கலிங்கத்துப்பரணியில் களச்சிறப்பு
ந. அகிலா (முனைவர் பட்ட ஆய்வாளர்) மற்றும் முனைவர் த. மகிலாஜெனி (நெறியாளர்)
தமிழ்த்துறை, இலக்குமிபுரம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நெய்யூர், கன்னியாகுமரி மாவட்டம்.
முன்னுரை
நாயக்கர் காலத்தில் சிற்றிலக்கியங்கள் தோற்றம் பெற்று, மக்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டிய தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்களில் ஒன்று பரணி. பரணி இலக்கியம் போரைப் பற்றிய இலக்கியமாகும். போர் முடிந்த பின்பு, போர்க்களத்தின் நிகழ்வுகள் பரணி இலக்கியத்தில் ஒரு பகுதியாக இடம் பெறும். அவ்வாறே, கலிங்கத்துப்பரணியில் போர் முடிந்த பின்பு போர்க்களச்சிறப்பு, போர்க்களத்தில் இறந்த வீரர்களின் நிலை, யானைகளின் நிலை, இறந்த வீரர்களின் மனைவிகள் நிலை, போர்க்களத்தின் தோற்றம் குறித்து இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளன.
ஆய்வுத்தலைப்பு
ஆய்வுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டத் தலைப்பு 'கலிங்கத்துப்பரணியில் களச்சிறப்பு” என்பதாகும்.
ஆய்வு நோக்கம்
கலிங்கத்துப்பரணியில் போர் முடிந்த பின் போர்க்களத்தின் தோற்றம், இறந்த யானைகளின் நிலை, இறந்த வீரர்களின் நிலை, அவ்வீரர்களின் மனைவிகளின் நிலை முதலியவற்றை விரிவாக விளக்குவதை இவ்வாய்வு நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆய்வு எல்லை
செயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி நூல் ஆய்வு எல்லையாக அமைந்துள்ளது.
ஆய்வுச் சிக்கல்
பெண்களின் மறமாண்பும், வீரர்களின் வீரச்செயலும் களத்தில் வெளிப்பட்டது. தற்காலத்தில் பெண்களும் வீரரும் இத்தகைய பண்போடு செயல்படுகிறார்களா என்பதை எடுத்துரைப்பது ஆய்வுச் சிக்கலாக உள்ளது.
ஆய்வு கருதுகோள்
போர்க்களத்தின் தோற்றத்தையும், வீரர்களின் மறமாண்பையும், அவ்வீரர்களின் மனைவிகளின் மறமாண்பையும் வெளிப்படுத்துவதே ஆய்வின் கருதுகோளாகும்.
ஆய்வு அணுகுமுறை
கலிங்கத்துப்பரணி உணர்த்தும் களச்சிறப்பு விளக்கிச் சொல்வதால் விளக்கவியல் அணுகுமுறையாக அமைந்துள்ளது.
ஆய்வுநடை
இவ்வாய்வு இலக்கியத்தை ஆய்வுக்களமாகக் கொண்டமையால், அது குறித்தச் செய்திகள் எளிய தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ளன.
களம் விளக்கம்
களம் என்னும் சொல் 'போர்க்களம்” (1) என்பதைக் குறிக்கிறது. போர்க்களத்தில் இரு நாட்டிலுள்ள படைவீரர்கள் போரிடுவர்.
'இருவர் பாசறைக்கும் மத்தியில் உள்ள இடமே போர்க்களமாகும்” (2)
'முற்காலத்தில் போர் நடக்கும் இடமும், போர்க்களம் முழுதும் ஆரவாரமும் அவலக் குரலுமாக இருந்ததை” (3) க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி குறிப்பிடுகிறது.
களச்சிறப்பு
பொதுவாகப் போர்க்களத்தில் இறந்து கிடக்கும் வீரர்களும், உயிர் போகும் நிலையில் இருக்கும் வீரர்களும், கணவனைத் தேடும் மனைவிகளும், மகனைத் தேடும் தாய்மார்களும், பருந்து, கழுகு, நரி போன்றவை நிணம் தின்பவைகளாகவும், நிலம் முழுவதும் இரத்தமாகவும், அழுகுரலின் ஓசையும், காணமுடியாத துயரக்காட்சிகளும், வீரர்களின் துன்பநிலையுமாகக் காணப்பட்டது.
கலிங்கத்துப்பரணியில் களச்சிறப்பு
முதல் குலோத்துங்கச் சோழனுடைய படைத்தலைவனான கருணாகரத் தொண்டைமான் கலிங்க வீரர்களோடு போரிட்ட கலிங்கநாட்டுப் போர்க்களத்தின் வீரச்சிறப்புகள் கலிங்கத்துப்பரணியில் களம் பாடியது என்ற பகுதியில் இடம் பெற்றுள்ளது. பதினெட்டு ஆண்டுகள் நடந்த தேவர் அசுரர் போர், பதினெட்டு மாதங்கள் நடந்த இராமாயணப்போர், பதினெட்டு நாள் நடந்த மகாபாரதப்போர் ஆகியவற்றை விட கருணாகரன் கலிங்கரோடு போரிட்ட போர்க்களம் மிகச் சிறப்புப் பெற்றுத் திகழ்கிறது.
காளி களம் கண்டு வியத்தல்
போர்க்களத்தைக் கண்ட காளி இக்கொடிய போர்க்களத்தின் தன்மைதான் என்னே என்று வியப்படைந்தாள்.
'வெற்றிக்கான தெய்வம் போர்த்தெய்வம் காளி” (4)
குருதிக்கடலில் யானைகள்
கலிங்கப் போர்க்களம் முழுதும் இரத்த வெள்ளமாகக் காணப்பட்டது. போர்க்களத்தில் கிடந்த யானைகளின் பிணங்கள் இரத்தக்கடலில் குவித்த மலைக் கூட்டத்தைப் போல் காணப்பட்டன. யானைகளின் தலைகளும் உடல்களும் வெட்டப்பட்டு நிலத்தில் வீழ்ந்து கிடந்தன. யானைகளின் பின்னங்கால்கள் அசைந்து புண்களிலிருந்து இரத்தம் வடிய யானைகள் இரத்த வெள்ளத்தில் வரிசையாக நீந்திச் சென்றன.
'உடலின்மேல் பல காயம் சொரிந்து பின் கால்
உடன் பதைப்ப உதிரத்தே ஒழுகும் யானை” (க. பரணி, 476 : 1-2)
அம்பை நிணமென நினைத்த பருந்து
போர்க்களம் இரத்த வெள்ளமாகக் காணப்பட்டதால், அந்த இரத்த வெள்ளத்தில் கொழுப்பால் மூடிய அம்பை இழுத்துச் சென்றதைப் பார்த்த பருந்து, அம்பைக் கொழுப்பு எனக் கருதி கௌவிக் கொண்டு பறந்தது.
'வாய் அகல் அம்பரத்தினிடைக் கௌவி” (க. பரணி, 501 : 3)
கருங்காகம் வெண்காகமான காட்சி
பிணந்தின்ன வந்த காகங்களை வெண்மையான கொழுப்புகள் போர்வையாக மூடிக்கொண்டதால் கருங்காகங்கள் வெண்ணிறக் காகங்களாகத் தோற்றமளித்தன.
'கருங் காகம் வெண் காகமாய் நின்றவா” (க. பரணி, 487 : 3)
கருமேகம் செம்மேகமான காட்சி
போரிடும் போது வீரர்கள் குதிரைகளோடு குதிரைகளையும், வீரர்களோடு வீரர்களையும் மோதி அடித்ததால் இரத்தம் வானத்தில் சிதறித் தெறித்ததால் கரியமேகம் சிவந்த மேகமாகக் காணப்பட்டது.
'கருங்கொண்டல் செங்கொண்டல் ஒக்கின்ற” (க. பரணி, 486)
தாமரைக் குளமான போர்க்களம்
போர்க்களத்தில் தாமரை மொட்டுக்களைப் போல தேரின் மொட்டுக்களும், இரத்தம் நீரைப் போலவும், வீரர்களின் மயிர்கள் பாசியைப் போலவும் காணப்பட்டதால் தாமரை மலர்கள் உடைய குளத்தைப் போல் போர்க்களம் காணப்பட்டது.
'அடுசெங்களம் பங்கயப் பொய்கை ஆமாறு” (க. பரணி, 488)
குருதிக்கடல்
கலிங்க வீரர்களின் உடம்பில் இருந்து பெருகிய குருதியானது, குருதிக் கடல் போலக் காட்சியளித்தது. அக்குருதிக் கடலில் அலைகளாக குதிரைகளும், நுரைகளாக சாமரங்களும் மிதந்தன.
'அமர் செய் கலிங்கர் தம் கவரி வெண்நுரை நிரைத்து, அவர் உடல் குருதியின் கடல் பரந்து ஓடுமா” (க. பரணி, 494)
வீரர் முகமலர்ந்து காணப்படல்
போர்க்களத்தில் இறந்து கிடக்கும் வீரர்களைப் பருந்துகளும், கழுகுகளும் உண்ணும் போது அவ்வீரர்களின் தாமரை மலர் போன்ற முகம் மேலும் மலர்ந்து காணப்பட்டது. இது போரில் மடிந்த பின்பும் கலங்காது மகிழ்வுடன் திகழும் வீரச்சிறப்பை உணர்த்துகிறது.
'பதும முகம் மலர்ந்தாரைப் பார்மின்” (க. பரணி,இ 478)
'இளமையிலிருந்தே மறமாண்புடன் வளர்க்கப்பட்ட இளைஞர்கள் போரென்றால் பூரித்தெழும் இயல்பினராக விளங்கினர்.” (5)
பருந்தும் கழுகும் துன்புறுதல்
போர்க்களம் என்றாலே பருந்தும், கழுகும் பிணங்களைத் தின்ன வரும். அவ்வாறே இறந்த வீரர்களைப் பருந்தும் கழுகும் கொத்தித் தின்னும்போது வீரர்கள் கைகளிலிருந்த வேல்கள் அழுந்தி குத்துப்பட்டன.
'சூரர் எஃகம் புதைக்க” (க. பரணி, 490)
வீரர்களின் மற மாண்பு
வீரர்கள் உடல் முழுவதும் வேல் கருவிகள் தைக்கப் பெற்றும் நிலத்தில் விழாமல் நின்றனர். இது வீரர்களின் மறமாண்பை எடுத்துரைக்கும் விதமாக உள்ளது.
அம்மானை போன்று வீரர் தலை துள்ளுதல்
அம்மானை என்பது 'மகளிர் ஆடும் விளையாட்டுகளில் ஒன்று” (6). யானைமேல் இருந்து வீரர்கள் ஒருவரையொருவர் எதிர்த்த போது வெட்டுப்பட்ட தலைகள் மேலே துள்ளி குதித்துக் கீழே விழுந்த காட்சி அம்மானை விளையாட்டில் மேலே எறிந்து விளையாடும் விளையாட்டுக் கருவிகளைப் போல் காணப்பட்டது.
'அற்று எறிந்து ஆடுகின்றார் தலை மானச் சயப்பாவை விட்டு ஆடும் அம்மானை” (க. பரணி, 492)
இதன் மூலம் தலை அறுபட்ட பிறகும் வீரர்கள் தன் நாட்டிற்காகப் போரிட்டதை எண்ணி மகிழ்ந்ததால் துள்ளிக் குதித்து தலை கீழே விழுந்ததை அறிய முடிகிறது.
தேவர்களை ஒத்த வீரர் உடல்கள்
தேவர்கள் கண் இமைக்காத தன்மை உடையவர். விண்ணுலகு செல்லும் வீரர்களின் உயிர்கள் மட்டுமல்லாமல் உடம்புகளும் முகமலர்ச்சி கொண்டு கண் இமைக்காது காணப்பட்டதால் தேவர்களை ஒத்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.
'கண் இமைப்பு ஒழியவே முக மலர்ந்து உடல்களும்” (க. பரணி, 497).
வேல் பறித்து சாயும் வீரர்
வீரர்கள் வாயில் புகுந்த வேல்களோடு சாயாமல் அந்த வேல்களை வலக்கையால் பிடித்தபடி சாய்ந்து கிடந்தனர். இதன் மூலம் உடம்பில் தைத்தக் கருவிகளோடு சாகாமல் அதை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பறிக்க முயன்ற காட்சியைக் குறிக்கிறது.
'வாயில் புகு வேல்கள் பற்று வலக்கையோடு நிலத்திடைச் சாயும்” (க. பரணி, 499)
வேல்களை உருவிய வீரர்கள் நிலை
வீரர்கள் மார்பில் பாய்ந்த வேல்களைப் பிடுங்கி நிலத்தில் ஊன்றி குருதியாற்றின் மேல் நின்றனர். இதன்மூலம் உடம்பில் பாய்ந்த கருவிகளோடு இறப்பதை இழுக்கு என்று கருதி உடம்பில் பாய்ந்த கருவிகளை உடலிலிருந்து உருவி எடுத்த வீரச்சிறப்பு இடம் பெற்றுள்ளது.
'நெடுங் குந்தம் மார்பினின்றும் பறித்து” (க. பரணி, 500)
விழுப்புண்பட்ட வீரர்கள்
விழுப்புண் அல்லது வீரமரணம் என்பதே அக்காலப் போரின் சிறப்பாகக் கருதப்பட்டது. விழுப்புண் பெறுவதை வீரர்கள் பெருஞ்செல்வமாகக் கருதினர். யானைமேல் இருந்து போர் புரியும் வீரர்கள் வெல்வதற்காக ஒருவரை ஒருவர் முந்தும் போது முதுகில் காயம் உண்டாகும் என்று பயந்து மார்பில் காயமடைந்து வீழ்ந்து கிடந்தனர்.
'முதுகு வடுப்படும் என்ற வடுவை அஞ்சி முன்னம் வடுப்பட்டாரை” (க. பரணி, 503)
“புறத்தில் புண்பட்ட வீரனை எல்லோரும் இகழ்வர். போர்க்களத்தில் புறங்காட்டி ஓடியதற்கு அடையாளமாகிய அப்புண்ணைப் பார்க்குந்தோறும் பழித்தும் இழித்தும் பேசுவர். ஆதலால் மானவீரர் ஒருபோதும் புறப்புண் தாங்கி உயிர்வாழ இசையார்” (7)
'விழுப்புண் வீரர்க்கு அடையாளம்” (8) என்று புறம் (100-ஆவது பாடல் தெளிவுரை) கூறுகிறது.
வானில் கண்ட காட்சி
சுவர்க்கம் சென்ற வீரர்கள் இவ்வளவு பேர்தான் என்று கூற முடியாத அளவிற்கு, கலிங்கப் போர்க்களத்தில் இருக்கும் வீரர்களைக் காட்டிலும் அதிகமான வீரர்கள் கூட்டம் தேவலோகத்தில் காணப்பட்டது. இதன் மூலம் நேர்த்தியான முறையில் வீரர்கள் போர் செய்ததை அறிய முடிகிறது.
'கதிர் விசும்பு அதனிலே இதனிலும் பெரிய தோர் காளையம்” (க. பரணி, 493)
வீரர்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் போரிட்டு வீரமரணம் அடைந்ததன் மூலம் அவர்களின் வாழ்விலே மட்டும் அல்லாமல் களத்தில் மடிந்த நிலையிலும் நாட்டிற்காக இறப்பதைப் பெருமையாக எண்ணுவதன் மூலம் வீரச்செறிவை அறிந்து கொள்ள முடிகிறது.
படைத்தலைவர் செஞ்சோற்றுக் கடன் கழித்தல்
செஞ்சோறு என்பது 'வீரர்கள் அரசன் உணவை உண்பதால் அவனுக்கு வஞ்சகம் செய்யாமல் போரில் தங்கள் உயிரை அளித்துத் தமது கடமையை நிறைவேற்றுதல். செம்மையாகிய சோற்றுக் கடனைக் கழித்தல் என்பது பொருள்” (9). வில், வாள் உடைய படைத்தலைவர்கள் பகைவர் படை தங்கள் படைமேல் அழிக்காமல் இருக்க, தங்கள் உயிரைப் பொருட்படுத்தாமல், தாங்களே முன்னின்று தங்கள் வாழ்நாள் அழிய, வீரச்செயல்கள் செய்து செஞ்சோற்றுக் கடன் கழித்தனர். இதன் மூலம் உயிரையும் மதியாத வீரத்தைத் தமிழர்கள் பெற்றிருந்தனர் என்பதை அறிய முடிகிறது.
'கருஞ்சேவகம் செய்து செஞ்சோறு அறச்செய்த” (க. பரணி, 491)
கணவரைத் தேடும் மனைவி
போர்க்களத்தில் வீரச்சாவு பெற்ற தன்கணவனின் உடலை ஒரு முறையேனும் தங்கள் உயிரை விடுவதற்கு முன் காண வேண்டும் என்று வீரர்களின் மனைவிகள் போர்க்களம் புகுந்து கணவர் இருக்கும் இடத்தைத்தேடினர். தங்கள் கைகளால் களம் முழுவதும் தடவிப் பார்த்தும் காண முடியாததால், பிணங்களைச் சுடும் இடத்திற்குச் சென்று தேடிப் பார்த்தனர். பிணங்களைத் தின்னும் இடாகினிப் பேயிடம் எம் கணவர் எங்கே கிடக்கிறார் என்று கேட்டனர்.
'எம் கணவர் கிடந்த இடம் எங்கே” (க. பரணி, 482)
வெறுப்பால் உயிர்விட்ட மனைவி
போர்க்களத்தில் உதடுகள் மடித்துக் கிடந்த கணவனைக் கண்ட மனைவி உதடுகளில் வடுபட்டாயோ என்று கூறி வெறுப்பினால் அவனருகே தானும் உயிர் விட்டாள். மார்பிலும், முகத்திலும் காயமடைந்து இறப்பதையே வீரமாகக் கருதுவர். ஆனால், உதடுகளில் வடுபட்டான் என்று அறிந்ததும் அவள் கணவன் மீது வெறுப்பு கொள்கிறாள் என்பதை அறிய முடிகிறது.
'நீ மடித்துக் கிடந்தது! எனப் புலவி கூர்ந்து” (க. பரணி, 483)
'போர்க்களத்தில் முகத்திலும் மார்பிலும் புண்பட்ட வீரனை எல்லோரும் போற்றுவர். விழுப்புண் பெற்றான் என்று வியந்து பேசுவர். வீரக்கல் நாட்டி வணக்கம் செலுத்துவர்” (10)
கணவனைத் தழுவி உயிர்விடும் பெண்
கணவனின் உடம்பை நிலமகளாகிய பெண் தாங்குவதற்கு முன் தன் கரத்தால் தாங்கியும், தேவருலகத் தெய்வப் பெண்கள் அவன் உயிரைத் தழுவுவதற்கு முன்பு தன் உயிரையும் ஒருசேர மனைவி விடுகிறாள். தன் கணவனை எந்தப் பெண்ணும் தொடக் கூடாது என்று இறந்த பின்பும் கணவனுக்கு முன்னால் தேவருலகம் சென்று விட நினைத்ததை அறிய முடிகிறது.
'தரைமகளும் தன் கொழுநன் உடலம் தன்னைத்
தாங்காமல் தன் கரத்தால் தாங்கி விண்ணாட்டு” (க. பரணி, 484)
கணவன் தலைபெற்ற மனைவி
போர்க்களத்தில் கணவனைத் தேடிவந்த மனைவிக்கு அவனது தலை மட்டுமே கிடைத்தது. நாயோ, நரியோ மற்ற உறுப்புகளை இழுத்துச் சென்றிருக்கலாம் என நினைத்தாள். அவள் தன் கணவனுடைய போர் புரிந்த பெரிய கைகள், கையில் வைத்திருந்த வீரவாள், அழகிய மார்பு, எத்தகைய வீரர்கள் எதிர்த்துப் போர் புரிய வந்தாலும் முதுகு காட்டி ஓடாத தோள்கள் எங்கே என்று களத்தில் யோகினி என்ற பெண் தெய்வத்திடம் கேட்டாள்.
'பரு வயிரத் தோள் எங்கே, எங்கே? என்று பயிரவியைக் கேட்பாளை” (க. பரணி, 485).
இதன் மூலம் மனைவி கணவனின் வீரத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கை புலப்படுகிறது. இத்தகைய பெண்கள் நிலையைப் பார்க்கும்போது அவர்களின் மறப்பண்பு வெளிப்படுகிறது.
முடிவுரை
கலிங்கத்துப்பரணி களச்சிறப்பு மூலம் வீரர்களின் நாட்டுப்பற்றும், உயிரைப் பொருட்படுத்தாமல் முன்னின்று போரிட்டு வீரமரணம் எய்திய வீரச்சிறப்பும் பெண்களும் கணவன் வீரனாக இருக்க வேண்டும் என்று கருதுவதும், விழுப்புண் பட்டால் வெறுப்பு கொண்டு இறத்தலும், கணவனின் வீரத்தன்மையைப் புகழ்ந்து கூறுவதும் ஆகிய செயல்கள் மூலம் பெண்களும் ஆண்களைப் போல் மறமாண்புடன் திகழ்ந்ததை அறிய முடிகிறது.
அடிக்குறிப்புகள்
1. த. கோவேந்தன், திருமகள் தமிழ் கையகராதி, ப. 57
2. ந.சி. கந்தையா, புறப்பொருள் விளக்கம், ப.4
3. எஸ். ராமகிருஷ்ணன், க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, ப.105
4. ஆ. ஸ்ரீகண்டன், குமரிமாவட்டக் கொற்றவை வழிபாடுகள், ப. 55
5. அரங்க. இராமலிங்கம், சங்க இலக்கியத்தில் வேந்தர்கள், ப. 138-140
6. கி. மஞ்சுளா, திருவாசகத்தில் மகளிர் ஆடல், ப.11
7. சு. சண்முகசுந்தரம், ரா. பி. சேதுரியம், ப. 208
8. கு. வெ. பாலசுப்பிரமணியன், புறநானூறு, ப.242
9. புலியூர்க்கேசிகன், கலிங்கத்துப்பரணி, ப. 236
10. சு. சண்முகசுந்தரம், ரா. பி. சேதுரியம், ப. 208
துணை நூற்பட்டியல்
முதன்மை ஆதாரம்
1) புலியூர்க்கேசிகன், கலிங்கத்துப்பரணி, 84, பிராட்வே, சென்னை–600108. (ஆண்டு 1958)
துணைமை ஆதாரங்கள்
1. அரங்க இராமலிங்கம், சங்க இலக்கியத்தில் வேந்தர்கள், பாரதி புத்தகாலயம், 7/40 கிழக்குச் செட்டித்தெரு, பரங்கிமலை, சென்னை – 600016. (ஆண்டு 2006)
2. ந. சி. கந்தையா, புறப்பொருள் விளக்கம், அமிழ்தம் பதிப்பகம், சென்னை. (ஆண்டு 2003)
3. தா. கோவேந்தன், திருமகள் தமிழ் கையகராதி, திருமகள் நிலையம், 55, வெங்கடநாராயணசாலை, தியாகராயநகர், சென்னை – 600017. (ஆண்டு 1995)
4. சு. சண்முகசுந்தரம், ரா.பி. சேதுரியம், வெளியீடு : காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத்தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை – 600024. (ஆண்டு 2013)
5. கு.வெ. பாலசுப்பிரமணியன், புறநானூறு, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600098. (ஆண்டு 2004)
6. கி. மஞ்சுளா, திருவாசகத்தில் மகளிர் ஆடல், ஸ்ரீவித்தியா பதிப்பகம், பு.எண்.21, ப.எண்,7யு, கங்கையம்மன் கோவில் தெரு, சூளைமேடு, சென்னை – 600094. (ஆண்டு 2007)
7. எஸ். ராமகிருஷ்ணன், க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, 25, 17வது கிழக்குத் தெரு, காமராஜர் நகர், திருவான்மியூர், சென்னை – 600041. (ஆண்டு 1992)
8. ஆ. ஸ்ரீகண்டன், குமரி மாவட்டக் கொற்றவை வழிபாடுகள், நாஞ்சில் மருதம், 414, நடராசன்சாலை, மூவேந்தர் இல்லம், பொன்னப்பநாடார் நகர், நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் – 629004. (ஆண்டு 2020)
*****
![](http://www.muthukamalam.com/images/logo.jpg) இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|