மாங்காய் மோர் குழம்பு
மணிமொழி மாரிமுத்து
தேவையான பொருட்கள்:
1. துவரம்பருப்பு - 2 மேசைக்கரண்டி
2. பச்சரிசி - 1 தேக்கரண்டி
3. சீரகம் - 1 தேக்கரண்டி
4. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
5. இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி
6. தேங்காய்த் துருவல் - 1/2 கோப்பை
7. புளித்தத் தயிர் - 1/2 கோப்பை
8. மாங்காய் (சிறு சிறு துண்டுகளாக) - 1 கோப்பை
9. மிளகாய் வற்றல் - 3 எண்ணம்
10. கறிவேப்பிலை - சிறிது
11. எண்ணெய் - தேவையான அளவு
12. கடுகு - 1/2 தேக்கரண்டி
13. உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
14. சீரகம் - 1/2 தேக்கரண்டி
15. பெருங்காயத்தூள் - சிறிது
16. மஞ்சள் தூள் - சிறிது
17. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. துவரம்பருப்பு, பச்சரிசி ஆகியவற்றை நன்கு கழுவி அரை மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும்.
2. அதனோடு தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
3. வாணலியில் 1/2 கப் அளவு தண்ணீர் ஊற்றி, அதில் மாங்காய் துண்டுகளுளைப் போட்டு, சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேக வைக்கவும்.
4. மாங்காய் பாதி வெந்ததும், அரைத்தக் கலவையை ஊற்றி நன்குக் கிளறவும்.
5. அடுப்பை மிதமான தீயில் வைத்துப் பச்சை வாசனை போகும் வரைக் கிளறி விடவும்.
6. புளித்த தயிரை, நன்கு கட்டிகளின்றி அடித்துக் கொண்டு, அதன் பிறகு அதில் சேர்த்துக் கிளறி விடவும்.
7. அதனுடன் 1/2 கப் தண்ணீர் சேர்த்து, உப்பின் அளவு சரி பார்த்துத் தேவையெனில் சேர்த்துக் கொள்ளவும்.
8. இலேசாக நுரைத்து வரும் போது, அடுப்பை அணைத்து இறக்கி விடவும்.
9. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகம் சேர்த்து பொறிந்ததும் மிளகாய் வற்றல், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளிக்கவும்.
10. தாளிசத்தை, தயார் செய்து வைத்திருக்கும் குழம்பில் ஊற்றவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.