வள்ளுவர் காட்டும் கண்ணோட்டத்தின் மூன்று நிலைகள்
கே. தமிழரசி

ஆட்சியாளர்களுக்கு வேண்டும் பண்புகளை வள்ளுவர் பொருட்பாலில் எடுத்துரைக்கின்றார். ஆட்சியாளர்களுக்கு குற்றம் கடிதல், சிற்றினம் சேராமை, தெரிந்து செயல்வகை, வலியறிதல் என்ற பல பண்புகள் தேவை என்று வள்ளவப் பட்டியல் விரிகின்றது. அவற்றுள் ஒன்றாகக் கண்ணோட்டம் என்ற பண்பும் வள்ளுவரால் சுட்டப்பெறுகின்றது.
கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு (பொருட்பால் 571)
என்று கண்ணோட்டம் என்ற ஒன்றாலே உலகம் இயங்கி வருகிறது என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.
கண்ணோட்டம் என்பது என்ன? அது யாரிடம் எவ்வகையில் செய்யப்பட வேண்டும் என்பதை உணர்ந்தால் கண்ணோட்டம் என்பது ஒருநேர்கோட்டில் நடப்பது போன்ற பயிற்சி என்பது தெரியவரும். அதில் சற்று விலகினாலும் கண்ணோட்டம் என்ற கருணை ஒருபக்கச் சார்பாக அமைந்துவிடும். எனவே கண்ணோட்டம் பற்றிய தெளிவான சிந்தனைக்கு வள்ளுவரின் கண்ணோட்டம் என்ற அதிகாரம் வழிவகுக்கின்றது.
இக்கண்ணோட்ட என்ற அதிகாரத்தின் தலைப்புப் பொருத்தத்திற்குப் பற்பலர் உரை கண்டுள்ளனர். பரிமேலழகர் ‘தன்னோடு பயின்றாரைக் கண்டால் அவர் கூறியன மறுக்கப்படாமை’ என்று விளக்கம் தருகிறார். மணக்குடவரும் பரிப்பெருமாளும் ‘‘கண்ணால் காணப்பட்டவரை அருள் செய்தல்’’ என்று பொருள் கொள்ளுகின்றனர். பரிதியார் ‘அரசர்க்கு கிருபையாகிய பார்வை வேணும் ’ என்று பொருள் உரைக்கிறார். ‘அரசன் அளியுடையனாதல்’ என்கிறது திருக்குறள் குமரேச வெண்பா. ‘குடிமக்களிடம் காட்ட வேண்டிய அன்பு, இரக்க உணர்வு’ என்கிறார் ஸ்ரீசந்திரன்.
இதன் வழியாகக் கண்ணோட்டம் என்பது ஆட்சியாளர்களுக்குத் தேவையான இயல்பு என்று தெரியவந்தாலும் தற்காலத்தில் நடைபெறம் சிபாரிசு என்பதாகக் கண்ணோட்டம் அமைந்துவிடாதா என்று ஓர் ஐயம் தோன்றலாம். இதற்கு விடை பகர பின்வரும் உரை முனைகின்றது.
‘‘பழகினவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுதல், அவர்கள் தகாதன செய்தொழுகும் பொழுது பொறுத்தாற்றல் முதலிய இயல்புகள் கண்ணோட்டத்தின் பாற்படும். பழகினவர் அன்றி வருந்துவோர் மட்டும் ஒரேவழி நிகழும்.
கண்ணோட்டம் என்பது சிறந்த பண்பாடு. ஒழுக்கம். அதுபோழ்து விழிப்புணர்வும் சிறந்த செயல்பாட்டுத் திறனும் இல்லாதார் கண்ணோட்டத்தின்வழி இழப்புகளைச் சந்திக்கக் கூடும். அவர்கள் இதனைத் தவிர்ப்பது நல்லது’ (தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை,ப.172) என்று கண்ணோட்டத்திற்கு விளக்கம் காணுகிறார் குன்றக்குடி அடிகளார்.
கண்ணோட்டம் என்பதனை விழிப்புணர்வுடன் செயல்படுத்தவேண்டும். இல்லையானால் அப்பண்பினை ஆட்சியாளர்கள் விலக்கிவிடலாம் என்ற குன்றக்குடி அடிகளாரின் கருத்துத் தற்கால அரசு எந்திரங்களின் செயல்பாட்டாளர்களாக விளங்கும் அதிகாரிகளுக்கு, ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருந்துவதாகும்.
கண்ணோட்டம் என்பது தன்னுடன் பயின்றவர்களுக்கு அருள் செய்வது என்றால் ஒரு அதிகாரியுடன், அல்லது ஓர் ஆட்சியாளருடன் படித்தவர் தனக்காக, பிறருக்காக ஏதேனும் ஒன்றைச் செய்யச்சொன்னால் மறுக்காமல் செய்யவேண்டும் அதுவே கண்ணோட்டம் என்று வைத்துக்கொண்டால் அதன் பெயர் இக்காலத்தில் சிபாரிசு என்பதாகிவிடுகின்றது. ஒரு வேலையைத் தனக்குச் சாதகமாக ஆக்கிக்கொள்ள இயலாதபோது தற்காலத்தில் வேலையை தருபவரின் உறவினரை , பழகினவரை அணுகி அவர் வழியாக அதிகாரியை ஆட்சியாளரை அணுகுதல் போன்றன தற்காலத்தில் நடைபெற்றுவருகின்றன. இதனைத் தடுக்க எண்ணிய குன்றக்குடி அடிகளார் கண்ணோட்டத்தை விழிப்புடன் செய்யவேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் இழப்பு ஏற்படும் என்கிறார். இதன் காரணமாகக் கண்ணோட்டம் செய்யாமை நன்று என்ற அவரின் முடிவு இக்காலத்திற்கு மிகவும் பொருந்துவதாகும்.
இதனையே வள்ளுவர் இவ்வதிகாரத்தின் மற்றொரு குறளில் காட்டுகின்றார்.
‘‘கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்து்இவ் வுலகு’’ (பொருட்பால்-578)
என்ற குறளில் சுட்டப்பெற்றுள்ள செய்தியும் மேற்காட்டப்பெற்ற செய்தியும் ஒருங்கு அமைவதை உணர்ந்தால் கண்ணோட்டம் என்பதன் உண்மைப் பொருளை விளங்கிக்கொள்ள இயலும்.
இக்குறளுக்குப் பரிமேலழகர் ‘‘தம்மொடு பயின்றார் பிறரை இடுக்கண் செய்துழி அவரைக் கண்ணோடு ஓராதவர்க்கு முறை சிதைதல் மேல்’’ என்று பொருள் கொள்ளுகிறார். மற்ற உரையாசிரியரகள் கருமம் சிதையாமல் என்பதற்குப் பொருள் செலவில்லாமல் கண்ணோடியவர்களுக்கு இவ்வுலகம் உரிமையாகும் எனப் பொருள் கண்டுள்ளனர். இவ்வுரைகளால் சிறப்பில்லை.
இதற்கு உரிய தற்கால விளக்கத்தைக் குன்றக்குடி அடிகளார் தெரிவிக்கின்றார்.
‘‘ கண்ணோட்டமும் கடமையும் பெரும்பான்மையும் முரண்படுவன. இவை முரண்படாமல் கடமை தவறாமல் கண்ணோட்டம் காட்டுதல் ஒரு அருந்திறன் ஆகும்’’ (குன்றக்குடி அடிகளாரின் திருக்குறள் உரை.ப.175) என்பது குன்றக்குடி அடிகளாரின் கருத்தாகும்.
கடமைக்குக் குறுக்கே வருவது கண்ணோட்டம் என்பதை அடிகளார் உணர்ந்து உரை செய்துள்ளார். அலுவலகத்தில் காலியாக உள்ள பணியாளர் இடத்தை நிரப்புவதற்கான நேர்காணல்கள் நடப்பது வழக்கம். அவ்வாறு ஒரு நேர்காணலில் ஓர் அதிகாரி கண்ணோட்டத்துடன் செயல்பட முடியாது. ஏனென்றால் இருப்பது ஒரு காலிப்பணியிடம். அவ்விடத்திற்கு நாற்பது பேர் வந்திருந்தால் கண்ணோட்டத்துடன் நடந்து கொண்டால் அது தவறில் முடியும். நாற்பதில் ஒருவர் தனக்குத் தெரிந்தவராக இருந்தால் தேரவு அதிகாரி அவரைத் தேர்வு செய்துவிடுவாரேயானால் அவர் நேர்மை மறந்தவராகிவிடுகிறார். நாற்பது பேரையும் தேர்வில் ஈடுபடுத்தி அவரில் தகுதி மிக்க ஒருவரை நியமிப்பது ஆலுவலரின் கடமை. இதைத்தவிர்த்து, இவ்விடத்தில் கண்ணோட்டம் கருதி தனக்கு அறிந்த ஒருவரைத் தேர்ந்து விட்டால் மீதமுள்ள முப்பத்தொன்பது பேருக்குத் துன்பம் அளித்தவராக அவ்வதிகாரி மாறிவிடுகிறார். எனவே கண்ணோட்டத்தினை எச்சரிக்கையாகக் கையாளவேண்டும்.
கண்ணோட்டத்தை சிபாரிசாக மாற்றிவிடாமல் காப்பது மேற்குறள் ஆகும். இது கண்ணோட்த்தின் முதல் வகை என்று கொண்டால் தன்னோடு பழகியவர்கள் துன்பம் தந்தாலும் அதனைப் பொறுத்தாற்றும் கண்ணோட்டம் தேவை என்பது இரண்டாம் வகையாகும்.
ஓறுத்து ஆற்றும் பண்பினர் கண்ணும்கண் ணோடி
பொறுத்தாற்றும் பண்பே தலை (பொருட்பால் 579)
என்கிறது திருக்குறள். தன்னோடு பழகியவர்கள் என்ற நிலையில் தனக்குக் கீழ் பணிபுரிவோர், தன் கட்டளைக்கு அடங்குவோர் போன்ற பலரையும் வைத்து எண்ண இயலும். இவர்கள் துன்பமே தந்தாலும் அவற்றைப் பொறுத்தாற்றும் கண்ணோட்டம் என்பது சிறப்பானது என்கிறார் வள்ளுவர்.
தனக்குத் துன்பஞ் செய்தாரிடத்தும் கண்ணோட்டமே காட்டப்பெறுதல் வேண்டும் என்று இக்குறளுக்கு உரை காணுகின்றார் குன்றக்குடி அடிகளார்.
தாமப்பல் கண்ணனார் என்ற புலவர் மாவளத்தான் என்ற சோழனைப் பின்வருமாறு போற்றிப்பாடுகின்றார்.
‘‘மற்றிது
நீர்த்தோ நினக்கென் வெறுப்பக் கூறி
நின்யான் பிழைத்தது நோவா என்னினும்
நீபிழைத்தாய் போல நனி நாணினையே
தம்மைப் பிழைத்தோர் பொறுக்குஞ் செம்மல்’’ (புறநானூறு 43)
தான் பிழைத்தாலும் அதனைக் கருதாது தம்மைப் பிழைத்தோரைப் பொறுக்கும் செம்மல் என்று மாவளத்தான் இதனுள் புகழப்படுகிறான். இப்பண்பே கண்ணோட்டம் மிக்கப் பண்பாகும்.
கண்ணோட்டத்தின் மூன்றாம் நிலை என்பது தனக்கு விடத்தையே கொடுத்தாலும் அதனை ஏற்பது என்பது.
பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர் (பொருட்பால் 560)
என்ற குறள் தரும் செய்தி மிக நுண்மையானது. நஞ்சினைத் தருகின்றபோது அது நஞ்சென அறியாமல் தந்தால் கூட உண்டுவிடலாம். ஆனால் நஞ்சு என்று தெரிந்தே அதை உண்ணுவது என்பது நயத்தக்க நாகரீகம் உடைய செயல்தான்.
அதாவது தான் இறந்த பின் நஞ்சு தந்தவரைக் கண்ணோட்டம் செய்ய இயலாது. அவர் தரும்போதே அக்கணத்திலேயே கண்ணோட்டத்தைக் காட்ட மனம் மகிழ்ந்து நஞ்சைப் பருகவேண்டும் என்று கண்ணோட்டத்தின் மூன்றாம் நிலையைக் காட்டுகிறார் வள்ளுவர்.
இதற்குப் பொருள் தந்த குன்றக்குடி அடிகளார் ‘கண்ணோட்டம் காட்டும் பண்பிற் சிறந்தவர்கள் நஞ்சினைத் தந்தாலும் குடித்துவிட்டுச் சாகாமல் வாழ்வார்கள் என்பதை உணர்த்த நஞ்சுண்டு அமைவர் என்றார். தூய அருளுள்ளம் படைத்தாதின் செங்குருதி நஞ்சினுக்கு மருந்து் போலாவாம். ஆதலால் மரணமில்லை என்று கூற அமைவார் என்றார். சாக்ரடீசு, அப்பரடிகள் வரலாறுகளைக் கற்று அறிக’’ (குன்றக்குடி அடிகளாரின் திருக்குறள் உரை.ப175) என்று இக்குறளுக்கு உரை விளக்கம் செய்கிறார் குன்றக்குடி அடிகளார்.
திருநாவுக்கரசர் தனக்குத் தரப்பட்ட நஞ்சுணவைத் தானே வாங்கி உண்டு அதன்பின்னும் வாழ்ந்தார். அவர் தனக்கு நஞ்சூட்டிய காவலைரையோ, மன்னரையோ பிழைக்கவில்லை. இதுவே கண்ணோட்டத்தின் முடிநிலை என்று வள்ளுவர் கருதுகிறார்.
ஆகவே கண்ணோட்டத்தின் முதல்நிலை என்பது கண்ணோட்டத்தைச் சிபாரிசாக மாற்றிவிட இடம் தந்துவிடக்கூடாது என்பதாகும். கண்ணோட்டத்தின் இரண்டாம் நிலை தனக்கு அடங்கியோர் தனக்குத் துன்பமே செய்தாலும் அதனைப் பொறுத்து அவருக்குக் கருணை செய்யவேண்டும் என்பதாகும். கண்ணோட்த்தின் மூன்றாம் நிலை என்பது தன்னைக் கொல்ல வந்தாலும் அதனையும் மகிழ்வுடன் ஏற்கும் நிலையாகும். இவ்வாறு பொறுமையும் கண்ணோட்டமும் உள்ளவர்களாலேயே இவ்வுலகில் அமைதி இன்னும் இருந்து கொண்டுள்ளது. இனியும் அமைதி தழைக்கும்.
இவ்வகையில் கண்ணோட்டம் என்ற அதிகாரத்திற்குத் தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் உரை தற்காலத்திற்குப் பொருந்தும் ஆற்றலுடையதாக உள்ளது என்பதை உணரமுடிகின்றது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.