பெரியாழ்வாரும் திருப்பல்லாண்டும்
முனைவர் த. ராதிகா லட்சுமி
இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,
ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி, பொள்ளாச்சி.

தென்பாண்டி நாட்டைச் சார்ந்த ஸ்ரீவில்லிப்புத்தூரில் வாழ்ந்த முகுந்தபட்டர் - பதுமவல்லி தம்பதிகளுக்கு குரோதன வருடத்தில் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தோடு கூடிய ஞாயிற்றுக்கிழமை அன்று கருடாழ்வாரது அம்சமாக பிறந்தவர் விஷ்ணுசித்தர். இவர் வளர்ந்து அறிவறிந்த நிலையில் திருமாலிடத்தில் கொண்ட அன்பால் ' திருமாலுக்குச் செய்யும் எத்தகையதொரு தொண்டு சிறந்ததாகும்? ' என்று சிந்தித்தார். கிருஷ்ணாவதாரத்தில் ஈடுபாடு கொண்டவர் ஆதலால் அவருக்கு இந்நிகழ்ச்சி நினைவிற்கு வந்தது. கம்சவதத்திற்காகக் கண்ணன் கோகுலத்தில் இருந்து மதுரைக்குச் சென்றபோது கம்சனுக்கு மாலை கட்டிக் கொடுத்து வந்த ஸ்ரீ மாலாகாரரின் வீட்டிற்குச் சென்று அவரிடம் மாலைகளை இரந்து பெற்று அணிந்து மகிழ்ந்ததை எண்ணிப்பார்த்தார். 'கார் வண்ணனுக்கு மலர் மாலைகளைக் கட்டி அழகு பார்ப்பதே சிறந்த தொண்டு' என்ற முடிவுக்கு வந்தார். ஸ்ரீவில்லிப்புத்தூரில் மிகப்பெரிய நந்தவனம் அமைத்து தினந்தோறும் நறுமணமுள்ள பலவகைப் பூக்களாலும் திருத்துழாயினாலும் அழகிய பலமாலைகளைத் தொடுத்து அவ்வூரில் குடிகொண்டிருந்த வடப்பெருங்கோயிலுடையானுக்குச் சமர்ப்பித்து மகிழ்ந்தார். இத்தகைய இறைத்தொண்டில் ஈடுபட்டிருந்த விஷ்ணுசித்தர் இறையருளால் பட்டர்பிரான் என்ற சிறப்புப்பெயரைப் பெற்றார்.
பட்டர்பிரான்
மதுரையை ஆட்சி செய்த அரசன் ஸ்ரீவல்லபன் ஒருநாள் இரவில் நகரசோதனை மேற்கொண்டபோது ஒரு வீட்டுத் திண்ணையில் உறங்கியவனைக் கண்டு, அவனை எழுப்பி நீ யார்? என்று விசாரித்தான். அதற்கு அவன் 'நான் திவ்யதேச யாத்திரை மேற்கொண்டு, வடநாட்டில் சுற்றி கங்கையில் நீராடி வரும் அந்தணன்' என்றான். அதற்கு அரசன், 'நீ அறிந்த நீதி ஒன்றினைக்கூறுவாயாக' என்று கேட்டான். அந்தணனும் 'மழைக்காலத்துக்கு வேண்டியதை மற்ற எட்டு மாதங்களிலும், இரவுக்கு வேண்டியதைப் பகலிலும், முதுமைக்கு வேண்டியதை இளமையிலும் , மறுமைக்கு வேண்டியதை இம்மையிலும் தேடுக' என்றுரைத்தான். இந்நன்மொழியில் முதல் மூன்று குறைகள் தனக்கு இல்லாததால் அரசன் இறுதியாக சொன்ன மறுமை இன்பம் குறித்து சிந்தித்தான். இதற்கு நாம் என்ன முயற்சி செய்தோம்? என்று எண்ணியவனாக புரோகிதரை அழைத்து வினவினான். அவர் நாடெங்கிலும் உள்ள அறிஞர்களை அழைத்து பரத்துவ நிர்ணயம் செய்தால் இவ்வினாவிற்கு விடை அறியலாம் என்றான். அரசனும் இவ்வறிவுரையை ஏற்றவனாக பரத்துவ நிர்ணயம் செய்பவருக்கு பொற்கிழியளிப்பதாகப் பறைசாற்றிடச் செய்தான்.
விஷ்ணுசித்தர் திருமாலின் நியமனப்படி மதுரைக்குச் சென்று பரசமயவாதிகளோடும், அறிஞர்களோடும் வாதிட்டு 'விஷ்ணுவே பரம்பொருள்' என்று நிலைநாட்டினார். இறையருளால் இதிகாசம், புராணங்களில் இருந்து மேற்கோள் காட்டிய விஷ்ணுசித்தர், 'மால்நெறியே மேல் ஒருநெறியும் இல்லா மெய்ந்நெறி' என்றும், இந்நெறியைப் பின்பற்றுபவரே வீடுபேறு அடைவர் என்றும் நிறுவினார். அப்போது கம்பத்தில் கட்டப்பட்டிருந்த பொற்கிழி தானாக அவர்முன்னே தாழ அவரும் அப்பொற்கிழியை அறுத்துக்கொண்டார்.
ஸ்ரீவல்லபன் விஷ்ணுசித்தரின் ஞானத்தைக் கண்டு வியந்து அவரை வணங்கி, 'வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கை விட்டுசித்தன் விரித்தனன்' என்று அவரைக் கொண்டாடினான். அறிஞர்களின் தலைவன் என்ற பொருள் கொண்ட 'பட்டர்பிரான்' என்று சிறப்புப் பெயரைச் சூட்டி அவரை யானைமேல் ஏற்றி நகர்வலம் வரச்செய்தான். இறைவனின் அருளால் விஷ்ணுசித்தர் ஞானத்தின் திருவுருவமாய் பட்டர்பிரான் என்ற பட்டத்தைப் பெற்றார்.
பெரியாழ்வார்
திருமால் திருமகளுடன் கருடன் மீதமர்ந்து பட்டர்பிரான் பட்டம்பெற்ற விஷ்ணுசித்தருக்குக் காட்சியளித்தார். அப்போது அவர் இறைவனின் அழகில், பரிவில் திருமாலின் உன்னத நிலையையும் மறந்து 'அவனுக்கு என்ன தீங்கு நேருமோ? ' என்று தாய் உள்ளத்துடன் பதறினார்.
'பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் சேவடி செவ்வி திருக்காப்பு' (1)
என்று பாடத் தொடங்கியதில் பரிவும், பரிதவிப்பும் வெளிப்படுகிறது. விஷ்ணுவைச் சித்தத்தில் உடையவர் என்ற பொருளுடைய பெயரை உண்மையாக்கிக் கொண்ட விஷ்ணுசித்தர் இறைவனிடத்தில் கொண்ட அன்பால், இறையருளால், ஞானத்தை உலகிற்குப் பறைசாற்றி பட்டர்பிரான் எனும் பெயர் பெற்றார். இறைவனின் திருக்கோலத்தைக் கண்டு தாயன்போடு காப்பு பாடியதால் பெரியாழ்வார் என்ற பெயரும் பெற்றார்.
இவ்வுலகில் தோன்றிய எவ்வுயிராயினும் பரம்பொருள், தமக்கு முன்னர் தோன்றும்போது தமக்கு நன்மைகள் ஏற்படவேண்டும் என்ற வரத்தை வேண்டுவது இயல்பு. ஆனால் விஷ்ணுசித்தர் எல்லாம் வல்ல இறைவனைக் கண்டதும், தனக்கான காப்பினை இறைவனிடம் பெறாமல் இறைவனுக்கே காப்பிடுகிறார். இறைவனின் அழகுக்கு என்ன தீங்கு வருமோ? என்று எண்ணியவராக பல்லாண்டு பாடுகிறார். 'இறைவன் உயர்ந்தவன். அவனுக்குக் காப்பிடும் தகுதி நமக்கு இல்லை' என்றும், இறைவனே உயிர்களைக் காப்பவன். நாம் அவனுக்குக் காப்பிடலாமா? என்ற எண்ணங்களை அவர் மறந்தார். பரம்பொருளின் மேல்கொண்ட பேரன்பால் அவனைக்காக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு மங்களாசாசனம் பாடுகிறார்.
அறிவார்ந்தமாக சிந்திக்கும்போது காக்கும் கடவுளுக்கே காப்பிடுதல் முறையா? என்ற எண்ணம் தோன்றும்.
'இறையடியார்க்கு இரண்டு நிலைகள் உண்டு. ஒன்று ஞானநிலை; மற்றொன்னு பிரேமநிலை. ஞானத்தின்போது தமது நிலையையும் ஈசுவரன் நிலையையும் நன்கறிவர்; சர்வேசுவரன் நம்மைக்காப்பவன்; நாம் இவனால் காக்கப் பெறுவோம் என்று அவனையே புகலாகப் பற்றியிருப்பர். ஆனால் பிரேமநிலையிலோ இது முன்பின்னாக மாறிவிடுகின்றது. அப்போது அவர்கள் பகவானிடம் கொள்ளும் அன்பு வெள்ளத்திற்கோர் அளவில்லை. அது கரைகடந்து பொங்கித் ததும்புகின்றது. அந்நிலையில் ஈசுவரனை நாம் காக்கவேண்டும் என்று முற்படுகின்றனர். எனவே பிரேம தசையில் காப்பவன் - காக்கப்படுவோன் என்னும் நிலையில் தடுமாற்றம் ஏற்படுகின்றது'
(2)
என்ற பிள்ளை லோகாசார்யரின் கருத்தின்படி அன்பில் காப்பிடுதல் இயல்பு என்பதை அறியமுடிகிறது.
பல்லாண்டு பாடியதில் ஆழ்வார் பெரியவராகவும், பரம்பொருள் சிறியவனாகவும் மாறியதால் இவர் பெரியவர், பெருமை கொண்டவர் என்ற பொருளில் பெரியாழ்வார் எனப்பட்டார். இராமாயணத்தில் சீதை இராவணனால் கவர்ந்து செல்லப்பட்டாள் என்று கேட்டதுமே ஜடாயு இதனால் இராமனின் உயிர்பிரிந்து விடும் என்று அஞ்சி 'ஆயுஷ்மந்' என்று இராமனுக்கு வாழ்த்துக் கூறினார். இராமனின் உயிர்காத்த காரணங்களுள் இவ்வாழ்த்தும் ஒன்று என்ற கருத்து வைணவர்களிடையே நிலவுகிறது. அதனால் ஜடாயுவை 'பெரிய உடையார்' என்று அழைத்தனர். இதன்படி விஷ்ணுசித்தரும் பெரியாழ்வார் ஆனார்.
'மங்களா சாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்கள்
தங்கள்ஆர் வத்தளவு தானன்றிப் - பொங்கும்
பரிவாலே வில்லிப்புத்தூர்ப் பட்டர்பிரான் பெற்றான்
பெரியாழ்வார் என்னும் பெயர்' (3)
என்னும் மணவாள மாமுனிகளின் சொல்லினால் பெரியாழ்வார் மற்ற ஆழ்வார்களை விட மிக்க பெருமையுடையவர் என்பதை அறியமுடிகிறது.
திருப்பல்லாண்டு அமைப்பு
திருப்பல்லாண்டு பன்னிரண்டு பாசுரங்களைக் கொண்டது. முதற்பாசுரம் இரண்டு அடிகளும், ஏனைய பதினொரு பாசுரங்களும், நான்கு அடிகளும் உடையவை. முதற்பாசுரம் குறள்வெண் செந்துறை யாப்பிலும், ஏனைய பாசுரங்கள் அறுசீர் ஆசிரியவிருத்த யாப்பிலும் பாடப்பட்டுள்ளன. பெரியாழ்வார் ஒவ்வொரு பாசுரத்திலும் 'பல்லாண்டு' என்ற சொல்லைக் கையாண்டுள்ளார். இந்நூல் 'பல்லாண்டு எனத் தொடங்கி ஏத்துவர் பல்லாண்டே' என நிறைவடைகிறது. பல்லாண்டு கூறுதுமே, பல்லாண்டு கூறுமினே, பல்லாண்டு கூறுவனே என்ற சொற்களை பெரியாழ்வார் கையாண்டதன் வாயிலாக அவர் தம்மோடு அடியார்களையும் இணைத்துப் பாடியதை அறியமுடிகிறது.
1. பகவத்சரணார்த்திகள்
2. கைவல்யார்த்திகள்
3. ஐஸ்வர்யார்த்திகள்
என்று வைணவ அடியார்களை மூவகையினராகப் பிரிப்பர். பரம்பொருளின் திருவடியில் இருந்து என்றும் தொண்டு செய்ய விரும்புவோர்களை பகவத்சரணார்த்திகள் ஆவார்.
பெரியாழ்வார் முதற்பாசுரத்தில் விஷ்ணுவின் திருவடிகளுக்கு பல்லாண்டு பாடுகிறார். இரண்டாம் பாசுரத்தில் யோகத்தைத் தியானித்து மங்களாசாசனம் செய்கின்றார். மூன்றாம் பாசுரத்தில் இறைவனுக்குப் பல்லாண்டு பாட வருமாறு பகவத்சரணார்த்திகளை அழைப்பதாகவும், ஆறாம் பாசுரத்தில் பகவத்சரணார்த்திகள் தம்மோடு கூடியதையும், ஒன்பதாம் பாசுரத்தில், அவர்கள் பல்லாண்டு பாடியதையும் குறிப்பிடுகிறார்.
உயிர் தன்னைத் தானே அனுபவித்து நிற்கும் நிலையை விரும்புபவர்களே கைவல்யார்த்திகள் ஆவார். 4, 7, 10 பாசுரங்களில் கைவல்ய இன்பத்தை விரும்பும் இவ்வடியார்களை முறையே அழைப்பதாகவும், அவர்கள் இணைவதாகவும், மங்களசாசனம் பாடுவதாகவும் அமைந்துள்ளது.
உலகியலுக்கு வேண்டிய செல்வங்களை விரும்புபவர்களை ஐஸ்வர்யார்த்திகள் என்பர். மேற்கண்ட முறையிலேயே பெரியாழ்வார் 5, 8, 11 ஆம் பாசுரங்களில் இந்த அடியார்களைப் பற்றி குறிப்பிடுகின்றார். பன்னிரண்டாம் பாசுரத்தில் இப்பிரபந்தம் கற்றார்க்குப் பலன் உரைக்கின்றார்.
பன்னிரண்டு பாசுரங்களில் முதன்மைபெற்று முத்திரை பதித்து விளங்குவது முதற்பாசுரமாகும். இறைவனின் சேவடிக்கு மட்டும் திருப்பல்லாண்டு பாடியிருப்பினும் முழுமேனிக்கும் பாடியதாகவே அடியார்கள் கூறுவர்.
'அறியாதவனுக்குப் பலமுறை சொல்லுவது நியாயம். எல்லாமறிந்த இறைவனுக்கு இரண்டாவது முறையும் அதற்கு மேலும் அடுக்கிச் சொல்லவேண்டுமா? பிறகு ஏன் சொல்லுகிறார்? எம்பெருமானுடைய எல்லாமறியும் இயல்பினில் யாதொரு குறையும் இல்லை. தாகமெடுத்தவன் தண்ணீர் பருகுமளவும் தண்ணீர் தண்ணீர் என்று தவிப்பது போலே ஆழ்வார்தம் அச்சம் தீரும் அளவும் 'பல்லாண்டு பல்லாண்டு' என்கிறார்' (4)
என்று ஆழ்வாரின் செயலுக்கு பெரியவாச்சான்பிள்ளை விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெரியாழ்வார் பல்லாண்டு என்ற சொல்லை ஒரு முறையோடு நிறுத்தாமல் மறுமுறையும் கூறியதற்கு பரம்பொருள் மேல்கொண்ட அன்பு, அன்பினால் ஏற்பட்ட அச்சம்,அச்சத்தால் ஏற்பட்ட பரிதவிப்பு, பரிதவிப்பினால் ஏற்பட்ட விரைவு போன்றவை காரணமாகலாம் என்பது புலனாகின்றது.
'அடியோ மோடும் நின் னோடும் பிரிவின்றி
ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற
மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதிவ லத்துறை யும்சுடர்
ஆழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ்ச
சன்னியமும் பல்லாண்டே' (5)
இவ்விரண்டாம் பாசுரத்தில் பெரியாழ்வார் பரம்பொருளுக்கு மட்டும் பல்லாண்டு பாடாமல் அடியவர்களுடனான உறவு நிலைக்கவேண்டும் என்பதற்கும், திருமகள், சுடராழி, பாஞ்சசன்னியம் போன்றவற்றுக்கும் மங்களாசாசனம் பாடுகின்றார். திருமகளின் அருள், ஆழி, சங்கு போன்றவை இறைவனுக்குப் பாதுகாப்பு அளிக்கும் என்ற எண்ணம் தடைப்பட்டு இவற்றுக்கும் பெரியாழ்வார் பல்லாண்டு பாடியதில் பரிவின் உச்சம் வெளிப்படுகிறது.
கிருஷ்ணவதாரத்திற்கேக் காப்பு
பொதுவாக, ஆழ்வார்கள் இராமாவதாரத்தைக் காட்டிலும் கிருஷ்ணவதாரத்திலேயே அதிகமாக மங்களாசாசனம் செய்துள்ளனர். பெரியாழ்வாரும் திருப்பல்லாண்டில் மூன்று இடங்களில் கிருஷ்ணவதார நிகழ்ச்சிகளை அடிப்படையாக கொண்டே பல்லாண்டு பாடுகிறார்.
'வாணனை ஆயிரம் தோளும் பெபாழிகுருதி பாயச்சுழற்றிய
ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே...
ஐந்தலைய பைந்நாகத்தலைப் பாய்ந்தவனே!
உன்னைப் பல்லாண்டு கூறுதுமே' (6)
இராமாவதாரம் குறித்து ஒரு இடத்தில் மட்டுமே பாடியுள்ளார். அதற்குக் காரணமாக இராமன் அரசகுலத்தில் தோன்றியவன். தந்தையும் சம்பாசுரனையே அழித்தவர். ஊரோ பகைவர் எவரும் புகமுடியாத அயோத்தி. ஆனால், கிருஷ்ணவதாரத்தின் நிலை வேறு. கிருஷ்ணன் பிறந்த இடமோ சிறைக்கூடம். வளர்ந்த இடத்திலோ பிருந்தாவனத்தில் அசுரர்களிடம் இருந்து உயிர்பிழைக்கப் போராடியவன். தந்தையோ இடையர். ஊரோ இடைச்சேரி. கிருஷ்ணனுக்கு என்ன தீங்கு நேருமோ? என்ற அச்சத்திலும், பரிவிருமே பல்லாண்டு பாடினார் என்று திருப்பல்லாண்டு வியாக்கியானம் குறிப்பிடுகிறது.
தொகுப்புரை
திருப்பல்லாண்டு நூல் அளவில் சிறியதாக இருப்பினும் தொட்டனைத்தூறும் மணற்கேணியை ஒத்து கற்போருக்கு பல எண்ணங்களையும், நலன்களையும் தோற்றுவிக்கிறது. பல்லாண்டு என்ற சொல் நூல் முழுவதும் முழங்கி பக்தரின் பரிவையும், பரிதவிப்பையும் வெளிப்படுத்துகிறது. தூய்மையான உலகிலிருந்து சாரங்க வில்லை ஆள்பவனை ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் அன்பினால் அனைத்துக் காலமும் பல்லாண்டு வாழ்க என துதித்த இப்பல்லாண்டினைப் பக்தர்கள் பாடி மகிழ்வர் என்ற பொருண்மையில் பாடிய இத்திருப்பல்லாண்டு நூல் நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் ஒப்பற்ற பெருமையுடையது.
'உண்டோ திருப்பல்லாண்டுக்கு ஒப்பதோர் கலைதான்
உண்டோ பெரியாழ்வார்க்கு ஒப்பு ஒருவர்'
என்ற மணவாளமாமுனிகளின் கூற்றின்படி திருப்பல்லாண்டும், பெரியாழ்வாரும் ஒப்பற்றவர் என்பது புலனாகின்றது.
அடிக்குறிப்புகள்
1. நாலாயிரத்திவ்ய பிரபந்தம் - திருப்பல்லாண்டு - உரையாசிரியர் முனைவர் த. கோவேந்தன், சாரதா பதிப்பகம்,சென்னை -14, முதல் பதிப்பு-2014 ப.2
2. பெரியாழ்வார், ம.பெ. சீனிவாசன், சாகித்திய அகாதெமி, புதுதில்லி-1, முதல் வெளியீடு 1999, பக் எண். 27-28
3. மணவாள மாமுனிகள் - உபதேசரத்தினமாலை, பி.ப.அண்ணங்கராசாரியர் உரையுடன், காஞ்சிபுரம், 1970 ப.7
4. பெரியாழ்வார், ம.பெ.சீனிவாசன், சாகித்திய அகாதெமி, புதுதில்லி-1, முதல் வெளியீடு 1999, ப எண். 31
5. நாலாயிரத்திவ்ய பிரபந்தம் - திருப்பல்லாண்டு - உரையாசிரியர் முனைவர் த. கோவேந்தன், சாரதா பதிப்பகம், சென்னை -14, முதல் பதிப்பு-2014 ப.2
6. நாலாயிரத்திவ்ய பிரபந்தம் - திருப்பல்லாண்டு - உரையாசிரியர் முனைவர் த. கோவேந்தன், சாரதா பதிப்பகம், சென்னை -14, முதல் பதிப்பு-2014 பக்.4,6.
துணைநூற்பட்டியல்
1. அரங்கராஜன். இரா (உரையாசிரியர்) - பெரியாழ்வார் திருமொழி - இரண்டாம் பகுதி, ஆழ்வார்கள் அமுதநிலையம், சென்னை.
2. கோவேந்தன். த (உரையாசிரியர்) - நாலாயிரத்திவ்ய பிரபந்தம் - திருப்பல்லாண்டு, சாரதா பதிப்பகம், சென்னை -14, முதல் பதிப்பு-2014
3. சீனிவாசன் ம.பெ. - பெரியாழ்வார், சாகித்திய அகாதெமி, புதுதில்லி-1, முதல் வெளியீடு 1999. 4.
4. பெரியவாச்சான்பிள்ளை - திருப்பல்லாண்டு வியாக்கியானம், கி. ஸ்ரீநிவாஸய்யங்கார் பதிப்பு, திருச்சி.
5. மணவாள மாமுனிகள் - உபதேசரத்தினமாலை, பி. ப. அண்ணங்கராசாரியர் உரையுடன், காஞ்சிபுரம், முதல் பதிப்பு-1970

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.