ஈழம் - போரும் வாழ்வும்
முனைவர் ப.தமிழரசி & க. மகேஸ்வரி
முன்னுரை
இலங்கையின் வடகிழக்கு மாவட்டங்களில் உள்ள தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமை அல்லது தனிநாடு என்ற கோரிக்கையை முன் வைத்து ஆயுதம் தாங்கிய தமிழ்ப் போராளிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்றது. தனிச் சிங்களச் சட்டம், பௌத்தம் அரச மயமாக்கப்படல், இலங்கைக் குடியுரிமைச் சட்டம், யாழ் பொது நூலகம் எரிப்பு, சிங்களப் பேரினவாதம், அரசின் சித்திரவதை, பாலியல் வன்முறை, இலங்கைத் தமிழர் இனஅழிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் போர் வலுப்பெற்றது. இந்தக் கொடிய போர் குறித்தும், போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களது வாழ்வு குறித்தும் ஈழப் பெண்கவிஞர்களின் கவிதை வழி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
போரின் தன்மைகள்
போர் என்றாலே பல உயிர்களைப் பறிக்கக் கூடியது. அத்தகைய போர் பல ஆண்டுகளாக ஈழ மண்ணில் நடைபெற்றது. போரில் குழந்தைகள், பெண்கள், வீரர்கள் என ஏராளமானோர் தங்களது உயிரைக் கொடுத்துள்ளனர். போர்க்களம் சென்று போரிட்டு உயிர் நீத்தோர் பலர்.
“தாய் மண்ணின் கூரையிலே போர்
சேய்கூட மாய்கின்ற சோகமயக் கோலங்கள்” (வேதா கவிதைகள், ப.98)
என்ற வேதாவின் கவிதை வரிகளிலே போரின் அத்தனை தன்மைகளும் புலப்பட்டுவிடும்.
துப்பாக்கிச் சூடு, வெடிகுண்டு வீச்சு, ஷெல் மழை, எனப் பல வகைகளில் மனித உயிர்கள் மலினப்படுத்தப்படுகின்றன. வீதிகள் தோறும் இரத்தமும் சதையுமாய், வீடுகள் தோறும் கை, கால்களை இழந்தவர்களுமாய் காட்சியளிக்கின்றது ஈழம்.
“துப்பாக்கி வெடிச்சத்தம்
தொடர்ந்து கேட்கின்றது
பதுங்கு குழிகளில்
மனிதர்கள் தவிக்க
தொடர்கிறது அந்த இரவு
மானிடத்தின் மரணத்திற்கு
இரத்தம் தோய்ந்த இந்த
தெரு சடலங்கள்
கற்பிழந்த பெண்கள்
கருகிக் காய்ந்த குழந்தை
....................” (விலங்கிடப்பட்ட மானுடம், ப.15)
கவிஞர் சுல்பிகாவின் இக்கவிதை வரிகள் விடிகின்ற பொழுதுக்குள் மீளாத துன்பங்களைத் தருகின்ற போரின் கொடிய நடவடிக்கைகளை எடுத்தியம்புகின்றது. இரவு விடிவதற்கு முன் கற்பை இழந்து உயிரைத் துறந்த பெண்கள், குண்டுகளின் தீப்பசிக்கு இரையான குழந்தைகள் ஆகியோரது மரணத்தைப் பறைசாட்டுகின்றது.
மனித உயிரை ஒரு நொடிப் பொழுதில், கண்மூடித் திறக்கின்ற தருணத்தில் எடுத்து விடுகிறது ஆயுதம். ஒவ்வொரு நாளும் பல ஆயிரக்கணக்கான உயிர்கள் மடிந்து கொண்டிருக்கும் யுத்த பூமியில் இறப்பு என்பது இயல்பாகிவிட்டது. அனைவரின் மனதையும் கல்லாக்கி விட்டது. ஈழமண்ணில் வாழ்கின்ற தமிழின மக்களைப் போரின் பெயரால் ஒவ்வொருவராக அல்ல, கொத்துக் கொத்தாக அழிக்கப்படுகின்ற கொடுமையை,
“ஈழ வான்பரப்பில்
இயந்திரப் பறவைகள்
தமிழின அறுவடை” (மை கவிதைத் தொகுதி, ப.49)
என்று கவிஞர் நளாயினி கூறுவது மறுக்கப்படாத உண்மை.
பெண்களும் போர்க்களமும்
போர் மேற்கொள்கின்ற எதிரிகளான இராணுவப் படையினர் இரவு வேளைகளில் தமிழ் மக்கள் வசிக்கின்ற பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள பெண்களின் கற்பைச் சூறையாடுகின்றனர். அவ்வரக்கர்களின் செயல் அவற்றோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. அப்பெண்களின் மேல் வெடி வைத்து அவர்களது உயிரையும் பறித்து விடுகின்றனர்.
எதிரிகளின் இக்கொடிய செயல்களால் மரணித்த கோணேஸ்வரியும் அவரைப் போன்ற பலரது மரணமும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. தமிழ்ப் பெண்கள் இத்தகைய செயலுக்கு ஆளாக்கப்பட்டு அழிக்கப்படும் நிலையினை கவிஞர் ரேவதி எழுதியுள்ளார்.
“வீரர்களே! வாருங்கள்
உங்கள் வக்கிரங்களை தீர்த்துக் கொள்ளுங்கள்
....................................
எங்கள் யோனிகளின் ஊடே
நாளைய சந்ததி தளிர்விடக் கூடும்
ஆகவே,
வெடி வைத்தே சிதறடியுங்கள்
ஒவ்வொரு துண்டுகளையும் கூட்டி அள்ளி
புதையுங்கள்
இனிமேல் எம்மினம் தளிர்விட முடியாதபடி” (பெயல் மணக்கும் பொழுது, பக்.227)
இத்தகைய கொடுமைகளினால் பெண்கள் போர்க்களம் சென்று, போராடி, தாய்மண்ணை மீட்கத் துணிந்து செயல்பட்டுள்ளனர். வீட்டிற்குள் அடங்கி வீட்டுவேளை செய்வதற்கே பெண்கள், அடுப்பூதும் பெண்ணிற்குப் படிப்பெதற்கு என்ற எண்ணத்தை உடைத்து நாட்டைக் காக்க, போர் செய்யப் புறப்பட்டுள்ள பெண்புலிகளின் சிறப்பினை,
“அடுப்பூதும் பெண்ணிற்கு படிப்பெதற்கு?
என்றடைந்த சிறையுடைத்து
மண்அதிர விண்அதிர மாவீரப் பெண்களாக
புதிதாய் உயிர்த்தவர்கள் பூக்களல்ல நாம் புலிகள்” (கனவு மெய்ப்பட வேண்டும், ப.54)
என்று பெருமைப்படக் கூறுகிறார் கவிஞர் பாரதி.
கலாச்சாரத் தடைகளை மீறி போர்க்களம் காணல், நவீன இயந்திரங்களை இயக்குதல், அவற்றைப் பழுதுபார்த்தல், உடற்பயிற்சி, எல்லைகளைக் காத்தல், போர் புரிதல் எனப் பலவகையிலும் பெண்கள் செயல்படுவதை,
“சாக்குத் தொப்பியில்
மழைநீர் ஊறி
தலையெல்லாம் கணக்க
கருவியோடு தானும்
குளிரில் பல்கிடுக்க
மரத்தின் மறைவிலிருந்து
பகைத்தளம் நோக்கி தன்
விழி விரித்த வீரி ஒருத்தி” (பெயரிடாத நட்சத்திரங்கள், ப.91)
என்ற கவிதை வரிகளில் உணரலாம். போர் செய்கின்ற ஆண்மகனை வீரன் என்று கூறுவதைப் போன்று பெண்ணை, அவள் வீரத்தை மையப்படுத்தி ‘வீரி’ என்றழைக்கிறார் கவிஞர்.
வாழ்க்கைச் சூழல்
போரால், அனைவரும் கூடி மகிழ்ந்து கொண்டாடும் திருவிழாக்காலங்களும் துயரத்தையே பறைசாட்டுகின்றன. எந்தக் கணமும் மரணம் ஏற்படும் எனும் வாழ்க்கையினை வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது, விழாக் காலங்களில் மகிழ்வோடு குறுஞ்செய்திகளை அனுப்புவது இயல்புக்குப் புறம்பானது. பண்டிகை நாட்களிலும் கூடப் பதுங்கு குழிகளுக்குள் பதுங்கி உயிரைப் பாதுகாக்கும் துயரம் தீர்வது எப்பொழுது? என்ற கேள்வியும் ஏக்கமும் நிறைந்த வாழ்க்கையை,
“இந்தப் பண்டிகை நாட்களில்
என் அன்பே!
நம் ஊரின் எந்தப் பதுங்கு குழியில்
பதைக்கும் விழிகளோடு உயிர் தரித்திருக்கிறாய்?
...................................
நாதஸ்சுவரமும் மேளச்சத்தமும்
கலந்தொலிக்கும் இத்திருவிழா நாட்களில்
கோவில் கேணி பிரதிபலித்த
நம் தலைகீழ் பிம்பங்கள் போல் ஆகிற்று வாழ்க்கை!” (இரவுகளில் பொழியும் துயரப்பனி, பக்.32-33)
எனக் கூறும் கவிஞர் தமிழ் நதியின் கவிதை, பண்டிகை நாட்களில் சமைப்பதற்காக எடுக்கப்பட்ட அரிசியிலும் குருதி ஒட்டியிருக்கின்ற நிலையையும் மக்களின் அச்சம் நிறைந்த வாழ்க்கையும் எடுத்தியம்புகின்றது.
வாழ்க்கை மீதான நம்பிக்கை
எதிரியை எதிர்த்துப் போராட பயந்து புதைகுழிகளில் சாகாத பிணங்களாய் வாழ்வதை விட எதிர்த்துப் போராடும் துணிவு வேண்டும். ‘பலவீனமே தோல்விக்கு அடிப்படைக் காரணம். தோல்வியைத் தோற்கடிக்க பலவீனத்தை வெற்றி பெற வேண்டும். அப்போது வாழ்வு இன்பம் அடையும் என்று எதிர்காலம் நோக்கி நம்பிக்கையுடன் செல்லத் தூண்டும் கவிஞர் சுல்பிகாவின் கவிதை வரிகள்,
“நாமிந்த உலகிற்கு
நரகத்துளலவா வந்து பிறந்துள்ளோம்
புதைகுழிகளில்
சாகாத பிணங்களாய்
சதா வாழவா வந்தோம்
இல்லவேயில்லை
புதைகுழியிலிருந்து
புதிதாய்ப் பிறப்போம்
புதுமைகள் செய்வோம்
பலவீனங்களல்ல
பலத்தின் அடிப்படையே நாம்” (விலங்கிடப்பட்ட மானுடம், ப.6)
நம்பிக்கையின்றி வாழ்க்கையை வாழ்பவன் மரணத்தை வேண்டி தன் கல்லறையை நோக்கி செல்பவனாகிறான். ஆனால் ஈழ மக்கள் பல இன்னல்களைக் கடந்து நம்பிக்கையோடு போராடி வாழ்வை வெற்றி பெற வேண்டும் என்பதைக் கவிதைகள் எடுத்துக் கூறுகின்றன.
முடிவுரை
ஈழத்தில் பல ஆண்டுகளாக நடைபெற்ற போரில் உயிர்கள் பலவற்றை இழந்தும் துன்பங்களைச் சுமந்து கொண்டும் போருடன் சேர்த்து வாழ்க்கைப் போராட்டத்தையும் மேற்கொள்கின்றனர் ஈழமக்கள். பெண்கள் போரால் தங்களுக்கு நிகழும் கொடுமைகளால் போராளிகளாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆயினும் வாழ்க்கையில் மாறுதல்கள் ஏற்படும் இன்னல்கள் தீரும் என்ற நம்பிக்கையோடும் எதிர்பார்ப்போடும் வாழ்ந்து வருவதை கவிஞர்களின் கவிதைகளின் மூலம் அறிய முடிகிறது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.