எட்டுத்தொகை நூற்களில் காணப்படும் பண்கள் பற்றிய குறிப்புகள்
முனைவர் நா. கிரீஷ் குமார்
இசைத்துறை,
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
அண்ணாமலைநகர்-608002
முன்னுரை
பண் என்பது பாடல்களில் அமைந்துள்ள இசையின் முறை நிலையாகும். ஒலியானது செம்மையான முறையில் ஒழுங்கான இசை அமைப்புடன் பாடலில் பொருந்தி நுட்ப உணர்வால் அடையாளம் காணத்தக்க நிலையில் ஒலி உருவங்களாக அமைவது பண்ணாகும். பண்கள் பலவகையான அமைப்பு முறைகளைக் கொண்டுள்ளது. இனிமையான உணர்வுத் தன்மைகளைத் தன்னுள்ளே கொண்டது. பண் என்பது மனித மனத்தைக் கவரும் ஆற்றலுடையது.
பண்டைத் தமிழ் மக்கள் பண்களைப் பற்றி எந்த அளவுக்கு அறிந்துள்ளனர் என்பதற்குச் சங்க இலக்கியம் சில குறிப்புக்களைத் தருகிறது. அவ்வகையில் எட்டுத்தொகை நூற்களான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு மற்றும் புறநானூறு ஆகிய இலக்கியங்களில் காணப்படும் பண்கள் பற்றிய குறிப்புக்களை ஆராய்வதே இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.
ஆம்பல் பண்
ஆம்பல் பண் குழலின் வழி இனிது வெளிப்படும் என்று பல குறிப்புகள் வாயிலாக அறிய முடிகிறது.
"ஆம்பலங் குழலின் ஏங்கி" (நற்றிணை : 123 : 10)
என்ற நற்றிணைப் பாடலடியும்,
'தட்டை தண்ணுமைப் பின்ன ரியவர்
தீங்குழல் ஆம்பலின் இனிய விமிரும்
புதன் மலர் மாலையும்' (ஐங்குறுநூறு : 215 ; 3-5)
என்ற ஐங்குறுநூற்றுப் பாடலடிகளும் ஆம்பல் என்னும் சொல் இனிமையான பண் என்று கருத இடம் வகிக்கிறது.
'ஏங்கி' என்ற நற்றிணைப் பாடலின் சொல் ஏக்க உணர்வைக் காட்டுவதாகத் தோன்றுகிறது. இந்தப் பண்ணில் ஏக்க உணர்வைக் காட்டலாம் என்று தெரிகிறது. சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவை ஓர் ஏக்க உணர்வுப் பாடல். அதில் ஆம்பலங் குழல் இடம் பெறுகிறது. அதை இங்கு இணைத்துக் காணலாம். அங்கு அது ஆம்பல குழலைக் குறிப்பிட்டாலும் அதிலிருந்து வெளிப்படும் பண்ணும் ஆம்பலாக இருக்கலாம் என்று கருதுவதில் தவறில்லை.
காஞ்சிப் பண்
காஞ்சிப் பண் விழுப்புண் பட்டவர்கள், பேய் பிடி கொண்டவர்கள் வருத்தம் தீரப் பாடியதாகத் தெரிகிறது. புறநானுற்றில் இக்கருத்து நன்கு விளக்கப்பட்டுள்ளது.
'ஐயவி சிதறி ஆம்பல் ஊதி
இசைமணி எறிந்து காஞ்சி பாடி
நெடுநகர் வரைப்பில் கடிநறை புகிக்
காக்கம் வம்மோ காதலம் தோழி
வேந்துறு விழுமம் தாங்கிய
பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே'
(புறநானூறு : 281 ; 1-9)
ஐயவி சிதறல், புகைத்தல், மணி அடித்தல் முதலிய செயல்கள் பூசனைக்கு உரியவை. அதோடு ஆம்பல் குழல் ஊதிக் காஞ்சிப் பண்ணைப் பாடியதாகக் குறிப்பிடப்பெற்றுள்ளது. இதிலிருந்து இப்பண்ணுக்கும் இத்தகையை பூசனைக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிகிறது. விழுப்புண் பட்ட வீரனைக் காக்க வேண்டி இந்தச் சடங்கு நடைபெறுகிறது.
இன்னொரு பாடல் இதனைச் சற்று விரிவாக விளக்குகிறது. வேப்பந்தார் கூடுதலாக இதில் கூறப்பட்டுள்ளது.
'வேம்புசினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும்
நெய்யுடைக் கையர் ஐயவி புகைப்பவும்
எல்லா மனையும் கல்லென் றனவே
வெந்துடன் றெறிவாள் கொல்லோ
நெடிதுவந் தன்றாள் நெடுந்தகை தேரே'
(புறநானூறு ; 296 ; 1-5)
இப்பாடலில் வேப்பந்தழை கொண்டு பேய் விரட்டும் செயல் குறிப்பாகக் காட்டப்படுகிறது. விழுப்புண் பட்டவர்களைப் பேய்கள் அண்டி உயிர் பறிக்க முயலும் என்பது மக்கள் நம்பிக்கை. அதைத் தவிர்க்க இவ்வாறு பூசனை முறைகள் கையாளப்படுகின்றன. அப்பொழுது பாடப்பெறும் பண் காஞ்சியாகும். இப்பண்ணுக்கு இத்தகைய ஆற்றல் உண்டு என்று மக்கள் நம்பியிருக்க வேண்டும். பண்களின் இசைக்கு ஆற்றல் உண்டு என்ற உணர்வு சங்க காலத்திலிருந்தே மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
குறிஞ்சிப்பண்
மலைப் பாங்கான இடங்களில் நள்ளிரவு நேரம் குறிஞ்சி பாடுவதாகக் கூறப்படுகிறது. இவை அச்சம் தரும் இடமும் காலமும் ஆகும்.
நள்ளிரவு காலம், பேயும் உறங்கும் நேரம் அப்பொழுது காப்புடைய நகரில் கானவர் தூங்காது குறிஞ்சி பாடுகின்றனர்.
'கழுதுகால் கிளர ஊர்மடிந் தன்றே
உருகெழு மரபில் குறிஞ்சி பாடிக்
கடியுடை வியன்நகர்க் கானவர் துஞ்சார்' (நற்றிணை : 255 ; 1 - 3)
இப்பாடலிலும் அச்சவுணர்வின் குறிப்பு தோன்றுவதைக் காணலாம். எட்டுத்தொகை நூற்கள் அன்றி மலைபடுகடாம், திருமுருகாற்றுப்படை போன்ற சங்க இலக்கியங்கள் பலவற்றிலும் குறிஞ்சிப் பண்ணைக் குறிப்பிடும் இடத்தில் அச்சவுணர்வு காணப்படுகிறது. இவற்றைக் கொண்டு குறிஞ்சிப் பண்ணை அச்சவுணர்வு மிக்கப் பண்ணாகக் கருதலாம்.
செவ்வழிப்பண்
செவ்வழிப் பண் முல்லைக்கும் நெய்தலுக்கும் உரிய இசைக் கூறாக கருதப்பட்டுள்ளது. இது மாலை நேரத்துக்கு உரியது. இசை நூல் மரபுப் படி மாலையில் செவ்வழியும் காலையில் மருதமும் பாடுதல் வேண்டும். முல்லை நிலம் பிருவுத் துயரையும் நெய்தல் நிலம் இரங்கல் துயரையும் கொண்டவை. இரண்டும் துன்பச் சுவை உடையன. ஆகையினால் இவ்விரு நிலங்களுக்கும் உரியதாகக் கருதப்படும் செவ்வழிப்பண் துன்பவுணர்வைக் கொண்டதாகவே இருக்கும்.
புறநானூற்றில் செவ்வழி பற்றிய செய்தி உள்ளது. முன்னிரவில் செவ்வழிப்பண் இசைக்கப்படுகிறது.
'அருளா யாகலோ கொடிதே யிருள்வரச்
சீறியாழ் செவ்வழி பண்ணி யாழநின்
காரெதிர் கானம் பாடினேம் ஆக' (புறநானூறு ; 144 ; 1 -3 )
சீறியாழின் துணையுடன் செவ்வழிப்பண்ணைப் பாடினதாக உரைக்கப்படுகிறது. இது அருள் வேண்டி இரக்கத்துடன் பாடிய பாடலாக உள்ளது.
மேலும் ஒரு புறநானூற்றுப் பாடல் ஒன்றில்,
'சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததைக்
கார்வான் இன்னுறை தமியள் கேளா
நெருநல் ஒருசிறைப் புலம்புகொண் டுறையும்
அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை' (புறநானூறு ; 147 ; 2 - 5)
ஒரு பெண்ணின் துன்பக் கண்ணீரின் விளக்கத்துக்குச் செவ்வழிப் பண் உதவுவதிலிருந்து அதன் உணர்வை அறியலாம். அழுகைச் சுவை இப்பண்ணில் அழுத்தம் பெறுகிறது.
'பையுள் நல்யாழ் செவ்வழி வகுப்ப
ஆருயிர் அணங்குத் தெள்ளிசை
மாரி மாலையும் நமியள் கேட்டே' (அகநானூறு : 214 ; 13 -15)
செவ்வழிப்பண் யாழிசையுடன் பாடப்படுவதில் ஒரு பெண்ணின் அவல உணர்வைத்தான் அறிய முடிகிறது. அனைத்துக் குறிப்புகளும் செவ்வழிப்பண் அவலச்சுவைக்கு உரியது நன்கு விளங்குகிறது.
நைவளம்
நைவளம் என்ற பண்ணை இரண்டாம் தரமாகவே கருதுகின்றனர். இப்பண் பாலைப்பண்ணிலிருந்து கிளைத்ததாகக் கூறப்பட்டுள்ளது.
' நைவளம் பழுதிய பாலை வல்லோன்' (குறிஞ்சிப்பாட்டு ; 146)
என்ற குறிஞ்சிப்பாட்டு அடிக்கு உரை கூறும் நச்சினார்க்கினியர் இதனை நட்டராகம் என்று குறிப்பிட்டுள்ளார். 'நட்டராகம்' முற்றுப்பெற்ற பாலையாழை வாசிக்க வல்லவன்' என்பது அவருடைய விளக்கம். இது பகலில் இசைக்க வேண்டிய பண்களில் ஒன்று.
'நைவளம் பூத்த நரம்பியைச் சீர்ப்பொய்வளம்
பூத்தன பாணாநின் பாட்டு' (பரிபாடல் ; 18 ; 20 - 21)
பாணன் யாழிசையுடன் நைவளம் பாடியதை இப்பரிபாடல் அடிகள் கூறும். மகிழ்வுடன் பாடும் பண்ணாக இருக்கலாம் என்று எண்ண இடம் வகிக்கிறது. உறுதியாகக் காணும் குறிப்புகள் காணப்படவில்லை.
பஞ்சுரம்
பஞ்சுரம் என்ற பண் குறிஞ்சி அல்லது பாலைப் பண்ணைச் சார்ந்த இரண்டாம் தரப் பண்ணாகக் கருதப்படுகிறது. அது அச்சத்தைப் பெருக்கும் இயல்பு கொண்டதாக இருந்திருக்க வேண்டும். ஐங்குறுநூற்றிலுள்ள ஒரு பாடல் இக் கருத்தை விளக்கும்.
'வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும்
ஆரிடை செல்வோர் ஆறுநனி வெருஉம்
காடிறந் தனரே காதலர்' (ஐங்குறுநூறு ; 311 : 1 -3)
குறிஞ்சி நிலப்பெண்கள் வேங்கை மலர் பறிக்கும் போது திணை மயக்கம் காட்டுவதாகப் பஞ்சுரம் பாடுவதைக் கேட்டதும் வழி நடப்போர் பாலை நிலம் வந்ததாகக் கருதி அச்சங் கொள்வர் என்னும் குறிப்பு காணப்படுகிறது.
படுமலைப் பண்
படுமலைப் பண் உயர் குரலில் பாடும் பண்ணாக இருக்க வேண்டும். மேகத்தின் இடி முழக்கத்துடன் ஒப்புமைப்படுத்தப்படுகிறது. நல்வளம் கொடுக்கும் மழை மேகத்தில் குரல் போன்று யாழில் இசைக்கும் படுமலைப்பண் என்று பெருங்கௌசிகனாரின் நற்றிணைப் பாடல் கூறுகிறது.
'ஏயினை உரையியரோ பெருங்கலி எழிலி
படுமலை நின்ற நல்யாழ் வடிநரம்பு
எழீஇ அன்ன உறையினை முடிவின்
மண்ணார் கண்ணின் இம்மென இமிரும்'
(நற்றிணை : 139 ; 3 - 6 )
படுமலைப் பண் மகிழ்வைத் தரும் பண்ணாகத் தோன்றுகிறது. மழைக் குறிப்புடன் குறுந்தொகைப் பாடலும் படுமலைப் பண்ணைச் சுட்டுகிறது.
'பாணர் படுமலை பண்ணிய எழாலின்
வானத் தெழுஞ்சுவர் நல்லிசை வீழப்
பெய்த புலத்து'
(குறுந்தொகை : 323; 2 -4)
இனிய இசையும் இன்ப உணர்வும் இப்பாடலின் வாயிலாகப் படுமலைப் பண் பற்றி அறியத்தகும் செய்திகள். புறநானூற்றுப் பாடலும் யாழிசையுடன் படுமலைப்பண்ணை இனிமையுடன், பாடுவதைக் குறிப்பிடுகிறது.
'படுமலை நிறை பயங்கெழு சீறியாழ்
ஒல்கல் உள்ளமொ டொருபுடைத் தழீஇப்
புகழ்சால் சிறப்பினின் நல்லிசை உள்ளி
வந்தனன் எந்தை யானே'
(புறநானூறு ; 135 ; 7 - 10)
படுமலைப் பண் ஓங்கிய இசையுடையதாய் இன்பம் பயக்கும் தன்மை கொண்டு இயங்குவது என்ற இந்த மூன்று குறிப்புகளுமே நன்கு விளக்குகின்றன.
பாலைப்பண்
சங்க இலக்கியங்களில் குறிப்பிடப் பெற்றுள்ள பண்களில் மிகச் சிறந்ததும் புகழுடையதுமாகப் பாலைப் பண்ணைக் கருதலாம். இது பாலைக்குரிய பண் என்று பெயரைக் கொண்டு கருதுவது சிந்தனைக்கு உரியதாகும். இது நண்பகலுக்கு உரிய பண். இதற்குச் சுவையும் இனிமையும் மிகுதி என்று கூறப்படுகிறது.
பரிபாடலிலும் இன்பச்சுவை ததும்புவதாகவே பாலைப்பண் இடம் பெறுகிறது.
'கிளைக்குற்ற உழைச் சுரும்பின்
கோழ்கெழு பாலை இசையோர்மின்' (பரிபாடல் ; 11; 27)
இன்ப காட்சிக்கு உரிய இடத்தில் இன்பவுணர்வுக்கு ஏற்ற இசையாகப் பாலை பயன்பட்டுள்ளது.
'ஒரு திறம் பாடினி முரலும் பாலையங் குரலில்' (பரிபாடல் : 17; 17)
என்ற பரிபாடல் அடியும் பாடினியின் இன்பப் பண்ணாகவே பாலையைக் குறிப்பிடப்படுகிறது.
விளரிப்பண்
விளரிப்பண் இரங்கியழுங்கலைக் குறிக்கும் பண்ணாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
'தூவெள் ளறுவை மாயோன் குறுகி
இரும்புள் பூசல் ஓம்புமின் யானும்
விளரிக் கேட்பின் வெண்ணரி கடிகுவென்' (புறநானூறு: 291 ; 2 -4)
பூசல் துன்பம் தருவது, அதனை மாயோனிடம் கூறுவது இரக்கவுரை. அந்நிலையில் விளரிப்பண்ணின் குறிப்பு தரப்பெற்றுள்ளது.
தலைவியின் இரங்கலும் விளரிப்பண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதைக் குறுந்தொகைப் பாடலில் காணலாம்.
'சிறுநா வொண்மணி விளரி யார்ப்பக்
கடுமா நெடுந்தேர் நேமி போகிய
இருங்கழி நெய்தல் போல
வருந்தினன் அளியணீ பிரிந்திசி னோளே' (குறுந்தொகை 336 ; 3-6)
பிரிவுத் துயருற்ற தலைவிக்குத் தலைவனின் தேர்மணி ஓசையின் நினைவு விளரிப்பண்ணாகக் கேட்கிறது. அவள் ஆற்றாது வருந்துகிறாள். இனி அவன் வரமாட்டான் என்ற அவல நிலை விளரிப்பண் நினைவில் ஊறி மனத்தை வாட்டி வதைக்கிறது. விளரி ஒரு துன்பவுணர்வுப் பண்ணாக விளங்குகிறது.
முடிவுரை
சங்ககால இலக்கியங்களில் ஒன்றான எட்டுத்தொகை நூற்களான நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு மற்றும் புறநானூறு ஆகிய இலக்கியங்களில் பண்கள் பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன. இப்பண்கள் வாயிலாக சங்ககாலத் தமிழ் மக்களின் காலவுணர்வு, நிலத்தன்மை, சுவைப் புலப்பாடு, இசையமைப்பு ஆகிய கூறுகளுடன் சங்ககாலத்தில் பண்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது புலனாகிறது.
துணைநூற்கள்
1. இலக்கியத்தில் இசைக் கூறுகள், இசைத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2000.
2. தமிழர் இசை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.