நீண்ட காலத்துக்கு முன்னர், ஒரு வார இதழில் சுஜாதா அவர்கள் ஒரு சிறுகதை எழுதியிருந்தார். கதையின் முடிவில், இனி, ‘கதையின் தொடக்கத்திலிருந்து படிக்கவும்’ என்று எழுதியிருப்பார். மீண்டும் கதையின் தொடக்கத்திற்குச் சென்றால், அது கடைசி வரியின் தொடர்ச்சியாக அமைந்திருக்கும். கதையின் வருணனை மட்டுமல்ல, கதையின் நிகழ்ச்சிகளும் அவ்வாறே அமைந்திருக்கும். மிகவும் கவனத்துடன் எழுதப்பட்ட அந்தக் கதையின் அமைப்பு பலத்த வரவேற்பைப் பெற்றது. ஏதோ ஒரு சுழலுக்குள் சென்றமாதிரி, கதை மீண்டும் மீண்டும் சுற்றிச் சுற்றிச் சுற்றி வந்தது. அந்த மாதிரி கதை அமைப்பும், வாக்கிய அமைப்பும் தமிழுக்குப் புதியது. பல புதிய உத்திகளைத் தமிழ் எழுத்துலகில் புகுத்திய சுஜாதா அவர்களின் வெற்றிக்கு இதுபோன்ற முயற்சிகள்தான் காரணம்.
ஆனால், தமிழ் உலகத்துக்கு இது ஒன்றும் முற்றிலும் புதிய உத்தி அல்ல என்பதற்குச் சான்றாகச் சங்க இலக்கியத்தில் ஒரு பாடல் உள்ளது. எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகை என்ற பாடல்தொகுப்பில் உள்ள முல்லைத்திணைப் பாடல் அது.
முல்லைத் திணை என்பது இருத்தலும் இருத்தல் நிமித்தமும் என்ற உரிப்பொருளை உடையது. உரிப்பொருள் என்பது பாடலின் மையக் கருத்து (the main theme). தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து செல்கிறான். அவன் செல்வதன் நோக்கம் வீடு உயர அல்லது நாடு உயர என்பதுவே. வீடு உயர அவன் மேலும் பொருள் சேர்க்கப்போகலாம். நாடு உயர அவன் மன்னன் படையில் சேர்ந்து, பகைவருடன் போரிடச் செல்லலாம். எப்படியிருப்பினும் அவன் தலைவியின் ஒப்புதலுடன் ஊரைவிட்டு நெடுந்தூரம் சென்றிருக்கிறான். அந்த நாட்களில் தலைவி பொறுமையுடன் தனது அன்றாடப் பணிகளை ஆற்றிக்கொண்டிருப்பாள். தலைவனின் பிரிவை எண்ணி அழுது புலம்புவதில்லை. இவ்வகைப் பாடல்கள் முல்லைத்திணைப் பாடல்கள் எனப்படும். இருப்பினும், தலைவன் தான் திரும்பும் காலத்தைத் தலைவியிடம் சொல்லிவிட்டுத்தான் செல்வான். பொதுவாகப் பொருள் நிமித்தமோ, போர் நிமித்தமோ பிரிந்து சென்ற தலைவன் கார்காலத்தில் திரும்பிவிடுவது வழக்கம். எனவே கார்காலம் வரும்வரை பொறுமையுன் காத்திருக்கும் தலைவி கார்காலம் தொடங்கியவுடன் நிலைகொள்ளாமல் தவிக்க ஆரம்பித்துவிடுவாள். கார்காலம் என்பது தென்மேற்குப் பருவக்காற்று தென்னிந்தியாவில் நிலைகொள்ளூம் காலம். ஆவணி, புரட்டாசி ஆகிய மாதங்களைக் கொண்டது. அதற்கு முந்தைய காலம் முதுவேனில் காலம். அப்போது வரண்டு கிடந்த பூமி, மழை பெய்யத் தொடங்கியதும் பச்சைப் பசேல் எனப் பசுமையாகக் காட்சியளிக்கும். புல், பூண்டு, மரம், செடி, கொடி ஆகியவை செழிப்புடன் காட்சியளிக்கும் காலம் அது. அதுமட்டுமல்ல, அவை மொட்டுவிட்டு, மலர்ந்து, விதம் விதமான வண்ணப்பூக்களுடன் சிரித்துத் தலையாட்டும். வீட்டுக் கொல்லைப்புறத்தில் அவரை, பீர்க்கு, புடலை ஆகிய விதைகளை நடுவார்கள். இவை மழையில் கலித்து வளர்ந்து வீட்டுப் பின்புறத்தையே புதர்க்காடாய் மாற்றிவிடும்.
ஒருவேளை தலைவன் திரும்பி வரத் தாமதமானால், தலைவி ஏங்க ஆரம்பித்துவிடுவாள். சரியாக உண்ணாமல் உறங்காமல் அவனை நினைத்து வாடிய வண்ணமே இருக்கும் தலைவி மெலிந்துபோய்விடுவாள். சரியான சாப்பாடு இல்லாததால், உடல் மெலிந்து இரத்தச்சோகை நோயால் பாதிக்கப்படுவாள் (malnutrition and anaemia). அப்போது அவளின் மேனி நிறம்மாறி மஞ்சள்பூத்துவிடும். இவ்வாறு மஞ்சள்பூத்த மேனி மாரிக் காலத்துப் பீர்க்கம்பூவைப் போல் இருக்கும். இதைவைத்து ஓர் அழகிய பாடலைப் புனைந்துள்ளார் புலவர் கோக்குள முற்றனார்.
கார்காலத் தொடக்கத்தில் வந்துவிடுவேன் என்று சொல்லிப்போன தலைவன் இன்னும் திரும்பவில்லை. தன்னை மறந்து தன் பணியில் ஈடுபட்டிருக்கிறாரோ என்னவோ? கார்காலம் வந்து, செடிகொடிகளும் தழைத்து அவை பூக்கும் காலமும் வந்துவிட்டதே. தலைவர் இதைப் பார்க்கவில்லையா? என்று தோழி தலைவியிடம் கூறி அங்கலாய்க்கிறாள். தலைவி, “நம் கொல்லைப்புறத்தில் புதராக மண்டிக்கிடக்கும் பீர்க்கங்கொடியில் மலர்ந்துள்ள பூக்கள் சிலவற்றைப் பறித்துக்கொண்டுபோய், உன் தலைவி இந்த நிலைக்கு ஆளாகிவிட்டாள் என்று சொல்ல்லக்கூடியவர் யாராவது கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்” என்று ஏக்கத்துடன் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
“இன்னள் ஆயினள் நன்னுதல்” என்று அவர்
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே
நன்றுமன் வாழி தோழி, நம்படப்பை
நீர்வார் பைம்புதல் கலித்த
மாரிப் பீரத்து அலர்சில கொண்டே
- குறுந்தொகை 98
(நன்னுதல் = நல்ல நெற்றியை உடைய தலைவி; துன்ன = நெருங்கி; படப்பை = கொல்லைப்புறம்; வார் = வழிந்தோடு; பைம்புதல் = பச்சைப் புதர்; கலித்த = செழித்துப் படர்ந்த; பீரம் = பீர்க்கு; அலர் = பூ)
இந்தப் பாடலின் இறுதி அடியை, முதல் அடியுடன் திரும்ப இணைக்க, அது ஒரு தொடரும் வாக்கியமாகத் தெரிகிறது இல்லையா? அவ்வாறு அமையும் வகையில் தன் பாடல் அடிகளை அமைத்திருக்கிறார் புலவர். இந்தப் பாடலின் அடிகள் கீழ்க்கண்டவாறு அமைந்திருந்தால், இது ஒரு மிகச் சாதாரணமான பாடலாக இருந்திருக்கும்.
நம்படப்பை நீர்வார் பைம்புதல் கலித்த
மாரிப் பீரத்து அலர்சில கொண்டு
இன்னள் ஆயினள் நன்னுதல் என்றுஅவர்
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே
நன்றுமன் வாழி தோழி.
இதற்கு மாறாக, இன்னள் ஆயினள் நன்னுதல் என்று தன் பாடலைத் தொடங்குகிறார் புலவர். இப்போது, பாடலைச் செய்யுளாக இல்லாமல், உரைநடையாகப் பார்ப்போம்.
“இன்னள் ஆயினள் நன்னுதல்” என்று அவர் துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே நன்றுமன் வாழி தோழி, நம் படப்பை நீர்வார் பைம்புதல் கலித்த மாரிப் பீரத்து அலர் சில கொண்டே, “இன்னள் ஆயினள் நன்னுதல்” என்று அவர் துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே நன்றுமன் வாழி தோழி, நம் படப்பை நீர்வார் பைம்புதல் கலித்த மாரிப் பீரத்து அலர் சில கொண்டே, “இன்னள் ஆயினள் நன்னுதல்” என்று அவர் துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே நன்றுமன் வாழி தோழி, நம் படப்பை நீர்வார் பைம்புதல் கலித்த மாரிப் பீரத்து அலர் சில கொண்டே … என்று சுற்றிச் சுற்றிச் சுற்றிச் சொல்லிக்கொண்டே போகுமாறு தன் பாடல் அடிகளையும், பாடலின் நிகழ்ச்சிகளையும் அமைத்திருக்கும் புலவர் கோக்குள முற்றனார் சுஜாதாவுக்கு முன்னோடியாய்த் திகழ்கிறார் அன்றோ!