திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள் எந்தவொரு குறிப்பிட்ட சமயம் சார்ந்த நூலாகவும் இல்லை. ஏனெனில், திருவள்ளுவர் தான் வாழ்ந்த காலத்தில் இருந்த ஒரு இனத்தையோ, சாதியையோ, சமயத்தையோ, அரசையோ, ஆளும் வர்க்கத்தையோ அவர் இயற்றிய திருக்குறளில் எங்கும் குறிப்பிடவில்லை. ஆனால், திருவள்ளுவரைத் தங்கள் சமயத்தவர் என்றும், திருக்குறளைத் தங்கள் சமயம் சார்ந்த நூலென்றும் சில குறிப்புகளைக் காண்பித்துத் தவறான கருத்துக்களைச் சிலர் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர்.
திருக்குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்து எனும் அதிகாரத்தில் இடம் பெற்றுள்ள கடவுள் குறித்த விளக்கங்கள் சமண சமயக் கடவுளுக்கும், பௌத்த சமயப் பெரியோர்களுக்கும் பெரிதும் பொருந்துகின்றன என்று சமண, புத்த சமயத்தினர் கூறுகின்றனர். கடவுள் வாழ்த்து எனும் அதிகாரத்தில் இடம் பெற்றிருக்கும் குறள்களில் இடம் பெற்றிருக்கும் கடவுள் என்று பொருள்படும் ஆதிபகவன், வாலறிவன், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான், இறைவன், பொறிவாயில் ஐந்தவித்தான், தனக்கு உவமை இல்லாதான், அறவாழி அந்தணன், எண்குணத்தான் எனும் சொற்கள் சமணம் மற்றும் புத்த சமயம் தொடர்பிலான பெரியோர்களையே குறிக்கின்றன என்றும், இந்தச் சொற்கள் குறிப்பிடும் கருத்துகள் அனைத்தும் தங்கள் சமய நூல்களில் இடம் பெற்றிருக்கின்றன என்றும் சில குறிப்புகளைக் குறிப்பிடுகின்றனர்.
கடவுள் வாழ்த்தில் முதல் குறளில் இடம் பெற்றிருக்கும் ஆதிபகவன் என்ற சொல் அரனையும், இரண்டாம் குறளில் இடம் பெற்றிருக்கும் வாலறிவன் என்ற சொல் மாலவனையும், மூன்றாம் குறளில் இடம் பெற்றிருக்கும் மலர்மிசை ஏகினோன் என்ற சொல் அயனையும் குறிப்பிடுகிறது. திருவள்ளுவர் இங்கு சிவன், திருமால், பிரம்மா எனும் இந்து சமயத்தின் முப்பெரும் கடவுள்களை மறைவாகக் குறித்து இருக்கிறார் என்று இந்து சமயத்தினர் குறிப்பிடுகின்றனர். இந்து சமயத்தினரில் சிவன் வழிபாட்டை முதன்மையாகக் கொண்ட சைவ சமயப் பிரிவினர் சிலர் திருக்குறளின் கடவுள் வாழ்த்துப் பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துக் கருத்துகளும் சைவ சமயம் தொடர்புடையவை என்கின்றனர். மற்றொரு பிரிவினரான வைணவர்கள் இதை மறுப்பதுடன், கடவுள் தொடர்பான சொற்களும், அதில் இடம் பெற்றிருக்கும் கருத்துகளும் வைணவத்திலேயே அதிகமாக இருக்கிறது என்கின்றனர்.
சைவ சமயப் பிரிவினர் திருவள்ளுவரைத் திருவள்ளுவ நாயனார் என்றே அழைக்கின்றனர். திருவள்ளுவரை சைவர் என்றும், திருக்குறளைச் சைவ நூல் என்றும் குறிப்பிடுகின்றனர். திருவாவடுதுறை ஆதீனமான கொரடாச்சேரி வாலையானந்த அடிகள் என்பவர் “திருவள்ளுவர் சித்தாந்த சைவர்” எனும் நூலை எழுதியுள்ளார். இந்நூலில் திருவள்ளுவரின் சமயம் சார்ந்த கருத்துகள் அனைத்தும் சைவ சித்தாந்தத்தினை விளக்குவதாக எழுதியுள்ளார். சோ. சண்முகம் என்பவர் எழுதிய “திருக்குறளில் சைவ சமயம்” எனும் கட்டுரையில் திருக்குறளில் சைவ சமயக் கருத்துகளே அதிகம் நிரம்பியிருக்கின்றன என்கிறார்.
இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் தமிழ் மொழி பேசுபவர்கள் சார்ந்திருக்கும் சமயங்களில் புத்தம், சமணம், இந்து சமயம் போன்றவைகளே திருவள்ளுவர் வாழ்ந்த காலத்திற்கு முன்பிருந்து இருப்பதாகக் கருதப்படுகின்றன. பிற சமயங்கள் திருவள்ளுவர் வாழ்ந்ததாகக் கருதப்படும் காலத்திற்குப் பின் தோன்றியவைகளாக இருக்கின்றன. இல்லையெனில், திருக்குறளிலுள்ள கருத்துகள் தங்களுடைய சமயம் சார்ந்த கருத்துகளாக இருக்கின்றன என்கிற சான்றுகளும் முன் வைக்கப்பட்டிருக்கும். உண்மையில் திருக்குறளில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் அனைத்தும் பொதுவானதாக இருக்கின்றன. இந்தக் கருத்துகள் அனைத்துச் சமயப் பிரிவினருக்கும் பொருந்துவதாக இருக்கின்றன. இதனால்தான் திருக்குறளைச் சமயப் பாகுபாடின்றி, கருத்து வேறுபாடுகளின்றி அனைவரும் போற்றுகின்றனர். திருக்குறளில் இடம் பெற்றிருக்கும் சமயம், கடவுள் தொடர்பான கருத்துகள் எந்தவொரு சமயத்தையும் சார்ந்ததாக இல்லை என்பதைத் திருக்குறளை முழுமையாகப் புரிந்து கொண்டால் உணர முடியும்.
இங்கு திருக்குறள் சமய சார்பற்றது என்பதை அறிந்து கொள்ள, ஒரு சில குறள்களை மட்டும் நாம் எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ளலாம்.
முதல் குறள்
திருக்குறளின் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்து பகுதியில் முதல் குறளாய் இருக்கும் திருக்குறளையே இங்கு முதலில் எடுத்துக் கொள்வோம்.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
(குறள் -1)
அகர ஒலியே எல்லா எழுத்துக்களுக்கும் முதலாவதாக இருக்கிறது. இது போல் ஆதிபகவன் உலகிலுள்ள உயிர்கள் அனைத்திற்கும் முதல்வனாக இருக்கிறான் என்பதே... இதன் பொருள்.
தமிழில் முதன்மையாக இருக்கும் எழுத்து “அ” என்பதுதான். அகரத்திற்குத் தமிழ் எழுத்துக்களில் முதல் மரியாதை உண்டு. இந்த எழுத்துக்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது. அதாவது, தமிழில் உள்ள அனைத்து எழுத்துக்களிலும் உள்ள கோடுகள், வளைவுகள் எல்லாம் “அ” எனும் எழுத்து ஒன்றிலேயே அடங்கியிருக்கின்றன. அகரத்திலுள்ள மேற்சுழி, குறுக்குக்கோடு (-), நேர்கோடு (|), கீழ்வளைவு ஆகிய இந்த நான்கு குறியீடுகளையும் வைத்துத்தான் தமிழின் ஏனைய எழுத்துக்கள் அனைத்தும் உருவாகியுள்ளன என்ற கருத்தைச் சேதுரகுநாதன் என்பவர் குறிப்பிடுகிறார்.
இது போல், உலகத் தோற்றம் கதிரவனிடமிருந்து தோன்றியதென்பர். அவ்வாறு தோன்றி தொங்கிய நிலையில் ஞாலம் என்ற பெயர் அமைந்தது என்றும் கூறுவர். இவ்வாறு தோன்றி நிலைத்த நிலப்பரப்பில், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்த பின்னர் உயிர்த்தோற்றம் ஏற்படலாயிற்று என்று சொல்வதுண்டு. உயிர்த் தோற்றத்தின் முதன்மையாகக் கூறப்படும் கதிரவனைத்தான் ஆதிபகவன் என்கிற பெயரில் திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார். இக்குறளில் திருவள்ளுவர் இயற்கையை வலியுறுத்திச் சிறப்பித்திருக்கிறார். இங்கு அவர் எந்தவொரு சமயத்தையும் முன்னிறுத்திப் பார்க்கவில்லை என்பதை உணர வேண்டும்.
இரண்டாவதாக ஒரு குறள்
கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
(குறள் -2)
தூய அறிவு வடிவானவனின் நன்மை தரும் திருவடிகளைத் தொழாதவர் என்றால், அவர் கற்றதனால் உண்டான பயன் யாதுமில்லை என்பது இதன் பொருள்.
மனிதன் கல்வி கற்று அறிவைப் பெருக்கிக் கொள்கிறான். கல்வியும் அறிவும் எவ்வளவு வளர்ந்தாலும் மனிதன் அந்தத் துறைகளில் முழுத்தூய்மை பெறுவது இல்லை. மனித அளவில் மூன்று குறைகள் குறிப்பிடத்தக்கனவாக உள்ளன. அறிவு பெருகப் பெருக அறியாமையும் நிழல் போல் தொடருகிறது. அறிவுப் பெருகப் பெருக ஐயமும் விடாமல் தொடருகிறது. அறிவு பெருகப் பெருக ஒன்றை வேறொன்றாகக் கொள்ளும் மருட்சி தோன்றுகிறது. இருள், ஐயம், மருள் ஆகிய மூன்றும் நீங்கிய ஒருவன் “வாலறிவன்” என்று இக்குறளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள வாலறிவன் என்பதை, எந்தச் சமயத்தின் கடவுளோடும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியதில்லை. எந்த சமயத்தின் தனிக் கருத்துகளும் இங்கு இடம் பெறவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
மூன்றாவதாக ஒரு குறள்
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
(குறள்-9)
எண் வகைக் குணங்களில் உருவான மேன்மையானவன் திருவடிகளை வணங்காத் தலை, கேளாக் காதும், காணாக் கண்ணும் போலப் பயனில்லாதது என்பது இக்குறளின் பொருள்.
கடவுளுக்கு குணமுண்டா? அதுவும் எட்டு வகையான குணமுண்டா? இக்குறளில் கடவுள் எண்குணத்தான் என்று எப்படி சுட்டிக்காட்டப்படுகிறார்? எண்குணத்தான் என்பதற்கு, எண்ணியபடி குணம் கொண்டவன் என்றும் கூட பொருள் கொள்ளலாம். இப்படியிருக்க, எண்குணத்தான் என்பது தங்கள் சமயத்தின் இறைவனையே குறிப்பிடுகிறது என்று சொல்லிக் கொள்வதில் பொருள் எதுவுமில்லை.
எட்டு வகையான குணங்கள் மனிதனின் எட்டு வகையான மெய்ப்பாடுகளையே குறிப்பிடுகிறது. தொல்காப்பியத்தில் ஒரு பாடல் இருக்கிறது.
“நகையே அழுகை இனிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகைஎன
அப்பால் எட்டே மெய்ப்பாடென்ப”
(தொல்காப்பியம். மெய்ப்பாட்டியல் நூ-3)
சிரிப்பு, அழுகை, துன்பம், மயக்கம், அச்சம், பெருமிதம், சினம், மகிழ்ச்சி என மெய்ப்பாடுகள் எட்டாகும் என்பதே இந்தத் தொல்காப்பியப் பாடலின் பொருள். இந்த எட்டு வகையான மெய்ப்பாடுகளும் எட்டு வகையான குணங்களின் அடிப்படைகளாக இருக்கின்றன. எட்டு மெய்ப்பாடுகளில் சிறப்புற்று விளங்குபவன் மனிதன் எனும் நிலையிலிருந்து மேம்பட்டவனாக இருக்கிறான். அவனின் திருவடிகளை வணங்கி, அவன் வழியாக நல்லவைகளைப் பார்த்திட வேண்டும், நல்ல செய்திகளை அறிந்திட வேண்டும், அப்படியே அவன் வழியைக் கடைப்பிடித்து நாமும் நல்வாழ்க்கையினை அடைந்திட வேண்டும் என்பதையே திருவள்ளுவர் வலியுறுத்தி இருக்கிறார் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். தவறான பொருள் கொண்டு, தவறாகச் சிந்திப்பதைத் தவிர்த்திட வேண்டும்.
நான்காவதாக ஒரு குறள்
பற்றுக பற்றுஅற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.
(குறள் -350)
இந்த உலகிலுள்ள பற்றிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வதற்கு உரிய ஒரே வழி, எந்தப் பற்றும் இல்லாதவனைப் பற்ற வேண்டும் என்பதே இதன் பொருள்.
உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் ஏதாவது ஒன்றின் மீது பற்று கொண்டிருக்கின்றன. இல்லற வாழ்க்கையைத் துறந்து வாழும் துறவிக்குக் கூட, துறவறத்தின் மீது தனிப் பற்று இருக்கத்தான் செய்கிறது. எந்தவிதப் பற்றும் இல்லாத ஒருவன் மனிதனை விட மேலான நிலையிலிருப்பவனாகத்தான் இருக்க முடியும். அவனைப் பின்பற்றுங்கள், அவனை வழிபடுங்கள் என்று பொதுவாக இந்தத் திருக்குறள் குறிப்பிடுகிறது. இந்தத் திருக்குறளில் எந்தச் சமய சார்புடைய கடவுளைப் பற்றிய குறிப்பும் இல்லை என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஐந்தாவதாக ஒரு குறள்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
(குறள் -50)
உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான் என்பது இதன் பொருள்.
இந்த உலகம் துன்பம் நிறைந்தது. இது நிலை இல்லாதது, பொய்யானது, மாயமானது என்றுதான் அனைத்து சமயங்களும் குறிப்பிடுகின்றன. ஆனால், இந்த உலக வாழ்க்கையைக் கண்டு அஞ்சக் கூடாது. நல்ல நெறியை, நல்ல ஒழுக்கத்தைப் பின்பற்றி வாழ்கின்றவர்களுக்கு எந்தத் துன்பமுமில்லை. இந்த உலக வாழ்வில், நல்ல வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்கின்றவர்களுக்கு நன்மையும், நல்ல வளமையும் கிடைக்கும் என்பதில் ஐயமுமில்லை. மேல் உலகம் எனும் வீடு பேற்றில் எத்தகைய சிறப்பு, இன்பம் போன்றவை கிடைக்கும் என்று நாம் நம்புகிறோமோ அவை அனைத்தும் இந்த உலகத்திலேயே கிடைக்கிறது. உலக வாழ்வை வெறுக்காமல், இந்த உலகில் பற்று கொண்டு, நல்லெண்ணத்துடன் நல்வாழ்க்கை வாழ வேண்டும் என்று புதியதொரு கருத்தைக் குறிப்பிடும் திருவள்ளுவர், சமயக் கருத்தாளர்களுக்கு மாறுபட்ட கருத்தினைக் கொண்டவர். அவரைக் குறிப்பிட்ட சமயத்தவர் என்றும், அவர் இயற்றிய திருக்குறள் நூலைக் குறிப்பிட்ட சமயத்தைச் சார்ந்தது என்றும் கருதுகிற பார்வையை மாற்றிட வேண்டும். திருக்குறளை உலகப் பொதுமறையாகப் போற்றிட வேண்டும்.