சொற்பொழிஞர் அண்ணா
முனைவர். சே. கல்பனா

நாமொழியால் நானில மக்களின் உள்ளத்துள் எழுச்சியை ஏற்படுத்தி, எண்ணத்துள் பகுத்தறிவு சிந்தனையைச் செதுக்கிய சிந்தனைச் சிற்பிகள் பலர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் பேரறிஞர் அண்ணா என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பெறும் சி.என்.அண்ணாதுரையாவர். இவர் தம் நாமொழியால் தமிழ்நிலத்தை அசைத்துப் பார்த்தவர். பொதுமக்களிடம் மட்டுமின்றி வருங்கால இளைய சமுதாயத்தினரிடமும் பகுத்தறிவுச் சிந்தனையை வித்திட்ட பண்பாளர். இவருடைய மேடைப் பொழிவினைக் கேட்பது திருவாடுதுறை இராஜரத்தினம் அவர்களின் நாதசுரத்தில் தோடியைக் கேட்பதை ஒக்கும் என்பர்.
நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் அண்ணாவின் பொழிவினைக் குறிப்பிடும் பொழுது ‘சிறந்த பேச்சாளர் பட்டியலின் முன்னணியில்
டொமஸ் தெனியைக் கொண்டு வந்து நிறுத்துகிறது கிரேக்க நாடு;
எட்மண்ட் பர்க்கைக் கொண்டு வந்து நிறுத்துகிறது இங்கிலாந்து;
ராபட் கீரின்,இங்கர்சாலைக் கொண்டு வந்து நிறுத்துகிறது அமெரிக்கா;
சிறந்த பேச்சாளர் வரிசையில் முதலிடத்தில் திராவிடம் நிலை நிறுத்துவதற்குரிய ஒரே ஒருவர் அறிஞர் அண்ணாதான். இவரது சொற்பொழிவு சலசலவென்று ஓடும் சிற்றருவியின் பாங்கு போலவும் சொற்கள் நாணயச் சாலையில் அடிப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக விழும் நாணயங்கள் போலவும் ஒன்றோடு ஒன்று மோதுதல் இன்றி வெளிவரும் என்பர். அண்ணாவினுடைய நாநேர்த்தியாலும் கருத்து தெளிவாலும் ஈர்க்கப்பட்டு,
"ஓ!அந்த குரலில் என் ஆன்மாவின்
ஆழத்தைத் தொடும்
ஏதோ ஒன்று இருக்கிறது." (லாங்பெல்லோ)
எனத் தமிழ்ச் சமுதாயம் கட்டுண்டு கிடந்த, பொழிவுகளைக் கால வரிசைப்படி தொகுத்துப் பூம்புகார் பதிப்பகம் இரண்டு தொகுதிகளாக வெளியிட்டுள்ளது. இத்தொகுப்பில் 139 பொழிவுகள் இடம் பெற்றுள்ளன.
அண்ணாவின் தனித்தன்மை
அண்ணாவின் சொல்லும்,சொல்லை வெளிப்படுத்தும் உத்திகளும், சொற்பொழிவாற்றும் முறையும் தனித்தன்மையுடையதாக இருக்கும் என்பதை அவருடைய பொழிவுகளை அவதானிக்கும் பொழுது உணரலாம். சிறு வயதிலிருந்தே எழுத்திலும் பேச்சிலும் பிறரைப் பின்பற்றாமல் தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொண்டார் என்பதை நாராண துரைக்கண்ணன் குறிப்பிடுகின்றார்.
"1934-ஆம் ஆண்டு சென்னை ஜார்ஜ் டவுன் ஏழு கிணறு வட்டத்தில் உள்ள ஒரு வீட்டு மேல் மாடியில் பாம்வேட் லிட்டரி பார்லிமெண்ட் சார்பில் ஒரு பொதுக்கூட்டம், அதில் கோபாலரத்தினம் பேசினார், செங்கல்வராயன் சொற்பொழிவாற்றினார், பாலசுப்பிரமணியம் இன்னும் யார்யார்ரெல்லாமோ பேசினார்கள். கடைசியாக வந்தவர் ஐயா ஆசாமி ஒருத்தர். ஐந்தடி ஒரு அங்குலம் உயரம் இருக்கும். சம்புஷ்டியான சரீரம், அறிவுத் தீட்சணத்தை வெளிப்படுத்தும் அகன்ற நெற்றி, ஆழ்ந்த சிந்தனையில் மிதக்கும் பெரிய கண்கள், ஆட்களைக் கவரும் எடுப்பான மூக்கு, மீசை சரியாக கூட அரும்பவில்லை தோழர்களே என்றார் கூட்டத்தைப் பார்த்து. அவ்வளவுதான் அவர் உள்ளத்திலிருந்து எழும் சந்தர்ப்ப உணர்ச்சிக்கேற்பச் சொற்கள் சரளமாக வெளிவந்து கொண்டிருந்தன. பொருள் பொதிந்த அவர் பேச்சில் தெளிவு இருந்தது. அவர் எடுத்துக் கொண்ட கட்சியை நிலைநாட்டத் தர்க்க ரீதியாக பேசினார். அவர் பேச்சில் இன்னொரு விசேஷம் இருநத்து, அதாவது பிறரை இமிடேட் பண்ணாமல் சொந்த பாணியிலே பேசியதுதான். அக்காலத்தில் மேடையில் பேச விரும்பும் இளைஞர்கள் அதிலும் கல்லூரி மாணவர்கள் மகாகனம் ஸ்ரீ நிவாஸ சாஸ்திரியார், ஆற்காடு இராமசாமி முதலியார், சத்திய மூர்த்தி முதலிய பிரபல பேச்சாளர்கள் பேசும் பொழுது செய்யும் அங்க சேஷ்டைகள், நடையுடை பாவனைகள் இமிட்டேட் செய்பவர்கள் கூட இருந்தனர். ஆனால் அந்த ஆள் அவ்வாறு செய்தவரல்ல. அவர் தான் நம் அண்ணா’.
மேடைப்பேச்சு
அண்ணா 1948-ஆம் ஆண்டு மேடைப்பேச்சு எவ்வாறு அமைய வேண்டும் என விளக்கி, மேடைப்பேச்சுக்கு இலக்கணம் வகுத்துள்ளார். மேடைப் பேச்சு மக்களுடைய சிக்கல்களை அறிந்து, அச்சிக்கலுக்குத் தீர்வு காணுவதாகவும், வாழ்க்கையை நெறிப்படுத்துவதாகவும் அமைய வேண்டும் எனவும் எதிர்காலத்தில் மேடைப்பேச்சு ஒரு சிறந்த ஆயுதமாகவும் விளங்கும் எனக் கூறி இவ்வாய்தத்தை நல்ல வழியில் பயன்படுத்தினால் மக்களுக்கு நன்மை விளையுமெனச் சாற்றுகின்றார். மேலும் மேடைப் பேச்சுக்குத் தங்களைத் தயாரித்துக் கொள்வோர் மிக ஜாக்கிரதையாக ஊன்றி நடக்க வேண்டிய இடம் மேடை எனவும் எச்சரிக்கின்றார்.
"மேடைப்பேச்சு கலாட்சேபம் அல்ல, விவாதத்துக்குரிய உயிர்ப் பிரச்சனைகளைப் பற்றிய கருத்துக்களை வெளியிடுவது. இனிமை எல்லோருக்கும் கிடைக்கும்படிச் செய்யும் நாவணிபம் அல்ல. மேடைப்பேச்சு, வாய்பொத்தி, கைக்கட்டிக் கேட்கும் மக்கள் எதிரே நடத்தும் உபதேசமல்ல, அருள் வாக்கல்ல, பேசுபவர் கேட்பவர்களை விட மேதை என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையுமல்ல. கேட்பவர்கள் இன்னப்பொருள் பற்றிப் பேசிடுக எனப் பணித்திட, பேசுபவன் அது போலவே நடத்தும் வசன சங்கீதமுமல்ல. வாழ்க்கையுடன் தொடர்பு கொண்ட பிரச்சனைகளைப் பற்றி, மக்கள் குழப்பமான கருத்துக்களைக் கொண்டிருந்தால் தெளிவு அளிப்பது, மக்கள் மருண்டிருந்தால் மருச்சியை நீக்குவது. மக்கள் கவலையற்று இருந்தால் பிரச்சனையின் பொறுப்பை உணரச் செய்வது போன்ற காரியம். நீதியை நிலை நாட்ட, நேர்மையை வலியுறுத்த, நாட்டிற்கேற்ற திட்டங்களை எடுத்துரைக்க, மடமையை மாய்க்க, கொடுமைகளை மாய்க்க, கொடுமைகளைச் சாய்க்க, சிறுமைகளைச்-சீரழிவுகளைப் போக்க ஆர்வம் தோன்ற வேண்டும். அந்த ஆர்வம் ஏற்படுத்தும் சிந்தனையிலே பூத்திடும் நல்ல கருத்துக்களை, அழகுற தொடுத்து அளிப்பதே மேடைப் பேச்சு" என எடுத்துரைக்கின்றார்.
சொல்லேருழவர்
அண்ணா பண்பட்ட சிறந்த சொற்களைக் கொண்டு மக்கள் மனங்களை உழுது பண்படுத்த முயன்ற சொல்லேருழவர். இவருடைய மொழியாளுமையால் கவரப்பட்ட சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளையவர்கள் "ஆயிரம் மேடை ஏறிய அறிஞர். பல்லாயிரம் மக்களின் உள்ளத்தை ஒருங்கே கவரும் சீரிய கூரிய சொல்லாளர். கண்ணின்று கண்ணறச் சொல்லும் திண்ணியர்" எனப் பாராட்டுவர்.
திரு.வி.க அவர்களும் ,
"அண்ணா துரையென்னும்
அண்ணல் தமிழ்நாட்டு
வண்ணான் அழுக்கெடுப்பில்
வாய்மொழியின் பண்ணாவான்
சிற்பன் எழுத்தோவியத்தில்
செல்வராசு நாவாயின்
அற்புதம் சூழ்மாலுமி
என்றாடு "
எனப் போற்றுவர்.
தமிழ்நாட்டின் அன்றைய நிலையை எண்ணி வருந்தி 1945 –இல் அண்ணாமலைப் பல்கலைக்கப் பட்டமளிப்பு விழா அரங்கில் துணைவேந்தர் எம்.இரத்தினசாமி அவர்களின் தலைமையில் புரச்சிக்கவி பாரதிதாசன் அவர்களின் உருவப்படத்தினைத் திறந்து வைத்து ஆற்றிய சொற்பொழிவு வரலாற்றுச் சிறப்பு மிக்கது.
"ஏ தமிழ் நாடே! ஏ தாழ்ந்த தமிழ் நாடே! தேய்ந்த தமிழ் நாடே! தன்னை மறந்த தமிழ் நாடே! தன்மானமற்ற தமிழ் நாடே! கலையை உணராத தமிழ் நாடே! கடவுளின் லட்சணத்தை அறியாத தமிழ் நாடே! மருளை மார்க்கத்துறை என்றெண்ணிடும் தமிழ் நாடே! வீறு கொண்டெழு! உண்மைக் கவிகளைப் போற்று! உணர்ச்சிக் கவிகளைப் போற்று! புரட்சிக் கவிகளைப் போற்று! புத்துலகச் சிற்பிகளைப் போற்று!!!" எனத் தமிழக நிலையை எண்ணி வெகுண்டெழுகிறார். இப்பொழிவால் அன்று மாணவச் சமுதாயம் விழிப்படைந்து என்றால் மிகையில்லை.
இந்தி எதிர்ப்பு
1960 களில் இந்தி எதிர்ப்பு உச்சத்தில் இருந்த காலக்கட்டம். அறிஞர் அண்ணா அவர்கள் நம்முடைய தமிழ்மொழி பிழைத்தால்தான் நம்முடைய இனம் பிழைக்கும், நம் நாடு நமக்கு கிடைத்தால் தான் நாம் தலை நிமிர்ந்து வாழ முடியுமென 26, 27, 29-6-1960, 10, 19-7-1960, 1, 7-8-1960 ஆகிய நாள்களில் தமிழ்ச் சமுதாயத்தை நோக்கி அறைகூவல் விடுத்தார். இதன் விளைவாக தமிழ் மாணவச் சமுதாயமே வீறு கொண்டெழுந்து மொழிப்போர் தொடங்கினர்.இன்னுயிரை ஈந்தாவது தமிழைக் காப்பாற்ற வேண்டுமென்ற அவருடை சொல்லினையேற்று உயிர் தியாகம் ஈந்துள்ளனர். அப்படி பாடுபட்டுப் பெற்ற தமிழ்நாட்டில் தமிழ்மொழியின் இன்றைய நிலை? மும்மொழி கொள்கை வேண்டும் எனக் கூறும் நிலை வருந்தத்தக்கது.
புத்தகச்சாலை
உலக சரித்திரத்தையே மாற்றிய நூல்களும் உண்டு. மகாத்மா காந்தியடிகள் தம்முடைய வாழ்க்கை வரலாற்று நூலில் ஜான் ரஸ்கினின் கடையருக்கும் கடைத்தேற்றம், ஹென்றி தோராவின் சிவில் ஒத்துழையாமை, டால்ஸ்டாயின் கடவுளின் ராஜ்யம் உங்களுக்கு இருக்கிறது என்ற நூல்கள் தம் வாழ்க்கைக்கு வழிகாட்டின எனவும், அகிம்சை வழியில் செல்ல தூண்டுகோலாக அமைந்தன எனவும் குறிப்பிட்டுள்ளார். அண்ணாவும் நுண்ணறிவு திறனுடையவராகவும் பண்பட்ட அறிவுடையவராகவும் திகழக் காரணமாக அமைந்தவை பண்பட்ட நூல்களே எனலாம். நூல்களின் மீது இவருக்கிருந்தது மிகுந்த காதல் என்பதை விட பித்து எனக் கூறலாம். கன்னிமரா நூலகத்தில் அவர் கைபடாத நூல்களே இல்லை என்பர். நூல்களைப் படித்தார் என்பதை விட நூல்களை உயிர் மூச்சாக சுவாசித்தார் வாழ்ந்தார். உடல்நிலை சரியில்லாமல் அறுவை சிகிச்சை செய்து கொள்ளப் போகும் நேரத்தில் கூட படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை முடிக்க நேரம் கேட்டாராம். இவ்வாறு நூல்களின் பயனையும் வல்லமையையும் உணர்ந்த பேரறிஞர் அண்ணா வீட்டிற்கோர் புத்தகச்சாலை இன்றியமையாதது என்பதை வலியுறுத்தி 1948-ஆம் ஆண்டு சொற்பொழிவாற்றுகிறார்.
"வீட்டிற்கோர் புத்தகச்சாலை என்ற இலச்சியம், நாட்டுக்கோர் நல்லநிலை ஏற்படச் செய்ய வேண்டும் என்ற திட்டத்திற்கு அடிப்படை.மலை கண்டு, நதி கண்டு, மாநிதி கண்டு அல்ல, ஒரு நாட்டை உலகம் மதிப்பது. அந்த நாட்டு மக்களின் மன வளத்தைக் கண்டே மாநிலம் மதிக்கும். மனநலம் வளர வீட்டுற்கோர் புத்தகச்சாலை நிச்சயமாக வேண்டும். வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம், அலங்காரப் பொருள்களுக்கும், போகப் பொருள்களுக்கும் தரப்படும் நிலைமாறி, புத்தகச்சாலைக்கு அந்த இடம் தரப்படவேண்டும். உணவு, உடை, அடிப்படைத் தேவை. அந்த தேவையைப் பூர்த்தி செய்தானதும், முதல் இடம் புத்தகச்சாலைக்குத் தரப்பட வேண்டும். வீட்டுக்கோர் புத்தகச் சாலை அமைத்துக் கொண்டால், நாட்டுக்கு நல்ல நிலை ஏற்படும். வீட்டிற்கோர் புத்தகச்சாலை தேவை. ஆனால் கேட்டினை நீக்கிடத் தக்க முறைகளைத் தரும் ஏடுகளைக் கொண்டதாக இருக்க வேண்டும்."
என அவர் கொண்ட விருப்பம் நிறைவேறியதா?
ஒரு நாட்டின் வளம் என்பது, அந்நாட்டில் இருக்கும் பண்புள்ள மக்களின் எண்ணிக்கையைப் பொறுத்துத்தான் இருக்கும். அறிவாற்றல் பெற்று, தன்னலம் கருதாது மக்களுக்கு உழைக்கும் பண்பாளர் தான் அந்நாட்டின் செல்வம் என்ற மார்டின் லூதரின் கூற்றுக்கேற்ப, பேரறிஞர் அண்ணா அவர்கள் சிறந்த கல்வி நலம் பெற்ற பண்பாளராகத் திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல், தம்முடைய அறிவாற்றலைக் கொண்டு, தம் இன மக்களின் அக இருளை விரட்டி, பகுத்தறிவு சிந்தனைப் பெற்று வாழ்க்கையில் மேன்மையடைய அயராது உழைத்தார். அறிஞர் அண்ணாவின் நாவில் பட்ட தமிழ், தமிழ் மக்கள் அனைவர் நாவிலும் புதுத் தமிழாக, உலக மக்கள் அனைவர் உள்ளங்களிலும் புதுத் தமிழ் புகழ் மணமாகத் தெரித்தெழத் தொடங்கிற்று என்று வருங்காலத் தமிழ் வரலாறு கட்டாயம் கூறும் என்ற பன்மொழிப் புலவர் கா.அப்பாதுரையாரின் கருத்திற்கிணங்க அண்ணாவின் நாவில் பட்ட தமிழ், தமிழ் மக்கள் உள்ளத்துள்ளும், நாவிலும் நீங்காது நிற்கிறது. அவ்வாறு நிற்கும் அண்ணாரின் சொற்களும் எழுத்துக்களும் பதிவுப் பெட்டகமாக மட்டுமில்லாமல் வாழ்க்கைப் பயன்பாட்டுப் பெட்டகமாக மாற வேண்டும். அப்பொழுதுதான்,
"நீ மண்ணுக்குள் சென்றாலும்
வேராகத்தான் சென்றாய்
அதனால்தான்
எங்கள் கிளைகளில்
இன்னும் பூக்கள்
மலர்கின்றன."
என்ற கவிக்கோ அப்துல் ரகுமான் அவர்களின் அடிகள் மெய்மையடைந்து, எழுத்தாய், சொல்லாய், மட்டுமல்லாமல் பொருளாகவும் என்றும் நம்முடன் வாழ்ந்துகொண்டிருப்பார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.