மகன் என்ன ஆகப் போகிறான்?
வெளி நாட்டிற்குப் போன மகன் அன்று திரும்ப வருவதாக இருந்தது.
தந்தை தன் நெருங்கிய நண்பரை அழைத்துத் தன் மகனுக்குத் தான் ஒதுக்கிய அறையைக் காட்டி, அவன் எந்தத் துறைக்கு ஏற்றவன் என்பதைத் தேர்வு செய்யப்போவதாகக் கூறினார்.
மேஜை மீது நான்கு பொருட்கள் இருப்பதை சுட்டிக்காட்டி,''என் பையன் பணத்தை எடுத்துக் கொண்டால், அவன் வணிகத் துறைக்கு ஏற்றவன். பைபிளை எடுத்துக் கொண்டால், சமய சேவைக்கு ஏற்றவன். மது புட்டியை எடுத்துக் கொண்டால், உதவாக்கரையாவான். துப்பாக்கியை எடுத்துக் கொண்டால், அவன் கொள்ளைக்காரனாவான்'' என்றார்.
அந்த மகனும் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
அந்த அறைக்குள் வந்த மகன் என்ன செய்யப் போகிறான் என்பதைக் காண, அவர்களிருவரும் ஆவலுடன் மறைவிலிருந்து கவனித்தார்கள்.
பையன் அறைக்குள் நுழைந்து இருக்கும் பொருட்களை எல்லாம் பார்த்தான். அவன் அங்கிருந்த மதுப் புட்டியைத் திறந்து வாயில் ஊற்றிக் கொண்டான். பின், பணத்தை எடுத்துப் பையில் போட்டுக் கொண்டான். ஒரு கையில் பைபிளையும், இன்னொரு கையில் துப்பாக்கியையும் எடுத்துக் கொண்டான்.
தந்தை உற்சாகத்தில் கத்தினார், ''என் மகன் மந்திரியாகப் போகிறான்''
- குஷ்வந்த்சிங் நகைச்சுவை
தொகுப்பு:- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.