கம்பராமாயணத்தில் மங்கல அணிகள்
முனைவர் க. மங்கையர்க்கரசி
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி,
மீனம்பாக்கம், சென்னை.
முன்னுரை
ஆயிரங்காலத்துப் பயிர் என்று கூறப்படும் திருமணத்தில் தாலிகட்டுதல் முக்கியமானதாகக் கருதப்பட்டு வருகிறது. தாலிகட்டுதல், மங்கலநாண் பூட்டுதல், மாங்கலய தாரணம் என்பன தாலிக்கான வேறு பெயர்களாகும். திருமணத்தின் போது, ஓர் ஆண், பெண் கழுத்தில் கட்டுவதாகும். திருமணத்தின் முக்கிய நிகழ்ச்சி தாலி கட்டுதலாகும். தாலி என்பது திருமணமானவள் என்பதைக் குறிக்கும் அடையாளமாகும். இந்தத் தாலி கணவனின் இருப்பை உறுதி செய்யும் அடையாளமாகவும், இருக்கின்றது. கணவன் உயிருடன் இருக்கும் வரை தாலியைக் கழற்றக்கூடாது என்றும், அவன் இறந்த பின்பு, அவள் கழுத்தில் தாலி அணியக்கூடாது என்றும் சமுதாயம் வழங்கி வருகின்ற வழக்கமாகும். கம்பராமாயணத்தில் மங்கல அணியாக தாலி குறித்து கூறப்பட்டுள்ள கருத்துகளை ஆராய்வோம்.
சங்க இலக்கியத்தில் தாலியைப் ’புதுநாண்’ என்று குறுந்தொகையில் 67வது பாடலில் அள்ளூர் நன்முல்லையார் பாடுகிறார். தாலி அணிந்த பெண்களை வெள்ளிவீதியர் 'வாலிழை மகளிர்' என்று குறுந்தொகை 386ல் பாடுகிறார். மங்கலஅணி என்பது தாலியையேக் குறிக்கிறது.
கம்பராமாயணத்தில் மங்கல அணி
கம்பராமாயணத்தில் எந்த ஒரு இடத்திலும் திருமணத்தின் முக்கிய நிகழ்வான தாலி கட்டுதல் குறித்துக் கூறப்படவே இல்லை. இராமன் - சீதை திருமணத்தின் போதும், தாலி கட்டுதலைக் கம்பர் கூறவே இல்லை. ஆனால், மங்கலஅணி தாலி என்று பல இடங்களில் கூறிச் சென்றுள்ளார். அனுமனைக் கட்டுவதற்குத் தாலிக்கயிறு தவிர, அனைத்துக் கயிறுகளையும் பயன்படுத்தினர் என்றும், தசரதன் கைகேயியிடம் கோபத்தில் கூறும் போது, உன் மங்கலக் கயிறு உன் மகனுக்குக் காப்பு நாண் ஆகட்டும் என்கிறான்.
1. பூமாதேவியின் மங்கல அணிகலன்
மகளிர் கழுத்தில் மட்டுமல்ல பூமாதேவியின் கழுத்திலும் என்றும் நிலைத்து நிற்கும் மங்கலநாணாக அயோத்தி இருக்கிறது என்கிறார் கம்பர்.
அயோத்தி நகரமானது, பூமாதேவியின் திருமுகமோ! அத்திருமுகத்தில் திகழும் திலகமோ? திலகத்தின் கீழ் விளங்கும் கண்ணோ, அவள் அணிந்துள்ள பெருமை நிறைந்த நீண்ட மங்கல அணியாகிய தாலியோ! அவள் முலைகளின் மேலே விளங்கும் மணிமாலையோ! அவளது உயிர் இருக்கும் இடமோ, திருமகள் மகிழ்ந்து தங்கும் தாமரை மலரோ, திருமாலின் மார்பில் உள்ள கௌத்துவம் போன்ற சிறந்த மணிகள் நிறைந்த பொற்பேழையோ, தேவலோகத்திலும் சிறந்த வைகுண்டமோ, ஊழியின் இறுதிக் காலத்தில் அனைத்து உயிரும் அனைத்துப் பொருளும் சென்று தங்குகின்ற திருமாலின் திருவயிறோ! இவற்றில் எது என்று எடுத்துச் சொல்வோம்.
“நிலமகள் முகமோ திலகமோ கண்ணோ
நிறைநெடு மங்கல நாணோ
இலகு பூண்முலைமேல் ஆரமோ உயிரின்
இருக்கையோ திருமகட்கு இனிய” (நகரப்படலம் 95)
2. இராமன்-சீதை திருமணத்தில் தாலி
இராமன் - சீதையின் திருமணச் சடங்காக, தீ வளர்த்து, கன்னிகாதானம் செய்து, கையைப்பற்றி, தீவலம் வந்து, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து என அனைத்துச் சடங்குகளையும் கூறிய கம்பர், தாலி கட்டுதலைக் கூறவில்லை.
இராமன் - சீதை திருமணத்தின் போது, சனகன் நீர் வார்த்து சீதையை இராமனுக்குக் கொடுத்தான். தீ வலம் வந்து, அம்மி மிதித்து அருந்ததி பார்த்துத் திருமணம் செய்து கொண்டனர். மங்கலஅணி அணிவித்தது குறித்து கம்பராமாயணத்தில் இல்லை.
மங்கல அணி
திருமணத்திற்கு முன்னர் சேடியரும், தாதியரும் சீதையை அலங்கரிக்கின்றனர். பல அணிகலன்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பூட்டுகின்றனர்.
“கோன் அணி சங்கம் வந்து குடியிருந்தனைய கண்டத்து
ஈனம் இல் கலங்கள் தம்மின் இயைவன அணிதல் செய்தார்
மான்அணி நோக்கினார் தம் மங்கலக் கழுத்துக்கு எல்லாம்
தான் அணியானபோது தனக்கு அணியாது மாதோ” (கோலம்காண் படலம் 1070)
சீதையின் சங்கனைய கழுத்துக்கு அழகு தரும் சிறப்புடைய அணிகள் உலகில் எதுவும் இல்லை. எனினும், உலக வழக்குக்கு ஏற்ப தோழியர் இருப்பவற்றில் சிறந்த அணிகலன்களை அவளுக்குப் பூட்டினர். இலக்குமியாகிய சீதா பிராட்டி அவதாரமாதலால் உலகினர் மகளிர் கழுத்தில் அணியும் திருமாங்கல்யமாக விளங்கும் இவள் கழுத்துக்கு யாரால் தகுந்த அணி, அணிய இயலும். மணம் கொள்ளும் வேளையில் அப்பெண் பொன்னும் பொருளும் வாழ்க்கையின் புனிதத் தன்மையும் அப்பொழுதுதான் அடைகிறாள். ஆகவே, திருமகள் அவளை அப்பொழுதுதான் வந்து அடைகிறாள் எனக் கருதி மணத்திற்குத் திருமணம் எனப் பெயரிட்டனர். நம் முன்னோர் இவளே எல்லாப் பெண்களின் கழுத்துக்கும் திருமாங்கல்யமாகும் போது, இவள் கழுத்துக்கு எதைப் பூட்டுவது என கவிஞர் வியந்தார். எனவே சீதையின் திருமணச் சடங்கில் மாங்கல்யம் தரித்தது கூறப்படவில்லை என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.
3. தாலிக்கயிரேக் காப்புக்கயிறு
தசரதன், கைகேயியிடம், என் உயிர் போன்ற இராமன் காடு சென்றால், நான் இறந்து விடுவேன். உன் கழுத்தில் இருக்கும் நான் கட்டிய மங்கலநாண் உன் பிடிவாதத்தால், உன் மகனின் கைகளில் கட்டப்படும் காப்பு நாணாகிவிடும் என்கிறான்.
வரம் கேட்ட கைகேயியை தசரதன் கோபித்த போது, கொடிய காட்டில் என் மகனைப் போகச் சொல்வாய், ஆனால் என் உயிரை இரண்டாகப் பிளந்தாய். இனி உன் மங்கலத் தாலிக்கயிரே உன் மகனுக்கு கையில் கட்டும் காப்புக்கயிறு ஆகட்டும் என்று கூறி வருந்துகின்றான்.
“விழிக்கும் கண் வேறு இல்லா வெங் கான் என் கான் முளையைச்
சுழிக்கும் வினையால் ஏகச் சூழ்வாய் என்னைப் போழ்வாய்
பழிக்கும் நாணாய் மாணாப்பாவி இனி என் பல உன்
கழுத்தின் நாண் உன் மகற்குக் காப்பின் நாண் ஆம் என்றான்” (நகர்நீங்கு படலம் 340)
4. அரக்கர்கள் கயிறுகளால் அனுமனைக் கட்டுதல்
இராவணன், அனுமனின் வாலைச் சுட்டுத் துரத்துங்கள் என்று கட்டளையிட்ட போது, இந்திரஜித் பிரம்மாஸ்திரத்தினால் பிணிப்போடு இருக்கும்போது தீயிடுவது கூடாது. சிறந்த கயிறு பலவற்றைக் கொண்டு வந்து, இவருடைய தோள்களைக் கட்டுங்கள் என்று கூறி, அனுமனது உடலில் பிணைத்திருந்த பிரம்மாஸ்திரத்தை விடுவித்தான்.
பயன்பட்ட கயிறுகள்
அவனை வீடுகளில் உள்ள ஊஞ்சல்கள் தம்மைக் கட்டி இருந்த நீண்ட கயிறுகளை இழந்தன. தேர்களும் அவற்றைக் கட்டும் கயிறுகளை இழந்தன. பந்தியில் கட்டப்பட்ட குதிரைகள் யாவும் தம்மைக் கட்டும் கயிறுகளை இழந்தன. போருக்குரிய யானைகளும் தன் காலில் பூட்டும் கயிறுகள் ஆகியவற்றை இழந்தன. இவை யாவும் அனுமனைக் கட்ட எடுத்துச் செல்லப்பட்டன என்று சொன்னால், அந்த நாட்டில் உள்ள நகரங்களிலும் உள்ள மற்ற கயிறுகள் எடுத்துச் செல்லப்பட்டன என்பதனைச் சொல்ல வேண்டும் என்ற தன்மை உடையது. இராவணன் நிலவுலகில் திக்கு விஜயங்கள் மேற்கொண்ட போது, அங்கிருந்து கொண்டு வரப்பட்ட கயிறுகள், தேவர்களிடமிருந்து வலியப் பறித்த கயிறுகள், வரத்தின் மூலம் பெற்ற கயிறுகள், அசுரர் முதலியவர்களோடு போரிட்டு பெற்று வந்த கயிறுகள் என்னும் இவ்வாறான கண்ணின் பட்ட வலிய கயிறுகளை எல்லாம் கொண்டு வந்து அனுமனைக் கட்டினார்கள். தத்தமக்கு ஏற்ற பெண்களின் கழுத்தில் உள்ள அவர்கள் கட்டியிருந்த தாலிக் கயிறுகள் மட்டுமே அச்சமயத்தில் கவர முடியும். கவரப்படாமல் தப்பி தங்கின.
“மண்ணில் கண்ட வானவரை வலியின் கவர்ந்த வரம் பெற்ற
எண்ணற்கு அரிய ஏனையரை இகலின் பறித்த தமக்கு இயைந்த
பெண்ணிற்கு இசையும் மங்கலத்தில் பிணித்த கயிறை இடைபிழைத்த
கண்ணில் கண்டவன் பாசமெல்லாம் இட்டுக்கட்டினார்” (பிணிவீட்டுப்படலம் 1164)
5. பயத்தில் தாலியைத் தொட்டுப்பார்த்தல்
இரு வேந்தர்க்கு நடுவில் போர் ஏற்பட்டால், இரு பக்கத்திலும் உயிர்ச்சேதம் ஏற்படும். போருக்குச் சென்ற தம் கணவர் மீண்டும் நலமுடன் திரும்பி வரவேண்டும் என்ற எண்ணத்துடனும், பயத்துடனும் மனைவிமார்கள் தம் கழுத்தில் உள்ள மங்கலநாணைத் தொட்டுப் பார்த்துக் கொள்வர்.
இந்திரசித் இறந்ததால் இராவணனுக்குச் சோகம் ஏற்பட்டது. அவனுடைய பத்துத் தலைகளும் பலவாறு கூறிப் புலம்பின. அவற்றுள் ஒரு தலையானது, வீரனே, உன் அழகிய வில்லின் ஒலியினைக் கேட்டு, உடல் நடுங்கி, தம் தாலியினைத் தொட்டு அச்சத்துடன் வாழும் செயலை, தம் பகைவரின் சேல் மீன் போன்ற கண்களையுடைய மனைவியர், இனிமேல் அச்சத்தை விலக்கிக் கொள்வார்களோ எனக் கேட்டது.
“கோல வில் குரல் கேட்டுக் குலுங்கித்தம்
தாலியைத் தொடல் என்னும் மற்று ஓர்தலை” (இராவணன் சோகப்படலம் 3146)
6. திரிசடை கனவு குறித்துக் கூறல்
சீதையிடம், திரிசடை தான் கண்ட கனவு குறித்துப் பலவாறாகக் கூறுகிறாள். பெண்களின் மங்கல அணியான தாலிகள், பிறரால் அறுக்கப்படாமல், தாமே அறுந்து அவர்களுடைய கொங்கைகள் மீது விழுந்தன. இப்போது கூறிய முறைப்படி அமைந்த தீ நிமித்தங்களைக் காட்டிலும் அதிசயமானது என்று கூறுகிறாள்.
“மங்கையர் மங்கலத் தாலி மற்றையோர்
அங்கையின் வாங்குநர் எவரும் இன்றியே
கொங்கையின் வீழ்ந்தன குறித்த ஆற்றினால்
இங்கு இதின் அற்புதம் இன்னும் கேட்டியால்” (காட்சிப்படலம் 376)
உலகியலில் கணவனை இழந்த பெண்கள், தாலியைக் கலைதல் எனும் ஒரு நிகழ்ச்சி ஒரு குறிப்பிட்ட நாளில் நடைபெறும்.
இதற்கு, ’தாலி வாங்குதல்’ என்று பெயர் கூறுவர். தாலி அறுக்கும் நிகழ்ச்சி மங்கலம் இல்லாத நிகழ்ச்சி எனவும், தாலி அறுத்தல் என்று குறிப்பிடினும் அது அமங்கலமானது. கம்பரும் தாலி வாங்குதல் என்றேக் குறிப்பிட்டுள்ளார்.
7. தாலி குறித்து மகரக் கண்ணனின் தாய்
கணவர் இறந்து விட்டால், அவர் கட்டிய மங்கல நாணைப் பெண்கள் கழைந்து விடுவர். இருப்பினும், தன் கணவனின் இறப்புக்குக் காரணமானவன் இறக்கும் வரை அந்தச் சடங்கினைச் செய்யமாட்டேன் என்று ஒரு பெண் வஞ்சினம் கூறுகிறாள்.
கரனை வதைத்தான் இராமன். அவன் மகன் மகரக்கண்ணன் என் அன்னை அழுத கண்களை உடையவளாய் கடப்பதற்கு முடியாத துன்பக்கடலில் மூழ்கி இருக்கிறாள். அவளுடைய கணவனைக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றவனது வலிய தலையாகிய பாத்திரத்தில் அல்லாமல் இறந்தவனுக்குச் செய்ய வேண்டிய நீர்க்கடன்களைச் செய்து முடிக்க மாட்டேன் என்றாள். அதனால் பெருமை பொருந்திய திருமாங்கல்யத்தையும் நீக்கப் பெறாள். பிணங்களை உணவாக அளிப்பதால் பருந்துகளுக்கு இன்பம் செய்கின்ற வேலினை உடையவனே இனிய அருளுடன் நான் போருக்குச் செல்லுமாறு ஆணையிடுக என்று இராவணனிடம், மகரக்கண்ணன் வேண்டினான்.
“அருந்துயர்க் கடலுள் ஆழும் அம்மனை அழுத கண்ணள்
பெருந்திருக் கழித்தல் ஆற்றாள் கணவனைக்கொன்று போர்ந்தோன்
கருந்தலைக் கலத்தின் அல்லால் கடனது கழியேன் என்றாள்
பருந்தினுக்கு இனிய வேலாய் இன் அருள் பணித்தி என்றான்” (மகரக்கண்ணன் வதைபடலம் 23 49)
8. அரக்க மகளிர்
தாலி கட்டிய கணவன் இறந்து விட்டால் மனிதர்களில் மங்கலநாணைக் கழற்றி விடுவர். அதேப் போல் அரக்க மகளிரும் கணவர் இறந்துவிட்டால், மங்கலநாணைக் கழற்றினர் என்பதைக் கம்பர் குறிப்பிடுகிறார்.
அரக்கர்களை அனுமான் கொன்றான். அரக்க மகளிர் மலை போன்ற சிறந்த வலிமை கொண்ட கணவரை இதற்கு முன் பிரிந்ததில்லை. இன்று முதல் பிரிந்து விட்டோம். அதற்காக ஏங்கி வருந்த மாட்டோம். இவன் தலைமேல் ஏறி நின்றுதான், எங்கள் திருமங்கல நாணை நீக்குவோம் என்று அழும் அரக்க மகளிர் பலர் இருந்தனர்.
“ஓங்கல் அம்பெரு வலி உயிரின் அன்பரை
நீங்கலம் இன்றொடு நீங்கினாம் இனி
ஏங்கலம் இவன் சிரத்து இருந்து அலால் திரு
வாங்கலம் என்று அழும் மாதரார் பலர்” (பிணிவீட்டுப் படலம் 1049)
9. திருமாங்கல்யத்தை ஒழித்த தாரை
கணவனை இழந்த மகளிர் கைம்மைக்கோலம் பூண்டு, தம் மீதி நாட்களைக் கழிப்பர். அதேப் போலவே குரங்கு இனத்திலும் வாலியை இழந்த தாரை, கைம்மைக்கோலம் கொண்டு வாழ்ந்தாள் என்று கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ளது.
கணவனை இழந்த பெண்கள் அணிகலன்களைக் களைந்து, கூந்தலை நீக்கி, தம்மை அழகற்றவர்களாக ஆக்கிக் கொண்டனர். கணவர் இறந்த நிலையில் காமுறுதல், காமுறப்படல் ஆகியவற்றிற்கான உணர்வு தம்பால் தோன்றாமைக்கு உதவும் வகையில் மனைவியர் மேற்கொண்ட செயல்களே கைம்மைநோன்பின் நிகழ்ச்சிகள் ஆகும்.
வாலியின் மனைவியான தாரை, வாலி இறந்து விட்டதால் கைம்மை வாழ்வை வாழ்ந்தாள். கார்காலம் முடிந்த பிறகு, சீதையைத் தேடலாம் அதுவரை அரண்மனையில் இரு என்று இராமன் கூறினான். மாதங்கள் முடிந்தும் சுக்ரீவன் வராததால் கோபம் கொண்ட இராமன், இலட்சுமணனை அனுப்பினார். கோபத்துடன் சென்ற இலட்சுமணனை அனுமன் ஆலோசனைப்படி தாரை எதிரில் வந்து பேசினாள். அவருடைய சொல்லைக் கேட்ட அளவில் பேசியவர் யார் என்பதை அறிய இலட்சுமணன், வழங்கும் வெண்மையான முழுமதி பகல் பொழுதிலே பூமியில் வந்த தோற்றத்தைப் போன்ற ஒளி விளங்கும் குன்றிய அழகு விளங்கும் முகத்தை உடையவளான தாரையின் முகத்தைப் பார்த்தான் திருமாங்கல்யத்தை ஒழித்து, அணிகள் பதித்து செய்யப்பெற்ற மற்ற அணிகலன்களையும் அணியாமல் நீக்கி நறுமணம் உள்ளதும் மலர் மாலையை அணியாது விலக்கி, குங்குமப்பூவின் குழம்பையும், சந்தனக் குழம்பையும் பூசிக்கொள்ளாத பருத்தக் கொங்கைகள், பாக்கு மரம் போன்ற கழுத்துடன் மறையும் படி மேலாடையில் நன்கு பொறுத்துள்ள மகளிர் சிறந்தவளான அந்தத் தாரையைப் பார்த்து இலக்குவணன் இரங்கத்தக்க அத்தோற்றத்தைக் கண்டான். கண்ணீர் வடித்தான்.
“மங்கல அணியை நீக்கி மணி அணி துறந்து வாசக்
கொங்கலர் கோதை மாற்றிக் குங்குமச் சாந்தம் கொட்டாப்
பொங்கு வெம் முலைகள் பூகக் கழுத்தொடு மறையப் போர்த்த
நங்கையைக் கண்ட வள்ளல் நயனங்கள் பனிப்ப நைந்நான்” (கிஷ்கிந்தா காண்டம் கிஷ்கிந்தா படலம் 612)
முடிவுரை
திருமணம் என்றாலே தாலி கட்டுதல்தான் என்றாலும் கம்பராமாயணத்தில் தாலி கட்டுதலை எவ்விடத்தலுமே கம்பர் கூறவில்லை. இராமனின் திருமணத்தின் போது கூட, ஏனையச் சடங்குகளைக் கூறிச் சென்றுள்ளார். அனுமனைக் கட்ட பல கயிறுகள் பயன்பட்டன. தாலிக்கயிரைத் தவிர என்றும், போரின் போது தம் கணவருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயத்தில் பெண்கள் தம் மங்கல நாணை பயத்தில் தொட்டுப் பார்த்துக் கொண்டதையும், கணவரை இழந்த பெண்கள் தம் மங்கல நாணை நீக்கி கைம்மை மேற்கொள்வர் என்றும், கனவு காணும்போது மங்கல நாண் தானாகவே கழன்று விழுந்துவிட்டது என்பன போன்ற செய்திகளைக் கூறும் இடங்களில் எல்லாம், மங்கல நாணாகிய தாலி குறித்துக் கம்பர் கூறியுள்ளதை அறிந்து கொள்ள முடிகிறது.
துணைநூற்பட்டியல்
1. எல்லைகள் நீத்த இராமகாதை, பழ.கருப்பையா, விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர், 2008.
2. நாலாயிர திவ்வியப் பிரபந்தம் மூலமும் விளக்கவுரையும், தொகுதி 1,2, கமலக்கண்ணன் இர்.வ. வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2001.
3. கம்பன் காட்டும் வைணவப் பேருலகம், அமுதன், லக்ஷண்யா பதிப்பகம், சென்னை, 2019.
4. பூவண்ணன், கம்பராமாயணம் தொகுதி 1, 2, 3, 4, 5, 6, 7, 8 வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2004.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.