பனீர் குடமிளகாய் கிரேவி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பனீர் - 200 கிராம்
2. குடமிளகாய் - 1 எண்ணம்
3. தக்காளி - 1 எண்ணம்
4. மிளகாய்த் தூள் - 1 மேசைக்கரண்டி
5. மல்லித்தூள் - 2 மேசைக்கரண்டி
6. கரம் மசாலாத்தூள் - 1 தேக்கரண்டி
7. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
8. தக்காளி சாஸ் - 1 மேசைக்கரண்டி
9. தேங்காய் துருவல் - 50 கிராம்
10. உப்பு - தேவையான அளவு
11. மல்லித்தழை - சிறிது
தாளிக்க
12. எண்ணெய் - 4 மேசைக்கரண்டி
13. சோம்பு - 1 தேக்கரண்டி
14. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
15. கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. பனீர், குடமிளகாய், வெங்காயம், தக்காளி எல்லாவற்றையும் பொடிதாக நறுக்கி வைக்கவும்.
2. தேங்காய்த் துருவலை விழுது போல் அரைத்து வைக்கவும்.
3. ஒரு கடாயில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், மிதமான நெருப்பில் பனீர் துண்டுகளைப் போட்டு இலேசான செந்நிறம் வரும் வரை வதக்கித் தனியே வைக்கவும்.
4. அதே கடாயில், மீதமுள்ள 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், சோம்பு போட்டுத் தாளிக்கவும்.
5. பின்னர் அதில் நறுக்கி வைத்த வெங்காயம், கறிவேப்பிலை, குடமிளகாய் சேர்த்து வதக்கவும்.
6. வெங்காயம் பொன்னிறமானதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
7. தக்காளி நன்கு வதங்கியதும் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா, தக்காளி சாஸ் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
8. அதனுடன் ஒரு கப் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
9. மசாலா வாடை நீங்கியதும், அரைத்து வைத்துள்ள தேங்காயைச் சேர்த்துக் கொதிக்க விடவும்.
10. பிறகு அதில் பனீர் துண்டுகளைச் சேர்த்துச் சில நிமிடங்கள் கொதிக்க விட்டு மல்லித்தழை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.