வீட்டு வாசலில் ஓர் இளம்பெண் நாய்க்கு பிஸ்கட் போட்டுக் கொண்டே அதனிடம் சொல்கிறாள்.
"டாமி! என்ன பிஸ்கட்டை முகர்ந்து பார்த்துட்டு போறே? பிடிக்கலையா? சரி விடு...என் மாமியாருக்குக் கொடுத்துர்றேன்..."
டாக்டர் கோதண்டம் அங்கே வருகிறார். "என்ன கமலா. மாமியார் உருவத்தைக் கோலமா வரைஞ்சிருக்கே? அவங்க மேல அவ்வளவு ப்ரியமா?"
"ம்க்கும்...அதெல்லாம் இல்லே...போறவங்க வர்றவங்க எல்லாம் நல்லா மிதிக்கட்டும்னுதான்!'
"புல்லரிக்குதும்மா!...சரி, உன் மாமியார் இருக்காங்களா?"
"ஹீம்...ம்...ம்...இன்னும் இருக்காங்க..."
"ரொம்ப சலிச்சுக்காதே...உடனே வாங்கன்னு போன் பண்ணினாங்களே...அவங்களுக்கு என்ன ப்ராப்ளம்?"
"எனக்கு என் மாமியார்தான். "ப்ராப்ளம் டாக்டர்!"
"உன் ப்ராப்ளத்தை அப்புறம் பார்ப்போம்...அவங்க கண்ணுல நீ புது குத்துவிளக்கால குத்திட்டியாமே...?"
"அவங்கதான் அந்த விளக்கைப் பார்த்ததும் கண்ணுல ஒத்திக்கற மாதிரி இருக்குன்னாங்க டாக்டர்!"
"நல்லவேளை...அவங்க முகத்தில சுருக்கமா இருக்குன்னு அயன் பாக்ஸால தேய்க்காம விட்டியே... அது சரி, உங்க மாமியாரை பாம்பு கடிச்சுருச்சுன்னாங்களே...என்ன பாம்பு? நல்ல பாம்பா? தண்ணி பாம்பா?"
"என் மாமியாரைக் கடிச்சுருச்சுன்னா அது ரொம்ப ரொம்ப நல்லபாம்புதானே டாக்டர்!"
"நீ இப்படியே நேரத்தைக் கடத்துனா அவங்க பிழைக்கறது கஷ்டம்!'
"அவங்க பிழைச்சாலும் கஷ்டம்தான் டாக்டர்!"
"சரி மாமியாரைக் காட்டு... நான் பார்க்கறேன். அடடா...ரொம்ப மோசமாயிருக்கே பாவம், மூச்சுவிடவே ரொம்ப சிரமப்படுறாங்களே..!"
"அவ்வளவு சிரமப்பட்டு எதுக்கு மூச்சு விடணுங்கறேன்..."
"உங்க மாமியாருக்கு மனசும், உடம்பும் ரொம்ப பாதிக்கப்பட்டுருக்கு...அவங்க வியாதியைத் தீர்க்கனும்னா எட்டாயிரம் செலவாகும்."
"மாமியாரைத் தீர்க்கணும்னா?"
"என்னம்மா சொல்றே?"
"டாக்டர் கச்சிதமா காரியத்தை முடிச்சிருங்க. நீங்க கேக்கற தொகையைத் தர்றேன். அதுமட்டுமில்லே...உத்திரகிரியை பத்திரிகை பின்னால உங்க கிளினிக் விளம்பரத்தை ஃப்ரியா போட்டுடறேன்..."
(டாக்டர் மிரண்டு ஓடுகிறார்)