சிறுபஞ்சமூலம் உணர்த்தும் நம்பிக்கைகள்
மு. கார்த்திகா
முன்னுரை
சிறுபஞ்சமூலம் என்பது ஒரு மருந்தின் பெயர். மூலம் - வேர், சிறிய ஐந்து வேர்கள் என்பதே சிறுபஞ்சமூலம். கண்டங்கத்திரி வேர், சிறுவழுதுணை வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி வேர், நெருஞ்சி வேர் இவைகளே சிறுபஞ்சமூலம். இவ்வைந்தும் உடல் நோய்களைத் தீர்க்கும் மருந்து பொருட்கள். இந்நூலில் ஒவ்வொரு வெண்பாவிலும் சொல்லப்படும் ஐந்து பொருட்களும், மக்களின் மனப்பிணியைப் போக்கி மனதை முழுமையாகச் சுத்தமாக வைத்துப் பாதுகாக்கக் கூடியது. சிறுபஞ்சமூலத்தில் மனிதன் கடைப்பிடிக்க வேண்டிய செயல்கள் எப்படி நம்பிக்கைகளாகக் கூறப்பட்டுள்ளன என்பதை இக்கட்டுரையில் காணலாம்.
நம்பிக்கைகள்
மனிதன் எதைச் செய்தல் வேண்டும், எதைச் செய்தல் கூடாது என்பதைச் சிறுபஞ்சமூலம் மக்களுக்கு நம்பிக்கை வாயிலாக உணர்த்துகிறது.
வீடுபேறு அடைதல்
கடவுளால் சொல்லப்பட்ட நூல்கள் முதல் நூல்கள் ஆகும். அந்நூல்களில் கூறப்படும் அறக்கருத்துக்களைப் பின்பற்றி நடப்பவன் தவசி ஆவான் என்பதைச் சிறுபஞ்சமூலம் கூறுகிறது.
“பற்றினான் பற்றற்றான் நூல்தவசி எப்பொருளும்
முற்றினான் ஆகும் முதல்நூல்-பற்றினால்
பாத்துண்பான் பார்ப்பான் பழியுணர்வான் சான்றவன்
காத்துண்பான் காணான் பிணி.”
பற்று இல்லாதவனாகிய இறைவனால் செய்யப்பட்ட முதல் நூலைக் கடைபிடித்து ஒழுகுகின்றவன், வீடுபேற்றை விரும்பி ஏற்கின்ற தவசியாவான் என்கிறது.
குடிப்பதற்கு நீர்; தங்குவதற்கு நிழல்; இருப்பதற்கு இடம்; உண்பதற்கு உணவு ஆகியவைகளைக் கொடுப்போரும், அன்னசாலை அமைப்போரும் பேரின்பத்தை அடைவார்கள். இதனைச் சிறுபஞ்சமூலம்,
“நீரறம் நன்று நீழல்நன்று தன்னிலு
பாரறம்நன்று பாத்(து) உண்பானேல்-பேரறம்
நன்று தளிசாலை நாட்டல் பெரும் போகம்
ஒன்றுமாம் சால வுடன்.”
நா எழாத செயல்கள்
ஒருவருக்காகப் பரிந்து பொய்சாட்சி சொல்லுகின்றவர்களுடைய நாக்கு அறுந்துவிடும். ஆதலால் பொய்சான்று கூறுதல் தீமை என்கிறது. அதுமட்டுமன்று எதற்கெல்லாம் நாவானது எழாது என்பதையும் எடுத்துரைக்கின்றது.
“கொன்றுண்பான் நாச்சாம் கொடுங்கரிபோவான் நாச்சாம்
நன்றுணர்வார் முன்கல்லான் நாவுஞ்சாம் - ஒன்றானும்
கண்டுழி நாச்சாம் கடவான் குடிப்பிறந்தான்
உண்டுழி நாச்சாம் உணர்ந்து”
உயிர்களைக் கொன்று உண்பவணுடைய நாக்கு அறுந்துவிழும், கற்றறிந்த சான்றோர் முன்னிலையில் கல்வியறிவில்லாதவனுடைய நாக்கு அடங்கிவிடும். கடன் தந்தவனைக் கண்டதும் நாக்கு எழாது என்று சிறுபஞ்சமுலம் உணர்த்துகிறது.
நீண்டநாள் வாழ்பவர்கள்
முற்பிறப்பில் மற்றவர்களுடைய நோய்களைத் தீர்த்தவர்கள் இப்பிறப்பில் நோயற்ற வாழ்வு வாழ்வார்கள் என்கிறது.
“சிக்கர் சிதடர் சிதலைப்போல் வாயுடையார்
துக்கர் துருநாமர் தூக்குங்கால் - தொக்க
வருநோய்கள் முன்னாளில் தீர்த்தாரே இந்நாள்
ஒருநோயும் இன்றி வாழ்வார்”
தலை நோயுடையவர், பித்தர், வாய்ப்புற்று உடையவர், மூலநோய் கொண்டவர், இவர்களை வருத்துகின்ற நோய்களை முற்பிறப்பில் தீர்த்தவர்கள். இப்பிறப்பில் எந்தவித நோயும் இல்லாமல் வாழ்வார்கள் என்கிறது இப்பாடல். பஞ்சம் ஏற்பட்ட காலத்தில் பிறருக்குக் கொடுத்து உண்பவன், தன் செல்வத்தால் பிறருக்கு உதவி செய்பவன், போர்க்களத்தில் அஞ்சாமல் நின்று பகைவர்களை அழித்துப் படையைக் காப்பவன், ஒவ்வொரு நாளும் பிறருக்கு உணவிட்ட பின் தான் உண்பவன், பசியால் வாடும் குழந்தைகளுக்கு உணவளிப்பவன் இவர்கள் எண்பது வயதுக்கு மேலும் வாழ்வார்கள் என்று சிறுபஞ்சமூலம் பாடல் கூறுகிறது.
“பஞ்சப் பொழுதகத்தே பாத்துண்பான் காவாதான்
அஞ்சா(து) உடைபடையுள் போந்தெறிவான் - எஞ்சாதே
உண்பதுமுன் ஈவான் குழவி பலிகொடுப்பான்
எண்பதின் மேலும்வாழ் வான்.
நாள் பார்த்தல்
திருமணம் முதலிய நல்ல செயல்களைச் செய்வதற்கு நாள், முகூர்த்தம், கிரகம், யோகம் இவைகளைப் பார்த்துப் பின் இவைகளின் பலனையும் அறிந்து செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையைச் சிறுபஞ்சமூலம் பாடல் கூறுகிறது.
“நான் கூட்டம் மூர்த்தம் அவற்றோடு நன்றாம் அக்
கோன் கூட்டம் யோகம் குணனுணர்ந்து - தோள்கூட்டல்
உற்றானும் அல்லானும் ஐந்தும் உணர்வானால்
பெற்றால் நாள்கொள்க பெரிது.”
நாள் பொருத்தம், முகூர்த்தம் அவற்றுடன் தோளின் பொருத்தம் மற்றும் யோகமும், இவற்றால் உண்டாகின்ற நன்மையை ஆராய்ந்து பொருந்திய நாளைப் பெற்றால் நற்செயல்களைச் செய்ய வேண்டும் என்கிறது.
மேலும் புலால் உண்ணாதவர்கள் சுவர்க்கம் பெறுவார்கள்,மோட்சம் அடைவார்கள் என்றும் கூறுகிறது. புலால் உண்ணுதல் கூடாது என்பதைச் சிறுபஞ்சமூலத்தின் பல பாடல்களில் கூறப்பட்டிருக்கின்றன. சிறு பஞ்சமூலத்தில் இதுபோன்று எத்தனையோ நல்ல கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன.
முடிவுரை
மனித வாழ்க்கையில் எதைச் செய்ய வேண்டும்? எதைச் செய்தால், என்ன பயன் கிடைக்கும்? என்பது போன்ற பல நல்ல கருத்துக்களைக் கொண்டிருக்கிறது. பொதுவாக, மனிதன் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய அறநெறிகளையும், அதனால் அவனுக்குக் கிடைக்கும் நல்வாழ்க்கையையும் சிறுபஞ்சமூலம் தன்னிடத்தே கொண்டிருக்கிறது. சிறுபஞ்சமூலத்தில் சொல்லப்பட்டிருக்கும் நற்கருத்துகளை நம் வாழ்க்கையிலும் கடைப்பிடித்து நல்வாழ்க்கையைப் பெறலாமே...!
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.