மைகளாக ஒன்பது முறைகளைக் குறிப்பிடுகிறது.
1. முகமலர்ச்சியுடன் இன்சொல் கூறல்
2. கால் கழுவ நீர் தருதல்
3. இருக்க மனை தருதல்
4. சோறிடுதல்
5. பருக நீர் தருதல்
6. தாம்பூலம் தருதல்
7. படுக்க இடம் கொடுத்தல்
8. படுக்கப் பாய் தருதல்
9. பிரயாணம் செய்தால் வழிவிடல்
ஆகிய ஒன்பது முறைகளைப் பின்பற்றி நடப்பதே தலைச்சிறந்த உபசரிப்பாக அமையும் என்று கூறியுள்ளனர்.
பொருநராற்றுப்படை சுட்டும் விருந்தோம்பல்
விருந்தினரை ஓம்பும் முறையினைப் பெரும்பாணாற்றுப்படை
“கேளிர் போல கேள் கொளல் வேண்டி
வேளாண் வாயில் வேட்பக் கூறி
கண்ணில் காண நண்ணு வழி இரீஇப்
பருகு அன்ன அருகா நோக்கமொடு
உருகுபவை போல் என்பு குளிர் கொளீஇ” (பொருநராற்றுப்படை74-88 )
என்று குறிப்பிடுகிறது. விருந்தினரிடம் நண்பன் போல் உறவு கொண்டு இனிய சொற்களைக் கூறி அன்பு கொள்ள வேண்டும் என்பதனை இதன் வழி அறியலாகின்றது.
பெரும்பாணாற்றுப்படை சுட்டும் விருந்தோம்பல்
விருந்தினர்களுக்கு உணவளிக்கும் முறைமையினைப் பெரும்பாணாற்றுப்படை
“கொடு வாள் கதுவிய வடுஆழ் நோன்கை
வல்லோன் அட்ட பல் ஊன் கொழுங்குறை
அரி செத்து உணங்கிய பெருஞ்செந்நெல்லின்
தெரி கொள் அரிசித் திரள் நெடும் புழுக்கல்
அருங்கடித் தீம் சுவை அமுதொடு பிறவும்
விருப்புடை மரபின் கரப்புடை அடிசில்
மீன் பூத்தன்ன வான்கலம் பரப்பி
மகமுறை மகமுறை நோக்கி முகன் அமர்ந்து
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி” (471- 479 )
என்ற பாடலடிகள் ஊன் கலந்த உணவினைப் பல்வேறு கிண்ணங்களில் பரப்பி தாய் பிள்ளைகளுக்கு ஊட்டுவது போல இன்பமுடன் உணவு அளித்தமையைக் குறிப்பிடுகின்றன.
மக்கள் விருந்தோம்பும் முறை
மன்னர்கள் மட்டுமின்றி மக்களும் விருந்தோம்பிய முறைமையினை ஆற்றுப்படை நூல்கள் குறிப்பிடுகின்றன. நெய்தல் நில மகளிர் சூடான குழல் மீனை அளித்து விருந்தோம்பும் முறையை
“அறல் குழல் பாணி தூங்கியவரோடு
வறல் குழல் சூட்டின் வயின் வயின் பெறுகுவீர்” (162-163)
என்ற பாடலடிகள் விளக்குகின்றன.
எயிற்றியர் இனிய புளிக்கறி இட்டுச் சமைத்த உணவினை காட்டுப்பசு இறைச்சியுடன் விருந்தளிக்கும் முறையை
“எயிற்றிர் அட்ட இன்புளி வெஞ்சோறு
தேமா மேனிச் சில்வளை ஆமொடு
ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவீர்” (175-177)
என்ற பாடலடிகள் விளக்குகின்றன.
புறநானூறு குறிப்பிடும் விருந்தோம்பல்
மலையும் மலை சார்ந்த இடமான, குறிஞ்சி நிலத்தில் வாழும் மக்கள் தம் இல்லம் நாடி வரும் விருந்தினர்களுக்கு வரகையும், திணையையும் விருந்தாக அளித்துள்ளனர். வரகும், தினையும் சில காலங்களில் தீர்ந்து விட்ட நிலையில் விதைப்பதற்காக வைத்திருந்த விதைத்தினையை உரலில் இட்டுக் குற்றி சோறுபடைத்து விருந்தினர்க்கு அளித்தமையை
“ ... ... ... மனையோள் விரும்பி
வரகும் தினையும் உள்ளவை எல்லாம்
இரவலர் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தென
குறித்த மாறு எதிர்ப்பைப் பெற அமையின்
குரல் உணங்கு விதைத் தினை உரல்வாய் பெய்து
சிறிது பட்டன்றோ இலளே” (புறம் - 333 : 8 - 13)
என்ற அடிகள் விளக்குகின்றன.
பறம்பு நாட்டு மலைவாழ் குறத்தி நறு நெய்யிலே கடலையை வறுத்து, அதனோடு சோறும் சமைத்து விருந்தினர்க்குக் கொடுத்தாள். இதனை,
“நறுநெய்க்கடலை விசைப்ப, சோறுஅட்டு
பெருந்தோள் தாலம் பூசல் மேவர்”
(புறம்.27 : 7-9)
என்ற அடிகளின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.
வேட்டுவன் மனைவி மான் தோலில் உலர வைத்தத் தினையரிசியைக் கானக் கோழியும், இதனும் கவர்ந்து விட்டமையால் தினையரிசிச் சோற்றைப் பாணனுக்குக் கொடுத்து விருந்தறம் பேண முடியாது ஆகலின், ஆரல் மீனினைச் சந்தன விறகில் மணம் நாறும்படி சுட்டுத் தந்து உபசரித்தாள் என்பதனை, வீரவெளியனார்,
“கானக் கோழி யொடிதல் கவர்ந்துண்டென
ஆர நெருப்பின் ஆரல் நாறத்
தடிவார்ந்திட்ட முழுவள்ளுரம்
இரும்பேரொக்கலொ டொருங்கினி தருந்தித்
தங்கினை சென்மே பாண! ... ... ...” (புறம் - 320 : 11 - 15)
என்ற அடிகளின் மூலம் விளக்கியுள்ளார்.
வயலும் வயல் சார்ந்த மருதநிலத்தில் வளம் நிறைந்த நிலப்பரப்பை மென்புலமன்றும், வளமற்ற நிலத்தை வன்புலம் என்றும் பெயரிட்டு அழைத்தனர். வளமில்லாத வன்புலத்தில் வாழும் மக்கள், மென்புலத்திற்கு இடம் பெயர்வதுண்டு. அப்பொழுது மென்புலத்தார் வன்புலத்தாரை விருந்தினராக ஏற்று விருந்தறம் பேணினர்.
விளைந்த நெல்லை அறுவடை செய்யும் காலத்தில், வயல்களில் உள்ள யாணர்த்தாகி அரிநர்கடைமடைகளிலிருந்து வாளை மீன்களையும், உழவர்கள் ஆமையையும், கரும்புக் காடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தேனையும், பெரிய நீர்த்துறைகளிலிருந்து பெண்கள் கொண்டு வந்த செங்கழுநீர்ப் பூவையும் விருந்தினர்களுக்கு விருந்தோம்பினர்.
இதனை,
“பெருவிறல் யாணர்த் தாகி அரிநர்
கீழ்மடைக் கொண்ட வாளையும் உழவர்
படைமிளிர்ந் திட்ட யாமையும் அறைநர்
கரும்பிற் கொண்ட தேனும் பெருந்துறை
நீர்தரு மகளிர் குற்ற குவளையும்
வன்புலர்க் கேளிர்க்கு வருவிருந்தயரும்
மென்புல வைப்பின் நன்னாட்டுப் பொருந” (புறம்.42 : 12-18)
என்ற அடிகளின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.
இவற்றின் வாயிலாகச் சங்ககாலத்தில் மன்னர் மக்கள் என்று வேறுபாடு இல்லாமல் விருந்திற்கு அளித்த முதன்மையையும், நிலத்தின் தன்மைக்கு ஏற்ப விருந்தளிக்கும் முறைமையினையும் அறிந்து கொள்ளலாகின்றது.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.