வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவன் இந்தியா முழுவதும் சுற்றிப்பார்க்கிறான். ஒவ்வொரு மாநிலமாக சுற்றும் அவன் டெல்லிக்கு வந்தான்.
அங்கு பாராளுமன்றத்தை பார்த்து "அட.... அழகா இருக்கே... இது என்ன?" என்று டாக்சி டிரைவரிடம் கேட்டான்.
அதற்கு டிரைவர், "இது எங்க நாட்டுப் பாராளுமன்றம்" என்றான்.
"இது எவ்வளவு நாளில் கட்டியது?" என்று அந்தப் பயணி கேட்டான்.
"தெரியல... ஒரு அஞ்சாறு வருஷம் கட்டியிருப்பாங்கன்னு நினைக்கிறேன்" ன்னு பதிலளித்தான் டிரைவர்.
"அஞ்சாறு வருஷமா? எங்க நாடா இருந்தால் அஞ்சு மாசத்துல கட்டியிருப்போம்" என்று பெருமையடித்துக் கொண்டான் அந்தப் பயணி.
அடுத்து இந்தியா கேட்.
"இது என்ன?" என்று கேட்டான் அந்தப் பயணி.
“இது இந்தியா கேட்" என்றான் டிரைவர்.
"இதை கட்டி முடிக்க எத்தனை நாளாச்சு?"
"தெரியல... ஒரு வருஷம் இருக்கலாம்"
"ஒரு வருஷமா? எங்க நாடா இருந்தா... ஒரு மாசத்துல கட்டியிருப்போம்" மறுபடியும் பெருமை பேசினான் வெளிநாட்டுக்காரன்.
டாக்சி டிரைவர் கடுப்பாகி விட்டான். இருந்தாலும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
அடுத்து தாஜ் மஹால்.
"ஓ... இதுதான் தாஜ்மஹாலா? அருமையா இருக்கே... இதை கட்டி முடிக்க எவ்வளவு வருஷமாச்சு?"
இதை கட்டிமுடிக்க இருபது வருஷமாவது ஆகிருக்கும்ன்னு சொன்னால்... உடனே இவன் எங்க நாட்டுக்காரங்க இருபது மாசத்துல கட்டியிருப்போம்ன்னு பீத்திக்குவான்னு மனசுல நினைச்சு, கொஞ்ச நேரம் யோசிப்பது போல நடித்துவிட்டு டாக்சி டிரைவர் பதிலளித்தான்.
"தெரியல சார். நான் போன வாரம் இந்தப்பக்கம் வரும்போது இது இங்கே இல்லை. எப்படி அதற்கிடையில கட்டி முடிச்சாங்கன்னு ஆச்சரியமா இருக்கு’ன்னு சொன்னான்.
அதற்குப் பிறகு வெளிநாட்டுக்காரன் வாயைத் திறந்திருப்பானா...?
- ஆங்கில இதழ் ஒன்றில் படித்தது